ஞாயிறு, 20 மே, 2018

பஞ்சமி நிலம் ( பூர்வ குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை தேடி )

Mumbai Vizhithezhu Iyakkam Visual Media
  வழங்கும்

பஞ்சமி நிலம்

( பூர்வ குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை தேடி )



நேர்காணல் தொகுப்பு & ஆவணப்பட தயாரிப்பு :- சிறீதர் தமிழன்

ஒளிப்பதிவாளர் :- பரஞ்சோதி மற்றும்  கார்த்தி  & பாண்டி குழுவினர்  

படத்தொகுப்பு
:- செல்வா தமிழர் (Tamizhar youtube channel) Mumbai
--------------------------------------------------------------------------------------------------------------

பூர்வ குடிமக்களின் (ஒடுக்கப்பட்ட மக்கள் ) விடுதலைக்கு மையமான " நில உரிமை போராட்டத்திற்க்கு" இந்த நேர்காணல் தொகுப்பு மற்றும் தகவல் ஒரு ஆவணமாக  இருக்கும் என்றும்; போராட்டத்திற்கு உரமேற்றும் என்று ஆழந்த நம்பிக்கையுடன் இதை மக்களிடம் கொண்டுவருகிறோம்.
 


பஞ்சமி நிலமீட்புப் போராட்டத்தில் களப்பலியான போராளிகள் க. ஜான் தாமஸ் மற்றும் ப.ஏழுமலை மற்றும் நிலவுரிமைக்காக இரத்தம் சிந்தி இன்னுயிர் நீத்த, பாதிக்கப்பட்ட   போராடுகிற  அனைத்துப்போராளிகளுக்கும் இந்த ஆவணப்படத்தை சமர்ப்பிக்கிறோம் -
மும்பை விழித்தெழு இயக்கம் / MVI .  
=============================================================================================
வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து  இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்தும் நிகழ்கால பாலம்.
பல நேரங்களில், பத்திரிகைகளில், பஞ்சமி நிலங்களை மீட்பது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பலருக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன, அதன் நடைமுறை என்ன, அதற்குறிய சட்டங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. அதை விளக்குவதற்காகத்தான் இந்த பதிவு.

 ============================================================================================
பஞ்சமி நிலம் என்றால் என்ன? :-

சொத்து என்பதில் மிக அடிப்படையானதும் அதில் முதன்மையானதும் நிலம்தான்.

நிலம்தான் மற்ற எல்லா பொருள்  உற்பத்திக்கும்  சொத்துக்களுக்கும் ஆதாரம்.



ஆங்கிலேயர்கள் தமிழகத்தைக் கைப்பற்றியபோது நிலவிய நிலவுடைமை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. தஞ்சாவூர்,செங்கல்பட்டு,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நீர்ப்பாசனமுள்ள நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களிடமே குவிந்து கிடந்தன. பெரும்பான்மையான மிராசுகள் தங்கள் நிலங்களைப் பயிரிட படியாட்களாக அடிமைகளை வைத்திருந்தனர். அந்த அடிமைகள் அனைவரும் பஞ்சமர்களாக   இருந்தனர்.

1891ல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரே (J.H.A.Tremen Heere) 
“ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட உடல்களுடனும், அழுக்கும் - கந்தலுமான அரைகுறை ஆடைகளுடனும், கல்வியறிவு ஊட்டப்படாமலும், கவனிக்கப்படாமலும், தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் சிறுகச் சிறுக தின்னப்பட்டும், பிராணிகளைப் போல வேட்டையாடப்பட்டும், மனிதாபிமானமே சிறிதும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் இந்த பஞ்சமர்கள் (பறையர்கள் ) வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்” என்று 1891-ல் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு  17 பகுதிகள் கொண்ட ஒரு அறிக்கையை சமர்பித்தார்.

அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்கள் மனிதர்களாக நடத்தப்படவும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேற்றம் பெறவும், அவர்களும் நிலவுடைமையாளர்களாக இருப்பது அவசியம் என்று அந்த அறிக்கையில் அவர் சொல்கிறார் .

அவருக்கு முன்பே சிலர் ஒடுக்கப்பட்ட பஞ்சமர்கள் குறித்து பல அறிக்கைகள் , மாநாடு , பத்திரிக்கை வாயிலாக ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 
அதில் முக்கியமானவர்கள் "திராவிட மகாஜன  சபை" நிறுவனர் மற்றும் "ஒரு பைசா தமிழன்  " பத்திரிக்கை ஆசிரியர்    அயோத்திதாசர் பண்டிதர் , கிறிஸ்துவ மிஷனரி Free of Scotland  சபையை சார்ந்த திரு. ஆடம் ஆண்ட்ரு மற்றும் வெஸ்லியன் சபையை சார்ந்த   திரு. வில்லியம் கௌடி இவர்கள் மூவரும் களப்பணியுடன், நாளேடுகளிலும் ஆங்கில அரசுக்கும் தொடர்ந்து எழுதி ஒடுக்கப்பட்ட விடுதலைக்காக ஒரு விவாதத்தை தொடங்கிவைத்தார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் ஆட்சியராக 1888-ல் பணியாற்றிய சி.எம். முல்லாய் என்பவரும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மிகவும் மோசமான நிலையில் வாழ்வது குறித்து அறிக்கை தயாரித்து அனுப்பியிருந்தார். ஆனால், மூத்த அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. சாதி அடுக்குநிலை காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி இந்துக்களின் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். மிராசு என்ற நிலவுடைமை முறை அதற்குக் காரணமாக இருந்தது. காணியாட்சிக்காரன் என்றும் அழைக்கப்பட்ட அப்போதைய நடைமுறை, அம்மக்களை மண்ணுக்குச் சொந்தமற்றவர்களாக விலக்கியே வைத்திருந்தது.
இது எல்லாமே திரு . திரமென்ஹீர் தூண்டுதலாக இருந்தது என்று கருதலாம் .

 ( ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக, கலாச்சார, கல்வி, பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிக்க திரு . திரமென்ஹீர் அளித்த அறிக்கை அடிப்படையாக இருந்துவருகிறது என்கிறார் ‘பஞ்சமி நில உரிமை’ என்ற வெளியீட்டின் ஆசிரியர் வி.அலெக்ஸ்.
இந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஏ.சுந்தரம். )

 இந்த அறிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் அப்போது இருந்த பறையர்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை மிகத் தெளிவாக விளக்கியது.
அவர் அளித்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:
“பறையர்களுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை. கந்தைத் துணிகள்தான் அவர்களது ஆடைகள். தொழுநோய் போன்ற மிக மோசமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது.
(மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கிவந்த பொருட்கள் போல). மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனுக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”.
என்று தன் தலைமை அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தார்.

அவர் கூறுகிறார், “1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த பறையர்கள்
படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு
புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள்.

மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள பறையர்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே பறையர்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம்
அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் பறையர்களுக்கு கிடைக்கும்.
அனால் பறையர்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்.”
மேலும் ட்ரெமென் ஹெரே கூறுகிறார்,

* “பறையர்கள் மீது மட்டும் ஏன் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்? பறையர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருப்பதோடு விவசாயத்தோடு அதிகம் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

* இவர்களுக்கு உதவுவதன்மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம்.

* சமூகத்தின் மிகவும் அடித்தளத்தில் இருக்கிறார்கள். இவர்கள் உயர்ந்தால் அனைவரையும் உயர்த்தியதற்குச் சமம்.

* பறையர்களுக்குக் கொடுக்கும் சலுகைகள் ஒன்றும் பெரிய சலுகைகள் இல்லை. அனால் மற்ற சாதியினருக்கு இதைவிட பெரிய சலுகைகள் இருக்கின்றன.

* கடந்த காலத்தில் அரசின் கொள்கைகள் பறையர்களை கீழான நிலையிலேயே வைத்திருக்கிறது. அந்த தவறை இப்பொழுது நிவர்த்தி செய்ய வேண்டுமனில் புறக்கணிக்கப்பட்டவருக்கு புதிய ஆரம்பத்தைக் கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

ட்ரெமென் ஹெரே அவர்கள் அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகளின் சுருக்கம் :-

* மாகாணத்தில் ‘நில விண்ணப்ப’ சட்டத்தின்படி பட்டாதாரருக்கு உள்ள உரிமையை கிராமத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்கும்படி மேற்படி சட்டத்தை திருத்த வேண்டும்.

* சாகுபடிக்கேற்ற புறம்போக்கு விவசாய நில பகிர்மானத் திட்டம் கிராமத்திலுள்ள பறையர்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

* 1875 க்கு முன்பு வரி பாக்கிக்காக மிராசுதாரர் மற்றும் பட்டாதாரர்களிடமிருந்து அரசு கைப்பற்றிய நிலத்தை பறையர்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

* தேவையில்லாமல் வனத்துறையுடன் சேர்க்கப்பட்ட விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களிலும் மிராசுதாரர் இல்லாத கிராமங்களில் அதிகமாக விவசாயத்திற்குப் பயன்படும் நிலம் உள்ள இடங்களிலும் “பறையர்கள் குடியிருப்பை” அமைக்க வேண்டும்.

* இத்தகைய குடியிருப்புகளில் உள்ள பறையர்களுக்கு விவசாயத்திற்கேற்ற மற்ற நிலத்தை அரசு பறையர்களுக்கு கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கு கிணறுகள் வெட்டிக் கொடுக்க வேண்டும். இந்தக் கடனை தவணை முறையில் வசூலிக்க வேண்டும்.

* சென்னை மாகாண குத்தகைச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் பறையர்களும் மற்ற விவசாயிகளும் மிராசுதாரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

* அரசு கிராமமாக இருந்தாலும் மிராசுதாரர் கிராமமாக இருந்தாலும் பறையர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் சார்பாக இருக்கும்படி சட்டம் திருத்தப்பட வேண்டும்.

* கூலி விவசாயிகள் அடிமை முறையிலிருந்து விடுபடும் விதத்தில் உடன்படிக்கைமீறல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கூலி உடன்படிக்கையை ஒரு வருடத்திற்கு உட்பட்டதாக ஆக்கப்பட வேண்டும்.

* பறையர்கள் வாழும் வீட்டிற்கு பட்டா உரிமையை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

* பறையர்கள் அரசு உதவியுடன் மற்ற நாட்டிற்கு குடிபெயரும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.

* கள்ளு சாராயக் கடைகள் அதிகமாக பறையர்களுக்கென்று இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

* பறையர்களுக்கு கல்வியை அனுமதித்து அரசு தெளிவாகவும் நேரடியாகவும் அவர்களின் கல்விக்கு வழிவகுப்பது அரசின் கடமையாகும்.

* பறையர்களின் சுகாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றங்களால் வரக்கூடிய விளைவுகள்:

* பறையர்கள் நிலத்தைப் பெறுவதில் உள்ள தடையை நீக்குவது.

* பறையர்களின் வீடுகளை மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதிலிருந்து விடுவிப்பது.

* பறையர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது.

* பறையர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது.”

“சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்க தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்திரம், தன்மானம்

ஆகியவற்றை அவர்களுக்கு கொடுத்தால் பறையர்களின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்” என்று 5 அக்டோபர் 1891 அன்று கையெழுத்திட்டு தன் அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.

இத்தகைய கொடுமைகள் மாறவேண்டுமென்றால் கண்டிப்பாக பறையர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் ட்ரெமென் ஹெரே. தன் பிரிட்டிஷ் அரசையும் வலியுறுத்தினார்.

ட்ரெமென் ஹெரே அவர்கள் பறையர்கள் பற்றிக் குறிப்பிட்ட பல்வேறு கொடுமைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமே இருந்தன என்று பொருளில்லை.

இந்தியா முழுவதுமே ஒடுக்கப்பட்ட  மக்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவித்தார்கள். இன்னமும்கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.



சிறு அளவிலான சொந்த நிலம், குடியிருக்க சொந்த வீடு, எழுத்தறிவு பெற சேரிகளில் பள்ளிக்கூடம், அடிமைப்படுத்தாமல் விரும்பிய வேலையைச் செய்ய வாய்ப்பு, சுயமரியாதை, கண்ணியத்துடன் வாழ உதவுவது என்று நடவடிக்கை எடுத்தால் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று தனது பரிந்துரைகளை நியாயப்படுத்தினார் திரமென்ஹீர். 1881-ல் ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சம், 1891-ல் 90 லட்சமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக அறிக்கை தெரிவித்தது. 


ஜெரோம் சாம்ராஜ். திரமென்ஹீர் அவர்கள் ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு நிலம் கொடுத்தால் பிரிட்டிஷ் அரசுக்கு வருமானம் பெருகும் அரசுக்கும் நற்பெயர் இருக்கும் என்றும் காலனி ஆட்சியாளர்களின் முக்கிய நோக்கம் வருவாயை அதிகப்படுத்துவதுதானே தவிர, சமூகச் சீர்திருத்தம் அல்ல என்று இதை விளக்குகிறார் ஜெரோம் சாம்ராஜ். திரமென்ஹீர் தனது அறிக்கைக்குப் பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியதுடன் 7.8.1891ல் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளியான ‘ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலை’ என்ற தலையங்கத்தையும் சேர்த்திருந்தார்.


 1891 ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விவாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. 


இதையடுத்து, 30.09.1892-ல்  இந்த ஆய்வறிக்கையே ' செங்கல்பட்டுப் பறையரின் மக்களைப் பற்றிய குறிப்புகள்' , வருவாய்த்துறை அராசனையாக 1010/1010A  வெளியட்டப்பட்டது.

இங்கிலாந்து அரசில் இந்திய விவகாரங்களுக்கான துணைச் செயலாளராகப் பொறுப்பில் இருந்த ஜார்ஜ் நத்தானியேல் கர்சன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வெளியுறவுத் துறைச் செயலரும் மதறாஸ் மாகாண அரசும் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத் தான் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது என்றாலும் நிலவுரிமைமீது ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த ஆர்வமே அப்படியொரு நிலை உருவாகிட பின்புலமாக அமைந்தது எனலாம்.


 பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்தும், பிரிட்டிஷாரின் ஏனைய காலனி நாடுகளுக்கு புலம்பெய்ர்ந்து சென்றும் ஈட்டிய சேமிப்பிலிருந்து நிலங்களை வாங்குவதிலும் அவற்றில் பயிரிடுவதிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் காட்டிய ஆர்வத்தையும், நிலத்தோடும் விவசாயத்தோடும் பிணைக்கப்பட்டதான வாழ்முறையை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருப்பதையும் கணக்கிற்கொண்டே பஞ்சமி நில உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது.


இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட  மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது.

இவ்வாறு ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களை வழங்கிய போது ஒரு சில விதிமுறைகளையும் அரசு வகுத்தது. அதன்படி வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனுபவிக்க வேண்டும்.

* முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது.

* பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு பட்டியலின இன மக்களுக்கு மட்டுமே விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ செய்யலாம்.

* நிபந்தனைகளை மீறிச் செய்யப்படும் உரிமைமாற்றங்கள் சட்டப்படி செல்லாது என்ற விதிமுறைகளை விதித்தது.

(பார்வை : வருவாய்த் துறை நிலையான ஆணை 15.9 மற்றும் அரசாணை G.O.M.S. 2217 நாள் 01.10.1941).

இத்தகைய குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நிலம் வழங்கப்பட்டதால் இவை டி.சி. மற்றும் ஆதிதிராவிடர் கண்டிஷன் நிலங்கள் என்று இன்றும் வருவாய்த் துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தன் நீண்ட விவரமான அறிக்கை யில் கடைசியாக எழுதி வைத்த கருத்துக்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. “தாழ்த்தப்பட்ட வர்களுக்கு ஓரளவு நிலமும், சொந்தமான குடி சையும், எழுதப்படிக்கத் தெரிவதும், தன் உழைப்பைத் தான் விரும்புவது போல் பயன் படுத்தும் உரிமையும் இருந்தால், அவர்கள் சுயமரியாதை உள்ளவராகி , மரியாதை எனும் திசை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். அப்படியொரு நிலை ஏற்படும்போது, அவர் கள் பட்டுழலும் ஆழ்ந்த துயரம் எப்படி என் னை எழுதிடக் கட்டாயப்படுத்தியதோ, அந்த மகிழ்ச்சியற்ற இக்கால கொடுமையை விட மாறுபட்ட எதிர்காலத்தை நோக்கி, அவர் களால் அடியெடுத்து வைக்க முடியும்.” இப்படிக் கடைசியாக உருக்கத்தோடு எழு திய அவர், சைதாப்பேட்டை கலெக்டர் அலு வலகத்தில் அமர்ந்து கையெழுத்திட்டுள்ளார். (தேதி 5.10.1891.)


சேரி நிலங்களையும் மிராசுகளே கைப்பற்றிக்கொள்வதையும், நிலங்களை ஏகபோகமாகத் தங்கள் வசத்தில் வைத்துக்கொள்வதையும், ஒடுக்கப்பட்டவர்கள் சாகுபடியாளர்களாக முடியாமல் தடுத்ததையும் திரமென்ஹீர் கடுமையாக எதிர்த்தார்.

கல்வி அறிவினாலும் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாலும் ஒடுக்கப்பட்டவர்கள் மெதுவாக அதிகாரம் பெறத் தொடங்கினர். நிலத்துக்கான அவர்களுடைய போராட்டம் 18-வது நூற்றாண்டு முதல் தொடர்கிறது. திரமென்ஹீர் அறிக்கை தந்திருக்காவிட்டால், அவர்களின் அவலநிலை வெளியுலகுக்குத் தெரிந்தே இருக்காது என்கிறார் வரலாற்று ஆசிரியர் ரூபா விஸ்வநாத். இவர் ‘The Pariah Problem: Caste, Religion and the Social in Modern India’ என்ற நூலை எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களைத் தருவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ராணுவத்திலும் ரயில்வேயிலும் பணிபுரிந்த அப்பிரிவு மக்கள், நிலங்களை வாங்கத் தொடங்கினர் என்று ஜப்பானிய அறிஞர் ஹருகா யானகிசாவா குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ரூபா. மிஷினரிகளும் பிரிட்டிஷ் அரசும் அறிக்கை தருவதற்கு முன்னதாக, 1817 முதல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் போராடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர், சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடினர். 1858-ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தையும் நடத்தினர்.

========================================================================
யார் இந்த பஞ்சமர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள் ) ?... எப்படி? எப்போது ஒடுக்கப்பட்டனர் ?..

தற்போது, தலித்துக்கள், பட்டியல் இன மக்கள், ஆதிதிராவிடர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படும் மக்களை, ‘பஞ்சமர்கள்என்றும் கூறுவார்கள். வழக்கமாக நாம் மனு சாஸ்திரப்படி நினைப்பது நான்கு வர்ணங்களைத்தான். ஏதோ ஒரு கால கட்டத்தில், இந்த வர்ணங்களை ஏற்காதவர்கள்ஐந்தாவது வர்ணத்தைஉருவாக்கினார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள் என்ப்படுபவர்கள்.

கிராமப் பொதுச் சபையில் இடம் பெற்றிருந்தனர். வரியை நிர்ணயிப்பதிலும் தமது கிராமப்பகுதி எந்த மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிர்ணயிப்பதிலும் இவர்கள் முடிவுகளை மன்னர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனர். பொதுச் சபையில் இடம் பெற்ற இம்மக்கள் ‘பறை முதலி’ என்ற பெயரைப் பெற்றுள்ளனர். ‘முதலி’ என்ற சொல்லுக்கு ‘முதல்வன்’ என்ற பொருள் இருந்தது சிலர் மன்னரின் கடற்படையிலிருந்தும், காவலராக இருந்தும் பணியாற்றியுள்ளனர். ‘ஐநூற்றுப் பறையர்’ என்ற பெயர் ஐநூறு வீரர்கள் அடங்கிய படை என்று தெரிகிறது. பறையர்களுக்கும் ஒரு காலத்தில் வள்ளுவநாடு, புலையர் நாடு போன்ற நாடுகள் இருந்து வந்தன. ‘நாஞ்சில் வள்ளுவன்’ போன்ற குறுநில மன்னர்களும் இருந்துள்ளனர்.

பழங்குடியினரான ஆதி திராவிடர்களுக்கு கிராமத்தின் எல்லைகள் நன்கு தெரிந்திருந்தன. இந்த அடிப்படையில் இவர்களில் சிலர் கிராம அடிப்படை ஊழியர் பதவிகளில் இருந்து வந்துள்ளனர். இன்றும் பலர் அந்தப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பழங்கால கிராம ஏடுகளில் சேரி, நத்தம், புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வெள்ளாளர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆதிக்கம் செலுத்திய போது, பறையர்களுக்கு நிலத்தின்மீது இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலைத்த குடிகளாக வாழ்ந்த மக்கள் இவர்களில் பல குடியினர் இலங்கைக்கும், மொரிஷியஸ் தீவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும், மேற்கு இந்தியத் தீவுக்கும், பிஜி தீவுக்கும் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வருகின்றனர்.

பின்னர் அடிமையாக்கப்பட்ட இந்த பஞ்சமர்கள், ஊருக்கு வெளியே, சேரிகளில் வாழ்ந்து வந்தார்கள்.  காலங்காலமாக, அவர்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களாகவும், மேல் ஜாதிக்காரர்களிடம் அடிமைகளாகவும் இருந்து வந்தனர்.


  கல்வி அறிவினாலும் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாலும் ஒடுக்கப்பட்டவர்கள் மெதுவாக அதிகாரம் பெறத் தொடங்கினர். நிலத்துக்கான அவர்களுடைய போராட்டம் 18-வது நூற்றாண்டு முதல் தொடர்கிறது. திரமென்ஹீர் அறிக்கை தந்திருக்காவிட்டால், அவர்களின் அவலநிலை வெளியுலகுக்குத் தெரிந்தே இருக்காது என்கிறார் வரலாற்று ஆசிரியர் ரூபா விஸ்வநாத். இவர் ‘The Pariah Problem: Caste, Religion and the Social in Modern India’ என்ற நூலை எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களைத் தருவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ராணுவத்திலும் ரயில்வேயிலும் பணிபுரிந்த அப்பிரிவு மக்கள், நிலங்களை வாங்கத் தொடங்கினர் என்று ஜப்பானிய அறிஞர் ஹருகா யானகிசாவா குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ரூபா. மிஷினரிகளும் பிரிட்டிஷ் அரசும் அறிக்கை தருவதற்கு முன்னதாக, 1817 முதல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் போராடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர், சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடினர். 1858-ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தையும் நடத்தினர்.


அடிமை முறை மற்றும் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு நில உரிமையை உறுதி செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர். பஞ்சம -ஒடுக்கப்பட்ட மக்களை, பட்டியல் இனத்தவர் என வகைப்படுத்தி, அவர்களுக்கு, 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்த சட்டம், 1892, செப்., 30ல், இங்கிலாந்து பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலங்கள், எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கு என பிரிவு பார்க்காமல், பட்டியல் இனத்தவருக்கு பிரித்து ஒதுக்கப்பட்டன. இதற்கு, அப்போது எடுக்கப்பட்ட ஜாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படை தகவல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
அப்போது, இது தொடர்பான விவரங்கள், வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவு செய்யும் போது, பஞ்சமி நிலம் என்றும், டி.சி., நிலம் என்றும், கன்டிஷன் நிலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, இவ்வாறே வருவாய் ஆவணங்களில் இந்த நிலங்கள் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.
நிலம் பெற்ற சமூகங்கள் : காலப் போக்கில், பஞ்சமி நிலம் பெற்றவர்கள் குறித்து சில தவறான கருத்துகள் பரவின. உதாரணமாக, ஒடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்து சமூகங்களும் பஞ்சமி நிலங்கள் பெற்றவர்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட சில சமூகங்கள் மட்டுமே, கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகள் பரவின. இதன் விளைவாக, குறிப்பிட்ட சில சமூகங்கள், தங்களது பஞ்சமி நில உரிமையை இழக்கும் நிலை உருவானது
பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம்

இதனால், பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம் ஒன்று, 1892ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. . இந்த நிலத்தை சுருக்கமாக D.C.Land (Depressed Class Land) என்றும் சொல்கிறார்கள்.
சட்டத்திலுள்ள முக்கிய நிபந்தனைகள்
  அவ்விதிகளில் சில
1. 10 ஆண்டுகளுக்குள் நிலத்தை யாரிடமும் விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது.
2. 10 ஆண்டுகளுக்கு பின் நிலத்தை வேறோரு ஒடுக்கப்பட்ட  நபரிடம் தான் விற்கவோ அடமானம் செய்யவோ வேண்டும்.
3. இவ்விதிமுறைகளை கூறினால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
நில ஒப்படை விதிகளை மீறி நிலமாற்றம் செய்தால் அது சட்டப்படி செல்லாது.
பார்க்க :
வி. ஜி. பி பிரேம் நகர் மின்வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பலர் Vs தமிழ்நாடு அரசு அதன் வருவாய்த்துறை அரசு செயலாளர் மூலம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை மற்றும் பலர், W. P. NO - 17467/1996, உடன் மற்ற தொகுப்பு வழக்குகள், 7.11.2008

 ஆங்கில அரசாங்கத்தால் Depressed Class என்று குறிப்பிடப்பட்ட பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste - பட்டியல் வகுப்பினர் (அட்டவணை/ பட்டியிலன  வகுப்பினர்) என்று பிற்பாடு மாற்றம் செய்யப்பட்டது. D.C.Lan (Depressed Class Land)

நிலம் வாங்குகின்ற வேறு வகுப்பினர், பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்கக்கூடாது. நிலத்தை விற்பனை செய்பவர் வேறு வகுப்பினராகக்கூட இருக்கலாம். அவர் அந்த நிலத்தை ஒரு இருந்து அவர் பெற்று அதனை உங்களிடம் விற்றாலும் நீங்கள்தான் நஷ்டப்பட வேண்டியதிருக்கும். ஆகையால், ஒரு நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை விற்பவர் யாரிடமிருந்து வாங்கியுள்ளார் என்பதை பார்ப்பது அவசியம் ஆகின்றது.
அப்படி விதி மீறப்பட்டால் வருவாய் வாரியமே அந்நிலங்களை திருப்பி எடுத்துக் கொள்வதற்கு அவ்விதிகளில் இடமிருந்தது. இதையும் மீறி அந்நிலங்களை ஆதிக்க சக்திகளும், கட்டுமான நிறுவனங்களும் அவர்களிடமிருந்து பலவந்தமாகவோ அல்லது பணம் கொடுத்தோ பறித்துக் கொண்டனர். பஞ்சமி நிலங்கள் பறிக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் இயக்கங்கள் தொடங்கப்பட்ட பிறகு விழித்துக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அவரவர்கள் பகுதிகளிலிருந்த பஞ்சமி நிலப் பரிமாற்றங்களை ரத்து செய்து நிலங்களை மீட்க முயன்றனர். அம்முயற்சிகளை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் பஞ்சமி நிலங்கள் பற்றிய வரலாற்றை குறிப்பிட்டதுடன் நிலப் பரிமாற்றம் ஒப்படைப்பு விதிகளுக்கு புறம்பாக இருந்ததனால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவற்றை ரத்து செய்ய முழு உரிமை உண்டு என்று தீர்ப்பு கூறினார்.
 =======================================================================

 காகிதங்களில் உறங்கும் சட்டங்கள்


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களை வழங்கிய உத்தரவு பலவகைகளில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது. அம்மக்களின் வாழ்க்கை நிலை அதில்தான் அதிகாரபூர்வமாக விவரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய நிலங்களை மற்றவர்கள் சூது செய்து பறித்துவிடக் கூடாது என்று ‘நிலை ஆணை 15’, ‘சிறப்புப் படிவம்  டி’ என்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

“பயிரிடப்படாத நிலங்கள் மீது மிராசி சாதிகளுக்கு இருந்த அதிகாரத்தை வெள்ளைக்கார அரசு விலக்கியது. சாகுபடி செய்ய விரும்பிய இதர சாதிகளுக்கு அதை வழங்கத் தயாரானது. உபரி நிலங்களை மிராசுகளிடமிருந்து கைப்பற்றினாலும், நிலவுடைமைச் சாதிகளிடமிருந்து விலக்கப்பட்ட நிலையிலேயே தீண்டப்படாதவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது” என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் சி.ஜெரோம் சாம்ராஜ்.

 அரசிடம் பெற்ற நிலத்தை யாரும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. அப்படியே 10 ஆண்டுகளுக்குப் பிறகு விற்கும்போது ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குத்தான் விற்க வேண்டும். எனவே, 1918 முதல் 1933 வரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிலங்கள் பட்டியல் இனத்தவருக்கு மட்டும்தான் வழங்கப்பட்டன. அப்படி வேறு யாராவது நிலத்தை வாங்கினால் அந்த நிலத்தை அரசே இழப்பீடு ஏதும் தராமல் கையகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியும் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் பெரும்பகுதி, பிற வகுப்பினரின் கைகளில் போய்ச் சேர்ந்தது. சில இடங்களில் ஒரு கூடை கேழ்வரகு, சோளம் போன்றவற்றைக்கூடக் கொடுத்து நிலங்களை வாங்கியிருந்தனர்!

 ஒடுக்கப்பட்டோர் நில உரிமையை வலியுறுத்தி 1-10-1941-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.2217, 12-12.1946-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.3092 பிறப்பிக்கப் பட்டும்கூட பலன் ஏற்படவில்லை.


சுதந்திரம் அடைந்த பிறகு நிலங்களை ஆவணப்படுத்தத் தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுக்கவில்லை. கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் அப்படி மேற்கொள்ளப்பட்டது. உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற சட்டமும், நில உச்சவரம்புச் சட்டமும் வெறும் காகிதங்களில்தான் இருக்கிறது. சுதந்திரம் அடைந்த முதல் 20 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி, தனி கூட்டுறவுச் சங்கங்களை அமைத்திருந்தாலும், 1960-ம் ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டத்தால் அதிகப் பலன் கிடைக்கவில்லை. நிலச் சீர்திருத்தச் சட்டத்துக்குப் பிறகு நிலம் வைத்திருந்த பிராமணர்கள் சென்னை போன்ற நகரங்களில் குடியேறினர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுடைய இடங்களுக்குப் பெயர்ந்து குடிவாரதாரர்களாகவும் நிலவுடைமையாளர்களாகவும் மாறினர். நிலங்கள் கைமாறியும் ஒடுக்கப்பட்டோரின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. விவசாயத் தொழிலாளர்களாகவே நீடித்தனர். அவர்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகள் தீவிரமானதுடன், முடிவில்லாமலும் தொடர்ந்தது.


“கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் திமுக, அஇஅதிமுக கட்சிகள் நிலச் சீர்திருத்தத்தில் ஒப்புக்குச் சில மாற்றங்களைச் செய்ததுடன் திருப்தியடைந்தன. நிலங்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதில் சாதி அமைப்பு முக்கிய காரணமாகத் திகழ்கிறது. நில ஆவணப் பதிவேடுகளைக் கிராமங்களில் கர்ணம் என்ற பதவிக்காரர்கள்தான் நீண்ட காலமாகப் பராமரித்துவந்தனர். இப்போது கிராம நிர்வாக அலுவலர் என்ற அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்ட பிறகும் நிலைமை முன்னேறவில்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதில் உறுதி இல்லாததுதான் இதற்குக் காரணம்” .


தமிழ்நாட்டில் உள்ள நிலங்களை வகைப்படுத்தி, அடையாளம் கண்டு சர்வே செய்யும் பணியை தமிழக அரசு 1979 ஜூன் 1-ல் தொடங்கி 1987 ஏப்ரல் 30-ல் நிறைவுசெய்தது. அதனால்கூட உருப்படியான பலன் ஏற்படவில்லை. “பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மீட்டுத் தருவதற்குப் பதிலாக, அவர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி நிலங்களைக் கைப்பற்றும் சதிக்கே வழிசெய்தது  பஞ்சமி நிலம் என்ற வகைப்பாடு பட்டா நிலம், புறம்போக்கு நிலம் என்றெல்லாம் பல இடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

அரசிடம் ஆவணங்கள் இல்லாததால் புள்ளிவிவரங்கள் நம்பத்தக்கதாக இல்லை. சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுக்கான டாக்டர் அம்பேத்கர் மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரும் எழுத்தாளருமான எம்.தங்கராஜ் இந்த வகையில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை விரிவாகத் தனது நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறார். ‘ஏழைகளுக்கு நில விநியோகத்தில் அரசின் தலையீடு, தமிழகப் பின்னணியில் ஆய்வு’ என்பது அவருடைய நூலின் தலைப்பு. ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலம் என்று இதுவரை அடையாளம் காணப் பட்டுள்ள மொத்த நிலத்தின் அளவு 1,16,392.40 ஏக்கர்கள். அதில் 16,018.09 ஏக்கர் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கருப்பன் ( பஞ்சமி நிலங்களை மீட்போம் இயக்கத்தைச் சார்ந்தவர்  ​)கூறுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 2006-ல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நில நிர்வாக ஆணையர் அலுவலகம், பஞ்சமி நிலங்களின் அளவு 1,26,113 ஏக்கர்கள் என்றும் தலித் அல்லாதவர்கள் வசம் 10,619 ஏக்கர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. 1990-களில் ஒய்.அருள்தாஸ் கேட்டிருந்த கேள்விக்கு, 1,04,494.38 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அதில் 74,893 ஏக்கர்கள் தலித்துகள் வசம் இருப்பதாகவும் பதில் அளிக்கப்பட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.மெய்யார் கேட்டிருந்த கேள்விக்கு, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2015-ல் 2,843 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அவை அவர்களிடம் இல்லையென்றும் பதில் தரப்பட்டிருந்தது.

 பல்வேறு தன்னார்வலர்களால் தகவல் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட குறிப்புகள்  

2006-ல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நில நிர்வாக ஆணையர் அலுவலகம், பஞ்சமி நிலங்களின் அளவு 1,26,113 ஏக்கர்கள் என்றும் ஒடுக்கப்பட்டோர்  அல்லாதவர்கள் வசம் 10,619 ஏக்கர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

1990-களில் திரு. ஒய்.அருள்தாஸ் கேட்டிருந்த கேள்விக்கு, 1,04,494.38 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அதில் 74,893 ஏக்கர்கள் ஒடுக்கப்பட்டோர்  வசம் இருப்பதாகவும் பதில் அளிக்கப்பட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.மெய்யார் கேட்டிருந்த கேள்விக்கு, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2015-ல் 2,843 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அவை அவர்களிடம் இல்லையென்றும் பதில் தரப்பட்டிருந்தது.

 திரு தடா பெரியசாமி  அவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI Act), பெரம்பலூர் மாவட்ட புள்ளி விவரங்களை பெற்றுள்ளார்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களில், 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 பேர் பெயரில் உள்ளன. இந்த நிலங்கள் ஒடுக்கப்பட்ட  மக்கள் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சதவிகிதம்  மற்ற வகுப்பினரால் ஆக்கிரமிகப்பட்டு அனுபவிக்கப்படுகிறது என்று தடா பெரியசாமி கூறுகிறார். அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறாரல் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.

பத்திரிக்கை செய்தி

4/5/2017 வந்த பத்திரிக்கை செய்தி:-

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த அருங்குணம் எஸ். வினாயகம் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அந்த சமூகத்தை சாராதவர்களின் கடுப்பாட்டில் உள்ளது.
இதை மீட்பது தொடர்பான வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆனால், அவற்றை நிறைவேற்ற அரசும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை இல்லை. எனவே ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கை  விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவுவிட்டது .

மதுரையில் பஞ்சமி நிலங்களை கிரானைட் அதிபர்கள் வாங்கியதில் நடைபெற்ற விதிமீறல் குறித்து பதிவுத் துறை அதிகாரிகளிடம் சகாயம் விசாரணை மேற்கொண்டார் .


ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து நிலங்களை பறிப்பது  அது இன்றளவும் தொடர்கிறது என்பதை 2011ல் எவிடென்ஸ் அமைப்பு 13 மாவட்டங்களில் 300 பேரிடம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடன், கடும் வட்டி, மிரட்டல் என்று பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து  நிலங்களை அபகரிப்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்களை  கொன்றாவது அவர்களது நிலங்களைத் திருடியுள்ளதையும் தெரிவிக்கிறது அவ்வாய்வு. பஞ்சமி நிலமாக தற்போது 1,26,113 ஏக்கர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அதில் 10,619 ஏக்கர் மட்டுமே ஒடுக்கப்படாதவர்கள்   பயன்பாட்டில் இருப்பதாகவும் நிலநிர்வாக ஆணையர் தெரிவித்த விவரங்களை ஆய்வு செய்துள்ள எவிடென்ஸ் அமைப்பு வெறும் 3,000 ஏக்கர் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்கள்  வசமிருப்பதாக அறிவித்துள்ளது.

நேரடியான ஆக்கிரமிப்பு அபகரிப்பு என்பது போக, வெவ்வேறு பெயர்களில் வகைமாற்றம் செய்யப்பட்டும் சுமார் இரண்டுலட்சம் ஏக்கர் அளவுக்கான பஞ்சமி நிலம் திருடப்பட்டுள்ளது.
இவ்வாறு பஞ்சமி நிலங்களைத் திருடியவர்களின் பெயர்களை பட்டியலிட்டால் அதில் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறவர்களும்கூட இடம்பெறுகிறார்கள். தி.மு.க.வின் தலைமையகமான அண்ணா அறிவாலயம், எல்.ஐ.சி. கட்டிடம் ஆகியவை பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒருமுறை குற்றம்சாட்டியுள்ளார்.

1967ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது சிறுதாவூரில் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஒடுக்கப்படாதவர்கள்   பலரும் ஆக்கிரமித்தே வந்திருப்பதாகவும், கடைசியாக அதில்தான் ஜெயலலிதாவின் ‘சர்ச்சைக்குரிய’ ஓய்வுக்கால பங்களா கட்டப்பட்டிருப்பதாகவும் 2006ல் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. போயஸ் தோட்டத்தில் நாற்று நட்டு கதிரடித்து களத்துமேட்டில் கடும் உழைப்பை செலுத்திய பின்பு களைப்பு நீங்கி ஓய்வெடுப்பதற்கென்றே அப்படியொரு பங்களா அவருக்கு அவசியப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக பட்டியிலன மக்கள் வயிற்றலடிக்கணுமா என்கிற கேள்வி எழுந்தபோது அந்த பங்களா தனக்கு சொந்தமானதல்ல என்று ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின்  நிலத்தை மீட்பதற்காக பல போராட்டங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி அளித்த புகாரின் பேரில் மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் கமிஷன், இந்த அபகரிப்புக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்தது. ஆனால் அவரது நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களாலேயே அது அபகரிக்கப்பட்டுள்ளது என்பதை இடித்துரைத்தது. கமிஷனின் அறிக்கையை பெற்றுக்கொண்ட அன்றைய முதல்வர் கருணாநிதி நில மோசடிக்காரர்களிடமிருந்து திரும்பப்பெற்று ஒடுக்கப்பட்டவர்களிடம்  நிலத்தை ஒப்படைக்காமலே தன் ஆட்சியை முடித்துக்கொண்டார் என்தை அரசியல் மறதிக்காரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. (பார்க்க: டெஹல்கா, 23 செப் 2006, தி இந்து: 14 மே 2010 )

பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக கடந்த தி.மு.க. ஆட்சிக்காலம்  முடிந்த தருவாயில் நீதிபதி மருதமுத்து தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் கதி என்னவாயிற்று என்றறிய மற்றொரு விசாரணைக்குழு தேவைப்படுகிறது.
​========================================================================
 ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து ​(பட்டியல் இனத்தவரிடமிருந்து) பிரித்தெடுக்கப்பட்ட நிலங்களை  வாங்கியவர் வழக்கு :-

ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து ​(பட்டியல் இனத்தவரிடமிருந்து) பிரித்தெடுக்கப்பட்ட நிலங்களில் வீடுகளைக் கட்டிய கட்டுநரும், அவற்றில் குடியிருப்போரும் தொடுத்த வழக்கில் 2008 நவம்பர் 7-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தனித்துவம் மிக்கதொரு தீர்ப்பை அளித்தார். “பல்வேறு நீதித் துறை முன்மாதிரிகளையும் தீர்ப்புகளையும் பரிசீலித்ததில் ஒன்று உறுதியாகத் தெரிகிறது; ஒடுக்கப்பட்டோர்களுக்கு த் தரப்பட்ட பஞ்சமி நிலம் நிபந்தனைகளுடன் கூடியது; நிபந்தனை மீறப்பட்டால் அரசு அதைக் கைப்பற்றி அதே சமூகத்தைச் சேர்ந்த வேறொருவருக்கு வழங்கலாம் என்பதே அது. இந்த நிலங்களைப் பெற்றவர் முதல் பத்து ஆண்டுகளுக்கு அதை விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்வதாக இருந்தால், இன்னொரு ஒடுக்கப்பட்டோருக்குத்தான்  அதை விற்கவோ, அடமானம் கொடுக்கவோ முடியும். அப்படி இல்லாவிட்டால் அந்தப் பரிமாற்றமே ரத்து செய்யப்பட்டுவிடும்” என்று கூறி மனுக்களை நிராகரித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்புதான் ஒடுக்கப்பட்டோர்  தங்களுடைய நிலங்களை மீட்க முடியும் என்பதற்கு நம்பிக்கையாக  இருக்கிறது என்கிறார் ஒடுக்கப்பட்டோர்  மண்ணுரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த நிகோலஸ்.

நீதிபதிசந்துருவின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரபா தேவன், பி.பி.எஸ். ஜனார்த்தன ராஜா அடங்கிய அமர்வும் 6 ஆண்டுகளுக்கு முன்னால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பாப்பய்யா எதிர் கர்நாடக மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ல் அளித்த தீர்ப்பின் பெரும் பகுதியை நீதிபதி பிரபா தேவன் அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் 46-வது ஷரத்து குறிப்பிடும் பொருளாதார நீதி அடிப்படையில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 39(பி) ஷரத்து, அரசு தன் வசம் உள்ள நிலம் உள்ளிட்ட வளங்களைப் பொது நன்மை கருதி, தேவைப்படுவோருக்கு வழங்க வேண்டும் என்கிறது. பொருளாதார நீதிக்கான உரிமை என்பது அடிப்படையான உரிமையாகும்.   
                                             
சமத்துவம், முன்னேற்றத்துக்கான சமவாய்ப்பு, தளைகளிலிருந்து விடுதலை ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற இந்தச் சட்ட ஷரத்துகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.


==================================================================

2004-ம் ஆண்டு எஸ்.சி, எஸ்.டி. நல கமிஷனர் கண்ணகி பாக்கியநாதன், பஞ்சமி நிலங்கள் ஆக்கிர மிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தாருக்கும் கடிதம் எழுதியிருந்தார். பஞ்சமி நிலங்களை யாரேனும் அப கரித்து இருந்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியும் கிரிமினல் வழக்கும் பதியவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கே, எதையும் கண்டுகொள்ளாமல், ரியல் எஸ்டேட்காரர்கள் அரசு அதிகாரி களைக் கையில் போட்டுக்கொண்டு பஞ்சமி நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மட்டுமே பஞ்சமி நிலங்கள் 10,000 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த நிலங்களை எல்லாம் மீட்டு, அரசு உரியவர்களிடம் ஒப்படைத்தால்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்'' என்கிறார்.

விற்பனை ஆகிறதா பஞ்சமி நிலம்? என்கிற தலைப்பில் 16/11/2011 இல்  ஒரு வார இதழில் வந்த செய்தி
கடலூர் மாவட்டத்தில் ஒரு பிரச்னைக்கு உரிய இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்துவருவதாக குற்றம் சாட்டப்பட்ட  ஜெயவெங்கட்ராமன் கூறியது . ''அந்த 54 ஏக்கர் நிலத்தை நான் மட்டும் வாங்கவில்லை. இன்னும் பலரும் வாங்கி இருக்கிறார்கள். அதுமட்டு மில்லாமல், அந்த இடத்தை நான் வாங்கும் போது, 'அந்த இடம் பஞ்சமி நிலம் இல்லை, புஞ்சை நிலம்தான்’ என்று அரசு அதிகாரிகள் எனக்கு சான்று கொடுத்து உள்ளனர். நான் எந்த அரசியல் வாதியையும் காட்டி யாரையும் மிரட்டியது இல்லை'' என்கிறார்.  இந்த செய்தி மூலம் நாம்  அரசு அலுவலகம் மெத்தனமாக செயல்படுவதை அறிய முடியும் .


தொட்டால் தோஷம் பட்டால் பாவம் கண்டால் தீட்டு என்று ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தீண்டாமையை கடைபிடிக்கிற சாதியினர் தாங்கள் நம்புகிற இந்த ‘புனிதக்கோட்பாட்டை’ எல்லாவற்றிலும் கடைபிடிக்கிறார்களா என்றால் அதுதானில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையான பஞ்சமி நிலத்தின் பெரும்பகுதியை அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

==================================================================
ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு பஞ்சமி நிலங்களை வழங்கியவர்கள்


1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி  ஒடுக்கப்பட்ட (பஞ்சமர்களுக்கு) மக்களுக்கு அரசு வழியாக வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன. Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste (அட்டவணை /பட்டியலின   வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.
இந்திய அளவில், எவ்வளவு நிலங்கள், இந்த பஞ்சமி நிலங்களாக கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய சரியான் புள்ளி விவரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பில், 12 லட்சம் ஏக்கர் அந்த கால சென்னை மாகாணத்தில் (கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா) பஞ்சமி நிலங்களை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். இந்திய அளவில், சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
காலப்போக்கில், பஞ்சமி நிலங்கள் பிற வகுப்பினருக்கு விற்கப்பட்டுள்ளன. விற்கப்படாத நிலங்க்ளின் பெரும் பகுதி, மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டு அளவில் இல்லை.
ஜனவரி 2011 இல் தமிழக அரசு, கவர்னர் உரையில், பஞ்சமி நிலங்களை பற்றி ஆய்வு செய்ய ஒரு கமிஷன் அமைக்கபபடப்போவதாக கூறப்பட்டுள்ளது.
.===================================================================
நாடு சுதந்திரம் அடைந்த பின், 1957ல் வெளியிடப்பட்ட அரசாணையில், ஒட்டர், குறவர் சமூகம் , ஒடுக்கப்பட்டோர்  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போதும், இந்த ஜாதியினர் மிகவும் பிறப்படுத்தப்பட்ட மக்கள்  எம்.பி.சி., எனப்படும்,  பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், தங்களது பஞ்சமி நில உரிமைகளை, இந்த சமூகத்தினர் மீட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  காலப்போக்கில், பட்டியல் இனத்தவரிடம் இருந்த பஞ்சமி நிலங்கள், பிற சமூகத்தினருக்கு சென்றது போல,  ஒட்டர்களிடமும் இருந்தும்  நிலம் சென்றுள்ளது..
பஞ்சமி நில மீட்புப் படையின் மாநில தலைவர் கல்யாண சுந்தரம் ஒரு பத்திரிக்கை செய்தியில் கூறிருக்கிறார் : ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், யார் யாருக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டதோ, அவர்கள் அனைவருக்கும், அந்த நிலம் மீண்டும் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட் வழங்கிய உத்தரவை, முழுமையாக அமலாக்க வேண்டும். இந்த நிலம் பெற்ற சமூகங்கள், தற்போது எந்த பட்டியலில் உள்ளனர் என்பதை வைத்து, அவர்களது நில உரிமையை தடுக்கக்கூடாது.

 கடந்த, 1901ம் ஆண்டு சென்னை மாநில கணக்கெடுப்பில், ஒட்டர்கள் உள்ளிட்ட ஜாதியினர் பற்றியும், அவர்களின் சமூக நிலை குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நிலையில், "இங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் தனித்தனி குழுக்களாக, 4.98 லட்சம் பேர், ஒட்டர் இனத்தில் இருந்தனர்' என்றும், அந்த கணக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறிப்பாக, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், இவர்களது எண்ணிக்கை அதிகளவில் இருந்ததும், அந்த அறிக்கை மூலம் தெரிய வருகிறது. தமிழகம் முழுவதும், 62 ஆயிரத்து, 745 பேருக்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டதாக, நில நிர்வாகத்துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 19 ஆயிரத்து, 923 நபர்களுக்கு இந்த நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தற்போது, 30 சதவீத நிலங்கள், பிற சமூகத்தினர் வசம் உள்ளதாக, அரசு ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

ஆவணங்களில் குழப்பம் : திருவண்ணாமலை, வேலூர், சேலம், தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், பெரம்பலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், ஒட்டர்களுக்கும் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டதாக இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அதே சமயம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர்கள் பெயர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது குறித்து வருவாய்த்துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

இதில், பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது மற்றும் தற்போது அதை பயன்படுத்தி வருபவர்கள் பட்டியல் குறித்து, வருவாய்த்துறை ஆவணங்களில், சில இடங்களில், ஒட்டர்கள், எஸ்.சி., எனவும், சில இடங்களில், எம்.பி.சி., எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழப்பம் காரணமாக, இவர்களுக்கான பஞ்சமி நில மீட்பு நடவடிக்கைகள் மேலும் சிக்கலாகியுள்ளது.



================================================================


பூமி தான இயக்கம்:- 

1950ம் ஆண்டுக்குப் பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூமி தான இயக்கத்தின் வழியாக பொதுமக்களிடம் இருந்து பெற்று, பல நிலங்களை இதே சட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கினார். 1960ம் ஆண்டிலும் இந்த முறையில் நிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.



==================================================================


பஞ்சமி நிலம் யாருக்கு ?.இலவச நிலங்கள் யாருக்கு?  (அரசுக்கும், நீதி மன்றத்திற்கும் சில கேள்விகள்)

இந்தியாவின் 1,902,843,520 ஏக்கர் நிலப்பகுதியை 1,342, 512,706  இந்தியருக்கும் சரியாக வகிர்ந்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் சராசரியாக 1.5 ஏக்கர் நிலத்தை சொந்தமாக்கிவிட முடியும். தனிச் சொத்துடைமையை சாதியமும் சாதியத்தை சொத்துடமையும் ஒன்றுக்கொன்று அரணமைத்து பாதுகாக்கும் இச்சமூகத்தில் அப்படியொரு நீதியான பகிர்வோ பங்கீடோ இங்கு நடக்கவில்லை. நடப்பதற்கான அறிகுறியும் இப்போதைக்கு தெரியவில்லை..



தமிழகத்தின் மக்கள் தொகை எட்டுக்கோடி . இதில் சுமார் நாற்பது  லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. இந்த 40 லட்சம் குடும்பத்தினரில் பெரும்பாலானவர்  SC - ஒடுக்கப்பட்ட  மக்கள். சொந்த விவசாய நிலமில்லாத, குடியிருப்பு மனையுமில்லாத ஏழைகளுக்கு விவசாய நிலம் வழங்கப்பட்டிருந்தால், அதில் ஒரு அய்ந்து சென்ட் நிலத்தை தனது வீட்டுமனையாக மாற்றிக் கொள்ளத் தெரியாதவர்களல்ல தமிழக விவசாயக் கூலிகள். அப்படியானால் ஏழைகளுக்கு இலவச நிலம் அளிக்கும் திட்டத்தில் நடந்தது என்ன? இலவச விவசாய நிலம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? .
ஒவ்வொரு கிராமத்திலும் பணக்கார, நடுத்தர, சிறு விவசாயிகள் பலரும் தங்கள் விளைநிலங்களை ஒட்டியுள்ள புறம்போக்குகளை, பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். நிலமே இல்லாத ஏழைகள் இந்தப் புறம்போக்கு மீது உரிமை கொண்டாட, நிலவுரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. தமிழக அரசு அளித்த இலவச நிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள், முன்னரே புறம்போக்குகளை ஆக்கிரமித்து வைத்துள்ள சிறு விவசாயிகளில் சிலரும் நடுத்தர விவசாயிகள் பலருமே. அவர்கள் தங்கள் அனுபோக பாத்தியதை உரிமையைக் காட்டி வருவாய்த்துறை அலுவலர்களை சரிகட்டி, புதிதாக பட்டா பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இப்படி வழங்கப்பட்ட பட்டாக்களும், நிலமற்ற விவசாயிகளின் பட்டியலில்தான் சேர்ந்துள்ளது.
சில மாவட்டங்களில், சில ஆயிரம் நிலமற்ற ஏழைகளுக்குப் புதிதாக நிலம் அளிக்கப்பட்டுள்ளதையும் மறுத்து விட முடியாது. ஆனால், இதில் ஒடுக்கப்பட்ட மக்களில்  80 சதவிகிதம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின்  பஞ்சமி நிலக்கோரிக்கைகளும், இடதுசாரிகளின் நிலச்சீர்திருத்தக் கோரிக்கைகளும் வலுவடைந்ததை ஒட்டி, தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த நிலமற்றோருக்கான இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தி.மு.. தலைமையிலான தமிழக அரசு முன்வந்தது உண்மைதான். ஆனால் நடந்ததும், நடப்பதும் வேறு. புஞ்சை தரிசு புறம்போக்கு நிலத்தை அனுபவித்தவர்களுக்கே பட்டா வழங்கும் நடைமுறை, காலங்காலமாக நடைபெறும் வருவாய்த் துறை நிர்வாகச் சடங்குகளில் ஒன்றுதான்.
குடியிருப்பு மனையே சொந்தமாக இல்லாத 40லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழகத்தில், வெறுமனே மூன்று லட்சம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கிவிட்டு மேற்கு வங்கம், கேரளத்தோடு ஒப்பிட்டால் போதுமா? மூன்று லட்சம் குடும்பங்கள் போக எஞ்சிய பல லட்சக்கணக்கான வீட்டுமனை இல்லாத ஏழைகள் தற்போது எங்கே வசிக்கிறார்கள்? அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்குவது ஒன்றே நிரந்தர தீர்வைத் தரும். அதற்கு நமது ஊராட்சிப் புறம்போக்கு, கோயில் புறம்போக்கு, நீர் நிலையும் தூர்ந்து, நீர் நிலையின் ஆயக்கட்டும் தூர்ந்து போன நகர்ப்புற விரிவாக்கப் பகுதிகள், வாய்க்கால் புறம்போக்குகள் ஆகிய நிலங்களில் வசிப்போருக்கு அவர்கள் வசிக்கும் இடங்களின் தரத்தையும் தேவையையும் மக்கள் குழுக்களின் மூலம் ஆய்வு செய்து, வீட்டுமனைப் பட்டா வழங்குவதே இறுதித் தீர்வாக முடியும்.
இத்தகைய தீர்வுகளுக்கு தடையாக இருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும், தமிழக அரசின் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரும் ஆணைகளும் எழுப்பும் சில வினாக்களையே இங்கு விவாதத்திற்காக முன் வைக்கிறோம்:


1. ‘கோகோ கோலாநிறுவனம், தாமிரபரணி ஆற்றில் கங்கை கொண்டானில் உறிஞ்சும் தண்ணீர்க் கொள்ளை குறித்து அமைதி காக்கும் உயர்நீதிமன்றம், குப்பனும் சுப்பனும் குடியிருக்கும் குளத்தங்கரைக் குடிசைகளால் நீர்நிலை ஆதாரம் கெட்டுவிடும் எனத் தீர்ப்பளிப்பது என்ன நியாயம்?

2.பாசன ஆதாரம் இல்லாத  ஊராட்சிக் குட்டைகளின் கரைகளின் தாழ்வான, சமதளங்களில் குடியிருப்போர் நீர்நிலை ஆதாரத்தின் எதிரிகள் என்றால், ஏழைகளை அவ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்திய பிறகு, அதே இடங்களில் சில ஊராட்சி நிர்வாகங்கள் வணிக வளாகங்கள் கட்டுவதால் நீர்நிலை ஆதாரம் பாதுகாக்கப்படுவது எப்படி என்று நமது நீதிபதிகளும், ஆட்சியாளர்களும் அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிப்பார்களா? அல்லது அத்தகைய வணிக வளாகங்களையும் இடித்துத் தள்ள ஆணையிடுவார்களா? (ஆதாரம்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள இரட்டைக் குளக்கரையில் வணிக வளாகம் கட்டுவதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்).

3.நீர்நிலைப் புறம்போக்குகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி நீர்நிலையைப் பாதுகாக்க தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அமைவிடமும் ஓர் நீர் நிலை ஏரி என்பதை அறியுமா? அறியாதா? இதை போல  பஞ்சமி நிலங்களில் அமைந்துள்ள அரசு அலுவலகம் பற்றி அரசு அறியுமா ?
ஏழைகளுக்கு குடியிருக்க 2 ஏக்கர் வீட்டுமனைப்பட்டாவுக்கு நிலமில்லை. உச்ச வரம்பு சட்டங்கள் உலகமயமாதல் திரையில் மறைக்கப்பட்டுவிட்டதா? எல்லாவற்றுக்கும் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி சட்டம் பேசும் தமிழக அரசே, பஞ்சமி நிலங்கள் மீட்பு பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் என்ன ஆயின?

4.பட்டியலின சமூகம்   மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்த விவசாயக் கூலிகளுக்கு, தொடர்புடைய மக்களின் நலத்துறை வழியாக அரசு நிதியில் குடிமனைக்கான நிலங்களை தனியாரிடம் விலைக்கு வாங்கி பட்டா வழங்கிட திட்டம் இருந்தும், நில உடைமையாளர்களின் விருப்பத்தை மீறி கையகப்படுத்த முடியாமல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியர்கள் அல்லல்படுவதை தமிழக அரசு அறியுமா? இந்த நிலைமைக்கு ஊராட்சிப்புறம்போக்கில் குடியிருக்கும் எழைகள் காரணமா? அல்லது சொத்துடைமை சாதிகளின் மனித நேயமற்ற செயல் காரணமா?

5. ஒடுக்கப்பட்ட , மிகப்பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்த விவசாயக் கூலிகளுக்கு அரசு சொந்தமாக வீட்டு மனைப் பட்டா கொடுப்பதை, அவர்கள் மீதான தங்களின் கட்டுப்பாடுகள், ஆதிக்கம் தொடர்வதற்கு தடையாக இருப்பதாக வெஞ்சினம் கொள்ளும் நிலவுடைமை ஆதிக்க சாதிகளின் சிந்தனை, செயல்பாடுகள் குறித்து தமிழக அரசிடமும், உயர் நீதிமன்றத்திடமும் ஏதேனும் விவர அறிக்கைகள் உள்ளதா? அப்படிப்பட்ட அறிக்கைகள் ஏதேனும் இல்லையென்றால், தமிழக மனித உரிமைக் கழகம் போன்ற பல்வேறு மக்கள் இயக்கங்களிடம் தமிழக அரசு உரிய தகவல்களை தருமாறு கோரத் தயாராக இருக்கிறதா?


6.தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும், விரிவுபடுத்துவதற்குமான வழிகளில் உள்ள தனிநபர்களின் நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களின் நிலத்திற்குரிய இழப்பீடும், நிலத்தின் மீதுள்ள வீடுகள், கடைகள் இதர வகைப்பட்ட கட்டடங்களுக்கு எவ்வளவு எவ்வாறு இழப்பீட்டு நிவாரணத்தொகை அளிக்க வேண்டுமென உலக வங்கி அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, ஊராட்சி மற்றும் மேய்ச்சல்கால் புறம்போக்குகளிலிருந்து வெளியேற்றப்படும் ஏழைகளுக்கும் பொருந்துமாறு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட முன்வருமா? பஞ்சமி நிலத்தை இழந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட முன்வருமா ?.. உயர் நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசுக்கு வழிகாட்டி ஆணையிடுமா?


7.நீர்நிலைப் புறம்போக்குகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி, நீர்நிலையைப் பாதுகாக்க தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அமைவிடமும் ஒரு நீர் நிலை ஏரி என்பதை அறியுமா?

8.நிலத்துக்கு கீழே கிடைக்கும் கனிமங்களுக்காகவும் உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகளின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்திற்காகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தனி நபர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் அவர்களது இசைவின்றியே இழப்பீட்டுடன் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு, வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட நிலவுடைமையாளர்களின் இசைவை யாசித்து நிற்பது என்ன நியாயம்? பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு  செய்தவர்களிடத்தில் இருந்து பெற்று பட்டியிலன மக்களுக்கு கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம் ?.. 

​9. தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை பட்டியலின மக்கள்  இஷ்டப்பட்டுத்தானே மற்றவர்களுக்கு விற்றிருப்பார்கள்? அப்படி விற்றிருக்கும்போது அபகரித்துவிட்டார்கள் என்று மற்றவர்கள் மீது பழிபோடலாமா? என்பது போன்ற அப்பாவித்தனமான கேள்விகள் இவ்விடத்தில் வரலாம் .
அரசியல் சட்டம் முன்னுரிமைப்படுத்தி இடஒதுக்கீடாக வழங்கும் எந்த ஒதுக்கீட்டையும் பிறருக்கு மாற்றிக்கொள்ள முடியாது என்ற அடிப்படையில் இருந்து இவ்விசயத்தை அணுகினால், நடைபெற்றிருக்கிற ஆக்கிரமிப்புகள், மோசடிகள், விற்பனைகள் எல்லாமே சட்டவிரோதமானவை என்பது விளங்கிவிடும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் பெயரால் மற்றவர்கள் அரசியல் சட்டத்தை ஏய்க்கிற உண்மை புரியும்.


=====================================================================
விவசாயம் இன்று அழிந்துவருகிறது, விவசாய வேலைக்கு இன்று ஆளு கிடைப்பதில்லை  என்கிற ஒரு பேச்சு தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது . இதை நாம் எப்படி புரிந்துகொள்வது .

உலகமயமாக்கல், தனியார்மய்யம், தாராளமய்யம் வழியாக மக்களின் விளை நிலத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு  வலுக்கட்டாயமாக கொடுத்ததன் காரணமாகவும்  ; சாதிய ஒடுக்குமுறை அதன் வழியாக விவசாயத்தில் இருந்து உழவு குடிமக்களை  தீண்டாமை -ஒதுக்குதல்  காரணமாக பண்ணடிமை , குறைந்த கூலி , பெண்களுக்கு ஆண்களுக்கு சமமற்ற  ஊதியம் போன்றவை    ஒரு குறிப்பிட்ட சமூகத்தை செலுத்தியதும், விவசாயத்தில் இருந்து அவர்களை  புறக்கணித்ததன் விளைவாக  ,பஞ்சமி நிலங்களை பறிதத்தின்   விளைவாக , விவசாயத்தை விட்டு பெருபான்மையான மக்கள் நகரத்தை நோக்கி நகர்ந்துள்ளனர், இதன் விளைவே  இந்த விவசாய அழிவு.. .


பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்க்கு சமூக மற்றும் பொருளாதார நீதி கிடைக்கும் வகையில் அரசியல் சட்டம் முன்னுரிமைப்படுத்தி வழங்குகின்ற நிலம், தொழில், ஒப்பந்தம், வீடு, ஏஜென்சி, பட்ஜெட் ஒதுக்கீட்டு  உள்ளிட்ட ஒதுக்கீடுகள் மாற்றத்தக்கதல்ல என்பதை உறுதிப்படுத்த அரசு நிர்வாகத்தை நம்பி பயனில்லை. சொல்லப்போனால் இந்த திருட்டுகளுக்கு அரசு நிர்வாகமும் உடந்தையாக இருக்கிறது.


சில்லறை விசயங்களுக்கு கோரிக்கைகளை வைக்கும்  இயக்கங்கள், கட்சிகள் ..
திருடப்பட்ட பட்டியிலன  சொத்துகளை மீட்டெடுப்பதற்கான இயக்கங்களை முன்னெடுப்பதே தேவையாகிறது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக