பாசிஸ்ட் ஜெயா
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.
இவை ஒருபுறமிருக்க, நாம் இங்கே கூறவிரும்பும் சதி என்பது தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பனச் சதி! இந்தச் சதியின் நாயகி – ஜெயலலிதா.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஜெ. வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்தீர்களா? பொது வாழ்வு என்பது நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானது என்பது அரசியலில் நுழைந்த காலம் முதல் அவருக்குத் தெரியுமாம். நினைவு தெரிந்த நாள் முதல் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி வந்திருக்கிறாராம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக எந்த தியாகத்தையும் செய்வாராம்!
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு திருடன், தான் நிரபராதி என்று கூறிக் கண்ணீர் விடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். தன்னைத் தியாகி என்று பிரகடனம் செய்து கொள்வதும், தான் கொள்ளையடித்த சமுதாயத்தையே தனக்காகக் கண்ணீர் விடுமாறு மிரட்டுவதும் எங்காவது நடக்குமா? தமிழகத்தில் நடக்கிறது. அது மட்டுமல்ல, உண்ணாவிரதத்துக்கு 200 ரூபாய், மனிதச் சங்கிலிக்கு 300, பால்குடத்துக்கு 500, மொட்டைக்கு 3000, மரணத்துக்கு 3 லட்சம் – என்று தமிழக மக்களின் மானமும் உயிரும் விலை பேசப்படுகிறது. தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் முன்னால் மண்டியிடுமாறு தமிழகமே நிர்ப்பந்திக்கப்படுகிறது.
வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பாத்திரத்தை விளக்கப் புகுந்த ரஷ்ய மார்க்சிய அறிஞர் பிளக்கானவ், “தனி நபரின் முக்கியத்துவம் என்பது ஒரு மன்னன் பெண்பித்தனாக இருப்பதற்கும், அவனது குதிரை லாயக்காரன் பெண்பித்தனாக இருப்பதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது. முன்னதற்கு அரசியல் விளைவு உண்டு, பின்னதற்கு அரசியல் விளைவு கிடையாது” என்பார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் என்ற பாசிசக் கோமாளியின் பெண்பித்து தோற்றுவித்த “அரசியல் விளைவை” நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சூடு சொரணையும் சுயமரியாதையும் இல்லாத நிலையை நோக்கித் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சுதாகரன் திருமணம்
சுதாகரன் திருமண ஊர்வலத்தில்… “நடந்து வந்ததொரு நகைக்கட, அதை நிறுக்க தேவையொரு லாரி எட!”
ஒருபுறம் ஜெயலலிதாவின் குற்றங்களை இருட்டடிப்பு செய்யும் வட இந்திய, பார்ப்பன ஊடகங்கள், இன்னொருபுறம் கூலிக்கு மாரடிக்கும் அ.தி.மு.க. கூட்டத்தின் மீது வெளிச்சத்தைப் பாச்சி, இவையனைத்தும் தமிழ்ச் சமூகத்துக்கே உரிய இழிவுகள் என்பதாகவும், திராவிட இயக்க அரசியலின் விளைவு என்பதாகவும் கேலி செய்கின்றன. பொறுக்கி அரசியலின் “அம்மா”வான பாப்பாத்தியை குற்றத்திலிருந்து விடுதலை செய்து விட்டு, திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கூண்டில் ஏற்றுகிறது இந்தத் தந்திரம்.
தமிழ்நாட்டைப் பீடித்த அரசியல் சீக்கு!
“வேறு எந்த ஆட்சியிலும் தமிழகம் இவ்வளவு தாழ்ந்து போனது கிடையாது. ஊழல் மூலம் நடக்கும் பகல்கொள்ளையிலும் சரி, அரசின் ஆசியுடன் நடக்கும் அராஜகங்களிலும் சரி, சுய விளம்பர விவகாரத்திலும் சரி, ஆளும் கட்சியின் தொண்டர்படையாக போலீசு துறை மாறியிருப்பதிலும் சரி, எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பாளர்களும் காலிக் கூட்டங்களால் தாக்கப்படுவதிலும் சரி, கூசாமல் பொய ்கூறுவதிலும் சரி, இந்த ஆட்சியின் கேவலத்துக்கு நிகரான ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை. இவர் நீக்கப்படவேண்டிய முதல்வர், இது போய்த்தொலைய வேண்டிய ஆட்சி” – ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக் காலத்தைப் பற்றி ஜூன் 1995 – இல் துக்ளக் சோ எழுதிய வரிகள் இவை.
சோ வழங்கியிருக்கும் மேற்கண்ட தீர்ப்பில், “ஊழல் மூலம் நடக்கும் பகற்கொள்ளை” என்ற நான்கு சொற்களை மட்டும்தான் குன்ஹா தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார். ஜெயாவின் மற்ற குற்றங்களெல்லாம் தண்டிக்கப்படுவதற்குக் காத்திருக்கின்றன. ஆனால், இதுவே சோ-வுக்குப் பொறுக்கவில்லை. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் குன்ஹாவின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார்.
இன்று ஜெயாவுக்கு வக்காலத்து வாங்கும் பிராமணோத்தமர்கள் அன்று ஜெயலலிதாவை எதிர்ப்பவர்களோடு சேர்ந்து “கோயிந்தா” போடக் காரணம் இருந்தது. 1996-ல் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற அம்மாவின் அமைச்சர்களும், எம்.எல்.ஏ. க்களும் மக்களால் அடித்தே விரட்டப்பட்டனர். தோல்வி உறுதி என்ற நிலையில், எதிர்த்தரப்புடன் சேர்ந்து கொள்வதன் மூலம் யோக்கியர் வேடமும் போடலாம், எதிர்ப்பின் வீரியத்தையும் குறைக்கலாம் என்பதுதான் அன்று அவாள் காட்டிய எதிர்ப்பின் உட்பொருள்.
சிறுதாவூர் பங்களா
தாழ்த்தப்பட்டோர் நிலங்களை அபகரித்துக் கட்டப்பட்ட சிறுதாவூர் பங்களா (பட உதவி : நக்கீரன்)
எம்.ஜி.ஆரின் சாவுக்குப்பின் ஜெயலலிதா தமிழக அரசியலில் தலையெடுக்கத் தொடங்கிய காலத்திலேயே, “இது தமிழ்நாட்டின் அரசியல் சீக்கு” என்று புதிய ஜனநாயகத்தில் குறிப்பிட்டோம். ஆம். இது திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தி வளர்ந்த பார்ப்பனச் சீக்கு. சோ, சு.சாமி, ஆர்.வி., சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் சேர்ந்து இந்த அரசியல் சீக்கைத் திட்டமிட்டேதான் தமிழக மக்களின் தலையில் கட்டினர். அவர்களுடைய திட்டம் அ.தி.மு.க. வின் தோற்றத்திலிருந்தே தொடங்குகிறது.
கொள்கை, மக்கள் நலம் என்று தொடங்கி, பின்னர் நாடாளுமன்ற அரசியலில் ஊறி, மெல்ல மெல்லப் பிழைப்புவாதக் கட்சிகளாக சீரழிந்த வேறெந்தக் கட்சியோடும் அ.தி.மு.க.வை ஒப்பிட முடியாது. எம்.ஜி. ஆரால் துவக்கப்படும்போதே அது ஒரு அடிமைகள் கூட்டம். அ.தி.மு.க. என்பது ராமாவரம் தோட்டத்தில் சோறு தின்றதையும், எம்.ஜி.ஆர். கையால் அடிவாங்கியதையும் பெருமையாகக் கருதும் விசுவாச அடிமைகளை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி. “எம்.ஜி.ஆர். வள்ளல், தமிழகம் அவர் சொத்து, பதவி அவர் போடும் பிச்சை, விசுவாசமே கட்சியின் கொள்கை, பிழைப்புவாதமே அரசியல்” எனத் தேர்ந்து தெளிந்த கூட்டம் அது. ஜனநாயகம் என்ற சொல்லுக்கும் பாசிசக் கோமாளியான எம்.ஜி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.
சக்களத்தி சண்டை – சதிகாரத் தலைவி!
எம்.ஜி.ஆரின் சாவுக்குப் பின்னர் புரட்சித் தலைவரின் புரட்சிச் செல்வி என்ற முறையிலும், எம்.ஜி.ஆர். ரசிகர்களால் “அண்ணி” என்று அங்கீகரிக்கப்பட்டிருந்த உரிமையின் அடிப்படையிலும், அ.தி.மு.க. கட்சியும் இரட்டை இலை சின்னமும் தன் பெயருக்குத்தான் எழுதி வைக்கப்பட வேண்டும் என்பதே அன்று ஜெயலலிதாவின் கோரிக்கையாக இருந்தது. எம்.ஜி.ஆர். அவ்வாறு உயில் எழுதவில்லை. விளைவு – சக்களத்தி சண்டை தமிழக மக்கள் முடிவு செய்யவேண்டிய அரசியல் பிரச்சினையாகிவிட்டது. எம்.ஜி.ஆர். என்ற கிழட்டுப் போக்கிரியிடம் தான் பட்ட துன்பங்களுக்கான விலையை, ஜெயலலிதா தமிழ் மக்களிடமிருந்து வசூலிக்க நேர்ந்த கொடுமை இப்படித்தான் தொடங்கியது.
“ஜானகி மோரில் விசம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொன்றார்” என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டும், எம்.ஜி.ஆரின் சவ வண்டியில் இடம் பிடிப்பதற்கு அவர் நடத்திய தெருக்கூத்தும், உச்சகட்டமாக அவரது உடன்கட்டை பிரகடனமும், நடைபெற்றது சக்களத்தி சண்டைதான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள். அது மட்டுமல்ல, இவையனைத்தும் சர்ச் பார்க் கான்வென்டில் படித்த “பாப்பாத்தி” வெளிப்படுத்திய உயர்ந்த பண்பாட்டுத் தரத்துக்கான முதல்நிலை ஆதாரங்களும் கூட.
பிறகு ஜெ. சட்டமன்றத்தில் கருணாநிதி கையிலிருந்து பட்ஜெட் அறிக்கையைப் பிடுங்கி தி.மு.க.வினரின் ஆத்திரத்தை தூண்டினார். பெண் என்றும் பாராமல் என்னை முந்தானையைப் பிடித்து இழுத்தார்கள் என்று ஒப்பாரி வைத்தார். “என்னை லாரி ஏற்றிக் கொல்ல கருணாநிதி சதி செய்தார், கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்துக் கொல்லச் சதி செய்தார்” என்று கலர் கலராகக் குற்றம் சாட்டினார். இறுதியாக, ராஜீவின் கொலைக்கு தி.மு.க. மீது பொய்ப்பழி போட்டு, ராஜீவின் பிணத்தைக் காட்டியே 1991-ல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். எம்.ஜி.ஆரின் பிணவண்டியின் மீதும் பின்னர் ராஜீவின் பிணத்தின் மீதும் ஏறி அரியணையில் அமர்ந்த அம்மாவின் “அரசியல் வரலாறு” இது.
“என்னைக் கொல்ல சதி” என்பதையே கொள்கை முழக்கமாக வைத்து, அதிகார நாற்காலியைக் கைப்பற்றிய கும்பல், இன்று அதே “கொள்கை” வழியில் குன்ஹாவின் தீர்ப்பையும் “கர்நாடகா, ராஜபக்சே, கருணாநிதி கூட்டு சதி” என்கிறது. சாட்சியங்களை மிரட்டிப் பல்டியடிக்க வைத்து, அம்பலப்பட்டு, அதன் காரணமாக விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்று உச்சநீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்டு, பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை அங்கே இழுத்தடித்து, நீதிபதிகளையும் அரசு வழக்குரைஞர்களையும் துன்புறுத்தி விரட்டி, இறுதியில் தன் கைப்பாவையாக ஒரு அரசு வழக்குரைஞரை நியமிக்க வைத்து, அப்புறமும் தப்பிக்க முடியாமல் தண்டிக்கப்பட்டுவிட்டார் ஜெயலலிதா. இத்தனையும் நாடறிந்த உண்மைகள். இருந்தபோதிலும், இதனைச் சதி என்று சித்தரிக்கும் பிரச்சாரத் தந்திரம் அவர்களது “சதிகார”த் தலைவியின் மூளையில் அல்லாமல் வேறு எங்கே பிறந்திருக்க முடியும்?
திருட்டு மட்டுமா குற்றம்?
சண்முகசுந்தரம்
அ.தி.மு.க ஏவிவிட்ட ரவுடி கும்பலால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்குரைஞர் சண்முகசுந்தரம். (கோப்புப் படம்) (பட உதவி : நக்கீரன்)
ஏற்கெனவே டான்சி, பிளசன்ட் ஸ்டே வழக்குகளில் சந்தி சிரித்து, தற்போது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் தோழிகளின் பித்தலாட்டங்கள் அனைத்தையும் குன்ஹா பிரித்து மேந்து காறி உமிழ்ந்த பின்னரும், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல், “சட்டையை மாற்றிக் கொண்டு அடுத்த பஞ்சாயத்துக்குக் கிளம்பும் வடிவேலுவைப் போல”, கம்பீரமாக சிறை வாசலிலிருந்து சிவப்புக் கம்பளத்தின் மீது நடந்து வருகிறார் ஜெயலலிதா என்றால், தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிய அவரது மதிப்பீடு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். 1991-96 காலத்தில் இந்தக் கும்பல் ஆடிய ஆட்டம் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
வளர்ப்பு மகன் திருமணப் புகைப்படங்களையும், அதில் தோழிகளின் அலங்காரத்தையும், அவர்களின் தோரணையையும் பாருங்கள். அவற்றில் கவனிக்கத்தக்கவை புடவை, நகைகளின் மதிப்பு அல்ல. மொத்த தமிழ் சமுதாயத்தையே எள்ளி நகையாடுகின்ற அவர்களது பார்ப்பனக் கொழுப்பும் அதிகாரத்திமிரும்தான். மொத்த நாட்டையுமே தமது பரம்பரை சொத்தாகக் கருதி, செருக்குடன் வீதியுலா வந்த மன்னர்களின் திமிரை ஜெயலலிதாவின் முகத்தில் நீங்கள் பார்க்க முடியும்.
“பொதுச்சொத்தைத் திருடினார்கள்” என்று மட்டும் கூறுவது ஜெ. – சசி கும்பலின் குற்றத்தைப் பெரிதும் குறைத்துச் சித்தரிப்பதாக இருக்கும். பயந்து எச்சரிக்கையாகத் திருடும் பிக்-பாக்கெட்டுகளுக்கும் கழுத்தில் கத்தி வைத்துப் பிடுங்கும் வழிப்பறிக் கொள்ளையர்களுக்கும் வேறுபாடிருக்கிறது அல்லவா? எப்படித் திருடினார்கள் என்பதில்தான் இருக்கிறது அவர்களது குற்றத்தின் தன்மை.
ஆசிட் வீசப்பட்ட நிலையில் சந்திரலேகா
ஆசிட் வீசப்பட்ட நிலையில் சந்திரலேகா (கோப்புப் படம்) (பட உதவி : நக்கீரன்)
கண்ணைக் கவர்ந்த பெண்களையெல்லாம் அந்தப்புரத்துக்குத் தூக்கி வரச்சொன்ன மன்னர்களைப் போல, கண்ணில்பட்ட நிலங்கள், வீடுகளையெல்லாம் தம் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஆணவம், துணைப்பதிவாளரை வீட்டுக்கே வரவழைத்து, விரும்பிய இடங்களையெல்லாம், விற்பவர் – வாங்குபவர் பெயர்களையே குறிப்பிடாமல் நடத்திக் கொண்ட பத்திரப் பதிவுகள், கட்டுக்கட்டாக இலஞ்சப்பணத்தை மஞ்சள் பையில் வைத்து வங்கிக்குக் கொடுத்தனுப்பிய “சாமர்த்தியம்”, பணத்தைப் போடுவதற்காகவே அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்ட உப்புமாக் கம்பெனிகள் – என்று குன்ஹாவின் தீர்ப்பு பட்டியலிடும் ஆதாரங்களைப் பார்க்கும்போது, அவையெல்லாம் இந்த திருட்டுக் கும்பல் அவசரத்தில் விட்டுச் சென்ற தடயங்களாகத் தெரியவில்லை. விடிவதற்குள் – ஐந்தே ஆண்டுகளில் – முடிந்தவரை சுருட்ட முயலும் திருடனின் அவசரம் இந்த தடயங்களில் தெரிகிறது. “இனி விடியவே போவதில்லை, நாமே நிரந்தர முதல்வர்” என்கிற அகம்பாவம் தந்த அலட்சியமும் அவற்றில் தெரிகிறது.
ஜெயாவின் நிர்வாகத்திறன் – வரலாற்றுச் சான்றுகள்
ஜெயலலிதாவின் திருட்டு அம்பலமாகியிருக்கும் இந்த தருணத்தில், என்ன இருந்தாலும் அவரது “நிர்வாகத்திறன்” என்று புனைகதை எழுதுகின்றன ஊடகங்கள். இந்த அரசின் நிர்வாகத்திறனுக்கு சான்று கூற, மின்வெட்டு பிரச்சினை குறித்து மூன்றாண்டுகளாக ஜெயலலிதா அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளே போதுமானவை.
வாரிசுரிமையாக சிறிது காலம் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த ஜானகிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. ஜானகியை ஆர்.எம்.வீரப்பன் பின்னாலிருந்து இயக்கினார்; ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் கணவன் நடராசன். இருந்தும் அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில், “வருங்கால முதல்வரே” என்று நடராசன் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டதும், ஆத்திரமடைந்த ஜெயலலிதா, போலீசை விட்டு வெடிகுண்டுப் புரளி கிளப்பி நடராசன் நடத்திய கூட்டத்தைக் கலைத்ததும், பிறகு முதல்வர் பதவியைக் கைப்பற்ற நடராசனும், பிரதமர் பதவியைப் பிடிக்க சு.சாமியும் சதி செயவதாகப் பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்ததும் அம்மாவின் நிர்வாகத் திறமையைப் பறைசாற்றும் வரலாற்று சான்றுகள்.
எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகள்
பிளஸெண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதற்கு விலையாக அ.தி.மு.க காலிகளால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகள் (இடமிருந்து) கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)
பிறகு உயிர்த்தோழி சசியை வூட்டுக்காரன் நடராசன் போயஸ் தோட்டத்திலிருந்து இழுத்துக் கொண்டு போனதும், பிரிவாற்றாமை தோற்றுவித்த காப்பிய சோகத்தால் அம்மா ராஜினாமா கடிதம் கொடுத்து, பின்னர் அதனை திரும்பப் பெற்றதும், ஊடல் முடிந்து சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்தில் குடியேறியதும் அம்மாவின் அரசியல் வரலாறு. இவற்றைப் போன்ற அழிக்க முடியாத அசிங்கமான பக்கங்கள் ஆயிரம் இருக்கின்றன.
பழைய தமிழ் சினிமாக்களின் ஜமீன்தார் பங்களாக்களில் கக்கத்தில் துண்டுடன் அணிவகுத்து நிற்கும் வேலைக்காரர்களைப் போல, போயஸ் தோட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரிசையா நிற்க, காலில் விழுந்து எழுந்த பின்னரும் முதுகு நிமிராத கூன்பாண்டி அமைச்சர்கள் வாயிற்புறத்தில் காத்திருக்க, மலையாள மாந்திரீகர்களும், பில்லி சூனியக்காரர்களும், ஜோசியர்களும்தான் போயஸ் தோட்டத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்தார்கள், இன்றும் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். நேர்மை, சுய சிந்தனை, சுய மரியாதை உள்ள அதிகாரி தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றும் திறன்தான் அம்மாவின் நிர்வாகத்திறன். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அடிக்கடிப் பந்தாடுவதன் மூலம் கறாரான நிர்வாகியைப் போலக் காட்டிக் கொள்வதென்பது, பாசிசக் கோமாளி எம்.ஜி. ஆரிடமிருந்து அம்மா கற்றுக்கொண்ட நிர்வாக அரசியல் பாடம்.
அழகிரிகளுக்கெல்லாம் அம்மா!
செரீனா
தான் சந்தேகப்படுபவர்கள் மீதெல்லாம் கஞ்சா கேசு போடுவது ஜெயாவின் “நிர்வாகத் திறன்” – அப்படிப்பட்ட அதிகார முறைகேடுகளுக்குப் பலியான செரீனா
கலகம் செய்யும் அ.தி.மு.க. காலிகள் அம்மாவின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதத்தில் கட்டுப்பாடாக நடந்து கொள்ளவேண்டும் என்று தலையங்கம் எழுதுகின்றன பார்ப்பன ஊடகங்கள். எப்பாடுபட்டாலும் காலித்தனத்தில் அம்மா எட்டியிருக்கும் சிகரத்தை தொண்டர்களால் தொடவியலாது என்பதே உண்மை.
கிரிமினல்களையும் போலீசையும் தனது தனிப்பட்ட கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்வதில் அழகிரிகளுக்கெல்லாம் அம்மா ஜெயலலிதா. ஸ்பிக் பங்கு விற்பனையில் தனது ஊழலுக்கு உடன்பட மறுத்த குற்றத்துக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர் மீதான தாக்குதல்கள், வழக்குரைஞர் சண்முக சுந்தரத்தை ரவுடிகளை வைத்து தாக்கியது மட்டுமல்ல, குற்றுயிராக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைச் சாகடிப்பதற்காகவே மருத்துவமனையின் மின்சாரத்தைத் துண்டித்தது – என்று இந்தக் குற்றப் பட்டியல் வெகு நீளமானது.
தனது ஆட்சியில் உளவுத்துறைக்கு அம்மா வழங்கிய வேலையை மிகவும் கவுரவமான சொற்களில் குறிப்பிட வேண்டுமானால், அதனை மாமா வேலை என்று சொல்லலாம். அமைச்சர்களின் கள்ளத்தொடர்புகளை வேவு பார்ப்பது, தோழி சசிகலாவின் கணவருடைய இரவு நேர நடமாட்டத்தைக் கண்காணிப்பது, சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்டு ஒப்படைப்பது போன்றவை அவற்றில் சில. இப்போதும் கூட குன்ஹாவின் தீர்ப்பை முன்னரே மோப்பம் பிடித்துக் கூறத் தவறிய காரணத்தினால் கடமை தவறிய உளவுத்துறை மீது அம்மா கோபம் கொண்டிருப்பதாக மிகவும் இயல்பாக எழுதுகின்றன ஊடகங்கள். கிரிமினலுக்கும் – போலீசுக்கும், கடவுளுக்கும் – புரோக்கருக்கும், ஜோசியனுக்கும் – உளவுத்துறைக்கும் இடையிலான வேறுபாட்டை ஒழித்ததுதான் இவ்விசயத்தில் அம்மாவின் சாதனை எனக் கூறலாம்.
ஆடிட்டர் பாஸ்கரன்
ஜெயா கும்பலின் ஆடிட்டராக இருந்து வந்த பாஸ்கரன்
அம்மாவின் அதிருப்திக்கு ஆளாகிறவர்கள் பதவி போனாலும், அடி வாங்கினாலும் அமைதி காக்க வேண்டும். வளர்ப்பு மகனாக தங்கத்தில் குளிப்பாட்டப்பட்ட சுதாகரன், திடீரென்று செருப்படி வாங்கி கஞ்சா கேசில் உள்ளே தள்ளப்பட்டதும், அப்புறம் அக்யூஸ்டு எண்: 4 என்று அங்காளி பங்காளியாக பெங்களூரு நீதிமன்றத்தில் தனது முன்னாள் வளர்ப்புத்தாயுடன் அமர வேண்டியிருந்ததும் ஒரு உதாரணம். நில ஆக்கிரமிப்பு முதல் கொலை மிரட்டல் வரையிலான பல வழக்குகளில் உள்ளேபோன நடராசன், ராவணன் உள்ளிட்ட சசி குடும்பத்தினர், நடராசனின் ஆசை நாயகி என்று சசிகலாவால் சந்தேகிக்கப்பட்ட காரணத்தினால் கஞ்சா வழக்கில் சிறை வைக்கப்பட்ட செரினா – என இப்பட்டியல் வெகு நீளமானது.
இலஞ்சப் பணத்தை மறைப்பதற்கு சரியான முறையில் வழிகாட்டாமல், வருமானவரி வழக்கில் தங்களைச் சிக்கவைத்து விட்டதாக ஆத்திரம் கொண்ட தோழிகள், ஆடிட்டர் ராஜசேகரை போயஸ் தோட்டத்துக்குள் வைத்துக் கட்டையாலும், செருப்பாலும் அடித்தனர். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக துப்பாக்கி வைத்தும் அவர் மிரட்டப்பட்டார். இது பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகிவிடாமல் தடுப்பதற்காக சட்டமன்றத்தில் தாமரைக்கனியை விட்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கில் குத்தச் சொல்லி, அதனைத் தலைப்புச் செதியாக்கிய கிரிமினல்தான் ஜெயலலிதா. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இத்தகைய குற்றங்களையெல்லாம் விசாரித்து தண்டனை விதிக்கும் பட்சத்தில் அவற்றுக்கான ஆயுள் தண்டனைகளை அனுபவிப்பதற்கே, அம்மா மேலும் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.
நீதிபதிக்கு கஞ்சா கேஸ், சட்டமன்றத்துக்குப் பூட்டு!
இன்று குன்ஹாவின் கொடும்பாவி எரிப்பு, கழுதை என்றும் முண்டமென்றும் அவரை வசைபாடும் சுவரொட்டிகள், தீர்ப்புக்கு எதிராக நகராட்சிகள் நிறைவேற்றும் கண்டனத் தீர்மானங்கள் போன்ற “நீதிமன்ற அவமதிப்பு”களைக் கண்டு சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்கள் சிலர் தமது அதிர்ச்சியைத் தெரிவிக்கிறார்கள். ஆனால், நீதிபதிகளுக்கு தலைவியின் வரலாறு தெரியுமாதலால் அவர்கள் யாரும் அதிர்ச்சி காட்டவில்லை. சுப்பிரமணியசாமிக்கு எதிராக உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீசு பாதுகாப்புடன் நடத்தப்பட்ட மகளிர் அணியின் நிர்வாண நடனம், நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லட்சுமணனின் மருமகன் மீது போடப்பட்ட கஞ்சா வழக்கு, சீனிவாசன் என்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வீட்டுக்கு மின்சாரம், குடிநீரைத் துண்டித்து மிரட்டியது, சொத்துக்குவிப்பு வழக்கின் நீதிபதிகளையும், அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவையும் துன்புறுத்தி விரட்டியது, நீதித்துறையையே எள்ளி நகையாடும் விதத்தில் சக்கர நாற்காலியிலும், ஸ்டிரெச்சரிலும் தோழிகள் நடத்திய நீதிமன்ற விஜயங்கள் ஆகியவற்றை ஒப்பிடும்போது, இன்று ரத்தத்தின் ரத்தங்கள் காட்டும் நீதிமன்ற அவமதிப்பு பொருட்படுத்தத்தக்கதே அல்ல.
fascist-jaya-1அம்மா ஆட்சியில் சட்டமன்றத்தின் நிலை பற்றி விளக்கவே தேவையில்லை. அண்ணாமலை நகர் பத்மினி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பிரச்சினைக்காக எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியபோது, சட்டமன்றத்தையே வெளிப்புறமாகப் பூட்டி, மின்சப்ளையையும் தண்ணீரையும் துண்டித்து வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, தனக்கு எதிராக வழக்கு தொடுக்க சு.சாமிக்கு ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி கொடுக்கவிருக்கிறார் என்று தெரிந்தவுடனே “கவர்னர் என்னை கையைப் பிடித்து இழுத்தார்” என்று சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டி சென்னா ரெட்டியை கதிகலங்கடித்தார்.
2001-ல் டான்சி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெ. தேர்தலில் போட்டியிடவே முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன், வேண்டுமென்றே 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து, அதன் காரணமாகத்தான் வேட்புமனு மறுக்கப்பட்டதைப் போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். எம்.எல்.ஏ. வாக இல்லாத நிலையிலும் கவர்னர் பாத்திமா பீவியை விலைபேசி, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வேறு வழியின்றி ராஜினாமா செய்து பன்னீரை முதல்வராக்கினார். பன்னீர் முதல்வராக இருந்த காலத்தில் ஒரு நாள்கூட சட்டமன்றக் கூட்டம் நடக்காமல் பார்த்துக் கொண்டார்.
அற்பத்தனத்தின் அம்மா!
தரம் தாழ்ந்த அற்பத்தனத்தில் ஜெயலலிதாவை விஞ்சக்கூடியவர்கள் இல்லை. தமிழகத்தில் நெடுஞ்சாலைக் கொள்ளைகள் அதிகம் நடப்பதாக காங்கிரசு குற்றம் சாட்டியவுடன், “மத்திய அரசுதான் திருடர்களை அனுப்பி என் அரசின் பெயரைக் கெடுக்கிறது” என்று சட்டமன்றத்திலேயே பதிலளித்தார். பிறகு “நான் ஆட்சிக்கு வந்தவுடனேயே திருடர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்” என்றார். போயஸ் தோட்ட வட்டாரத்தில் நடமாடிய நரிக்குறவர்களைக் கைதுசெய்து, தன்னைக் கொல்வதற்குப் புலிகள் தற்கொலைப்படையை அனுப்பியிருப்பதாக செய்தி வெளியிட்டார்.
அவ்வளவு ஏன், மூன்று முறை முதலமைச்சராகி, செல்வியிலிருந்து அம்மாவாக பதவி உயர்வு பெற்ற பின்னரும், தனது இளமைக்கால சினிமா குத்தாட்டக் காட்சிகளை ஜெயா டிவியில் வெளியிட்டுத் தனது இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார் ஜெயலலிதா; எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றிய தரங்கெட்ட விமரிசனங்களை ரசித்துச் சிரிப்பது மட்டுமல்ல, தனது சொந்தக் கட்சிக்காரர்களையே இழிவுபடுத்துவதிலும் இன்பம் காணுகிறார். கட்சியிலிருந்து விலகியவர்களை “தனது உதிர்ந்த உரோமங்கள்” என்று கூறிய ஒரு நபரின் பண்பாட்டுத் தரத்தை என்னவென்று கூறுவது? அம்மாவின் கோபத்துக்கும் ஆசிட் வீச்சுக்கும் இலக்கான கே.கே.எஸ்.எஸ்.ஆர். குடும்பத்தோடு போயஸ் தோட்டத்துக்குச் சென்று காலில் விழுந்தார். அதை அப்படியே புகைப்படம் எடுத்து மறுநாள் ஊடகங்களில் வெளியிட்டு அவரை அவமானப்படுத்தினார் ஜெயலலிதா.
போலீசின் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட இருளர் பெண்ணை, காசுக்காக பொய் சொல்கிறார் என்றும்; பட்டினிச்சாவுக்குள்ளான சிறுவனின் வயிற்றில் சோற்றுப்பருக்கைகள் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுவதால், அது பட்டினிச் சாவல்ல என்றும் பேச முடிந்த ஒரு ஜந்துவைத்தான் “அம்மா” என்று அழைக்கிறார்கள் அ.தி.மு.க. அடிமைகள். பார்வையற்றோர் போராட்டத்தின் மீதான தாக்குதலாக இருக்கட்டும், சாலைப்பணியாளர்கள் – மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலையாகட்டும் இவையெதுவும் ஜெயலலிதாவிடம் கடுகளவு இரக்கத்தையும் தோற்றுவித்ததில்லை. ஏனென்றால், நடிப்புக்காகக் கூட கருணையை வரவழைக்க முடியாத முகம் அது.
ஜெ. கைதுக்காக பேருந்தில் எரித்துக் கொல்லப்பட்ட 3 அப்பாவி மாணவிகளுக்காக தமிழகம் பதறியது. ஆனால் ஜெயலலிதா மனம் இரங்கவில்லை. அந்த வழக்கின் எல்லா சாட்சிகளையும் பல்டியடிக்க வைத்தார். குற்றவாளிகள் விடுதலையாகிவிடுவார்கள் என்ற நிலையில் பிள்ளையைப் பறி கொடுத்த பெற்றோர், மனுச் செய்ததன் பேரில் உயர்நீதி மன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், ஜெ. ஆட்சியில் இருந்தவரை அந்த வழக்கை நடத்தவிடவில்லை. இப்போதும் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் வைத்து வாதாடுகிறார் ஜெ.
ஜெ. வின் காலடியில் கையாலாகாத் தமிழர்களா?
ஜெயா ஊர்வலம்
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயா பிணையில் விடுதலையானதையடுத்து, அவர் உற்சவ மூர்த்தி போலக் கொண்டாட்டமாக அழைத்து வரப்படும் காட்சி : தமிழகத்தின் அவமானச் சின்னம்.
யார் பாதிக்கப்பட்டவர்கள் என்பது ஜெயலலிதாவின் அக்கறையல்ல, யார் தனது அடிமைகள் என்பதே அம்மாவின் கவனத்துக்குரியது. ஜெயலலிதாவின் கருத்துப்படி, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர் கடப்பாடுடையவர் அல்ல, தமிழக மக்கள்தான் அவருடைய தியாகத்துக்குக் கடன்பட்டிருக்கின்றனர். தற்போது தமிழர்களின் கடன் பாக்கியில் இந்த 21 நாள் தியாகமும் சேர்ந்து விட்டது. மூவர் தூக்கு முதல் முதியோர் உதவித்தொகை வரை, நதிநீர் பிரச்சினை முதல் சமஸ்கிருத வார எதிர்ப்பு வரை அனைத்துமே, கையாலாகாத தமிழர்களுக்கு, தனியொருத்தியாக தான் பெற்றுத்தந்த வெற்றியாகவோ, அல்லது தமிழர்களுக்குத் தான் அளிக்கும் பிச்சையாகவோ இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதி செய்து கொள்கிறார்.
தனது உள்ளுணர்வின்படியே அவர் ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்ற காரணத்தினால், பா.ஜ.க. வைப் போல “கொள்கை” என்ற சுமை அவருக்கு தேவைப்படுவதில்லை. ஈழம், கூடங்குளம் முதல் இலவச அரிசி வரையில் திராவிட, தமிழின, கவர்ச்சிவாதக் கொள்கைகளை அவர் தனது தேவைக்கேற்றபடி திருடிக் கொள்கிறார். தேவைப்படாத போது, அவற்றை பீ துடைத்த துணியைப் போலத் தூக்கியெறியவும் அவர் அஞ்சுவதில்லை. இந்த “யூஸ் அண்டு த்ரோ” அணுகுமுறையில் அமைச்சர்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையில் அவர் அதிக வேறுபாடு பார்ப்பதில்லை. அம்மாவின் இந்த அசாத்திய துணிச்சலையும் போர்க்குணத்தையும் கண்டு சிற்பி முதலான “அறிஞர்களும்”, சீமான், நெடுமாறன், வேல்முருகன், தா.பா போன்ற “போராளி”களும் புல்லரித்து நிற்க, சோ ராமஸ்வாமி அயரோ, சுயமரியாதை முதல் தமிழின உணர்வு வரையிலான அனைத்து பிராம்மண விரோதக் கொள்கைகளையும் கட்சிகளையும் மதிப்பிழக்கச் செய்யும் ஜெயாவின் சாமர்த்தியத்தை மெச்சி ரசிக்கிறார்.
அடையாளம் காண்போம் அடிமைச் சதியை!
சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் ஒரு சதிகாரியின் பிடியில் சிக்கியிருக்கிறது தமிழகம். ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை, ரியல் எஸ்டேட் என்று இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் கிரிமினல் கும்பல்கள், அதிகார வர்க்க கிரிமினல்கள், பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தரகுக் கும்பல்கள் தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருக்கின்றன. பிழைப்புவாத அடிமைகளின் கும்பலாகத் தோன்றிய அ.தி.மு.க. என்ற கட்சியோ, மேற்சோன்ன தொழில்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கும் தொழில்முறை கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்திருக்கிறது.
கள்ளச்சாராயம், விபச்சாரம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிரிமினல்கள், தமக்கென ஒரு சமூக ஆதரவுத்தளத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு அன்னதானம், திருமணத்துக்கு மொய் எழுதுவது, இழவுச் செலவுக்குப் பணம் தருவது என்பன போன்ற உத்திகளைக் கையாள்வதைப் போலவே, ஒரு ரூபாய் இட்டிலி, இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் இறக்கப்படுகின்றன. கள்ளச் சாராயத்தை விற்பவன் கிரிமினல், டாஸ்மாக் சாராயத்தை விற்பது அரசு என்பது மட்டுமே வேறுபாடாக எஞ்சியிருக்கிறது.
இலவசத் திட்டங்களுக்கான வருவாயைத் திரட்டும் பொருட்டுத்தான் டாஸ்மாக் என்பது பொய். டாஸ்மாக் என்பது அரசின் பண்பாட்டுக் கொள்கை. சீன மக்களை அடிமை கொள்ள கஞ்சாவைப் பரப்பியதைப் போலவே, தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயக் கடைகளை பரப்புகிறது அரசு. கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனர்கள் மீது போர் தொடுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் போலவே, டாஸ்மாக் கடைகளை எதிர்க்கும் பெண்கள் மீது போர் தொடுக்கிறது அம்மாவின் போலீசு. நெடுஞ்சாலைகள், பள்ளிகள், வழிபாட்டிடங்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும், கேரளத்தில் மது விற்பனை குறைக்கப்படுவதால் கேரள எல்லையோரத்திலும் சாராயம் ஆறாய் ஓடுகிறது. போதை அடிமைத்தனம் பரப்பப்படுகிறது.
முதியோர் உதவித்தொகை, மடிக்கணினி போன்ற அரசின் அதிகாரபூர்வ நலத்திட்டங்களும், ஓட்டுக்குப் பணம், கறி விருந்து போன்ற ஊழல் முறைகேடுகளும், மொட்டைக்கு 3000, பால்குடத்துக்கு 500 என்ற கழிசடை அரசியலும், மக்களின் ஜனநாயக உணர்வற்ற மனோபாவம் என்ற ஒரு புள்ளியில் சந்திப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அடிமைத்தனம் பரப்பப்படுகிறது.
ஜெயலலிதாவின் கைதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாம் கண்ட பிழைப்புவாதிகளின் “போராட்டங்களும்”, கூலிக்கு மாரடிப்போரின் கூச்சலும், போலீசும் காலிகளும் இணைந்து நடத்திய வன்முறைகளும், மக்களிடம் பரப்பப்பட்ட அச்சமும், உச்சநீதி மன்றத் தீர்ப்பின் கயமையும் இந்த அரசியல் கட்டமைப்பின் சீரழிவையும் தோல்வியையும் துல்லியமாகப் பிரகடனம் செதிருக்கின்றன.
தமிழ்ச் சமுதாயமோ ஒரு நூற்றாண்டுக்கு முன் பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டியிருந்த அடிமைத்தனத்தைக் காட்டிலும் கொடிய அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடக்கிறது. அன்று தோளில் துண்டு அணியும் உரிமை இல்லாத போதிலும், தமிழ்ச் சமுதாயத்தின் இடுப்பில் வேட்டி இருந்தது. இன்றோ தமிழ்ச் சமுதாயம் வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் வீதியில் கிடக்கிறது. நாம் எதிர்கொண்டிருப்பது முன்னிலும் சிக்கலானதொரு சூழல். தேவைப்படுபவை அதற்குப் பொருத்தமானதொரு போராட்டங்கள்.
– சூரியன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014