திங்கள், 31 அக்டோபர், 2016

பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்

உலகமயமாக்கலுக்கும், தாரளயமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைபாடு பண்பாட்டின் வழியாக மிகப்பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் நாம் இன்று வாழ்கிறோம்.
பண்பாடு, உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதலில் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாவதாக அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது.
மேலும், இதைப் புரிந்துகொள்வதற்கு பண்பாடு என்பது எந்தப் பொருளில் இங்கே குறிக்கப்படுகிறது? என்பதையும், மேலாதிக்கம் என்பதன் பொருள் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
பண்பாடு என்பது என்ன?:
பண்பாடு என்பது இங்கே கலை, இலக்கியம் மட்டுமே அல்ல. அது மக்கள் சமூகத்தின் வாழ்வு முறைகள் அனைத்தையும் குறிக்கிறது. நமது உடைகள், உணவுப் பழக்கங்கள், நாம் வாழும் வீடு என எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள் ஆகும்.
வாழ்க்கையின் வெற்றி, அழகு பற்றிய நமது கருத்துக்கள் எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள். கலையும், இலக்கியமும் இந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றிற்கு உருவகம் கொடுக்கின்றன. நல்ல கலையும் இலக்கியமும் இந்த அர்த்தங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது.
மேலும் பண்பாடு நம்முடைய குடும்பங்களிலும், சமூகக் குழுக்களிலும், கல்வி நிலையங்களிலும் தொடர்பு ஊடகங்களின் மூலமாகவும் – விமர்சனமற்ற முறையில், உணர்வுப்பூர்வமில்லாமல் நம்மை வந்தடைகிறது.
பண்பாடும், மேலாதிக்கமும்:
இதனை மேலும் புரிந்துகொள்வதற்கு பண்பாட்டிற்கும், அரசின் கொள்கைக்கும், மேலாதிக்கத்திற்கும் இடையேயுள்ள உறவைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கிராம்சி அரசைப் பற்றிக் குறிப்பிடும்போது கூறுகிறார்: “ஆளும் வர்க்கங்கள் அதன் அதிகாரத்தை முழுச் சமூகத்தின் மீதும் இரண்டு விதங்களில் செலுத்துகின்றன. ஒன்று – ஆளும் வர்க்கங்களின் அரசு மற்றும் அதன் அங்கங்களான காவல்துறை, ராணுவம், சட்டங்கள் மூலமாக பலாத்காரத்தை பிரயோகிக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் பொருளாதார பலம், அரசை அவற்றின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் துணையாகின்றன.
இரண்டாவதாக, ஆளும்வர்க்கங்களின் அதிகாரம், ஆளப்படுபவரின் ஒப்புதலோடு செலுத்தப்படுகிறது. முதலாளித்துவ சமூகத்தின் உறவுகளை அதன் அடிப்படைக் கூறுகளான மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான இடைவினையைப் புரிந்துகொள்வதன் வழியாகத்தான் உணர முடியும். இந்த சமூக உறவுகள் பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார அமைப்புக்கள், பண்பாட்டு ஸ்தாபனங்கள் போன்றவற்றில் வேர்விட்டுள்ளன.
ஒரு வகையான நிறுவனங்கள் அதன் ஏகபோக பலாத்காரத்தின் மூலமாக காவல்துறை, சட்டம், வரி, நிதி, வர்த்தகம், தொழிற்சாலை சம்பந்தமான நிர்வாகத் துறைகளை உள்ளடக்குகின்றன. இவை அனைத்தும் இணைந்து அரசு என்றாகிறது. மற்ற அனைத்தையும் கிராம்சி ‘சிவில் சமூகம்’ என்று அழைக்கிறார். இந்த சிவில் சமூகத்தின் மூலமே மேலாதிக்கம் நிறுவப்படுகிறது.
அரசும் – சிவில் சமூகமும்:
அரசிற்கும் சிவில் சமூகத்திற்குமான உறவை நாம் எப்படி புரிந்துகொள்வது? செவ்வியல் அரசியல் (classical politics) அதிகாரம் அரசிடம் குவிந்துகிடக்கிறது. எனவே, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதே மைய நோக்கம் என்பதாகிறது. அதாவது 1917 ஆம் ஆண்டில் குளிர்கால அரண்மனையைத் தாக்கி கைப்பற்றுவதும், தொழிலாளி வர்க்கம் இந்த அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பே சோசலிசத்தைக் கட்டமுடியும் என்பதாகிறது.
கிராம்சி, அதிகாரம் சிவில் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது; கூடவே அது அரசின் கையிலும் உள்ளதென்கிறார். அரசைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பலமான கோட்டைகளாக, மதில் சுவர்களாக, சிவில் சமூகம் உள்ளது. இந்தக் கோட்டைகளைத் தகர்க்காமல் குளிர் கால அரண்மனையை அணுக முடியாது.
குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றிய பின்பும் இந்தக் கோட்டைகளின் உள்ளிருப்புப் reserve army விழுங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அரசு, இந்த சிவில் சமூகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. அரசின் இந்த அரணைத் துளைத்து உள்ளே சென்றாலும் சிவில் சமூகத்தின் reserves அவற்றை அடைத்து சரிசெய்துவிடும்.
தயாரிக்கப்படும் ஒப்புதல்:
நோம் சாம்ஸ்கி, வெகுஜன ஊடகங்கள் குறிப்பாக பத்திரிக்கைகளும் தொலைக்காட்சியும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக எவ்வாறு இந்த ஒப்புதலைத் தயாரிக்கின்றன என்பதை விரிவாக விளக்குகிறார்.
இந்த தத்துவார்த்த பிரச்சனைகளின் அடிப்படையில் அதிகார உறவுகளைப் புரிந்துகொள்வதிலேயே அடங்கியிருக்கிறது. இதுகாறும் நாம் உற்பத்தி உறவுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றிய ஆய்வில் மட்டுமே மையம் கொண்டிருந்தோம்.
உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், அடிப்படையில் அன்னிய மூலதனத்திற்குள்ள சில தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அகற்றுவதையே நோக்கமாகக் கொண்டவை.
தொழில் முதலாளிகளின் மிக உச்ச லாபத்திற்கு உரிமை அளிப்பதே இதன் அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட சுதந்திரமான சந்தையில் அதிக ஆதாரங்களை உடையவர்கள் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் முதலாளிகளுமே பெரும் ஆதாயங்களை அடைவார்கள். ஏழைகள் பாடோ, சொல்ல வேண்டியதில்லை.
காலனியாதிக்கமும், உலகமயமாக்கலும்:
இதுதானே காலனியாதிக்கத்தின் அர்த்தமும், பிரட்டனின் காலனியாக நாம் இருந்தபோது நமது சந்தைகள் அவர்களுக்காக திறந்துவிடப்பட்டது. அவர்களுக்குத் தேவையான எந்த கச்சாப்பொருளையும் அவர்களே எடுத்துச் செல்லலாம். அவர்கள் நிர்ணயித்த விலையில் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் நினைத்த கம்பெனிகளைத் திறந்துகொள்ளலாம். அவர்களுக்கு வேண்டிய எந்தப் பொருளையும் இங்கே விற்கலாம்.
காலனி ஆதிக்கம் பலாத்காரத்தோடு அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலகமயமாக்கல் இன்று பண்பாட்டின் ஊடாக நடந்தேறி வருகிறது. மின்னணு ஊடகங்களின் மூலமாகவும் தொலைக்காட்சிகளின் மூலமாகவும் இது ஊடுபரவுகிறது.
நமது மத்தியதர வர்க்கத்தின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தங்களுக்குத் தேவையான மிக முக்கியமான தேவைகளையும் புறந்தள்ளிவிட்டு மற்றொரு பொருளை அடைவதற்கான முயற்சியே நுகர்வியம் – consumerism.
நுகர்வியம் என்பது :
ஒரு டெலிவிஷன் அல்லது வாஷிங் மெஷின் வாங்குவதென்பது அடிப்படையில் நுகர்வியம் ஆகிவிடாது. ஆனால் இதனைப் பெற்றிடும் முயற்சியின்போது அதைவிட ஒரு முக்கிய செலவை, தேவையைப் புறக்கணிக்கும்பொழுது (உதாரணத்திற்கு ஒழுகும் வீட்டைச் சரிசெய்ய அல்லது மகளின் கல்விக்கான செலவைத் தள்ளிவிடும்போது) அது நுகர்வியம் ஆகிறது.
தேவையற்ற போலித் தேவைகளை உருவாக்கிக் கொள்வது – தான் வாழும் சமூகக் குழுக்களிடையே ஒரு பொருளை உபயோகிக்கும் திருப்தியில்தான் நுகர்வியம் அடங்கியிருக்கிறது. இதைத்தவிர உலகமயமாக்கல் இங்கே இவர்களின் தேவையையொட்டி நியாயப்படுத்தப்படுகிறது.
உலகமயமாக்கல் சில குறிப்பிட்ட விழுமிய கட்டமைப்புகளைக் கொண்டுவருகிறது. ஒருவன் செல்வந்தனாக இருப்பது மிக உன்னதமாகக் கொள்ளப்படுகிறது.
ஏற்கப்படும் ஊழல்:
எப்படியாயினும், செல்வம் சேர்ப்பது எந்த வகையிலேனும் சேர்ப்பது என்பது வெற்றியின் அளவுகோலாக உள்ளது. இந்த விழுமியங்கள் வர்க்கங்களைக் கடந்து ஆட்டிப்படைக்கிறது. அது சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் சென்று தாக்குகிறது. அவர்களை பாழ்படுத்தி துரிதமாகவும், மிக விரைவாகவும் செல்வந்தனாக மாறுவதற்கான போட்டியில் அவர்களைத் தள்ளிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘ஊழல்’ ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகியுள்ளது.
இந்த மேலாதிக்கத்திற்கு எதிராக நாம் எவ்வாறு போராடுவது?
நம்முடைய உணர்வுகளின், நம்முடைய விழுமியத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ள இந்த சக்திகளை எதிர்த்து நாம் எப்படி போராடப்போகிறோம்?
ஆளும் வர்க்கங்கள், விழுமியங்களை எல்லோருக்குமானதாக மாற்றிவிட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் வெகுஜன எழுச்சியே சாத்தியமாகுமா? என்ற கேள்வி உள்ளது.
இந்தக் கேள்விக்கு கிராம்சி கூறுவது என்ன?
இத்தகைய ஒரு நிலைமையை எதிர்த்து நியாயம் – நற்பண்புகள் – அறிவார்ந்த சீர்திருத்தத்திற்கான ஒரு எழுச்சியை – பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தின் கட்டுப்பாட்டைத் தகர்க்க இயலும். இதற்கு எதிரான ஒரு மாற்று மேலாதிக்கத்தைக் கட்டியமைக்க வேண்டும். உழைக்கும் மக்களின் மற்றும் மாற்றத்தை விரும்பும் பிற பிரிவினரின் மேலாதிக்கமாக இது இருக்கும். இதன் மூலம் மேலாதிக்கத் தத்துவத்தினை வலுவிழக்கச் செய்யவும், அதே நேரத்தில் செயல்பாட்டிற்கான தத்துவத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் வழி பிறக்கும்.
பண்பாட்டு இயக்கம்:
கிராம்சியின் இந்த நியாயம், நற்பண்புகள் – அறிவார்ந்த சீர்திருத்தம் என்பதைத்தான் இன்று நாம் ‘பண்பாட்டு இயக்கம்’ என்கிறோம். இவ்வியக்கம், மக்களின் பல்வேறு பிரிவினரிடையிலும் விழிப்பூட்டும் பணிகளில் செயல்படும். அது அவர்களின் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்தும், அதற்கு மாற்றானதைக் காட்டும்.
பண்பாட்டு இயக்கத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், திரைப்பட கர்த்தாக்கள் எல்லோருக்கும் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதில் முக்கியப் பங்கு உண்டு. இன்று இந்த மேலாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டியதொரு அவசரம் உள்ளது.
நமது வாழ்க்கை முறையை, நமது விழுமியங்களை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள மேலாதிக்கம் செய்கிற தத்துவங்களை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். பண்பாட்டு இயக்கம் வெறும் கலைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம் மட்டுமல்ல; சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் பங்கேற்கச் செய்யும்; சிவில் சமூகத்தின் எல்லா அமைப்புகளையும் ஈடுபடுத்தும், ஒரு இயக்கமாகும்.
பொதுப் புலனறிவு:
ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் ஒரு தத்துவவாதி – ஒரு அறிவு ஜீவி. அதாவது தனக்கென ஒரு தத்துவத்தை – ஒரு உலகப்பார்வையை ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர். உணர்வுபூர்வமற்ற வகையில் உலகத்தைக் காணும் இந்தப் பார்வையைத்தான் கிராம்சி பொதுப் புலனறிவு என்கிறார்.
இந்த பொதுப் புலனறிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது மேலாதிக்கத் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட கருத்துக்களையும் இணைத்து வெகுஜனப் பண்பாட்டில் ஊடுருவுகிறது.
எனவே, மக்களின் பொதுப் புலனறிவு என்ற களத்தில்தான் மேலாதிக்கத் தத்துவத்தின் கருத்துக்களோடு ஒருவரின் தனிப்பட்ட அனுபவப் படிப்பினைகள் மோதுகின்றன எனலாம்.
நியாய உணர்வுகள்:
ஆயினும் மேலாதிக்கத் தத்துவத்தால் என்றைக்கும் மக்களின் நியாயமான உணர்வுகளை அடக்க முடியாது. இந்த இடத்தில்தான் நமது பண்பாட்டு இயக்கத்தின் பணி தொடங்குகிறது. இந்த பொதுப் புலனறிவை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக அதனை நல்ல புலனறிவாக உருமாற்றலாம்.
மேலாதிக்க விழுமியங்களைத் தோலுரித்துக் காட்டுவதன் மூலம், பொதுப் புலனறிவுக்குள் பொதிந்து கிடக்கும் எதிரான விழுமியங்களை தோலுரித்துக் காட்ட முடிகிறது. அதன் வழி, அவர்களுக்குள் இருக்கும் சொந்த அனுபவங்களை வெளிக்கொண்டுவர முடிகிறது.
இந்தக் கருவை மையமாகக் கொண்டு ஒரு மாற்றுக் கருத்தைக் கட்டி எழுப்பி, அதனோடு ஒரு விவாதத்தை நடத்தி, புதிய கருத்துக்களை உருவாக்கிவிடலாம்.
இப்படியொரு சூழ்நிலையில், மேலாதிக்கத்திற்கு எதிராக பண்பாட்டு இயக்கத்தின் கடமை என்னவாயிருக்கும்? குறிப்பாக, உலகமயமாக்கல் இன்று பண்பாட்டை ஒரு முக்கியக் காரணியாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்திடும் சூழலில், மேலாதிக்கத்திற்கு பண்பாடு ஒரு வாகனமாக பயன்படுத்தப்படுகிறது என்ற இந்தப் புரிதல், பண்பாடு ஊழியனுக்கு புதிய கற்பிதங்களையும், நடைமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைத் தருகிறது.
சிந்தனைகளின் போராட்டம்:
மேலாதிக்க விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்துவது எப்படி? நமது சிவில் சமூகத்தின் எல்லா நிறுவனங்களிலிருந்தும் இவை செயல்படுத்தப்படுகின்றன – நிலைபெறுகின்றன என்பதையும் விளங்குவதன் மூலமே இது சாத்தியமாகிறது.
குடும்பம், சாதி, மத நிறுவனங்கள், அறிவியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரம், தொழில் உற்பத்தி – இவையெல்லாம் சிவில் சமூகத்தின் நிறுவனங்களில் நிலைபெற்று எப்படி மேலாதிக்க வர்க்கங்களுக்கு – அவர்களின் மேலாதிக்கத்திற்கு உதவி செய்கின்றன; பொதுமைப்படுத்தப்படுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பண்பாட்டு நடவடிக்கையில் ஆதிக்க பிரிவுகள் மற்ற பிரிவினருடன் ஏற்படுத்தக் கூடிய எல்லா உடன்படிக்கைகளையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், அந்தப் பிரிவு மக்களை நமது அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
நோம் சோம்ஸ்கி கூறுகிறார்: “ஒரு சர்வாதிகாரத்தில் மக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஜனநாயகத்தில் அவர்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.”
மேற்கண்ட விஷயங்கள் இன்று பண்பாட்டுக் களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் துணையாவன. கூடவே இது தொடர்பான அறிவியல் விவாதத் தளத்தை விரிவுபடுத்தவும் பயன்படுவன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக