திங்கள், 13 ஜனவரி, 2014

தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டு…? புராண, வரலாற்று உண்மைகள்!

தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டு…? 
புராண, வரலாற்று உண்மைகள்!

தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)


மிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள்..........

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல்  திங்கள் தையா அல்லது சித்திரையா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.


காலத்தின் அருமை
நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.
நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்’ –          திருக்குறள்
என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.
தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன்என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.
தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.

ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது

அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலைபெறும் தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக்கோடு இலங்கை என்கின்ற தேசத்தை நடுவணாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலகப் பந்தில் ஓரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது .

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர். சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ் எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்கணிப்பீடுகளை தொடக்ககமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் என கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறுபேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.


ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.
வைகறை,
காலை,
 நண்பகல்,
எற்பாடு,
மாலை,
யாமம்என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.
 அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றது. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம்தான். அதனால்தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம் (500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சி முடிவும் இதுதான்.

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
அவர்கள் எடுத்த முடிவுகள்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.
தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும்,
1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும்,
1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.



இதன் அடிப்படையிலேயே தை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி).
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால்தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் உண்ணும் சோற்றை, “சோறுஎனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்






நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
-பாவேந்தர் பாரதிதாசன்.


இன்றைய நிலை
இன்னாளில் வழக்கில் உள்ள பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை.  அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.
சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பிரபவமுதல் அட்சயஎன்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.
எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்திஎன்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உறவு கொள்ள விரும்புகிறேன்என்றார்.
கிருஷ்ணன் நாரதரை யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடியஎன பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.


இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
அவர்கள் எடுத்த முடிவுகள்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.
தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும்,
1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும்,
1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது.

கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று தமிழ்நாடுஎன்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்
-பாவேந்தர் பாரதிதாசன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். 
 மும்பை விழித்தெழு இயக்கம் 

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்-- சங்கரநாராயணன்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்-- சங்கரநாராயணன்



தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையும் விவாதங்களையும் அரசியல் சண்டைகளையும் காணும்போது மலைப்பாக இருக்கிறது. இந்த விவாதங்களை எப்படி அணுகுவது? உண்மையில், தமிழ்ப் புத்தாண்டாக எந்த நாளை எடுத்துக்கொள்வது?

முதலில் தமிழ் மாதக் கணக்கீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். சூரியன் ஒரு ராசியில் இருக்கும் நாள்கள் எல்லாம் ஒரு மாதம் என்று கொள்ளப்படுகிறது. ஒரு ராசியைக் கடந்த பிறகே மறு மாதம் தொடங்கும். இதனால்தான் பொங்கல் அன்று மாதம் எப்போது பிறக்கிறது என்ற கேள்வி எழும். சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்.
இந்தியாவில் பல விதமான மாதக் கணக்கீடுகள் இருக்கின்றன. சௌரமான மாதம். இது சூரியன், ஒரு ராசியில் இருக்கும் காலத்தை, ஒரு மாதமாகக் கொள்வது. தமிழ்நாடு, இலங்கை, ஒரிசா, கேரளா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் இது கடைபிடிக்கப்படுகிறது. சாந்த்ரமான மாதம்: இதிலும் இரு முறைகள் உள்ளன. அமாவாசையின் மறுநாள் முதல் மாதம் தொடங்கும். ஆந்திரா, கர்னாடகா உள்பட பெரும்பான்மையான இந்திய மாநிலங்களில் இது பின்பற்றப்படுகிறது. பௌர்ணமியில் இருந்து தொடங்கும் மாதம் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது.
இப்போது பலரும் கூறும் குற்றச்சாட்டுகளைக் காண்போம்.

1. வடநாட்டு @ ஆரிய @ பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு:
வடநாட்டவர்கள், வைதீகர்கள் சௌரவமான மாதங்களைப் பயன்படுத்துவதே இல்லை. அவர்கள் சந்திர மாதங்களையே பயன்படுத்துகிறார்கள். பண்டிகைகள் ஆஷாட, ஸ்ராவனம், பாத்ரபத,ஆஸ்வின மாதங்களில் வருவது. நவராத்திரி பாத்ரபத மாதத்திலும் தீபாவளி ஆச்வினத்திலும் வருகிறது. சில நேரங்களில் சூரிய மாதத்துக்கும் சந்திர மாதத்துக்கும் ஒரு மாத வித்தியாசம் வரும். அப்போது தீபாவளி புரட்டாசியிலும், ஆயுத பூஜை ஆவணியிலும் வரும். நாம்தான் இந்த வருஷம் எல்லா பண்டிகையும் சீக்கிரம் வருது என்று சொல்லிக்கொண்டிருப்போம். ஆக இந்த குறிப்பிட்ட வைதீகர்களுக்கும் சூரிய மாதத்துக்கும் தொடர்பே இல்லை.

2. மாதம்
தமிழில் மாதம் என்பதற்கு கூறப்படும் சொல் திங்கள்.ஆனால் ஆச்சரியகரமாக சூரியனின் மாதமே பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர, கர்நாடகத்திலும் வட பாரதத்திலும் சந்திர மாதக் கணக்கு வழக்கில் உள்ளது.

3. வடமொழிப் பெயர் ஆண்டுகள்
இந்த பிரபவ, விபவ வருடங்களெல்லாம் வடமொழி, ஆகவே நீக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளவேண்டும். நம் சித்திரை, வைகாசி எல்லாம் கூட வடமொழிதான். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?
ஒரு மாதத்தின் பெயர், அந்த மாதத்தில் பௌர்ணமியுடன் சேரும் நட்சத்திரத்தின் பெயரால் வழங்கப்படும்.
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தின் பெயர். வைகாசி விசாக நட்சத்திரத்தின் பெயரால் வருகிறது. ஆனி அனுஷம் வடமொழியில் அனுஷி ஆனி. ஆடி பூராடம் அல்லது உத்திராடம் வடமொழியில் பூர்வ ஆஷாடம் மற்றும் உத்திர ஆஷாடம் ஆஷாடிதான் ஆடி. ஆவணி திருவோணம் வடமொழியில் ஸ்ராவனம் ஸ்ராவணி தான் ஆவணி.
புரட்டாசி பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி வடமொழியில் பூர்வ ப்ரோஷ்டபடம் அல்லது உத்திர ப்ரோஷ்டபடம்- ப்ரோஷ்டபடி தான் புரட்டாசி.
ஐப்பசி அஸ்வினி வடமொழியில் ஆச்யுவஜி ஐப்பசி.

கார்த்திகை கார்த்திகை. மார்கழி மிருகசீரிடம் வடமொழியில் மிருகசீர்ஷம் மிருகசீர்ஷிதான் மார்கழி. தை -புனர்பூசம்/ பூசம் வடமொழியில் புஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வரும். திஷ்யதில் இருந்து தை. மாசி மகம் வடமொழியில் மாக் மாகிதான் மாசி.
பங்குனி பூரம் அல்லது உத்திரம் வட மொழியில் பூர்வ பல்குனி அல்லது உத்திர பல்குனி பல்குனியில் இருந்து பங்குனி. (1)
சிலர் கேட்கலாம். இந்த முறை மார்கழிப் பௌர்ணமி புனர்பூசத்திலும், பங்குனி பௌர்ணமி சித்திரையிலும் வந்ததே என்று. தற்போது சந்திரமான மாதம் சூரிய மாதத்தைவிட 30 நாட்கள் முன்பு செல்கிறது. .நம் மார்கழியில் சந்திரமான தை. நம் பங்குனியில் சந்திரமான சித்திரை. இதற்குக் காரணம் சந்திர ஆண்டு 360 நாட்களும், சூரிய ஆண்டு துல்லியமாக 365 /366 நாட்களும் கொண்டிருப்பதுதான்.
இந்த வித்தியாசம் தகுந்த இடைவெளியில் அதிக மாதம் என்று ஒரு மாதத்தை சந்திரமான மாதத்தில் சேர்த்து சரி செய்யப்படும்.
நாம் சூரிய மாதங்களுக்கும், சந்திர மாதப் பெயரையே வைத்துள்ளதால் இந்தக் குழப்பம். தை,பங்குனி,கார்த்திகை மாதங்களின் பெயர் எல்லாம் சங்க இலக்கியங்களிலேயே வருகிறது. அவற்றையெல்லாம் இடைச் செருகல் என்று கூற முடியாது.
பிங்கள நிகண்டு அஸ்வினியின் பெயர் ஐப்பசி , பூசத்தின் பெயர் புணர்தை, மகத்தின் பெயர் மாசி, உத்திரத்தின் பெயர் பங்குனி, விசாகத்தின் பெயர் வைகாசி, உதிராடத்தின் பெயர் ஆடி, அவிட்டத்தின் பெயர் ஆவணி ( இங்கேதான் சிறு வேறுபாடு), பூரட்டாதியின் பெயர் புரட்டாசி என்றே குறிப்பிடுகிறது. பிங்கள நிகண்டு 10 ஆம் நூற்றாண்டில் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
கேரளாவில் சூரிய மாதப் பெயர்களை மேடம், இடபம் என்றே வைத்துவிட்டார்கள்.எனவே குழப்பம் இல்லை.

4. சித்திரை முதல் நாளை வைதீகர்கள்தான் கொண்டு வந்து விட்டார்கள். என்று கூறுபவர்களுக்கும்
4a. ஆங்கிலேயர்களின் ஜனவரி 1 க்கு நெருக்கமாக தமிழ்ப் புத்தாண்டை தை 1 க்கு கொண்டுவரும் ஐரோப்பிய சதி என்று கூறுபவர்களுக்கும்
இதுவும் சரி இல்லை. தினமும் தீ வழிபாடு செய்யும் அந்தணர்கள் மார்கழி மாதம் பௌர்ணமி அன்று ஆக்ராஹயணி என்று ஒரு சடங்கு செய்வார்கள். அக்ரா என்றால் முதல் என்று அர்த்தம். ஹயணம் என்றால் ஆண்டு என்று அர்த்தம். இதன் பொருள் முதல் மாதம். அதாவது மார்கழிப் பௌர்ணமி கிட்டத்தட்ட ஜனவரி ஒன்றுக்கு அருகில் வரும். கிட்டத் தட்ட வேதத்து வருடப் பிறப்புதான் ஜனவரி ஒன்று. (முத்தீ வழிபாடு சங்க காலத்திலும் இருந்தது).
காஞ்சி மஹா சுவாமி இதை விளக்கமாகக் கூறி நம் புத்தாண்டுதான் அங்கே சென்றுவிட்டது என்று கூறுகிறார் (2)

5. அறுபது வருடங்கள் என்ன கணக்கு?
இந்த 60 ஆண்டுக் கணக்கு தனி மனிதர்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் கணக்கிடும் ஜ்யோதிட முறைக்குத்தான். சூரியன் 12 ராசிகளைச் சுற்ற 1 ஆண்டும், சந்திரன் 1 மாதமும், செவ்வாய் ஒன்னறை ஆண்டும், குரு 12 ஆண்டும், சனி 30 ஆண்டும் எடுத்துக்கொள்கின்றன. ஒரு மனிதன் பிறந்த 60 ஆண்டுகள் கழித்து அவன் பிறந்த அதே மாதம் (அதாவது சூரியன் அதே ராசியில்), அதே நட்சத்திரத்தில் (அதாவது சந்திரன் அதே ராசியில்) இருக்கும்போது செவ்வாய், சனி,குரு ஆகியவையும் அதே ராசியில் இருக்கும். (வக்கிர அதிச்சர நிலை இல்லாவிடில். வக்கிரம் என்றால் பின்னோக்கிச் செல்வது, அதிச்சாரம் முன்னோக்கிச் செல்வது ).
பெரும்பாலும் புதனும், சுக்கிரனும் கூட சூரியனை ஒட்டியே செல்வார்கள். ஆகவே சரியாக உங்கள் அறுபதாவது பிறந்த நாளில், ராஹு, கேது தவிர்த்த மற்ற ஏழு கிரகங்களும் பெரும்பாலும் அதே ராசியில் இருப்பார்கள். இதுதான் தனி மனிதனின் அறுபது ஆண்டுக் கணக்கு.
இது முக்கியமாக ஜாதகக் கணக்குகளுக்குதான். அதுவும் திருமணங்கள் பல்வேறு அரச குடும்பக்களுக்கு இடையில் நடக்கையில், அல்லது ஒரு அரசன் பெரும் நிலப்பகுதியை ஆளும்போது இந்தப் பொதுக்கணக்கு தேவையாய் இருந்தது.


6. இந்த வருடங்கள் எல்லாம் அறுபது வருடக் கணக்கு.தொடர் ஆண்டு வேண்டும் என்று கூறுபவர்களுக்குதொடர் ஆண்டுகள் எத்தனை உள்ளன தெரியுமா?
சக ஆண்டு (78 AD) , கலியுக ஆண்டு ( 3101 BC, அதாவது கலியுகம் தொடங்கிய முதல்), கேரளத்தில் கொல்லம் ஆண்டு (825 AD) போன்ற கணக்குகளும் பின்பற்றப்படுகின்றன.
தமிழ் நாட்டிலே என்ன கணக்கு என்று கேட்பவர்களுக்கு
பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. சக ஆண்டு முறையில் கிபி 270 ஆம் ஆண்டுக் கல்வெட்டு. ஆக சங்ககாலத்தின் இறுதியிலேயே சக ஆண்டு முறை இருந்திருக்கிறது. (3)
மதுரை ஆனைமலைக் கல்வெட்டு கலியுக ஆண்டிலும், அய்யம்பாளையம் கல்வெட்டு சக ஆண்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகத் தமிழ் நாடு இந்த இரண்டு தொடர் ஆண்டுகளையும் பின்பற்றி வந்துள்ளது. (4)
ஆகக் கூடி இந்த வைதீகர்கள் சந்திரமான மாதத்தையும், மார்கழிப் புது வருடத்தையும் பின்பற்றுகிறார்கள். தமிழ் மாதங்களின் பெயரும் வடமொழிதான். தமிழர்கள் சக ஆண்டுக் கணக்கையும் சங்க கால இறுதிக் கட்டத்திலேயே பின்பற்றி இருக்கிறார்கள்.

7. மற்றுமொரு கேள்வி: ஆண்டுப் பிறப்புக்கும் ஜோதிடத்துக்கும் என்ன தொடர்பு? அதை ஏன் சோதிடத்துடன் தொடர்புப்படுத்த வேண்டும்?
இதை ஜோதிடக் கணக்கு என்பதை விட வானியல் கணக்கு என்று சொல்வதே சரியாகும். இந்தக் கணக்கை ஜோதிடத்திலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகம் எங்கும் வானியலும், ஜ்யோதிடமும் பிண்ணிப் பிணைந்தே உள்ளன. உலகெங்கிலும் இந்திய, அராபிய, பாரசீக, ஐரோப்பிய நாடுகளில் எல்லாமே பல ஜ்யோதிட அறிஞர்களே வானியல் கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறார்கள்.


8. சரி, ஆனால் ஏன் மேஷத்தைக் கொண்டு தொடங்க வேண்டும்? ஜோதிடர்களே வானியல் அறிஞர்களாகவும் இருந்ததால் இரண்டும் பிணைந்தே உள்ளன.எத்தனை மணிக்கு க்ரஹனம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிடும் அளவுக்கு திறமை படைத்த நம் அறிஞர்கள் இந்த ஆண்டுக் கணக்கையும் ராசி மண்டலத்தோடு பிணைத்தே வைத்து விட்டார்கள்.

9. அப்ப இந்த தை நீராடல் என்றெல்லாம் வருகிறதே? அப்ப தை முக்கியம் இல்லையா?
இந்த தை நீராடல் வரும் பரிபாடல்தான் ஒரு முக்கியமான தகவலை நமக்கு தருகிறது. அதாவது திருவாதிரையில் சிவனுக்கு விழா எடுக்கையில், சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கும்போது (அதாவது சூரியன் தனுர் ராசியில் இருக்கும்போது) பெண்கள் அம்பா ஆடல் என்னும் அம்பிகையை வழிபாட்டு தை நீராடல் ஆடுவார்கள். சூரியன் தனுர் ராசியில் இருப்பது சூரிய மாதத்தில் மார்கழி. திருவாதிரை விழா நடப்பதும் மார்கழி. ஆனால் சொல்லப்படுவதோ தை நீராடல். இது மறைமுகமாகக் உணர்த்துவது அப்போது வழக்கத்தில் இருந்தது சந்திரமான மாதம். பரிபாடலின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு. (5)
அம்பிகையை பாவையர் நீராடி வணங்கும் இதே வழிபாடு ஆண்டாள் காலத்தில் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் நீராடப் போதுவீர் ஆக இந்த மாதம் இப்போது மார்கழி ஆகி விட்டது. அதாவது சூரிய மாதம். ஆண்டாள் காலம் ஒன்பதாம் ஆம் நூற்றாண்டு (6)
ஆக இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சந்திர மாதம் சூரிய மாதமாகி இருக்கிறது.
அப்ப வருட ஆரம்பம் தையா? இல்லை சித்திரையா?
தமிழ் மாதக் கணக்கீட்டு முறை மிகத் துல்லியமாக சூரியனின் சுழற்சியைக் கணக்கிடும் முறை. 12 ராசிகள் மேஷத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே மேஷமே இந்தக் கணக்கீட்டின் துவக்கம்.
மேஷம்தான் சூரியனின் ராசித் தொடக்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்? நக்கீரரின் நெடுநல்வாடை (7)
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி

திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு2திரியாமனின்ற,உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து (8)
பிங்கள நிகண்டு ராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியுன் துலாமு தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.
கல்வெட்டுகள் நான்கு சூரிய சம்பந்தமான விழாக்களைச் சொல்கின்றன. அயன சங்கராந்தி இரண்டு, சித்திரை ஐப்பசி விஷு இரண்டு.
ஆக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழா. ஆடியும் தையும் முறையே தக்ஷிணாயன உத்தராயண சங்கராந்திகள். சூரியன் உச்சம் அடைவது மேஷத்தில், அதாவது சித்திரையில். சூரியன் நீச்சம் அடைவது துலாத்தில் அதாவது ஐப்பசியில். ஆக இந்த நான்கு மாதத் தொடக்கத்திலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்தச் சூரியனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதக் கணக்கானது தமிழ் நாட்டுக்கே உள்ள ஒரு தனிப்பட்ட கணக்கு என்பதும், சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு.
ஆதாரம் :
(1) http://www.kamakoti.org/tamil/Kurall89.htm
(2) http://www.kamakoti.org/tamil/2dk59.htm
(3) http://www.tamilartsacademy.com/articles/article24.xml
(4) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/introduction.html
(5) http://www.tamilvu.org/slet/l1250/l1250pag.jsp?bookid=25&auth_pub_id=104&page=127
(6) http://www.tamilartsacademy.com/articles/article08.xml
(7) http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0070.html
(8) http://www.tamilvu.org/library/libindex.htm
0

சங்கரநாராயணன்