திங்கள், 3 டிசம்பர், 2012

பவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் வரலாறு




அப்பாதுரையார்...
வாழ்க்கையின் சிறு  குறிப்புகள்
1890இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையில்லேயே கலைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பார்கள்.


சமூக வாழக்கை
1907இல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு சென்னை ராயப்பேட்டையில் இருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான பண்டித.க. அயோத்திதாசர் அவர்களால் வெளியிடப்பட்டு வந்த தமிழன் பத்திரிகையும் பண்டிதரின் எண்ணற்ற விளக்க கூட்டங்களே காரணமாகும். சமயம்,சமுதாயம்,இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக்கானுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது. 1912இல் இருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் சிறப்பாக தமிழன் பத்திரிகைகளிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதி புகழ் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றிருந்து இவர்.1911இல் தமது வது வயதில் பவத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இளைஞர் பவத்த சங்கத்தை கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறுநூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அறியக்கூட்டன்களை நடத்தினார். இவரது நினைவு நாளில் எங்களுக்கெல்லாம் முன்பே பகுத்தறிவு பிரச்சாரம் செய்து மக்களை திருத்தியவர் இவர் என்று பெரியார்அவர்களால் புகழப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1917இல் மாண்டேகு- செம்ச்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது.1924 இல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது ஆகியவை இவரது தொண்டின் சிறப்புகளாகும்.   1924இல் இருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். புத்தர் அருளறம் என்ற நூலினை படைத்துள்ளார். 1930லிருந்து 1955வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும் 1962இல் உடல் நலன்குன்றி இயற்கை எய்தினார் .               
சமயப்பணி :-
அப்பாதுரையாரின் சமூக பணிகள் பல முக்கிய  தகவலுடன் தலித் முரசு பத்திரிகையில் வந்ததை கீழை குறிப்பிட்டு உள்ளேன்.  
கோலார் தங்கவயலில் புத்தரை முன்மொழிந்து, பவுத்தத்தை வழிமொழிந்து நடந்தவர்கள் கடவுள் மறுப்பு, அனைத்துமத எதிர்ப்பு, ஆண்டாண்டுகால மரபு பழக்க வழக்க எதிர்ப்பு, வேத புராண இதிகாச மறுப்பு, வேதியம் எடுத்துக் கொண்ட அதிகார மறுப்பு என ஒட்டுமொத்தத்தில் பார்ப்பனியச் சமூக அமைப்பின் ஒழுங்கியலை தடுப்போராகவும், வீண் குழப்பத்தை விளைவிப்போராகவும் சமூகத்திற்கு தீங்கானவர்களால் குற்றம் சாட்டப் பட்டார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி கட்டவிழ்ந்தவுடன் அதைக் கைப்பற்றும் முனைப்புடன் புதிய வியூகமாகக் கட்டப்பட்ட, இந்தியத் தேசியம் எனும் வெளிப்பூச்சின் உள் அந்தரங்கமான இந்துத்துவ அரசியலை முன்னெடுத்த பார்ப்பனர்களின் - பணக்காரர்களின் இந்திய விடுதலைக்கு பவுத்தம் எதிராக நின்றது. சாதியக் கட்டை குலைக்க விரும்பாத பார்ப்பனியர்களின் நாட்டு விடுதலை முழக்கத்தில் - தலித் விடுதலை எனும் மானுட விடுதலை இல்லையென்றே அறிவித்தது.

கோலார் தங்க வயலுக்கு பவுத்த மார்க்க பரப்புநராக வந்த (1903 - 1907) எம். ராகவர் அதிகமான இன்னல்களை அனுபவித்தவராக பவுத்தப் பணியினை மேற்கொண்டார். கோலார் தங்கவயலின் மூலை முடுக்கெல்லாம் புத்தரை அறிமுகம் செய்து, அவரது லட்சியங்களைப் பதிய வைக்க, ராகவர் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இந்து விஷமிகள் அவரைப் பற்றி அவதூறினை கிளப்பிவிட்டார்கள். அவரது செயல் திட்டங்களில் குறுக்கீடு செய்தனர். ராகவர், மதங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுபவராக பாவிக்கப்பட்டார். கோலார் தங்க வயலில் ராகவர் இருப்பது, இந்து மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும் தீங்கானது என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, மதவெறி மூர்க்கர்களால் முறைவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டார். ராகவரின் வீடு "தீ'க்கு தின்னக் கொடுக்கப்பட்டது. நெருக்கடிகளையும் துன்பங்களையும் எதிர்த்து, அவற்றை வசப்படுத்தும் மனமே பவுத்தமனம். மலினங்களின் ஆட்டங்களை அலட்சியப்படுத்தி பவுத்தம் எனும் மெய்மையை எந்தச் சூழலிலும் ஸ்பரிசிக்க வல்ல ஆற்றலான ராகவர், இடர்களைக் கடந்து பவுத்த நீட்டிப்பிற்கே தன்னை ஈந்தார்.

ராகவர் போன்ற தொடக்க கால பவுத்த முன்னோடிகளின் உண்மையான ஈடுபாடும், அழுத்தமான அர்ப்பணிப்பும் குறிதவறாத நோக்கத்தை நோக்கிய முன்னெடுப்பும் விரைவிலேயே கோலார் தங்கவயலில் பவுத்தம் காலூன்ற ஏதுவாகியது. பவுத்த மார்க்க காலவோட்டத்தில் 1907 ம் ண்டு ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக் கல்லை நட்டு வைத்தது. அயோத்திதாசரால் சூன் 9 அன்று தொடங்கப்பட்ட "ஒரு பைசா தமிழன்' என்ற வார ஏடு, தன் தோற்றம் குறித்து "உயர் நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு, நீதி, சரியான பாதை மற்றும் நேர்மையை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாரும், இலக்கியவாதிகளும், ஒன்றுகூடி ஒரு பைசா தமிழனை' வெளிக்கொண்டு வந்தார்கள்'' என்று குறிப்பிட்டது.
http://www.keetru.com/dalithmurasu/july05/vallivinayagam1.jpg

-
தமிழனின் தன்னிலை விளக்கம்...

ஒரு பைசா தமிழன்' உண்மையாகவே ஒரு பவுத்த வார இதழ்தான். சாக்கிய பவுத்த சங்கத்தின் அனைத்து புதிய கிளைகளையும் தொடர்புபடுத்தும் செய்திமடலாக அது செயல்பட்டது. புதியவர்களுக்கு தமிழ் பவுத்தத்தின் நெறிமுறைகள் கோட்பாடுகள் மற்றும் நடைறைகளைக் கற்பித்தது. பவுத்த உலகில் நடந்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களையும் அறிக்கைகளையும் தந்தது. பொதுவாக துணைக் கண்டத்தின் வரலாற்றையும் குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றையும் பவுத்த நிலைப் பாட்டில் இருந்து பெயர்த்துரைக்க முயன்றது. ஆனால், இவற்றை யெல்லாம் விடவும் கூடுதலானதாகவும் இருந்தது அது:

"உளறும் பத்திரிகைகளை தடை செய்க''


தமிழன்' இதழில் 19.11.1930 அன்று வெளிவந்த "நான் மந்திரியானால்...'' என்ற தலைப்பில் கிறுக்கன்' எனும் புனைப்பெயரில் அப்பாதுரையார், 14 அம்ச திட்டத்தினை வெளியிட்டார். இன்றும் நீளும் சாதி- வர்க்க - ஆணாதிக்க சூழ்நிலைமையில், முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே அதிகபட்ச சாத்தியங்களை அகப்படுத்தி, பகுத்தறிவு சமதர்ம வழியில் புதுவிசையையும் வீச்சையும் உருவாக்கியவர். சவால்கள் மிகுந்த எதிர்மறை பிராந்தியங்களை, எவ்விதத் தயக்கமுமின்றி அசாத்தியமாக எதிர்கொண்ட அப்பாதுரையார், தன் 14 அம்ச பகுத்தறிவு சமதர்மத் திட்டத்தினை இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மைசூர் சமஸ்தான மன்னர், சென்னை மாகாண அமைச்சர்கள் பி.டி. ராசன், குமாரசாமிராசா ஆகியோர் பார்வைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1.
இந்தியாவிலுள்ள கோயில்களையெல்லாம் பள்ளிக் கூடங்களாகவும், சிறு கைத் தொழில் கூடமாகவும் மாற்றுவேன்.

2.
கடவுள் பேரால் நடக்கும் நிகழ்ச்சிகளை தடை செய்வேன்.

3.
இந்தியா முழுமையும் ஒரே சம்பளம் என்று முறை வகுப்பேன். அதிகாரிகள் 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறாத வகையில் சட்டம் கொண்டு வருவேன்.

4.
தன் பெயர்களுக்குப் பக்கத்தில் ஜாதிப் பெயர் குறிப்பிடுவதை தடை செய்து அபராதம் விதிப்பேன். சந்நியாசிகள், சாமியார்கள், மதகுருக்கள் அனைவரையும் எங்குமில்லாமல் செய்து மதங்கள் என்பதை அழித்து விடுவேன்.

5.
மாணவ மாணவியர்களுக்குரிய பாடப்புத்தகங்களிலுள்ள புராண, மதக் கருத்துகளடங்கிய பாடப்புத்தகங்களை அகற்றிவிடுவேன்.

6.
தேசியம், புராணம், இதிகாசம், மதம், கடவுள் என்று உளறிக் கொண்டிருக்கிற பத்திரிகைகளை தடை செய்வேன்.

7.
அய்ந்தாயிரம் ரூபாய்க்கு மேல் எவரும் பணம் வைத்திருக்கக்கூடாது என்றும், சாதி மறுப்பு கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் செல்லுபடியாகும் என்றும் சட்டம் செய்வேன்.


8.
பெண்கள் 18 வயதுக்கு மேல்பட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று சட்டம் ஆக்குவேன்.

9.
மந்திரவாதிகளையும் சோதிடம் பார்ப்பவர்களையும் ஒழிப்பேன்.

10.
பிச்சை எடுப்பவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வேலை செய்து பிழைக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வழி செய்வேன்.

11.
எல்லா ஊர்களிலும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க, அரசாங்கக் கடைகளைத் திறப்பேன்.

12.
இந்தியா எங்கும் ஒரே மொழி வழங்க ஏற்பாடு செய்வேன்.

13.
தூக்குத் தண்டனையை எடுத்து விடுவேன்.

14.
கோயில் பேராலும் கடவுளின் பேராலும் இருக்கிற சொத்துகளைப் பறிமுதல் செய்வேன்.
"தமிழர்களின் சமகால சமுதாய அரசியல் வாழ்வில் தலையிடும் தெளிவான நோக்கமுள்ள வானிலை அறிக்கைகள் - பண்டங்களின் விலைகள் - கண்டுபிடிப்புகள் - மக்களை பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அரசின் கொள்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடுகிற, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் நடப்பு சமுதாய, அரசியல் நிகழ்வுகளை முரணின்றி திறனாய்கிற வாழ்வின் எல்லாத் துறைகளிலும் விளிம்புநிலைக் குழுக்கள் அதிகாரம் பெறுவதற்கு ஓய்வின்றிப் பாடுபடுகிற, வெகுசனத் தலைமைக்குரிய ஏடாக விளங்கவே அது வல் கொண்டது. இவை எல்லாவற்றுக்குள்ளும் இவை எல்லாவற்றின் வழியாகவும் காலனிய ஆட்சியின் கீழ் ஏற்றம் பெற்றுவிட்ட பார்ப்பனியத்தின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக ஒரு மாற்று தேசிய அடி சொல்லாடலை நிறுவுவதை அது தன் உறுதியான நோக்கமாகக் கொண்டது'' (ஞான. அலாய்சியஸ்).

இதழின் தொடக்க காலங்களில் தொடர்ந்து எழுதிவந்தவர்கள் சி.எம்.சி. மூர்த்தி, சொப்பனேசுவரி அம்மாள், டி.சி. நாராயண பிள்ளை, ஏ.பி. பெரியசாமிப் புலவர் முதலியோர் ஆவர். தமிழன்' தனக்கெனத் தனித்த ஒரு மார்க்க பண்பாட்டு கருத்தியலும், சமுதாய செயல்பாட்டுக்கான கொள்கைத் திட்டம் கொண்ட மய்யமாகவும் நிறுவனமாகவும் மாற்றப்பட்டது. எல்லா மதங்களிலும் குறுக்கீடு செய்து அவற்றை விடுவித்துக் கொண்டுதான் மனித வாழ்வியலுக்கான குறியீட்டு நெறியாகவும், ஒரு சமூக விடுதலை இயக்கமாகவும் தமிழ்ப் பரப்பில் பவுத்தம் இடம் பிடித்தது. இந்தப் புதிய கட்டுமானத்தோடு மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மிக்க எம்.ஒய். முருகேசம், சி. குருசாமி,     எம். ராகவர், ஏ.பி. பெரியசாமி ஆகியோர் மாரிக்குப்பம் கோலார் தங்கவயல் பவுத்த சங்கத்தின் மய்யக் குழுவாக இருந்த வேளையில், அதன் நற்பேறாக இணைந்தவரே அப்பாதுரையார்.

பவுத்தர்கள் மட்டுமே மானுட சாராம்சத்திற்கான கருத்திற்கும் காரியத்திற்கும் தகுதியானவர்கள் என்ற அப்பாதுரையாரின் முடிந்த முடிவால், கோலார் தங்கவயலிலும், வடாற்காட்டிலும், சென்னை மாநகரிலும் பவுத்தம் ஒரு ஜீவத்துடிப்பைப் பெற்றது; அவரது நல் வரவால் அது மிகவும் வலுப்பட்டது. 1911 இல் பிக்கு இந்தி வன்சலின் மூலம் சீலம் பெற்றுக் கொண்ட அப்பாதுரையார், அதிலிருந்து பவுத்த சங்கத்தின் மதிப்பிற்குரிய புதிய உத்வேக சேர்க்கையாக தம்மை அவர் மெய்ப்பித்ததோடு, பவுத்த உலகத்தை சாத்தியப்படுத்துவதில் செயலாளர் நாயகமானார். பவுத்த கட்டுமானத்தில் அயோத்திதாசரின் தன்மையான படைத் தலைவர்களில் முன்னணியான ஆளுமையாக இடம் பிடித்தார். அப்பாதுரையார், பிற்போக்கானதாகவும், கொடுமையானதாகவும் அநீதியாகவும் ஆன பார்ப்பனியத்திற்கு எதிராகவும், பவுத்தம் பரவுவதற்குமான கூட்டுப் போராட்டத்தில் தமிழனுடன்' பங்களிப்பதில் அயோத்திதாசருடன் தோழமை கொண்டார். சரளமாகவும் சாரத்தோடும் எழுதக் கூடிய அப்பாதுரையார், ‘தமிழனில்' தவறாமல் எழுதி வந்தார். அவரின் எழுத்து, தமிழனின் வீரியத்திற்கு கிரியா ஊக்கியாகத் திகழ்ந்தது. மயிலை பி.எம். சுவாமி என்பவர், புத்தரை கிறித்துவுடனும், முகம்மதுவுடனும் ஒப்பிட்டு எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1914 இல் அப்பா துரை ஒரு திறனாய்வை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்யறிவைப் பற்றி எச்சரிக்கையாயிருக்கவும், அறியாமையைவிட அது அதிக பத்தானது என்று அறிவிக்கவும், கடவுள் என்பது ஒரு நீண்ட கால வதந்தி! வதந்திகளை நம்பாதீர்! வதந்திகளைப் பரப்பாதீர்! என்றே புத்தர் கேட்டுக் கொண்டார். புரிபடல் என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டுமெனில், நாம் நிற்கும் தளம் தர்க்க நியாயத்தினால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் புரிதலும் இல்லை, அர்த்தமும் இல்லை.
http://www.keetru.com/dalithmurasu/july05/vallivinayagam2.jpg

ஏசுவும், முகம்மது நபியும் இறைத்தூதர்கள். இக்கருத்தை ஏற்பவர்கள்தான் - கிறித்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருக்க முடியும். இவ்வாறாக ஏசுவும், நபியும் தங்களுக்கான இருத்தலை உறுதி செய்து கொண்டனர். இதுபோன்ற எந்தவித நிபந்தனைகளையும் புத்தர் ஏற்படுத்தவில்லை. தன்னை சுத்தோதனருக்கும் மகாமாயாவிற்கும் பிறந்த மனிதர் என்றே புத்தர் அறிவித்துக் கொண்டார். அவர் தன்னுடைய தம்மத்தில் தன் இருந்தலுக்கான எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. எல்லா மதங்களும் மோட்சத்தை இறுதியாகக் கொண்டுள்ளன. ஆத்மா'வின் வீடு பேற்றை அடைவதே மனித வாழ்க்கையின் நோக்கங்கள் என மதங்கள் வலியுறுத்துகின்றன. பல காலகட்டங்களில் எல்லா மதங்களிலும் இறைதூதுவர்கள், அவதாரப் புருசர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி தங்கள் தங்கள் மதக் கருத்துகளை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர்.

மாறாக, புத்தர் மோட்சம் ஏதும் இல்லையென்றும், தன்னை ஒரு வழிகாட்டி என்றும் அறிவித்தார். தம்மத்தை மனிதர், மனிதர்களுக்காக கண்டுபிடித்த தத்துவம் மட்டுமே என்றார். இத்தத்துவம், உண்மைக்கும் எல்லாவித ஆய்வுக்கும் உட்பட்டது. அதில் எவ்வித இறை தன்மையையும் புகுத்தக்கூடாது என்றார். இதுவே புத்தரால் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படையான செய்திகளாகும். இச்செய்திகளை அப்பாதுரையார் தன் திறனாய்வில் உள்ளடக்கி, மதங்களுக்கும் பவுத்தத்திற்கும் உள்ள வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தினார். பார்ப்பனியத்தின் வெற்றியினால் அடிமையாக்கப்பட்ட, வரலாற்றால் மறைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு அயோத்திதாசர் நிறுவிய பவுத்த சங்கம், ‘தமிழன்' இதழுமே புகலிடமாக நடைபோட்டது. இம்மண்ணின் முதற்குடிகளை பூர்வ பவுத்தர்கள் என்பதை உணர வைத்து "நாம் இந்துக்கள் அல்லர்'' என்ற முடிவுக்கு உந்தித் தள்ளியது. சங்கமும்', "தமிழனும்' இந்து, கிறித்துவ மதங்களின் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. சங்கரன், திருஞான சம்பந்தர் தோன்றி, திபவுத்தமாகிய நாத்திகத்தை அழித்து விட்டதுபோல, புதியதாக வந்த பவுத்தத்தையும் அழித்துப்போட, கடவுளின் அடியோர்கள் எவரும் வரமாட்டாரா? என்று இந்து வெறியர்கள் ஏக்கம் கொண்டார்கள். இருப்பினும் சங்கமும்', ‘தமிழனும்' திடமாக நடத்தப்பட்டு வந்தது.

1914
ம் ஆண்டு மே 5 ம் நாள் அயோத்திதாசர் உடலால் பிரிந்து நினைவில் வாழ்பவர் ஆனார். அயோத்திதாசருக்குப் பிறகு தமிழனை' சிறிதுகாலம் அவரது குமாரர் பட்டாபிராமன் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழனை'ப் பொறுப்பேற்று நடத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த அப்பாதுரையார், எம்.ஒய். முருகேசம் பின்பலத்துடன் தமிழனை'க் கொண்டு வந்தார். அப்பாதுரையாரை ஆசிரியராகவும் வி.பி.எஸ். மணியரை பதிப்பாளராகவும் கொண்ட தமிழன்' 1921 முதல் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. பவுத்த சங்கத்திற்கும் தமிழனுக்கும் தன்னிகரில்லா துணைவராகத் திகழ்ந்த எம்.ஒய். முருகேசம் காலமாகவேதமிழன்' வெளிவருவது தடைப்பட்டது.

இருப்பினும், அப்பாதுரையாரின் விடாமுயற்சியால் தமிழன்' மீண்டும் 1926 ம் ஆண்டு சூலை முதல் வாரத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது. வழிகாட்டி அயோத்திதாசர், புரவலர் எம்.ஒய். முருகேசம் ஆகியோருக்குப் பிந்திய காலகட்டத்தில், கொள்கைக்குன்றாய் அப்பாதுரையாரின் பணி மேலும் தீவிரமடைந்தது.
அப்பாதுரையாரின் சமூக விடுதலை வியூகத்திற்கான எல்லா முனைப்புகளிலும் இணை சேர்ந்து, தந்தைக்கு உற்ற தோழமையாக வாய்த்த அவர், தலைவர் பெரியார் முன்னிலையில் சுயமரியாதை இயக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழ் நாடெங்கும் பங்கேற்றார். காலத்தின் நகர்வில் அவர் சுயமரியாதை இயக்கத்திற்கு மட்டுமல்ல, ஆதிதிராவிடர் அமைப்புகளுக்கும், பவுத்த சங்கத்திற்கும் ஆக்கத்தேட்டத்திற்கான ஆளுமையாக வளர்ந்து நின்றார். சமூகப் பாட்டாளி வர்க்கத்தையும், பெண்களையும் விடுதலை மார்க்கத்தினுள் செலுத்தும் மாற்றங்களை முன்னெடுக்கும் திறன் கொண்டவராய் அன்னபூரணி அம்மையார் இயங்கக் கடமைப்பட்டவர் ஆனார்.

அக்காலத்தில் சத்தியமூர்த்தி (அய்யர்), எம்.கே. ஆச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர (சாஸ்திரி) போன்றோர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் பெண் தோழர்களையும் அவதூறு செய்து வந்த வேளையில், அன்னபூரணி அம்மையார் பெண்ணுரிமை குறித்து ஆழமான, முழுமையான பார்வையைக் கொண்டிருந்தார். பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும், பொதுவாழ்வில் தலையிடவும், ஒரு சமூகப் பண்பாட்டுக் களத்தை உருவாக்கிவிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார். பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய இந்துமத எதிர்ப்பு, சாதி ஆணாதிக்க எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் பெண் விடுதலை ஆகியவற்றில் தடம் பதித்து முன்னகர்ந்தார்.

அன்னபூரணி அம்மையார் - ரத்தினசபாபதி வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம், பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான பரஸ்பர விருப்பம், அன்பு, மரியாதை, தோழமை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட தமிழரும் முற்படுத்தப்பட்ட தமிழரும் இணைந்த சாதி மறுப்பு விதவை ஏற்பு கொண்ட இந்த வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம், சுயமரியாதை இயக்கம் பவுத்த சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த புரட்சிகர அர்த்தத்தில் முழுமையை எட்டிய நிகழ்வாகும். 10.4.1932 அன்று நடந்த இவ்வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவில், பெங்களூர் சாக்கிய பவுத்த சங்க உபாசகர் பி.எம். தருமலிங்கம், "மெய்ம்மதி போதனாவுபசார வாழ்த்தினை' நல்கியது குறிப்பிடத்தக்கது.

சுயமரியாதைத் திருமணங்கள் என்பது, அக்காலத்தில் இக்காலம்போல பார்ப்பனரை மட்டும் விலக்கி ஏமாற்றுவது இல்லாமல் சொல்லும் செயலும் இணைந்த சாதி மறுப்பு மணமாக, விதவை மணமாக, விவாகரத்துப் பெற்றவர் மணமாக, பெண்ணடிமைச் சின்னமான தாலி இல்லாத மணமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில், சுயமரியாதை இயக்கத்தின் உண்மையே, அப்பாதுரையாரை இயக்க ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சுயமரியாதை இயக்கத்தில் இணைத்து வைத்தது.

அப்பாதுரையார், பவுத்தத்தை மீண்டும் தற்குடிகளின் கூட்டு நனவாக்க சமூக விஞ்ஞானியாய்த் திகழ்ந்தார். அறிவியல் விஞ்ஞானிக்குரிய கனவு காண்பவராகவும் இருந்தார். அறிவியல் வளர்ச்சியினை எதிர்பார்க்கும் விண்வெளிக்குரிய ஆராய்ச்சியினை இன்றைக்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, குறிப்பாக 23.5.1934 அன்று தமிழனில் வெளியிட்டார். "விண்வெளி கிரகங்களுக்குச் செல்லல்', "விஞ்ஞான டெலஸ்கோப்' போன்ற அவரின் விண்வெளி நோக்கிய பயணக் கட்டுரைகள், சந்திர மண்டலத்திற்கு மனிதர் இன்னின்ன வழிமுறைகளைக் கையாண்டு செல்லலாம் என்பதை அறிவித்தது. மேலும், அவரது ஆராய்ச்சியின் நீட்சி சந்திர மண்டலத்திற்கு மட்டுமல்ல; புதன், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்களுக்கும் மனிதர் செல்ல முடியும் என்று தெரிவித்தது. அந்த கிரகங்களின் இயக்கத்தன்மைகளை தொல்தமிழ்ச் சாத்திரங்களின் அறிவு புலத்தின் ஆதார சுருதியோடு எழுதிய அப்பாதுரையார், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர் விரைந்த காலத்திற்குள் செல்ல முடியும் என்றும், அக்கிரகத்தில் நீர்நிலை உண்டு என்றும், இதனால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் குடியேறி உயிர் வாழ முடியும் என்றும் தன் ஆராய்ச்சியை முடித்து வைத்தார்.

இனம், மொழி, அரசியல், அறிவியல் தொண்டில் மட்டுமல்லாமல் கலைத் தொண்டிலும் அப்பாதுரையாரின் கவனம் சென்றது. 1934 ஆம் ஆண்டில் அப்பாதுரையார் தன் மருமகன் பி.ஆர். ரத்தின சபாபதியுடன் இணைந்து "சமத்துவ நடிகர் சங்கம்' என்ற அமைப்பினைத் தோற்றுவித்தார். இச்சங்கத்தின் "கலப்பு மணம்' என்ற நாடகம் புகழ் பெற்று, கோலார் தங்க வயல் வடஆர்க்காடு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. இந்நாடகத்தின் பெரும்பாலான அரங்கேற்றங்கள், தலைவர் பெரியார் முன்னிலையில் நடந்தேறின. கலையை பகுத்தறிவு வளர்ச்சிக்கும் சாதி ஒழிப்புக்கும் கருவியாக்கி, சமூக விடுதலைக்கு முன்நிபந்தனையாக இருக்கும் பண்பாட்டுத் தளத்தையும் உயர்த்திப் பிடிக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்பட்டது.

கலப்பு மணத்தின் கருத்து வீச்சால் சாதி இந்துக்களுக்கும், பகுத்தறிவு சமத்துவ உணர்வாளர்களுக்கும் நேரடி கருத்து மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. அச்சமயத்தில் அப்பாதுரையார், 13.12.1934 நாளிட்ட "தமிழன்' இதழில் "பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்' என்ற தலைப்பில் தொடர் எழுதினார். பிறகு அது "பரலோகத்தில் இருக்கும் பரம சிவனுக்கு' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. இந்நூல் இந்து மதத்தின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியதால், சாதி இந்துக்கள் முதல் மைசூர் இந்து மன்னர் சாமராஜ உடையார் வரை கலகலகத்துப் போனார்கள்.

இதன் விளைவாக மைசூர் மன்னர் "தமிழன்' இதழினைத் தடை செய்து "தமிழன்' ஆசிரியர் அப்பா துரையாருக்கும் வெளியீட்டாளர் பி.எம். ராஜரெத்தினத்திற்கும் ஆணைபிறப்பித்தார். தமிழனுக்கு வந்த தடை கர்நாடகம், வடதமிழகம் மற்றும் பர்மா, இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் தெரிந்தது. "குடிஅரசு', "புரட்சி' இதழ்களோடு தமிழனையும் சேர்த்து வாங்கிப் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த பெரியார், "தமிழன்' தடை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தமிழனுக்கு ஏற்பட்ட தடையை நீக்குமாறு மைசூர் மன்னர் சாமராஜ உடையாருக்கு தந்தி கொடுத்தார். "தமிழன்' தடை செய்யப்பட்டதைக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தார்.

அப்பாதுரையாரும், ராஜரெத்தினம் தமிழனை மீண்டும் வெளியிட சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் "தமிழன்' என்ற பெயரில் இதழ் நடத்தாமல் வேறொரு பெயரில் நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு எழுதியது. இத்தீர்ப்பினை எதிர்த்து அப்பாதுரையாரும் ராஜரெத்தினம் மேல்முறையீடு செய்தனர். இம்முறையும் நீதிமன்றம் "தமிழன்' என்ற பெயரில் இதழ் நடத்தவே கூடாது என்று உறுதியான தீர்ப்பை வழங்கியது. சுயமரியாதைப் போராளிகளான அப்பாதுரையாருக்கும் ராஜரெத்தினத்திற்கும் வேறொரு பெயரில் இதழைக் கொண்டு வருவதில் உடன்பாடில்லை. தமிழனுக்குத் தடை ஏற்பட்டதில் தன் மூச்சுக் காற்று தடைப்பட்டதான அவஸ்தையை அப்பாதுரையார் அடைந்தார்.

மைசூர் சமஸ்தானத்தின் கருத்துரிமைத்தடைத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடகத்திலும், வடதமிழ் நாட்டிலும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன. இப்பிரச்சார இயக்கத்தின் தன்மைக் கருத்தாளர்களாக அப்பாதுரையாரும், மகள் அன்ன பூரணியும், மருமகன் ரத்தினசபாபதியும் பங்கேற்று, இந்துத்துவத்தை எதிர்த்து இனி தீவிரமாக களமிறங்கப் போவதாக குரல் கொடுத்தார்கள். "எந்தப் பெயரும் இருந்துவிட்டுப் போகிறது; ஏதாவது ஒரு பெயரில் இதழினைத் தொடங்குங்கள்' என்று எவரும் அப்பாதுரையாரைக் கேட்டுக் கொண்டதில்லை. அப்பாதுரையாரின் மான உணர்ச்சியை மக்களும் மதித்தார்கள்.

Budda
14.10.1934 அன்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் அப்பாதுரையாரின் மகன் ஜெயராமனுக்கும் இந்திராணிக்கும் ராகுகாலத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் செய்துவிக்க பெரியார் சென்றபோது, சாதி இந்துக்களால் பதட்ட நிலை ஏற்பட்டது. பெரியார் வருகைக்கு அரசு தடைபோட்டு விட்டதாக நகர் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. கோலாரில் தீண்டாமை விலக்கு பணியைச் செய்து வந்த கோபால் சாமி (அய்யர்) அதிகாரிகளைச் சந்தித்து, தடை உத்தரவு போடுவது கலவரத்தை உண்டாக்கும் என்று எடுத்துச் சொன்னதின் பேரில், பெரியார் திருமண நிகழ்வில் மட்டுமே பங்கேற்க வருகிறார் என்று உறுதியான பிறகே மணவிழாவினை நடத்த முடிந்தது.

1938 ஏப்ரல் 21 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, இந்தியை கட்டாயப்பாடமாக்கினார். இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைமையேற்ற பெரியார், இந்தியை எதிர்த்து நிற்க தம்மோடு தோள் கொடுக்க அப்பாதுரையாரை அழைத்தார். பவுத்த சங்கம் சார்பில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவினை நல்கிய அப்பாதுரையார், தமிழ் நாட்டில் இருந்து இந்தியை விரட்டியடிக்கும் வரை உறுதுணையாக இருந்தார். 26.6.1938 அன்று சென்னை கடற்கரையில் ஏறத்தாழ 1000 பெண்கள் உட்பட 50,000 பேர்களுக்கு மேல் பங்கேற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் வீர உரையாற்றி, அனைவரையும் சிலிர்த்தெழச் செய்தார்.

அப்பாதுரையாரின் சமூக வாழ்வைப் பாராட்டி, கோலார் தங்கவயலிலுள்ள பவுத்த சங்கத்தில் அவரது படத்திறப்பு விழா, 1942 ஆம் ஆண்டு மே திங்களில் நடந்தேறியது. அச்சமயம் ஈ.வெ.ரா. கல்விக் கழகம், சமரச சன்மார்க்க நடிகர் சபா, சீர்திருத்த வாலிபர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பாராட்டிதழ்கள் வழங்கப்பட்டு அப்பாதுரையார் சிறப்பிக்கப்பட்டார். அப்பாதுரையாரின் அப்பழுக்கற்ற தொண்டினைப் பாராட்டும் வகையில், 15.5.1950 அன்று கோலார் தங்க வயல் தி..க. சார்பில் மாபெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்வாண்டில் அப்பாதுரையார் 310 பக்கங்களைக் கொண்ட "புத்தர் அருளறம்' என்ற நூலினை வெளியிட்டார். இந்நூல் பவுத்தத்தினுள் ஊடுருவிய பார்ப்பனர்களையும், பார்ப்பனியர்களையும் குலைநடுங்கச் செய்தது. உண்மையான பவுத்த சாராம்சங்களுக்கு உரை கல்லாகத் திகழ்ந்தது.

புரட்சியாளர் அம்பேத்கர், 1954 இல் கோலார் தங்க வயலுக்கு வருகை தந்தபோது, அப்பாதுரையாரைச் சந்தித்து முறையான பவுத்தத்தை வடித்தெடுக்கும் பொருட்டு கலந்துரையாடினார். பவுத்தத்தை சீரழித்த பார்ப்பனியக் கருத்தியல் வன்முறையை ரத்து செய்தவர்களாய், பவுத்த சாராம்ச வகைமைகளை வளர்த்தெடுப்பவர்களாய் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டது, இருவரின் பவுத்த ஞான ஆளுமையை வெளிப்படுத்தியது. காலத்தை மிக அபூர்வமாக பாவிக்கும் புரட்சியாளர், அப்பாதுரையாரோடு சில மணிநேரங்கள் செலவிட்டுச் சென்றது தங்கவயலில் அப்பாதுரையார் பெற்றிருந்த மதிப்பை மேலும் உயரப்படுத்தியது.

பெரியார், ஈரோட்டில் 1954 சனவரி 23 இல் புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டைக் கூட்டினார். மாநாட்டுக்கு உலக பவுத்த சங்கத் தலைவரும், சோவியத் ரஷ்யாவின் இலங்கை தூதுவருமான ஜி.டி. மல்லலசேகரா தலைமை வகித்தார். அப்பாதுரையார் புத்தரின் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 6.10.1957 அன்று தங்கவயல் கென்னடிஸ் கலையரங்கில், வட்ட கலைமன்றத்தின் சார்பில் அப்பாதுரையாரை கவுரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவிக்கும் விழா நடைபெற்றது. தி..க. பொதுச் செயலாளர் ரா. நெடுஞ்செழியன் அப்பாதுரையாருக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி எனும் ஆயிரம் ரூபாய் பணமுடிப்பையும் வழங்கிச் சிறப்பித்தார். 1959 இல் அப்பாதுரையார் தலைமையில் தங்க வயலில் புத்தர் விழா நடந்தது. இவ்விழாவில் பெரியார் சிறப்புரையாற்றினார்.

இம்மண்ணின் தற்குடிகளின் இயல்புகளின் இயைபு ஆன அளப்பரிய அறச் சிந்தனையான பவுத்தத்தைக் கொண்டு, சமூக நோயான பார்ப்பனியத்தை விரட்டிய அப்பாதுரையார், அப்பணியினிடையே 21.1.1961 அன்று வாலாஜா வன்னிமேடு கிராமத்தில் காலமானார். அவரின் புகழுடல் தங்கவயலுக்கு கொண்டு வரப்பட்டு பவுத்த முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அப்பாதுரையார், தன்மனித இருப்பை பவுத்தமானுடமாக்கியவர். மாற்றுகளின் கர்ப்பம் தாங்கி ஒன்றியவர். தன்வாழ்க்கை வெகுமக்களுக்கு உண்மையானதாகவும் முன்னேற்றமானதாகவும் இருக்க வேண்டும் என்ற பேராசைக்குள் தன்னை அடக்கிக் கொண்டவர். தன் மனித வாய்ப்பினை மானுடத்தை முழுமையடையச் செய்யும் வலிமை என்று நம்பியவர். பகுத்தறிவும் சமத்துவமே தன்னை அள்ளிக்கொண்டுபோக அனுமதித்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் சரிபகுதியை மனிதகுல முன்னேற்றம், மனித மனங்களாவிய பரிமாற்றம் என்ற செயல்முறைமைகளுடன் பவுத்தமயமாதலை மனித இருப்பிற்கும், இயங்கியலுக்கும் கோலார் தங்க வயலில், வட தமிழகத்தில், சென்னை மாநகரில் அப்பாதுரையார் அச்சாணியாக்கினார். இவர் தமிழியத்தின், தலித்தியத்தின், பெண்ணியத்தின் முன்னோடி ஆவார். அவர் காலத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்ட தோழமை என்பது பவுத்தத்தையே அர்த்தப்படுத்தியது. அவர் தடம் பதித்த மண் மொத்தம் புத்தரின் செய்தியைத் தான் எதிரொலித்தது. அப்பாதுரையாரின் அற்புதங்களுக்கு ஆட்படாதவரை, தற் குடிகளுக்கு அவலங்கள்தான் மிஞ்சி நிற்கும் என்பதை இக்கால வரலாறு, நம் கன்னத்தில் அறைந்தே மொழிகிறது.



எந்த நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு பண்டிதர் அயோத்திதாசரவர்களால் தமிழன்' தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியத்தை தமிழன்' இதுபோதும் கைவிடாது பின்பற்றி வருவதுடன் அரசியலிலும் சமூக உரிமையிலும் தாழ்த்தப்பட்டோர், இப்போதைய நிலைமைகளுக்கேற்ப எவ்வெத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டுமோ, அவ்வத் துறைகளையும் தமிழன்' இயன்ற வரை பின்பற்றித் தங் கடமையையாற்றி வந்திருக்கிறது.

விஞ்ஞான ஒளி பரந்துலவும் இவ்விருபதாம் நூற்றாண்டில் மனித சமூகம் தேசம், நிறம், ஜாதி, மதம் முதலிய வரம்புக்குள் கட்டுப்பட்டு விடாமல், எங்ஙனம் விசாலமான நோக்கத்தோடு உலகியலைப் பரந்து நோக்கி, அவ்விஞ்ஞான உலகத்தோடு ஒட்ட ஒழுகத்தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டுமோ, அவ்வியலை மக்கள் பின்பற்றிச் செல்லுமாறு எவ்வெவ் வழிகளைத் துணை பற்ற வேண்டுமென்பதைத் தமிழன்' சிறிதும் கைசோரவிடவில்லை.

அதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்புகள் அளவு கடந்தனவாம். மைசூர் சமஸ்தான கவர்ன்மெண்டின் பத்திரிக்கை சட்டத்தினால் தமிழன்' நிற்பாட்டப்பட்டும் மிகுந்த சிரத்தையோடு அதனை மீண்டும் வெளியாக்கி வந்தோம். இவ்வளவு இடையீடுகளையேற்றும் மிக்க சகிப்புத் தன்மையோடு பத்திரிக்கையை நடத்தி வந்ததின் காரணம், சமூக முன்னேற்றத்தின் மீது கொண்டிருந்த அளவு கடந்த ஆர்வத்தினாலன்றி வேறன்று.

“தன்னைப்பெரியார் என்று அழைப்பது  விட இந்த அப்பாதுரையார் அவர்களையே பெரியார் என்று அழைப்பது பொருந்தும் என்றார்.”—ஈ.வெ.ரா..பெரியார்  

1930 லிருந்து 1955வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும். 1962இல் உடல் நலன்குன்றி இயற்கை எய்தினார்.

..................................................................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக