செவ்வாய், 20 டிசம்பர், 2011

பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்

பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்
புதியமாதவி மும்பை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்காற்றிய பெண்களின் எண்ணிக்கை நமக்கு வியப்பூட்டும். அமெரிக்க நாட்டின் படையில் மட்டும் பெண்கள்:

Eelam women தரைப்படை - 140,000
கடற்படை - 100,000
கப்பல்துறை - 23,000
கடற்கரை கண்காணிப்பு - 13,000
விமானப்படை - 1,000
தரைப்படை, கப்பற்படை செவிலியர் - 74,000

1970 வரை அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இராணுவ அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. சாதாரண அரசு ஊழியர்களாகவே அமெரிக்க அரசு அவர்களைப் பட்டியலிட்டது.

போரும் போர்க்களமும் முழுக்க முழுக்க ஆண் கட்டுப்பாட்டுக்குரியதாகவே இன்றுவரை இருப்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல.. போர்நிறுத்த உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள், அமைதிக் குழுக்கள் இத்தியாதி அனைத்தும் ஆண்களின் ஆளுமைக்குட்பட்டதாகவே இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இன்றுவரை எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெற்றுள்ளதாக சரித்திரமில்லை.

போரின் பாதிப்புகளை அதிகமாக அனுபவிக்கும் பெண்ணினத்தின் அனுபவங்களும் அதைப் பற்றிய பதிவுகளும் மிகக்குறைவு. பெயர் தெரியாத ஜெர்மானியப் பெண்ணின் நாட்குறிப்பு (An Anonymous Woman Diarist in Berlin) உலக யுத்தத்தில் ஜெர்மானியப் பெண்களின் மனிதாபிமான செயல்களைப் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ரஷிய வீரர்களால் தங்கள் மனைவி மக்கள் வன்கொடுமைக்குள்ளானபோது ஜெர்மானிய வீரர்கள் தங்கள் உயிர் காக்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். பெர்லின் நகரத்து ஜெர்மானியப் பெண்கள் தான் தங்கள் பெண்களைப் பாதுகாத்தார்கள் என்றும் பதிவு செய்துள்ளது.

ஜெர்மானிய ஹிட்லரின் நாசிப்படை வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளிலும் தங்கள் வாரிசுகளை அனாதைகளாக விதைத்தார்கள் என்பது சரித்திர உண்மை. 1940 மே மாதம் முதல் 1944 டிசம்பர் வரை ஜெர்மானிய வீரர்கள் பிரான்சு நாட்டைக் கைப்பற்றி இருந்தபோது ஜெர்மானிய வீரர்களுக்கு பிரான்சு பெண்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சற்றொப்ப 200,000. அதுபோலவே 1940-45களில் டென்மார்க் நாட்டை கைப்பற்றியிருந்தபோது பிறந்த குழந்தைகள் 6000 முதல் 8000. நெதர்லாந்தில் 1935-45களில் பிறந்த குழந்தைகள் 50,000. ரஷியாவில் மட்டும் ஜெர்மன் நாசிப்படை வல்லாங்கு செய்த அந்நாட்டு பெண்களின் எண்ணிக்கை 200,000 மேலிருக்கும்.

நாசிப்படை மட்டும் இதைச் செய்யவில்லை. உலக யுத்தம் முடிந்தபின் நேச நாடுகளின் படைவீரர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஜெர்மானிய மண்ணில் இதே கொடுமையைத்தான் செய்தார்கள். ஜெர்மன் தாய்கள் பெற்ற குழந்தைகளில் 36334 அமெரிக்கனுக்கும், 10188 பிரான்சு காரனுக்கும் 8397 பிரிட்டன்காரனுக்கும் 3105 ரஷியனுக்கும் 1767 பெல்ஜியநாட்டவனுக்கும் பிறந்தவர்கள். தகப்பனின் நாட்டு அடையாளமும் இல்லாமல் பிறந்தவர்கள் 6829. அதுமட்டுமல்ல, ஜனவரி 1946வரை அமெரிக்க வீரன் விரும்பினாலும் கூட தன் எதிரி நாட்டில் வாழும் தன் வாரிசுகளுக்கு வாரிசுரிமையை வழங்க முடியாது என்று அரசாங்க சட்டமே இருந்தது. இன்றுவரை தங்கள் தந்தையரின் வேர்மூலம் தேடி அலையும் அவர்களின் கதை மனித இனத்தின் ஒரு சோக வரலாறு.

பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!

போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)

அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.

போரின் விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.

மகன் புறமுதுகிட்டான் போர்க்களத்தில் என்று கேட்டு அவன் பாலுண்ட தன் முலையை அறுத்து எறிந்த புறநானூற்று தாயின் வீரத்தைச் சொல்லி சொல்லி ஆணுலகம் போர்ப் பரணி எழுதி வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் மூளைச்சலவையிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இன்றைய போர்முனையில் இலங்கையிலிருந்து ஒலிக்கிறது ஒரு தாயின் குரல்..

கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப்பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா "தாய் நிலம்"
புதல்வர்களைக் கேட்கிறது?

போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய்நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை.

கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.
இன்னும் அடங்காதோ உன் பசி?

விண்ணேறி மண் தொட்டு
மீண்ட பின்னும்
சமாதானம் வேண்ட
யுத்தம் தேவையோ?
பற்றி எரிக ஆயுத கலாசாரம்!

என் மழலைகளை விடு
நாளைய உலகம்
அவர்களுக்காய் மலரட்டும்!

(ஈழக்கவிஞர் ஒளவை)

- புதியமாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)

http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_14.php

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக