வெள்ளி, 23 டிசம்பர், 2011

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா?

தமிழ்நாட்டில் தமிழ்-- பா.இரா.தமிழ்நன்


தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா என்றால் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த மாபெரும் உண்மை ஆனாலும் இதற்குத் தமிழ்நாடு என்றுதான் பெயர். நம் ஆட்சியாளர்கள் இங்கு ஆட்சி மொழியை நடைமுறைப்படுத்தாமல் நடுவில் (மத்தியில்) தமிழ் ஆட்சி மொழி என்றவாறு நகைச்சுவை ஊட்டுவார்கள்.


பிறமொழியில் பிறந்து தமிழுக்குத் தொண்டு செய்த உலக அறிஞர்கள் உண்டு. இங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியில் பிறந்து பிற மொழிக்குத் தொண்டு செய்கிறார்கள். அதாவது சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை அடையாளமாகத் தூக்கித் திரிகிறார்கள். சமற்கிருதம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழை அரித்த கரையான். பின் ஒவ்வொரு பிற இனத்தவர்களின் ஆட்சியின் போதும் அவர்கள் மூலம் நுழைந்த சொற்கள் இன்று வரை நம்மைத் தாக்கி வருகிறது.

தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை. சமற்கிருதம், ஈப்ரு, அரபு, உருது போன்ற மொழிகளில் பெயர் கொள்கின்றனர். அதன் மூலம் தமிழைக் கொல்கின்றனர். தமிழ்க் குழந்தைக்குத் தமிழில்தான் பெயரிட வேண்டும் என்ற உணர்வும் தமிழர்களிடம் இல்லை. பெயர்தான் இனத்தின் அடையாளம். இரஷ்யா போன்ற சில நாடுகளில் அந்த அரசே அந்த மொழிக்குரிய பெயர் பட்டியலைத் தந்து அதில்தான் பெயரிட வேண்டும் என்று சட்டமியற்றி உள்ளது. இங்குத் தமிழில் பெயர் வைத்தால் கணையாழி (மோதிரம்) அளிக்கப்படும் என்ற அறிவிப்பு கொடுமை வேறு.

அடுத்து தமிழர்களின் கல்வியும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஆங்கிலம் படிப்பது என்பது வேறு ஆங்கிலத்தில் படிப்பது என்பது வேறு. நாம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டும் படிப்போம். அனைத்தையும் தமிழிலேயே படிப்போம். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அவரவர் தாய்மொழிகளில்தான் கல்வி கற்கின்றனர். நம் கண் முன்னே அழிக்கப்பட்ட ஈழத்திலும் அனைத்தும் தாய்மொழியிலேயே இருந்தது. அதனால்தான் அந்தப் போராளிகளும் உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கூட கண்டுப்பிடித்தார்கள். அங்கு மருத்துவமும் தமிழில்தான் இருந்தது. நமக்கு தெரிந்து அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில்தான் ஆங்கிலம் எங்கும் இருக்கிறது.

பாவேந்தர் ஓர் இரவில் எழுதியது ‘தமிழியக்கம்’ எனும் நூல். அதில் தமிழ்நாட்டில் தமிழ் எதிலும் இல்லாத கொடுமையைத் தமிழ்ச் சுவையுடன் படைத்திருப்பார். அவருடைய வருத்தம் அவர் மறைந்தும் அப்படியேதான் உள்ளது. ஆண்டுத்தோறும் அவர் சிலைக்கு மட்டும் மாலை போடப்படுகிறது.

ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய பொருட்களை உலக சந்தைக்குக் கொண்டு வரும் போது அவர்களுடைய தாய் மொழியில்தான் கொண்டு வருகிறார்கள் என்பதைத் தமிழர்கள் நினைவுக் கொள்ள வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் எதையும் இறக்குமதி செய்யும் குணம் தமிழர்களிடம் நிறைய உண்டு. மேலை நாட்டில் குளிர் பகுதிகளில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதை இங்கு நம்மவர்கள் அப்படியே இறக்குமதி செய்கிறார்கள். குறிப்பாக அவர்கள் குளிர் பகுதிகளில வாழ்வதால் குப்பாயம் (Coat) அணிந்தார்கள். இங்கு நம் தமிழர்கள் கொளுத்தும் கோடை வெய்யிலிலும் குப்பாயம் (Coat) அணிகிறார்கள். அதே போன்றுதான் கால்களில் மூடணி (Shoe) அணிவதும்.

இப்போது மம்மி டாடி பண்பாடு மிகுதியாய் ஆகிவிட்டது. குழந்தைகள் அம்மா அல்லது அப்பா என்று விளித்தால் உடனே பெற்றோர்கள் அவர்களை மருட்டி மம்மி டாடி எனப் பழக்கப்படுத்துகிறார்கள்.

நம்முடைய இசை ‘சங்கீத’மானது. நமது நாட்டியம் ‘பரத’ நாட்டியம் ஆனது. ஊர் பெயர்கள் பல சமற்கிருதம் சுமந்துள்ளது. நம்முடைய ஓகக் கலை ‘யோகாசனம்’ எனும் பெயரில் சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டது. இவைகள் தானாகச் சமற்கிருதத்தைச் சுமக்கவில்லை இவைகளின் மேல் அது ஏற்றப்பட்டது.

சுழியைப் பயன்படுத்திய தமிழர்களைப் புறந்தள்ளி அதை ‘இந்தியர்கள்’ கண்டுபிடித்ததாய் வெட்கம் இல்லாமல் பெருமை பேசுகிறார்கள். அதற்கு அவர்கள் பூஜ்யம் என்று பெயரிட்டு நம்மைச் சுழிக்குள் அடக்கிவிட்டார்கள்.

இங்கு இரண்டு தமிழர்கள் பேசும் போது ஒன்று ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அல்லது தமிங்கிலத்தில் பேசுகிறார்கள். கூடவே உலக மொழிகளை அவர்கள் அறியாமலேயே பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் பேச்சிலும், எழுத்திலும் உள்ள ஆங்கிலக் கலப்பைப் பற்றிதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். பிற மொழிகளின் கலப்பைப் பற்றி அறிய ஆர்வம் இல்லை அதை நீக்க முயற்சியும் இல்லை. எதையாவது கூறினால் தூயத் தமிழ் என்பார்கள் தனியாக அழுக்குத் தமிழ் என்று ஒன்று இல்லை. தமிழ் மற்றும் பிற மொழி அவ்வளவுதான்.

தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்பது கவலைக்கிடமாகவே உள்ளது. கடும் மருத்துவப் (தீவிரச் சிகிச்சை) பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.

உலக நாடுகள் தமிழின் பெருமையைப் பேசுகின்றன. உலக மக்களும் தமிழின் பெருமையை அறிய முனைகிறார்கள். தமிழர்கள் தங்கள் பெருமையைக் கேட்க கூட விரும்பவில்லை. தமிழர்கள் மிகுதியாக வாழும் உலக நாடுகள் சிலவற்றில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் வானூர்தி அறிவிப்புகள் கூட தமிழில் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து மதுரை போகும் வானூர்திக்குக் கூட தமிழ் அறிவிப்பு இல்லை.

உலகின் மிக உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே தமிழ் இருப்பதாய்க் கூறுகிறார்கள். இங்கு மிக உயரத்தில் இருந்து தமிழ் விழுந்து காலம் ஆகிவிட்டது.

இனி தமிழ்நாடு என்பதற்கு உண்மையான பொருளை நாம் ஏற்படுத்துவோம்.

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

என்றார் பாவேந்தர்.

நன்றி

ஆக்கம் -பா.இரா.தமிழ்நன்


செவ்வாய், 20 டிசம்பர், 2011

பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்

பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்
புதியமாதவி மும்பை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்காற்றிய பெண்களின் எண்ணிக்கை நமக்கு வியப்பூட்டும். அமெரிக்க நாட்டின் படையில் மட்டும் பெண்கள்:

Eelam women தரைப்படை - 140,000
கடற்படை - 100,000
கப்பல்துறை - 23,000
கடற்கரை கண்காணிப்பு - 13,000
விமானப்படை - 1,000
தரைப்படை, கப்பற்படை செவிலியர் - 74,000

1970 வரை அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இராணுவ அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. சாதாரண அரசு ஊழியர்களாகவே அமெரிக்க அரசு அவர்களைப் பட்டியலிட்டது.

போரும் போர்க்களமும் முழுக்க முழுக்க ஆண் கட்டுப்பாட்டுக்குரியதாகவே இன்றுவரை இருப்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல.. போர்நிறுத்த உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள், அமைதிக் குழுக்கள் இத்தியாதி அனைத்தும் ஆண்களின் ஆளுமைக்குட்பட்டதாகவே இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இன்றுவரை எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெற்றுள்ளதாக சரித்திரமில்லை.

போரின் பாதிப்புகளை அதிகமாக அனுபவிக்கும் பெண்ணினத்தின் அனுபவங்களும் அதைப் பற்றிய பதிவுகளும் மிகக்குறைவு. பெயர் தெரியாத ஜெர்மானியப் பெண்ணின் நாட்குறிப்பு (An Anonymous Woman Diarist in Berlin) உலக யுத்தத்தில் ஜெர்மானியப் பெண்களின் மனிதாபிமான செயல்களைப் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ரஷிய வீரர்களால் தங்கள் மனைவி மக்கள் வன்கொடுமைக்குள்ளானபோது ஜெர்மானிய வீரர்கள் தங்கள் உயிர் காக்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். பெர்லின் நகரத்து ஜெர்மானியப் பெண்கள் தான் தங்கள் பெண்களைப் பாதுகாத்தார்கள் என்றும் பதிவு செய்துள்ளது.

ஜெர்மானிய ஹிட்லரின் நாசிப்படை வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளிலும் தங்கள் வாரிசுகளை அனாதைகளாக விதைத்தார்கள் என்பது சரித்திர உண்மை. 1940 மே மாதம் முதல் 1944 டிசம்பர் வரை ஜெர்மானிய வீரர்கள் பிரான்சு நாட்டைக் கைப்பற்றி இருந்தபோது ஜெர்மானிய வீரர்களுக்கு பிரான்சு பெண்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சற்றொப்ப 200,000. அதுபோலவே 1940-45களில் டென்மார்க் நாட்டை கைப்பற்றியிருந்தபோது பிறந்த குழந்தைகள் 6000 முதல் 8000. நெதர்லாந்தில் 1935-45களில் பிறந்த குழந்தைகள் 50,000. ரஷியாவில் மட்டும் ஜெர்மன் நாசிப்படை வல்லாங்கு செய்த அந்நாட்டு பெண்களின் எண்ணிக்கை 200,000 மேலிருக்கும்.

நாசிப்படை மட்டும் இதைச் செய்யவில்லை. உலக யுத்தம் முடிந்தபின் நேச நாடுகளின் படைவீரர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஜெர்மானிய மண்ணில் இதே கொடுமையைத்தான் செய்தார்கள். ஜெர்மன் தாய்கள் பெற்ற குழந்தைகளில் 36334 அமெரிக்கனுக்கும், 10188 பிரான்சு காரனுக்கும் 8397 பிரிட்டன்காரனுக்கும் 3105 ரஷியனுக்கும் 1767 பெல்ஜியநாட்டவனுக்கும் பிறந்தவர்கள். தகப்பனின் நாட்டு அடையாளமும் இல்லாமல் பிறந்தவர்கள் 6829. அதுமட்டுமல்ல, ஜனவரி 1946வரை அமெரிக்க வீரன் விரும்பினாலும் கூட தன் எதிரி நாட்டில் வாழும் தன் வாரிசுகளுக்கு வாரிசுரிமையை வழங்க முடியாது என்று அரசாங்க சட்டமே இருந்தது. இன்றுவரை தங்கள் தந்தையரின் வேர்மூலம் தேடி அலையும் அவர்களின் கதை மனித இனத்தின் ஒரு சோக வரலாறு.

பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!

போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)

அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.

போரின் விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.

மகன் புறமுதுகிட்டான் போர்க்களத்தில் என்று கேட்டு அவன் பாலுண்ட தன் முலையை அறுத்து எறிந்த புறநானூற்று தாயின் வீரத்தைச் சொல்லி சொல்லி ஆணுலகம் போர்ப் பரணி எழுதி வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் மூளைச்சலவையிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இன்றைய போர்முனையில் இலங்கையிலிருந்து ஒலிக்கிறது ஒரு தாயின் குரல்..

கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப்பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா "தாய் நிலம்"
புதல்வர்களைக் கேட்கிறது?

போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய்நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை.

கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.
இன்னும் அடங்காதோ உன் பசி?

விண்ணேறி மண் தொட்டு
மீண்ட பின்னும்
சமாதானம் வேண்ட
யுத்தம் தேவையோ?
பற்றி எரிக ஆயுத கலாசாரம்!

என் மழலைகளை விடு
நாளைய உலகம்
அவர்களுக்காய் மலரட்டும்!

(ஈழக்கவிஞர் ஒளவை)

- புதியமாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)

http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_14.php

செவ்வாய், 13 டிசம்பர், 2011

நான்கு பேரை கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்

நான்கு பேரை (இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள்) கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்

நாள் 26.11.2011

அனுப்புதல்:-
லட்சுமி (20) க/பெ காசி
பெருமாள் கோவில் மண்டபப் படி
தி.மண்டபம், திருக்காவிலூர்

பெறுநர்:-

காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்

ஐயா,

பொருள் என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன் வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம் என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன் என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு, என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
><><>
வணக்கம். நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள். எனக்கும் மேற்படி காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும் உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம். இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல் சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20) ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8) ஆகியோர் உள்ளனர். மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார் (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு வீடுகள் கிடையாது. விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார்.
(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும் மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என் கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச் சென்றார். மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.
(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம். திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியாருக்கு என் மூத்தார் போய் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார் மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர் திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி விசாரித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என் மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும் மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத் தெரிய வந்தது.
(4) அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனையிட்டனர். சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர். பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார் மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4 செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்பு மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள், கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய 9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர். மீதி நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.
(5) இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். என் மாமியார் உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம் சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாளில் கட்டாயப்படுத்தி கை ரேகை வாங்கியுள்ளனர். என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு அதில் எழுதியுள்ளனர். பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர். மேற்படி தைலா மரம் தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எங்கள் வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார் வந்த வேனில் மாற்றினர். அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார் வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார். பின்பு நாங்கள் அனைவரும் என் மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.
(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச் சென்றனர். என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என் சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார். “நான் மூன்று மாதமாக முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர் விடவில்லை. நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார். இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார். மேற்படி வைகேஸ்வரியை அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார். மேற்படி ராதிகாவை மேற்படி போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி விட்டனர்.
(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில் ஏற்றினார்கள். நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம். விடியற்காலை (23.11.2011) சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார். அங்கு என் கணவர் உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும் பார்த்துள்ளார்கள். அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.
(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள். மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். மேற்படி போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர். மாலை 3 மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம். இரவு நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம். அவர் கொடுத்த ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம். மறுநாள் (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர் மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம். பின்பு அங்கிருந்து நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என் பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம். எனது தந்தை கொளஞ்சி த/பெ துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர். பின்பு அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில் குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில் இருக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம். அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.
ஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.



இவண்
தங்கள் உண்மையுள்ள
ஒம்/-லட்சுமி

(தகவல் :
இரா.முருகப்பன் http://iramurugappan.blogspot.com/2011/11/blog-post.html
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் )


இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

(மும்பையில்) தமிழ் அறியாத தமிழர்கள்

(மும்பையில்) தமிழ் அறியாத தமிழர்கள்
புதியமாதவி
====
தமிழகத்தில் மூன்றாவது மொழிப்போர்.
தமிழ் நாட்டில் தயாரிக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர்
சூட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு..
இந்த நிகழ்வுகளுக்கு நடுவில் மும்பை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும்
15 இலட்சம் தமிழர்களின் இளைய தலைமுறை குறித்த அதிர்ச்சி தரும்
செய்திகள் தமிழ் மொழி, இன உணர்வாளர்களின் கவனிப்புக்கு
வரவேண்டும். இந்தப் பிரச்சனை மும்பை மண்ணுக்கு மட்டும் உரியதல்ல.
இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின்
பிரச்சனை. உலகமெங்கும் பரந்து விரிந்து அந்த மண்ணிலேயே
தங்கள் வாழ்க்கையைத் தொடரும் தமிழர்களின் பிரச்சனை.
மும்பையில் அண்மையில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் கிடைத்த
உண்மைத் தகவல்கள், புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைத்தருகின்றன.
ஏப்ரல் 1 முதல் 8 வரை மும்பை தமிழ்ச்சங்கத்தில் தமிழ்நாட்டின்
மிகச்சிறந்த பதிப்பகங்கள் 40 பேர்கள் மும்பை வந்திருந்தார்கள்.
1985க்குப் பிறகு மும்பையில் நடைபெறும் புத்தகக்காட்சி என்பதால்
மும்பையின் வாசகர்களைப் பற்றி அறியும் முதல் வாய்ப்பாகவும்
இந்த நிகழ்வு அமைந்தது.
கள்ளிக்காட்டின் இதிகாசத்தை வாங்கினார்கள். ஆனால் யாரும் கவிஞர்
வைரமுத்துவின் கவிதை தொகுப்பினை வாங்கவில்லை.
சுஜாதாவின் புத்தகங்கள், கல்கி, லட்சுமியின் புத்தகங்கள் விற்றன.
ஆன்மிகம் பற்றிய புத்தகங்கள், சித்தர்களின் வரலாறு வாங்கியவர்கள்
சிலர். ஒன்றிரண்டு க. ப. அறவாணன், அப்பாத்துரையார் புத்தகங்கள்,
சில சைவசித்தாந்த பதிப்பின் சொல்லகராதிகள் வாங்கப்பட்டன.
நவீன இலக்கியம் குறித்த எந்தப் பாதிப்புகளுமில்லை.
ஆட்டோ சங்கரின் வரலாறும் வீரப்பனின் வரலாறும் வாங்கினார்களே தவிர
சோளகர்த்தொட்டியைப் பற்றி அறிந்திருக்க வில்லை.
இதற்கெல்லாம் மும்பை தமிழர்களைக் குறை சொல்லவும் முடியாது.
வெகுஜனப் பத்திரிகைகளின், ஊடங்களின் சமூகத் தொண்டில் சீரழிந்துப்போன
சிந்தனைகளின் அவலம் இது.
ஜெயலட்சுமியும் செரினாவும் புத்தகம் போட்டிருந்தால் அதுவேகூட
அதிகம் விற்றிருக்கலாம். நல்ல வேளை அப்படி எதுவும் இன்னும்
நடந்துவிடவில்லை.
எந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் வாங்கப்பட்டன என்பது ஏற்படுத்திய
கவலையைவிட எந்த வயதினர் வந்து புத்தகங்களைப் பார்த்தார்கள்,
வாங்கினார்கள் என்பது மிகப் பெரியஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்வு நேரத்தில் புத்தகக்காட்சி நடந்ததால் கூட்டம் வரவில்லை
என்பது ஒருபக்கமிருந்தாலும் இளைஞர்கள் யாரும் புத்தகங்களை
காட்சிப் பொருளாகப் பார்க்கவும் வரவில்லை.
பதிபகத்தாருடன் ஏப்ரல் 6ல் புக்கார் (PUKAR ORG) அமைப்பின் ஓர்
ஆய்வுக்காக நேர்க்காணல் நடத்தி சில புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.
15 இலட்சம் பேர்கள் இருக்கும் மும்பையில் புத்தகக் காட்சிக்கு வந்தவர்களின்
எண்ணிக்கை 500 தாண்டவில்லை.
வந்தவர்கள் அனைவரும் 70 விழுக்காடு 60 வயதினைத் தாண்டிய
முதியவர்கள். 20 விழுக்காடு 35 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.
10 விழுக்காடு மும்பையில் இருக்கும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள்.
அதுவும் மும்பையில் மட்டும் 65 தமிழ் அமைப்புகள் இருக்கின்றன!!.
இந்தப் புள்ளிவிவரத்தின் படி பார்த்தால் இன்னும் பத்து வருடங்கள்
கழித்து மும்பையில் புத்தகம் வாசிப்பவர்கள் 50 வயதுக்காரர்கள்தான்.
இந்த 15 இலட்சம் தமிழர்களின் இல்லங்களில் வளர்ந்து வரும் கிட்டத்தட்ட
25 இலட்சம் தமிழர்கள் தமிழ் புத்தகங்கள் வாசிக்கப்போவதில்லை.
இதிலும் 20 இலட்சம் பேர்கள் தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களாகவே
இருப்பார்கள். தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் இன்று மும்பையின்
நகர் மன்றப்பள்ளிகளில் தமிழ் வழிப் பாடங்கள் பயிலும் குடிசைவாசிகளின்
குழந்தைகள். அவர்களிலும் எத்தனைப் பேர்கள் ஊடகங்களின்
வெளிச்சத்தில் எது தமிழ் என்பதே தெரியாமல் போய்விடுவார்களோ
தெரியாது.
இன்னும் 20 வருடங்கள் கழித்து பலரின் பெயர்களில் மட்டுமே தமிழின்
அடையாளம் ஒட்டிக்கொண்டிருக்கும்.
ஏன் இன்றைக்கு தென்னாப்பிரிக்காவில் பலர் தமிழர்கள். தமிழ்ப் பெயர்கள்.
மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தன் அலுவல் பணி நிமித்தம்
சென்ற திரு. குமணராசன் அவர்கள் தன்னுடைய பயணக்குறிப்பில்
இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்.
'தென்னாப்பிரிக்காவுக்குப் போனவுடன் சில தமிழ்ப் பெயர்களை
தொலைபேசி புத்தகத்தில் பார்த்து மகிழ்வுடன் தொடர்பு கொண்டேன்.
எங்களுக்குத் தமிழில் பேசத் தெரியாது என்றார்கள். வயதானவர்கள்
சிலரின் தொலைபேசி எண்களைத் தந்தார்கள். தமிழ்ப் பேசத் தெரியாத
நம் தமிழினம் ' என்று எழுதியுள்ளார்.
மும்பையிலும் தமிழ்ப் பெயர்களிருக்கும். 20 வருடங்களுக்குள்
தமிழ்ப் பேசத் தெரியாத தமிழினம் மும்பையில் ..
எழுதவும் நினைக்கவுமே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இதுதான்
உண்மை.
இதைப் பற்றி சில நண்பர்களிடன் பேசிக்கொண்டிருந்தேன்.
ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றேன்.
' அட வெள்ளம் வந்து மூழ்கியப் பிறகு ஜாண் போனால் என்ன ?
முழம் போனால் என்ன ? தமிழ்ப் படிக்காமல், தமிழே தெரியாமல்
தமிழ் நாட்டிலேயே பட்டங்கள் வாங்கி இளைய தலைமுறை வந்து
கொண்டிருக்கும்போது.. மும்பையில் என்ன செய்யமுடியும் ? ? ? ? '
என்று விரக்தியுடன் சொன்னார்கள்.
தமிழினத்தை அழிக்கப்போகும் சுனாமி எச்சரிக்கை இது.
என்ன செய்யப் போகிறோம் ?
இங்கே நம் கண்ணுக்குத் தெரியாமல்
வேர்களே அழுகிக்கொண்டிருக்கும் போது
பல நேரங்களில் மலர்களைப் பறித்ததற்காக நாம்
போராடிக்கொண்டிருக்கிறோமோ ? ?

நன்றி
.... புதியமாதவி
puthiyamaadhavi@hotmail.com

புதன், 7 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது?

சமீபத்தில் கேரள, தமிழ்நாடு மாநிலங்களிடையே தீப்பற்றி எரியும் மிகப் பெரிய பிரச்சனை - முல்லை பெரியாறு அணை! கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.



இந்த அணை காலாவதியாகிவிட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால், அணையின் சுற்று வட்டாரத்திலுள்ள 5 மாவட்டங்களின் சுமார் 35 லட்சம் மக்களின் மரணத்துக்கு அது வழிவகுக்கும் என்றொரு பீதியினைக் கேரள அரசு முன்வைத்து, உடனடியாக முல்லை பெரியாறுக்குப் பதிலாக வேறு அணை கட்ட வேண்டுமென கோரி வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள், வல்லுனர் குழுக்களின் அறிக்கைகள் போன்ற இன்னபிற தரவுகளை முன்வைத்து, தமிழக அரசு கேரளாவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இத்தகைய நிலையில், முல்லை பெரியாறு அணையின் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?, கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு உரிமை தமிழக அரசின் கையில் எப்படி வந்தது?, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் வந்தால் அணை உடையுமா?, அணை உடைந்தால் கேரள அரசு கூறிவருவது போன்ற அதிகப்பட்ச பாதிப்பு ஏற்படுமா? இவ்விஷயத்தில் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகளின் உண்மையான நிலைப்பாடுகள் என்ன? போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கு இருக்கும்.

கண்டுபிடிப்புகளும் புதிய உருவாக்கங்களும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் மனித குலத்தின் நன்மைக்குமாகவே அமையவேண்டும். ஆனால், அவற்றால் பிரச்சனை ஏற்படும் என்று வந்தால், அதனைத் தீர ஆராய்ந்து மனித வாழ்வுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுவிடவும் தயாராக வேண்டும். இதுவே மனிதகுல நலனில் உண்மையாகவே அக்கறையுள்ளவர்களின் அணுகுமுறையாக அமையும்.

அவ்வகையில், நாம் தமிழர்கள்; தமிழக அரசும் அரசியல்வாதிகளும் சொல்வதைத்தான் நம்பவும் செயல்படுத்தவும் வேண்டுமென்ற எண்ணமில்லாமல், முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது? அதனால் நன்மையா, தீமையா? என்பதை அலசி உண்மையின் பக்கம் நாம் நிற்க வேண்டும்.

அதற்கு, முல்லை பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக இரு மாநில அரசுகளின் நிலைப்பாடாக வெளியாகியுள்ள கீழ்கண்ட குறும்படங்கள் பாரபட்சமில்லாமல் முடிவெடுக்க, அப்பிரச்சனையின் உண்மை நிலையினை நமக்கு விளக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். பாருங்கள்; சிந்தியுங்கள்; உண்மையின் பக்கம் நிற்கும் முடிவினை எடுங்கள்!

தமிழக பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர்கள் சங்கம் தயாரித்த குறும்படம்.

http://www.youtube.com/watch?v=gW6YcIlF_og


திரு.சோகன்ராய்(dam999 படத்தின் இயக்குனர்) தயாரித்து, பல்வேறு அவார்டுகளும் 20 க்கும் மேற்பட்ட சர்வதேச அங்கீகாரங்களும் பெறப்பட்ட குறும்படம்.

http://www.youtube.com/watch?v=gS0PwCmjIt4


ஆங்கிலத்தில்...

http://www.youtube.com/watch?v=1m4lGLiGse8


நன்றி:
http://www.inneram.com/education/trainings/problem-of-mullai-periyar-dam-1061.html

வியாழன், 1 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

பாகம் – 1
(http://player.vimeo.com/video/18283950?autoplay=1)

Turn off the lights
பாகம் – 2

Turn off the lights

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில் தனியுடமையை ஏற்படுத்தினாலும் அதற்கு முன் இருந்து வந்த அரசின் நீர்ப்பாசன – மராமத்து வேலைகளை புறக்கணிக்கிறார்கள். அதனால் 17-18 நூற்றாண்டுகளில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் இறந்து போகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வீணே கலக்கும் முல்லைப் பெரியாறு நதியை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பி விடும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் வரலாறு இங்கே விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய கர்னல் பென்னி குயிக்கின் பெருமுயற்சியால் இந்த அணை திறமையாகவும், நுட்பமாகவும் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த அணை கட்டும் முயற்சியிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கிவிட பின்னர் பென்னி குயிக்கின் சொந்த முயற்சியால் அணை கட்டப்படுகிறது. கம்பம் குமுளிக்கு அருகே இருக்கும் இந்த அணையின் நீர் தேக்கடிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து குகை – டனல் வழியாக தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த நீர் பயன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை படத்தில் காணலாம்.

மேலும் அணை குறித்து அன்று போடப்பட்ட ஒப்பந்தகளையும், அதன் விதிகளையும், தமிழகத்தின் பங்கு குறித்தும் படம் விரிவாக பேசுகிறது.

இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது. அன்றிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அணையை மூடுவதற்கு பெரும் பிரயத்தனம் செய்கின்றனர்.

அதன்பிறகு அணையை பலப்படுத்தும் வேலைகள் 90களிலிருந்து ஆரம்பித்து நடக்கின்றன. அது குறித்த அறிவியல் பூர்வமான விவரங்களை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் விதமாக அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாக தெரிவிக்கிறது.

அடுத்து அணை உடைந்து முழு நீர் வெளியேறினாலும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடுக்கி அணைக்கு போகும் என்பதையும் தர்க்க பூர்வமாக தெரிவிக்கிறது. தற்போது புதிய அணை கட்டப் போவதாக கேரளா தெரிவித்திருப்பது எப்படி ஒரு சதி என்பதையும் நிரூபிக்கிறது. அதன்படி புதிய அணையின் நீர் தமிழகத்திற்கு வந்து சேரவே முடியாது.

இந்தப் பிரச்சினையின் பால் உச்சநீதிமன்றம் அளித்த உத்திரவையும், தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காதது குறித்தும், உச்சநீதிமன்றமும் அதை தட்டிக் கேட்க முடியாத நிலைமை நீடிப்பதையும் படம் எடுத்துரைக்கிறது.

தொகுப்பாக இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது. இந்தப்படத்தை நாம் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டும். வாசகர்கள், தோழர்கள் இதை உரிய முறையில் மக்களிடையே கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

அடுத்து கேரள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே ஒரு பதட்டத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த இருகட்சிகளை நாம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. இது கேரள மக்களுக்கு எதிரானது என்ற வகையில் கேரள ஓட்டுப்பொறுக்கிகள் பிரச்சாரம் செய்வதில் துளியும் உண்மையில்லை.

இந்த ஆங்கில சப்டைட்டிலோடு வரும் தமிழ் ஆவணப்படத்தை தமிழறியாத பிற மாநில மக்களுக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

படத்தை பாருங்கள், பரப்புங்கள்!
source from vinavu.com
http://www.vinavu.com/2011/12/01/mullai-periyar-video/
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்

...........................................................................
pl watch .......
The mullai periyar...the problem& solution
http://player.vimeo.com/video/18283950?autoplay=1
The Mullai Periyar Dam Real story
http://www.youtube.com/watch?v=l7uJ1nhXZ_A

ஏன் இந்த ஓரவஞ்சனை?



கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது.

இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.

இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர். கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.

இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.

அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது. மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=514116&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=