வியாழன், 5 பிப்ரவரி, 2015

திருநெல்வேலி -பத்தமடை ,காந்திநகர் ---அம்பேத்கர் இளைஞர் அணி -- பொங்கல் விழா (தை 1 & 2 -2046 )

#சகோதரத்துவம் வலியுறுத்தி 2015 பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் அம்பேத்கர் இளைஞர் அணியால் கொண்டப்பட்டது ..

#ஊரால் ஒன்றினைவோம் ..

திருநெல்வேலி மாவட்டம்,பத்தமடை -காந்திநகர் அம்பேத்கர் இளைஞர் அணி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஊரு பொது இடத்தில பொங்கல் வைத்து பின்னர் தொடங்கின ..சனவரி 15, சனவரி 16 (தை 1,2) இரு நாட்கள் நடந்தன.

விளையாட்டு நிகழ்வை சுப்புராஜ் , தளபதி ராஜா, பட்டு ராஜா , ராஜா -ஸ்டீவே வாக், பாலமுருகன், மாரியப்பன், பாஸ்கர், ஆனந்த், தமிழ், ஒருங்கிணைத்தனர்

ராஜன் ஒலி- ஒளி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மதியழகன்,
ஊர் தலைவர்-மதி, முன்னாள் அம்பேத்கர் இளைஞர் அணி நிர்வாகிகள் முத்து மணி, முத்து ராஜ், துரை ராஜ், லோகி .முருகன், கலர் -கலைரசன், ராஜன், குட்டி -லக்ஷ்மன், துரை - பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் விளையாட்டுப்போட்டிகளில் சிறுவர் மற்றும் சிறுமியர் ஆண்கள்,பெண்கள் என அனைவரும் பங்குபெற்று விழாவினை சிற்பித்தினர்,
ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஊரு பொது கிணறு அருகை உள்ள மைதானத்தில் நடைபெறுவது வழக்கம்..அது எனவோ வேலை, படிப்பு என்று பலர் வெளியூருக்கு , தமிழகம் தாண்டி சென்றாதல் பல ஆண்டுகாளாக 2009 -2014 வரை நடைபெற வில்லை. ஊரில் இருந்த மற்ற இளைஞர்களும் முன்னெடுக்க வில்லை.
பல ஆண்டுகள் கழித்து நடத்த முன்வந்தனர் அன்று இருந்து சிறுவர்கள் இன்று இளைஞர்கள் ஆகி ஊர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த ஆண்டு யாரைடைய உதவியும் நாடாமல் முயற்சித்து நடத்தி உள்ளனர்.
ஆனால் தார் சாலை வந்ததால் ஊர் எல்லையில் உள்ள அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் கண்டு மகிழ்வதுடன், பங்கு பெறுவதும் வழக்கம்.

இரவு 8மணிக்கு மேல் எவனும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. 'தொலைக்காட்சியை ' பார்த்துக் கொண்டு காற்றாட உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்! ..தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியாக மாறியுள்ளது .

இந்த வருடம் எமக்கு தல (முதல் ) பொங்கல் ஆகையால் இந்த வருட பொங்கல் நிகழ்வு தமிழகத்தில் ..
மும்பை விழித்தெழு இயக்கம் தொடங்கி 7 வருடம் கழித்து (மும்பைக்கு வந்தது 2008 ஆம் ஆண்டு )
முதன் முதலாக குடும்பத்துடன் ..பெற்றோர் &எனது துணைவியாருடன் தமிழர் திருநாளான தை திருநாளான பொங்கல் விழாவை கொண்டாடினேன்

அப்போது சிறுவர்களாக இருந்தவர்கள் இன்று இளைஞர்காளாக உருவாக்கி உள்ளனர்..முகநூலில் தொடர்பில் இருப்பர்களிடம் எப்போது சொல்லுவேன் .தொடர்ந்து இந்த நிகழ்வை எடுங்கள் என்று...

2009 க்கு முன்னால் விளையாட்டை நடத்தும் பொறுப்பில் எமக்கு முக்கிய பங்கு உண்டு...அது இந்த ஆண்டு எனக்கு எங்கு ஊரு தம்பிகள் ஒதுக்கினார்கள் ...

சிறுவர் சிறுமிகளுக்கு நான் தயார் செய்து உள்ள விளையாட்டு போட்டி
1. தலைவர்களின் படங்களை வைத்து பெயர்களை அடையாளம் காணுதல்
2. சிறுவர்களுக்கான காய்கறிகளின் பெயர்களை அடையாளம் காணுதல்
3.பொங்கல் விழாவை விளக்கும் ஓவிய போட்டி
4. மாறு வேடம் போட்டி
5. ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுவது (தண்ணீரை வாயில் வைத்து கொண்டு)
6. பொது அறிவு வினா விடை போட்டி
7. விழப்புணர்வு ஊட்டும் நாடகம்

இதில் சில போட்டிகள் தயார் செய்தும் நேரம் இல்லாததால் நடத்த முடியவில்லை ...
=============================================================
வழக்கம் மாறாமல் உள்ள விளையாட்டும் நடைபெற்றன ..

1.ஆண்களுக்கான உறி அடித்தல்
2.பெண்களுக்கான கோ கோ போட்டி,
3.. சற்று உயர்வான கயிற்றில் முறுக்கு தொங்க விட்டு கடிப்பது
4.. மெதுவாக ஓட்டும் சைக்கிள் பந்தயம்
5.. ஓட்ட பந்தயம் போட்டி
6.. கயிறு இழைத்தல்
7. சிறுவர் சிறுமிகளுக்கு பாட்டிலில் கைக்களால் தண்ணீர் நிறுப்புதல்
8. கைக்களை பின்னால் கட்டி கொண்டு பாட்டில் தண்ணீர் குடிப்பது
9. பலூன் ஊதி உடைத்தல்
10.சாக்கு போட்டி
11. மியூசிகல் சேர் போட்டி
12. ஆடல் பாடல்

ஒடுக்கப்படும் பல சமூகங்கள் இந்த காந்திநகர், பத்தமடை ஊரில் வாழ்ந்து வந்தாலும் அன்று போலவே இன்றும் இளைஞர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் நேரில் சென்று சந்தித்ததில் , விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி...
பொங்கல் நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் விழாக்குழு சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றினை தெரிவித்து கொள்கிறோம்.......
அம்பேத்கர் இளைஞர் அணி , காந்திநகர், பத்தமடை, திருநெல்வேலி மாவட்டம் .
===============================================================
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக 7 ஆம் ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா
மும்பையில் அதிகமான தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மிக சிறப்பாக மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக 7 ஆம் ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ...சாதி மத வர்க்க அற்று பொது இடத்தில் 
(தாராவி குறுக்கு சாலையில் ) பல் வேறு இயக்க, சங்க, அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மக்கள் திரளுடன் கொண்டாடப்பட்டது . இது ஒரு முன்மாதிரி விழாவாக ..2009 இல் நாங்கள் மட்டுமே கொண்டாடினோம் இன்று 30 க்கு மேற்பட்ட இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது...
ஒரு நாள் சம்பிரதாய அடையாள விழாவாக இல்லாமால் அனைத்து நிகழ்வுகளில் சாதி மத வர்க்க அற்ற தமிழராக- மனிதார்களாக இருக்க போக்கும் காலத்தை நோக்கி நடைப்போடுகிறோம்
==================================================================
மும்பையில் உள்ள தமிழர்கள் 150 க்கும் மேலான வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இருந்து சாதி கொடுமை, வறுமை காரணமாக குடிபெயர்ந்தவர்கள். அன்று சாதி அற்ற தமிழர்களாக அனைவரும் ஒன்றாக இருந்தார்கள் வாழ்ந்தார்கள்...இன்றய மும்பை தமிழர் தலைமுறை தமிழகத்தில் இருப்பதை போல பல சாதியாக தனி தனியாக வாழ்த்து வருகிறார்கள் ...பெயருக்கு பின்னால் (surname ) அடையாளத்தை வைத்து கொண்டும்...இவர்களில் பலருக்கு சரளமாக தமிழ் பேச தெரியாது, படிக்க தெரியாது. ஆனால் தமிழர்களை பிழவுப்படுத்தும் சாதி மட்டும் இருக்குது..
ஆகையாலே இயக்கம் தொடங்கிய முதல் விழாவாக 2009 ஆம் வருடம் முதல் சாதி மத வர்க்க வேறுபாடுகள் களையும் வகையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு போராட்டம், கருத்தரங்கம், திரையிடல், நிகழ்சிகள், கருத்தியல் பிரச்சாரம் செய்து வருவதால் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடி மற்றும் சில தமிழ் அமைப்புகள் புறக்கணிப்பு-பத்திரிக்கைகள் புறக்கணிப்பு MVI இயக்கத்திற்கு இருந்தாலும் சமுத்துவ பொங்கல் நிகழ்வையும் & தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாவதை தவிர்க்க நினைப்பது உண்டு...இருந்தும் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம்
இந்த விழா கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2046 ..தை (ஜனவரி 15) முதல் நாளில் கொண்டாடப்பட்டது.
அதன் புகைப்படம் சில,…
இவ்விழாவை தங்க பாண்டியன், பன்னீர் செல்வம், மதன், பிரான்சிஸ் , குட்டி & நண்பர்கள் , வேல்முருகன், கதிர் & நண்பர்கள் , ரவி, பொன் தமிழ் செல்வன், நித்தி, பாபு மிக சிறப்பாக ஒருங்கிணைத்தனர்...
சிறுப்பு விருத்தினராக தமிழ் இலெமுரிய ஆசிரியர் சு குமணராசன், வள்ளியூர் வீர குமார் , மும்பை அருந்ததியர் சங்கம் மோகன்,
மும்பை திராவிடர் கழகம் பெ கணேசன், தெ இ ஆதி திராவிடர் மகாஜன சங்கம் க வ அசோக் குமார், பொ . கதிரவன், ரஜினி ரசிகர் மன்ற எஸ் கே ஆதிமுலம் , தமிழ்நாடு தேவந்திர குல வேளாளர் சங்க பூமிநாதன், வழக்குரைஞர் முருகசீலன், திருவள்ளுவர் நற்பணி மன்ற ராதா கிருஷ்ணன், மும்பை பகுத்தறிவாளர்கள் கழகம் அ. ரவிச்சந்திரன்,
விஜய் ரசிகர் மன்ற மும்பை பவுல், சிட்டிசன் பாரம் எஸ் ஏ சுந்தர், கிங் மேகர் காமராஜ் தமிழ் டிரஸ்ட் எம் சி கே பொன்ராஜ், கவிஞர் முருகன், மும்பை தமிழர் நற்பணி மன்றம் இரா காந்தி போன்ற பலர் கலந்துகொண்டனர் (விரிவாக எழதப்படும் )
சமுத்துவ பொங்கல் விழா வரவு செலவு கணக்கு வெளியிடப்படும் ............மும்பை விழித்தெழு இயக்கம்/MVI

சாதி ஒழிய என்ன தேவை? சாதியை ஒழிக்கமுடியவில்லை, சாதிகளும் உட்சாதிகளும், வேதங்களில் சாதி, சாதி என்றொரு மாயம், தமிழர்களும் சாதிகளும்


(1) சாதி ஒழிய என்ன தேவை?

2007042307350401அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் இனப்பிரிவினை பார்க்கக்கூடாது என 1968 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு Fair Housing Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெள்ளை இனத்தவரின் சம்மதத்துடனே சட்டம் நிறைவேறியது. சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண் இனப்பிரிவினையிலும் தொடர்ந்து இருக்கிறதா என்பதை அறிய ஹுபர்ட் ஓ கோர்மான் என்பவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்.
அமெரிக்க வெள்ளையர்களிடம் முதலில் அவர் தொடுத்த கேள்வி, நீங்கள் இனப் பிரிவினை பார்ப்பவரா? இனப்பிரிவினை பார்ப்பது தவறென நினைக்கிறீர்களா?. இக்கேள்விக்கு 82% வெள்ளையர்கள் தாம் இனப்பிரிவினை பார்ப்பவரல்ல என்று பதிலளித்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்ட கோர்மான் சில மாதங்களுக்குப் பிறகு தாம் ஆய்வு செய்த அதே அமெரிக்கர்களிடம் கேள்வியை மாற்றிப் போட்டார்.
இம்முறை அவரின் கேள்வி சற்று வித்தியாசமானது. பதிலிலிருந்து கேள்வியை எழுப்பினார். நீங்கள் இனப்பிரிவினைப் ( racist) பார்ப்பவரல்ல, ஆனால் உங்களைச் சுற்றியுள்ள வெள்ளையர்களோ, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வெள்ளையர்களோ இனப்பிரிவினை பார்க்கிறார்களா? என்ற கேள்வியை முன் வைத்தார். பதிலளித்தவர்கள், ஆமாம், எனக்குத் தெரிந்து நிறைய வெள்ளையர்கள் வீடுகளை கறுப்பர்களுக்குக் கொடுக்க விரும்புவதில்லை. அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின்மையே வீடுகளையோ அல்லது அவர்கள் வாழும் பகுதிகளில் கறுப்பர்கள் வாழ விருப்பப்படாதவர்களாகவே தாங்கள் சந்தித்த பல வெள்ளையர்களும் உள்ளதாகப் பதில் அளித்தனர்.
இந்த ஆய்வை அப்படியே தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டால் பதில் எவ்வாறு இருக்கக்கூடும். நீங்கள் சாதி, மதம் பார்த்து நட்பு கொள்பவரா? அல்லது நீங்கள் சாதிய சிந்தனைகள் உள்ளவரா? இதை நேரடியாகக் கேட்டால் அமெரிக்காவில் சொன்னது போலவே நான் அனைத்து சாதியினரிடமும் நட்புப்பாராட்டுபவன் என்றே பதிலமையும். என்னுடைய நண்பர்கள் இவர்கள்தான் என்று அடையாளப்படுத்தவும் முனைவார்கள்.
கோர்மான் கேட்ட இரண்டாவது கேள்வியை நம்மூரில் இவ்வாறு கேட்டால் பதில் எவ்வாறு இருக்கும். நீங்கள் சாதி பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் உங்கள் வீட்டிலோ உங்கள் அக்கம்பக்கத்தாரோ சாதி பார்த்து மதம் பார்த்து வீட்டை வாடகைக்கு விடுகிறார்களா? பணம் யார் தருவார்கள் எனப் பார்த்து விடுகிறார்களா? என்ற கேள்வியை வைத்தால் பதில் மேலே பார்த்த அமெரிக்கர்களின் பதிலைப் போலவே இருக்கும். ஆம், எங்கள் வீட்டிலும் சரி, அக்கம்பக்கத்திலும் சரி, குறிப்பிட்ட சாதியினருக்கோ, அல்லது பிரச்னை செய்யாத சாதியரா? என்று பார்த்து விட்டே பெரும்பாலும் வீடுகளை வழங்குவதாக அவர்கள் சொல்லக்கூடும். சில சாதியினர் வாடகைக்கு வந்த பின் பணம் தராமல் போகக்கூடும் அல்லது வீட்டைக் காலி பண்ண மாட்டேன் என்று பிரச்னை பண்ணுவார்கள். ஆதலால் அவர்களிடம் மல்லுக்கு நிற்பதற்குப் பதிலாக, முதலிலேயே ஆள் பார்த்து விடுகிறார்கள் என்றே தாம் புரிந்து கொள்வதாக விளக்கம் அளிப்பார்கள்.
ஜெயமோகன் தமது ஒரு கட்டுரையில் சாதி பற்றிக் குறிப்பிடும் போது, தமிழகத்திலுள்ள பெரும்பாலோர் தாம் பழகும் நபர் என்ன சாதி என்று உள்ளுக்குள் அறிய விரும்புபவர்களாகவே உள்ளனர் என்று கூறுகிறார். அதன் மூலம் அவரிடம் பழகுவதை அவர்கள் நிறுத்தப்போவதில்லை. ஆனால் அவர்களிடம் எதைப் பற்றி எவ்வாறு பேச வேண்டும் என்ற முன்னெச்செரிக்கையுடன் பழகுகிறார்கள்.
மேற்கூறிய இரண்டு நிகழ்விலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது, அடிப்படையில் மனிதர்கள் தனிப்பட்ட முறையில் சாதி வெறியோடோ, இனப்பாகுபாட்டுடனோ இருப்பதில்லை. ஆனால் அவர்கள் சார்ந்த சமூகத்தில் பலர் அவ்வாறு உள்ளதாக நினைக்கிறார்கள். பலரும் சாதி வெறியரோ, இனப்பிரிவினை பார்க்கிற அளவுக்கு கொடூரமானவர்களுமல்ல, அதேபோல தான் பார்ப்பதில்லை என்று சொல்லிக் கொண்டே, மற்றவர்கள் இவ்வாறே இருக்கிறார்கள் என்ற பரவலான எண்ணம் அவர்களையும் தான் சார்ந்த சமூகச் சிந்தனைக்குள் பயணிக்கச் செய்கிறது. இந்தக் கேள்விகளை வரதட்சணை,  ஆட்சி, அதிகாரம், ஜனநாயகம், வளர்ச்சி எனப் பலவாறாகக் கேட்டாலும் பதில்கள் இதைப் போலவே அமையக்கூடும்.
இந்தப் பிரச்சினையிலிருந்து அல்லது இவ்வெண்ணத்திலிருந்து மனிதர்கள் விடுபட என்ன வழி? நாம் பெரும்பாலும் வழி நடப்பவர்களாகவே இருக்கிறோம். சட்டத் திட்டங்கள் என வரையறுக்கப்பட்டவற்றை கேள்வி எழுப்புபவராகப் பெரும்பாலும் இருப்பதில்லை. இதுகுறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் அமைவதில்லை. இரு பக்கமும் அடுத்த பக்கத்தினரின் அராஜகம் பற்றியே கேள்வி எழுப்புகிறோம். சமூக வாதிகள் என சொல்லிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நியாயம் பேச இயலும் என ஓரணியும், அரசின் அனைத்து சலுகைகளையும் வாங்கிக் கொண்டும், எண்ணிக்கையில் பலம் பெற்றவர்களாக இருப்பதால் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிரச்னை செய்கிறார்கள் என்று அடுத்த பக்கம் மட்டுமே நியாயம் பேசும் வரையிலும் இப்பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைக்கப்போவதில்லை.
இந்த ஒற்றைச் சார்பு மனநிலையோடு சாதிகள் ஒழிய வேண்டும் என்று நியாயம் பேசுவது வெறும் முற்போக்கு, பிற்போக்கு அடையாளமாகவே பார்க்கப்படும். மாறாக இரு பக்கமும் உள்ள தவறைப் புரிந்து கொள்ளும் மைய எண்ணத்தைக் கொண்ட சமூகவாதிகள் தான் இன்றைய தேவை. அவர்களாலும், கல்வியறிவு, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றின் மூலமே இப்பிரிவினை எண்ணங்கள் ஒழியக்கூடும்.

சாதியை ஒழிக்கமுடியவில்லை!
gandhi
சாதியை ஒழிப்பதற்காக இந்நாட்டில் இயக்கங்கள் பல தோன்றின. பவுத்தம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சுயமரியாதை இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை.
‘அந்நியர் ஆட்சி இருப்பதால்தான், அந்த ஆட்சிக்காரன் நம்மைப்பிரித்து ஆளுகின்றான் அவனை வெளியேற்றிவிட்டால் ஒரு நொடிப்பொழுதில் சாதியை ஒழித்துவிடலாம் என்றார்கள் நாட்டு சுதந்தரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்கள். அந்நிய ஆட்சி ஒழிந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகி, (இன்றைய தேதிக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது) விட்டது. ஆனால் சாதி ஒழிவதற்கு மாறாக அமோகமாக வளர்ந்திருக்கிறது. மற்றவர்கள் ‘சாதி ஒழிப்பு மாநாடுகள்’ என்ற பெயரால் பேச்சுக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.
இன்றுள்ள ஆளும் கட்சியிடம் சாதி ஒழிப்புப் பற்றிய திட்டமேயில்லை. இது பற்றிய கவலையுமில்லை. சாதியை அடிப்படையாக வைத்தே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ‘மக்கள் ஆட்சி முறை’ (ஜனநாயகம்) என்ற போலி நாடகம் – பிறவிக் குருடனுக்கு ‘கண்ணாயிரம்’ என்று பெயரிடுவது போல் நடந்து வருகிறது. சுதந்திரம் வந்த பிறகு சாதி ஒழியவில்லை. சாதி ஒழிப்புக்கான சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலையற்றுக் கிடக்கின்றனர்.’ (குத்தூசி குருசாமி கட்டுரைகள்).
போர்முனைக்குச் சென்று உயிரைவிடத் தயாராயிருக்கும் இளைஞர்கள்கூட சாதி முனையில் நின்று போரிட மறுக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் இளைஞர்களைப் போர் முனைக்கு அனுப்பும் துணிவு பெற்றிருந்தாலும் கூட, சுய சாதியை விட்டு அப்பால் அனுப்பும் துணிவு பெற்றவர்களாக இல்லை.
சாதியின் வடிவம் எப்போதும் சமத்துவ உணர்வுக்கு எதிரானது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணிய உணர்வைக் காயப்படுத்தவும், இழிவுப்படுத்தவும் அது விடாது முயல்கிறது. சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழினம் இன்று இனவுணர்வையும் மொழிப்பற்றையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மலிவான கட்சி அரசியலிலும், சமூக நீதிக்குத் தடைச்சுவராக விளங்கும் சாதி உணர்விலும் சங்கமித்துவிட்டதுதான் மிக மோசமான அவலம்.
‘என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்ற எண்ணத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்ற மகாத்மா காந்தி ‘தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்த மாட்டேன்’ என்று பிரகடனம் செய்தார்.
‘இந்தியாவின் உயர்சாதி மக்களே உங்களுக்கு உயிர் இருக்கிறதா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மியின் சவம் போன்று நீங்கள் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர் வெறுத்து ஒதுக்கிய மக்களிடம்தான் இந்தியாவின் எஞ்சியுள்ள வீரிய சக்தி தரிசனம் தருகிறது. நீங்கள்தான் உண்மையில் நடமாடும் பிணங்கள்’ என்று சினத்துடன் சபித்தார் சுவாமி விவேகானந்தர்.
‘சகல மனிதரும் சகோதரர், மனுஷ்ய வர்க்கம் ஆருயிர், இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசாரச் சுவர்கள் கட்டி நான் வேறு சாதி; அவன் வேறு சாதி; எங்கள் இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. ஆவண சாதிப் பிரஷ்டம் பண்ண வேண்டும் என்பது சுத்த மடமை’ என்று எழுதி, சாதி வேற்றுமை அகற்ற வாழ்க்கை முழுவதும் எழுத்து வேள்வி நடத்தினான் பாரதி. இப்படியாக சாதி கூடவே கூடாது என்று கூப்பாடுப் போட்ட தேசிய, இலக்கிய, மதவாதிகளின் பேச்சை நாம் கேட்பதாகவே இல்லை.
அரசும் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கப் போராடித்தான் வருகிறது. 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது சமூகச் சீர்திருத்தத் துறை என்று தனித்துறையை உருவாக்கினார். கிறிஸ்துதாஸ் காந்தி தான் செயலாளர். அந்தத் துறையில் எந்தச் செயல்பாடுகளும் இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்தத் துறையை கலைத்தார். மறுபடியும் கடந்த முறை கருணாநிதி வந்ததும் அந்தத் துறையைக் கொண்டு வந்து கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்தார். ஆனால் எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மறுபடியும் இப்போது வந்த ஜெயலலிதா அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. தற்போது சமூக சீர்திருத்தத் துறை திரும்பவும் செயல்படும் என்று சொல்லி ஓய்வு பெறப்போகும் கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்து உள்ளார்.
கிட்டத்தட்ட 16 ஆண்டு காலத்தில் இந்தத் துறையில் ஒரே ஒருவருக்குக்கூட நன்மை ஏற்படவில்லை. மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சாதி ஒழிப்புக் கொள்கை இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

சாதிகளும் உட்சாதிகளும்
tribals
இந்தியச் சமூகம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. மேலை நாட்டைப் போல் வகுப்புச் சமூகமாக அமையாமல் இது ஒரு சாதிச் சமூகமாக அமைந்திருப்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படை. சாதிகள் வருணங்களில் இருந்து தோன்றின. வருணங்கள் கடவுளின் படைப்பாகப் போற்றப்பட்டன. வேதங்களும் அவற்றின் விளக்க உரைகளாக அமைந்த ‘அற நூல்கள்’ எனப்பட்ட தரும சாத்திரங்களும் வருணநெறிகளை அரசியல் சட்டங்களாக்கின.
இந்துக்களின் வரலாற்றில் ஏதோவொரு கால நிலையில் புரோகித வர்க்கம் மற்ற திரட்சியில் இருந்து தன்னைத்தானே சமூக வகையில் விலக்கிக் கொண்டது. தன்னைத் தானே ஒரு சாதியாகவும் அது உருவாக்கிக் கொண்டது. சமுதாய உழைப்புப் பிரிவினை விதிப்படி ஏனைய வர்க்கங்கள் சில மிகப்பெரியனவாகவும் மற்றவை மிகச் சிறியனவாகவும் சிதறுண்டு போயின. இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமும் ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்து என்பது தத்துவார்த்த அளவில் தாராளத் தன்மையுடையதும், சமூகப் பழக்க அளவில் கெடுபிடியான கட்டுத் திட்டங்கள் கொண்டதுமான ஒரு மதமாகும். இதனால்தான் நாத்திகம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களையும் இது தனது தத்துவமாக உள்ளடக்கி அறிவிக்கும் அதே வேளை, சாதியக் கட்டமைப்பில் மட்டும் கறாரான கட்டுத் திட்டங்களைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. இதனாலேயே இந்துக்கள் தங்கள் இருப்பைச் சாதிய வடிவிலேயே வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த இந்துக்களும் உலகம் முழுக்க, இந்தியா முழுக்க வாழ்ந்தாலும் இவர்களும் மத அடிப்படையை வைத்து அடையாளம் காணப்படுவதில்லை. மாறாக தேசிய இனத்தை வைத்தே அடையாளம் காணப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், வங்காளி, குஜராத்தி என்றே அறியப்படுகிறார்களே யொழிய பொதுவில் இந்துக்கள் என்று அல்ல.
இன்றைய சமூகத்தில் இந்து மற்றும் இந்துத்துவத் தாக்கமுள்ள எந்த ஒரு மக்கள் பிரிவும் சாதியை வைத்தே அடையாளம் காணப்படுகிறது. மனிதனின் சாதிய அடையாளமே மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. மனிதன் பிறந்து பெயர் வைக்கும் முன்பே ஏன் பிறக்கும் முன் கருவிலேயே மனிதனின் சாதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்படி அகமண முறையில் கெட்டித்தட்டிப் போயும், இறுக்கமடைந்தும் மாற்றமுடியாததாகவும், நிலவும் சாதியக் கட்டமைப்புக்குள் மனிதனுக்கு சுதந்தரம், சனநாயகம், சமத்துவம் எதுவும் இல்லை.
சாதி அமைப்பு என்பது படிநிலை ஏற்றத்தாழ்வுகளை கொண்டது. சாதாரண நோக்கில் பார்ப்பன சாதி, பார்ப்பனரால்லாத மேல்சாதி, பிறப்படுத்தப்பட்ட சாதி, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி இன்னும் அதற்குள்ளே நிலவும் உட்சாதி ஆகிய எந்த சாதியை எடுத்துக்கொண்டாலும் இந்த சாதிக்குள் சமத்துவம் இல்லை என்பதோடு இது படிநிலை வரிசையுடையதாக கட்டமைக்கப்பட்டிருப்பதும் இதுவே சமூகத்தில் அதன் இருப்பை தெளிவுப்படுத்துவதாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.
சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளில் மிகக் கொடூர அல்லது மிக இழிந்த வடிவமே தீண்டாமை என்பது. என்றாலும் மேலே சொன்ன படிநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீண்டாமைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. மேலே சொன்ன சாதிகளெல்லாம் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தொட்டால் தீட்டு என்னும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை.
எனவே, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் மத்தியில் நிலவும் படிநிலை ஏற்றத்தாழ்வுகளையும், தாழ்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதாருக்குமான படிநிலை ஏற்றத்தாழ்வையும் தீண்டாமைக் கொடுமையையும் ஒன்றாக்கி அதாவது சமப்படுத்திப் பார்த்துக் கொள்ள முடியாது. பார்த்துக்கொள்ளக் கூடாது.
சமுதாயத்தில் படிநிலை ஏற்றத்தாழ்வுகள் தோன்றும் முன்பே சாதி இருந்தது. அது இன்று நாம் காணும் சாதி என்னும் நோக்கில் அகமண முறையில் கட்டமைக்கப்பட்ட சாதியாக இல்லாமல் இந்திருக்கலாம். தொழில் ரீதியில் மற்றும் வேறுபல ரீதியில் பிரிவினையாக இருந்திருக்கலாம். இப்பிரிவினையே முதலில் தோன்றியது.
சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் உற்பத்தி உறவு என்கிற வகையில் புற நிலையாகவும், மேல் கட்டுமானத்தில் பண்பாட்டு வடிவம் என்கிற வகையில் அகநிலையாகவும் செயல்படுகிறது என்பது கிட்டத்தட்ட பெரும்பாலான சமூக ஆய்வாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.
இதிலும் உற்பத்தி என்பதை மனித உற்பத்தி, பொருள் உற்பத்தி என இரு வகையாகக் கொண்டு நோக்க, இவ்விரண்டிலுமே சாதியச் செயல்பாடுகள் நிலவுவது தெரியவரும். இங்கு மனித உற்பத்தி என்பது சொந்த சாதிகளின் வடிவில் அதாவது அகமண உறவில் நிகழ்கிறது. பொருள் உற்பத்தி என்பது பெருமளவும் மாற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும் இன்னும் சில சாதிய அடிப்படையிலேயே நீடிக்கிறது. பொதுவான தொழில் கட்டமைப்பும் சாதி சார்ந்தே நிலவுகிறது.
வருணக் கோட்பாடு என்பது சாதியத்தை, தீண்டாமையை வலியுறுத்தும் ஒன்று. பார்ப்பனர், பார்ப்பனரல்லாத உயர்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்கிற படிநிலை வரிசையைக் கொண்டுள்ளது. இது பிறப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்கிற ஒரு கோட்பாடாகும்.
இப்படி இது கீழ் மேல் அடுக்கு வரிசைகளைக் கொண்டுள்ளதால் இப்படிநிலை வரிசையில் இடையில் உள்ள ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் தங்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்களை எதிர்க்க விரும்பும் அதே வேளை, தங்களுக்கு கீழுள்ளவர்களைக் கண்டு நிறைவுற்று அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தி அதிலேயே அகமகிழும் போக்கும் இருந்து வருகிறது.
0
சடங்கு புரோகிதர்களாக விளங்கிய பிராமணர்கள் ஒரு நாட்டின் அரசனைக் காட்டிலும் மேலானவர்களாக மாறிய நிலைதான் சாதியத்தின் அடித்தளம்.பொருளியியல் நிலையிலும் அரசியல் மேலாண்மையிலும் எஜமானர்களாகத் திகழ்ந்த அரசர்களின் ‘அதிகாரம் என்னும் தளமானது ஆன்மிகம், வேள்வி/யாகம், சடங்கு இவற்றைக் கொண்டு மன்னனுக்கும் – அரசனுக்கும் நாட்டுக்கும் மேன்மை ஏற்படுத்திய பிராமணர்களின் ‘சமூகத் தகுதி’ என்னும் தளத்தோடு கொண்ட உறவே சாதியத்தின் அடித்தளம் என்பார் துய்மோன் (1980:2).
‘சாதி என்பது குல – இனக்குழு அமைப்பின் எஞ்சிய வடிவங்களில் ஒன்று’ என்பார் கார்ல் மார்க்ஸ்.
‘சாதி என்பது ஒரு அமைப்பு முறை. இந்த அமைப்பில் ஆண் – பெண் எந்த குறிப்பிட்ட குழுவில் பிறந்தனரோ அந்தக் குழுவின் மூலமாகவே அவர்களுக்குச் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. சமூகப்படிவரிசையில் ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தொழில் – அல்லது தொழில்கள் உள்ளன. அக்குழுவுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்’ என்கிறார் கெய்ல் ஓம்வெட் (நூல்: வர்க்கம், சாதி, நிலம். பக்.60).
சாதி என்பதற்கு குலம், வருணம், இனம், ஓரினப்பொருளின் பொதுவாகிய தன்மை, திரள் என்றெல்லாம் தமிழ் லெக்சிகன் அகராதி (பக்.1367) பொருள் கூறுகிறது.
ஆறு பேரினமாக, ஒன்பது கிளையினமாக இருந்து பின்னர் நான்கு மொழியினமாக மாறிய இந்திய சமூகத்தில் சாதிகள் படிப்படியாக வளர்ந்து பெருகலாயின. பின்னர் மதங்கள் தோன்றின. குலக்குறி வழிபாடுகளால் பிரிந்து நின்ற மனிதன் மதங்களால் மேலும் பிரிந்தான்.
ஆரியர்கள் வருணாசிரம கோட்பாடுகளைப் புகுத்தினர். தொழில் அடிப்படையில் இருந்த சாதிகள் பிறப்பு அடிப்படைக்கு மாற்றப்பட்டன.
ஒரு சாதியில் பிறப்பதற்கு அந்த மனிதன் முற்பிறவியில் செய்த கர்மவினைகளே காரணம் என்றும், இழிவான நிலையில் பிறப்பதே – வாழுவதே இறைவன் ஒரு சில சாதிகளுக்கு இட்ட கட்டளை என்றும் போதனைகள் செய்யப்பட்டன.
ஆரியர் வருகைக்குப் பின்னர் தொழில் அடிப்படையில் தோன்றியதாகச் சொல்லப்பட்ட சாதிகளைப் பற்றி மண்டல் கமிஷன் அளிக்கும் புள்ளிவிவரம் இது. 3741 பிற்படுத்தப்பட்ட சாதியினரும், அவர்களுள் 2105 மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மற்றும் 1088 ஷெட்யூல்டு இனத்தவரும் 648 மலைவாழ் இனத்தவரும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 85% சூத்திர – தீண்டப்படாதவர்கள் என்றும், இங்குள்ள 11 கோடி முஸ்லிம்களில் 10 கோடி பேர் இந்துக்களாக இருந்து இஸ்லாத்துக்கு சென்றவர்களென்றும், அதில் பெரும்பாலோர் தீண்டப்படாத இனத்தவர் என்பதும் ஏற்கவேண்டிய உண்மையாகும்.
அக் காலத்திலே பல சாதிகள் இருந்ததை நாலாயிரம் திவ்வியப் பிரபந்தத்தின்மூலம் அறிய முடிகிறது. சமயம், இலக்கியம், கல்வி என பல்வேறு கட்டுமானங்கள் இருந்தபோதும் சாதியை ஒழிக்க முடியவில்லை. சாதிப் பூசல்கள் மட்டுமின்றி சமய சண்டைகளும் நம் நாட்டில் இன்றுவரை நடந்துவருவது வேதனையானது.
‘இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம்’ 1985ல் இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் இனவரைவியல் மதிப்பாய்வினை ‘இந்தியாவின் மக்கள்’ என்னும் திட்டத்தில் வழியாகத் தொடங்கியது. இவ்வாய்வின்படி இந்தியாவில் இன்று 4635 சமூகங்கள் உள்லன. (சிங் 1992).
‘ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் காந்தியடிகள் தமது ‘அரிஜன்’ (16.11.1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில் ‘இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய வர்ணாசிரம விதி முறைகளுக்கு நேர் எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக் கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்களவு நாட்டுக்கு நல்லது’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மற்றொரு கட்டுரையில் காந்தியடிகள், ‘பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய சாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர் ஜாதி – கீழ் ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக இழிவை இழிவுபடுத்தி விட்டது’ என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார் (அரிசன் – 2.5.1936).
டாக்டர் அம்பேத்கர் ‘சாதியை ஒழிக்கும் வழி என்ன?’ என்னும் கட்டுரையில் கூறும்போது ‘சாதீய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட உட்சாதிகளுக்குள் நடை உடை பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் தவறானது. உட்சாதிகளை ஒழித்துவிடுவது என்பதே சாதிகளை ஒழிப்பதற்கு வழி வகுத்து விடும் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? இதற்கு மாறாக சாதி ஒழிப்பு, உட்சாதிகளை ஒழிப்பதுடன் நின்று விடலாம் அல்லவா? அப்படியானால் உட்சாதிகளை ஒழிப்பது சாதிகளை வலுப்படுத்தவே துணைபோகும். சாதிகள் முன்பு இருந்ததை விட வலிமை மிகுந்தவையாகி, முன்பைவிட மிகுந்த விஷமத்தனமாகி விடும். எனவே, சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்து விடுவது என்கிற வழி, நடைமுறைச் சாத்தியமானதுமல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணமாகும்’ என்று குறிப்பிட்டார்.

வேதங்களில் சாதி
veda
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிகள் மிகவும் வலிமையுடன் இருப்பதற்கு அடிப்படையாக அமைந்தவை வடநாட்டில் ஏற்பட்ட தொடர்ந்த படையெடுப்புகள்தாம். வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களின் அதாவது சிந்து, பஞ்சாப் பகுதிகளின் வழியாக நடந்த படையெடுப்புகளால் இந்தியாவில் நிலவி வந்த வர்ணப்பாகுபாடு சிதைந்தது. பார்ப்பனர்களின் வேள்விப் பண்பாடும் சமூகத் தலைமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படைவீரர்கள் இந்தியப் பெண்களோடு கொண்ட மண உறவுகளும் புதிய சமூகம் உருவாகக் காரணங்களாயின.
வெளிநாட்டுப் படையெடுப்புகளால் ஏற்பட்ட சமூகமாற்றம் ஒரு புறமும் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இந்தியாவில் தோன்றிய அறிவுப்புரட்சி மறுபுறமுகமாகப் பார்ப்பனிய மேலாண்மையை அலைக்கழித்தன. இந்த அறிவுப் புரட்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் கவுதம புத்தர். இவர் தோற்றுவித்த பௌத்த சமயம், பார்ப்பனியத்தின் அனைத்து முனைகளையும் மழுங்கடித்தது. பார்ப்பனர்களின் அறிவுத்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததும் வேதக் கல்வியின் மையமாக விளங்கியதுமான தட்சசீலம் வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் பண்பாட்டுத் தாக்குதல்களாலும் சிதைவடைந்தது.
இதனால் பார்ப்பனர்கள் தங்களின் பாதுகாப்புக்காக நல்லதொரு புகலிடத்தைத் தேட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாயினர். இவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியரின் படையெடுப்புகள் பார்ப்பனியத்தின் அடிப்படைகளைத் தகர்க்கத் தொடங்கின. ஆசீவகம், உலகாயதம், பௌத்தம் ஆகிய மனித நேயக் கோட்பாடுகளை வன்முறையில் சிதைத்தொழித்த பார்ப்பனியத்தை இஸ்லாமும் வன்முறையில் சந்தித்தது. அத்த்துடன் பார்ப்பனியம் கையாண்ட வஞ்சகத் தன்மைக்கு மாறாக இஸ்லாம் பின்பற்றிய சகோதரத்தன்மை – அனைவரையும் சமமாக நடத்திய சமத்துவம் – மக்களிடையே இஸ்லாத்துக்கு நல்லதொரு செல்வாக்கு ஏற்படவும் வழி வகுத்தது.
இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளான பார்ப்பனர்களின் முழுக்கவனமும் தென்னாட்டுப் பக்கம் திரும்பியது. தென்னாடு வந்த பார்ப்பனர்களுக்கு குப்தப் பேரரசு, பல்லவப் பேரரசு இவற்றை அடுத்து வந்த பிற்காலப் பாண்டிய சோழப் பேரரசுகள் ஆகிய அனைத்தும் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகத் திகழ்ந்தன. இவ்வாறு தென்னகம் வந்து குடியேறிய பார்ப்பனர்கள் சிதறிக் கிடந்தனர். அவர்களை, சிதறிக் கிடந்த பார்ப்பனியத்தை ஒரு கட்டுக்குள் ஒன்றிணைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.
இந்த ஆதிசங்கரர் மனுதர்மத்தை எழுதிய மனுவைவிட ‘சூத்திரனை’ இழிவுபடுத்தியவர் ஆவார். சூத்திரன் ஒருவன் வேதம் படித்துவிட்டால் அவனை நெஞ்சைப் பிளப்பது, நாவை அறுப்பது; வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, கண்ணைத் தோண்டுவது போன்ற செயல்களைச் செய்ய அறிவுரை வழங்கியவர்தான் ஆதிசங்கரர் ஆவார். சங்கராச்சாரியார் இப்படி சூத்திரர்களைத் துன்புறுத்தி அடக்குவதற்கு எடுத்துக் கொண்ட சான்றுகள் குப்த அரசர்கள் காலத்திய ‘கௌதம சூத்திரம்’ முதலிய நூல்களில் இருக்கின்றன. அதாவது சமுத்திர குப்தனுடைய காலத்தில் (கி.பி. நான்காம் நூற்றாண்டில்) ஆரம்பித்து சங்கராச்சாரியாரின் காலம் (கி.பி. 9வது நூற்றாண்டின் ஆரம்பம்) வரைக்கும் நம்முடைய பார்ப்பன முன்னோர்கள் சூத்திரர்களை அமுக்கி வைத்துத் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாமல் முயன்று வந்தவர்கள் என்று தெரிகிறது.
0
இந்தியாவில் தொன்று தொட்டு சாதிக் கொடுமையும், சமயச் சண்டைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது அறிவுடையோர், சாதிக் கொடுமையையும், சமய ஊழல்களையும் ஒழிக்க வேண்டுமென்று சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைதீகர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இந்த வைதீகர்கள் சாதிக்கு ஆதாரமாகக் காட்டுவது மத நூல்களையே. மதநூல்களில் அந்தந்தக் காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களே சொல்லப்பட்டு இருந்தாலும் அதற்கு மிகுந்த சிறப்பை ஏற்றி வைத்திருக்கிறார்கள். மத நூல்கள் யாவும் கடவுள் தன்மை பொருந்தியதாகவும், கடவுளும் அதன் அவதாரங்களாகிய கடவுள்களும் நேரில் வந்து உபதேசித்ததாகவும் சொல்லுகிறார்கள்.
வேதத்திலும், உபநிடதங்களிலும், இதிகாசங்களிலும், ஸ்மிருதிகளிலும், இன்னும் மற்ற மத நூல்களிலும் சாதியைப் பற்றி சொல்லி இருப்பதாலும், சாதி நாட்டில் தொன்று தொட்டே இருந்ததாலும், அதனை விடாது கைப்பற்றி ஒழுகல் வேண்டுமென்பது வைதீகக் கொள்கை.
ஆய்வாளர்கள் கண்டறிந்த விஷயங்கள் இவை. மிகப் பழைய நூலாக இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களிலும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. பிராமணன் என்னும் சொல் வேள்வி வேட்கும் முனிவனையும், பதிகங்கள் பாடும் புலவனையும் குறிக்கின்றனவே தவிர, பார்ப்பன வகுப்பினைக் குறிக்கவில்லை. ஏனைய மூன்று வகுப்பினரின் பெயர்களான சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களும்கூட அந்த ஒன்பது மண்டிலங்களிலும் காணப்படவில்லை. இதனால் அவை எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லோரும் ஒரே வகுப்பினராக இருந்தனர், நால்வேறு வகுப்பினராகப் பிரிந்திரிக்கவில்லை என்பது புலனாகும்.
இருக்கு வேதத்தின் (ரிக் வேதம்) பத்தாம் மண்டிலத்திலுள்ள புருஷ சூக்தம் நால்வகை மக்கள் பிரிவை உணர்த்துகிறது. ஆனால் அதிலும், இந்த நான்கு பிரிவினருக்குள் உயர்வு, தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் நால் வகைத் தொழில்களைச் செய்து கொண்டு உண்ணல் கலத்தல்களில் வேறுபாடின்றி ஒருமித்து வாழ்ந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. மேலும், ரிக், யஜுர், சாமம் உள்ளிட்ட மூன்று வேதங்கள் இயற்றப்பட்ட காலங்களிலும் மக்கள் பாகுபாடு இல்லை என்று சொல்லலாம்.
சுக்கில யஜுர் வேதத்தின் முப்பதாம் இயலில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பல்வேறு மக்கள் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. சாதி வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளும் பேசப்படவில்லை. வேத காலத்தில் சாதி வேற்றுமையின் பொருட்டு பூணூல் அணியும் வழக்கம் காணப்படவில்லை. அக்காலத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்ததால், கடவுளைத் தொழிலில் புகுத்திருப்போர் தொழிலில் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போவதற்கு ஓர் அடையாளமாக அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
புராணங்கள், இதிகாசங்கள், பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இக்கால அளவுகளில் சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்ப சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வாயு புராணத்தில் கிருத யுகத்தில் சாதிகள் இல்லை என்றும் பிறகு தொழில்களுக்கு ஏற்ப மக்கள் நான்காகப் பிரிந்தார்களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வைதீகர்கள் ஐந்தாம் வேதமாகக் கொண்டுள்ள மகாபாரதம் சாந்தி பருவத்தில் மேற்கூறிய நால்வகை சாதியாரில் ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியாரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியாரெனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலங்களில் உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர்.
0
இந்தியாவில், ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இருப்பை உணர்ந்தே இருக்கிறது. அதன் இருத்தல் தத்துவமானது முதலும் முடிவுமாக தன்னை காத்துக் கொள்வதேயாகும். சாதிகள் ஒரு கூட்டமைப்பாகக் கூட ஆகவில்லை. இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்படும் நேரங்களில் தவிர்த்த மற்ற நேரங்களில், மற்ற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் எண்ணுவதில்லை. மற்ற நேரங்களில் எல்லாம், ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கிறது.
சமூகவியலாளர் கூறும் குழு உணர்வு, இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்று. நாம் அனைவரும் இந்துக்களே என்னும் உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் சாதிய உணர்வுதான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்துக்களை ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ கொள்ள முயலவில்லை. இந்தியர்கள் ஒரே தேசத்தவராக இல்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான அடையாளத்தைப் பெறாத கும்பலாகவே உள்ளனர். ஆனால் இந்தியர்கள் பலர், நாட்டுப்பற்று காரணமாக இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதவருக்கு எதிராக தங்கள் ‘சொந்த நலன்களைக்’ காத்துக் கொள்வதே பார்ப்பனர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பார்ப்பனர்களுக்கு எதிராகத் தங்கள் ‘சொந்த நலன்களை’க் காத்துக் கொள்வதே – பார்ப்பனர் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எனவே, இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் – பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.
சாதியினால் இந்துக்களின் தர்ம நெறிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. பொது நலன் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்றுவிட்டது. உதவும் உணர்ச்சியையும் அது அழித்துவிட்டது. மக்களிடையே பொதுக் கருத்து ஏற்படுவதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. இந்து மதத்தவன் ‘பொது மக்கள்’ என்று கருதுவது தன் சாதியினரையே; தன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாக இருக்கிறான். தன் சாதிக்கு மட்டுமே அவன் விசுவாசம் உள்ளனவாக இருக்கிறான்.
நல்ல இயல்புகளைச் சாதி அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக அல்லாமல், இங்கு சாதி ஒழுக்கமே இருக்கிறது. தர்ம உணர்ச்சி இருக்கிறது. அது தம் சாதியினரோடு தொடங்கி, தம் சாதியினரோடு முடிந்து விடுகிறது. இரக்க உணர்ச்சி இருக்கிறது. அது மற்ற சாதி மனிதர்களிடம் காட்டப்படுவதில்லை. நல்லவரும் உயர்ந்தவருமான பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து அங்கீகரிப்பானா?
சாதி என்ற அடித்தளத்தின்மீது எதையுமே உங்களால் கட்டமுடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக்கக் கொண்டு நீங்கள் உருவாக்கும் எல்லாமே உருக்குலைந்து போகும்.


சாதி என்றொரு மாயம்


sultanate
முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.
தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.
பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.
அதாவது, கூட்டங்கள் அல்லது குழுக்கள் ஒவ்வொன்றும் குலத் தலைமை, தனிக் குல மரபுச் சின்னம், பொது மண உறவில் தடை ஆகியவற்றின் மூலமாக ஒன்றையொன்று வேறுபடுத்திக் கொண்டன. குலக் குழுக்களிடம் காணப்பட்ட இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளையே சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குரிய அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம். ஆதிகால மனிதன் அல்லது குழுக்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களே குழுக்களைப் பிரிக்கும் குலச் சின்னங்களாக அமைந்தன.
0
மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் படிநிலை சமூகம் அமைந்திருந்தது. ஆயர் அல்லது இடையரும், வேட்டுவர் அல்லது வேடரும் உழவருக்கு அடுத்த படியில் உள்ளவர்கள், பொற்கொல்லர், கருமான், தச்சர், குயவர், முதலிய கலைத் தொழிலாளர் ஆயர்களுக்கு அடுத்த படியிலுள்ளவர்கள். அவர்களுக்கு அடுத்தது, படையாச்சியர் அல்லது படைக்கலம் மேற்கொண்டவர்கள். வலையர் அல்லது மீன் தொழிலாளரும் புலையர் அல்லது தோட்டிகளும் கடைசிப் படியிலிருந்தார்கள்.
உயர் வகுப்பினர் தெருவில் சென்றபோது தாழ்வகுப்பினர் அவர்களுக்கு வழிவிட்டனர். பெருமகனைக் கண்ட புலையன் அல்லது தோட்டி வழிபடுபவன் போல இருகைகளையும் கூப்பித் தலைவணங்கினார்.
அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை. தமிழரிடையேயுள்ள மேற்காட்டிய வகுப்பு முறை மெகஸ்தனிஸ் கண்டு தீட்டிய பண்டை மகதப்பேரரசிலுள்ள மக்கள் நிலையைப் பெரிதும் ஒத்துள்ளன.
மெகஸ்தனிஸ் குறித்துள்ளபடி மக்கள் தொகுதி ஏழு வகுப்புகளாகப் பிரிவுபட்டிருந்தது.
முதலாவதாக, அறிவர் வகுப்பு. இவர்கள் தொகையில் மிகமிகக் குறைவானவர்களே. தனிப்பட்ட மனிதர்களால் அவர்கள் வேள்விகளிலும் மற்றத் திருவினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். அறிவர்கள் பொது மக்களுக்கு அந்த ஆண்டின் பஞ்சப்பருவங்கள், மழை, அரசியல் கோளாறுகள் ஆகியவை பற்றி அறிவுரை நல்கினர். இந்த அறிவர்கள் ஆடையற்றவர்களாகவே இருந்தார்கள்.
இரண்டாவதாக, உழவர் வகுப்பு. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரம் முழுவதையும் நிலம் பண்படுத்துவதிலேயே செலவிட்டனர். ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும், கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர்.
நான்காவது, தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும், கவசத் தொழிலாளரும், எல்லா வகைப்பட்ட கலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.
போர் வீரர் ஐந்தாம் வகுப்பினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்து வந்தனர். ஆறாவது வகுப்பு மேற்பார்வை செய்தது. நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ, தண்டலாளருக்கோ அறிவிப்பது அவர்கள் கடமை.
ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகரங்களில் பொது ஆட்சிக்காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தாரைக் கொண்டது.
ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறுவதற்கு அனுமதியில்லை. ஓர் உழவன் இடையனாகவோ அல்லது இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் கலைத்தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது. அறிவர் வகுப்புக்கு மட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக்களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல.

இன்று ஒவ்வொரு சாதியும் அகமண உட்சாதிகளாகப் பிரிந்து ஒவ்வொன்றுக்குள்ளும் கரை, கூட்டம், வகையரா, பரம்பரை, வம்சம், குலம் என்று சொல்லக்கூடிய பல புறமணக் குழுக்கள் உள்ளன.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு சாதியும் பல கால்வழிக் குழுக்களாகப் (வம்சம்) பிரிகின்றன. ரத்த உறவையும், சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையரா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்பட்டுகின்றன.
தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட சாதி இன்னல்களைக் கண்டு பல அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவர். இது மக்கள் சமூகத்தில் வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் திருமந்திரம்) என்று கூறி மக்களைத் திருத்த முயன்றனர்.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். ராமலிங்க அடிகளார், சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த. அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதி குலமென்றும்…ஓதுகின்ற பேயாட்டம் என்றும் சாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.
0
ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும் ‘சாதி’ என்ற மாய கௌரவத்தை இங்கு யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
சாதிகளின் இருப்பு ஒருபுறம் இருந்தாலும் சாதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெருகவே செய்தது. கி.பி. 52க்குப் பின் மலபாரில் வந்து குடியேறிய அராபியர்கள் தொடர்பால் ‘மாப்பிள்ளை’ என்னும் சாதியினர் தமிழகத்தில் தோன்றினர். கி.பி. 6ம் நூற்றாண்டில் ஹர்ஷர் காலத்தில் சமூகத்துறையில் சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை ஆகியவை வலுவாக மேற்கொள்ளப்பட்டன.
கி.பி. 7ம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து வந்தது. பிறப்பால் சாதி தோன்றுகிறது என்னும் கருத்து வேரூன்றலாயிற்று. தொழில் அடிப்படையில் பிறந்திருக்கக்கூடிய சாதி, தொழில் மாறினாலும் மாறாத நிலையில் நிலைபெற்றது. இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், சிறுசிறு சாதிகளும் புது சிறு உட்சாதிகளும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயத்திலிருந்த சாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது.
13ம் நூற்றாண்டில் மன்னன் இறைவனாகவே கருதப்பட்டான். அவன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து நிலவியது. உடையார், ஆழ்வார், பெருமாள் ஆகிய சொற்கள் இருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன. சமய குருக்கள் அரசவையிலேயே சமயக் கடமைகளில் துணை புரிந்தனர். அவர்களுக்கும் உடையார் எனப் பெயர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கல்வி, உயர்மட்டத்திலிருந்த குடிமக்களுக்கே உரியதாக இருந்தது. வேதம், புராணம், இலக்கணம், தர்க்கம் போன்ற வடமொழிக் கல்வியே நிறுவனங்களில் அளிக்கப்பட்டது. பிற தொழில்நுட்பங்கள், கலைகள் ஆகியவை குல மரபில் வழிவழியாகவே கற்றுக் கொடுக்கப்பட்டன.
மக்களின் வேளாண் பெருமக்கள், வணிகப்பெருமக்கள், பிராமணர்கள், தேவரடியார்கள் சமுதாயத்தில் மேல்தட்டில் இருந்தனர். உழுவோர், படைவீரர்கள், தொழில் வினைநர்கள் ஆகியோர் அடுத்த நிலையிலும் விளங்கினர். நிர்வாகம்; நாடு, நகரம், சபை ஆகியவற்றின் கைகளில் இருந்தது. ஏனையோர் அனைவரும் இம்மூன்றைச் சார்ந்து வாழ்ந்தனர். வேளாளரில் இருந்தும் பிராமணரிலிருந்தும் அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றினர்.
வேந்தர்கள் குலங்களையும், பிராமணர்கள் கோத்திர, சூத்திரங்களையும் கொண்டிருந்தனர்.
சாதிகள் தொழிலடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அவரவர்க்குத் தனியான குடியிருப்புகளும் இருந்தன என்பதைக் கம்மாளச் சேரி, பறைச்சேரி, தளச்சேரி போன்ற பெயர்கள் காட்டும். மனுவின் நெறி இன்று சாதியொழுக்கத்தைக் காப்பதை அரசர்கள் தம் பெருமையாகக் கருதினர். அவ்வச் சாதியினர் தம் பெருமையினைப் பறைசாற்றிக் கொள்ள இலக்கியங்களையும் படைத்துக் கொண்டனர்.

தமிழர்களும் சாதிகளும்
caste

சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை.
தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் ஒரே வகையான இனத்தைச் சார்ந்த செடியினம் அல்லது உயிரினம் ஆகியவற்றைக் குறிக்க Family என்ற சொல்லைப் பயன்படுத்துவர். இந்த ஆங்கிலச் சொல்லுக்குக் குடும்பம், குடும்ப உறுப்பினர், தொகுதி, பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச் சிறப்புக் குழு, இனம், நேசத் தொடர்பு கொண்ட இனத்தொகுதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இதே அடிப்படையில் தான் சாதி என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டது.
‘நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல்) என்பது நூற்பா. நீருள் வாழும் இனங்களில் நந்து என்பதும் நாகு என்பதும் பெண்பால் பெயர்பெறும் என்பது இதன் பொருள். இதைப் போன்றே மணிமேகலையிலும் ஒரு குறிப்பு வருகிறது.
பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்
இன்னோரிடத்தில் இப்படி வருகிறது.
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்
இந்த இரு இடங்களிலும் வரும் சாதி என்ற சொல், வகை அல்லது பண்பு என்ற பொருளில்தான் ஆளப்பட்டுள்ளது.
ஆக, சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும் அது மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து, தனிமைப்படுத்தியுள்ள இக்கால சாதி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்பது உறுதி.
சாதி என்னும் சொல்லுக்கு நிகராக ஆங்கிலத்தில் வழங்கும் சொல் Caste என்பதாகும். இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி தரும் விளக்கம் இது.
‘சாதி என்ற பொருளை உணர்த்தும் இச்சொல் ஸ்பானிஷ் மொழியில்தான் முதன் முதலில் தோன்றியது. பின்னர் இந்தியச் சமூகத்தில் நிலவும் மிகவும் இறுகிப்போன சமுதாய விதிகளைக் குறிக்கும் சொல்லாக இது 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் வழங்கப்பெற்றது.
‘இச்சாதி அமைப்பு (காஸ்ட் சிஸ்டம்) தனி மனிதர்களை அவர்களுடைய பிறப்பு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. இவ்வாறு வரிசைப்படுத்தும் முறையும் அச்சமூக அமைப்பில் உள்ள திருமணம் மற்றும் சமூக உறவுகளால் (சோஷியல் இண்டர்கோர்ஸ்) பாதுகாக்கப் பெற்று, இந்து அல்லாத பிற ஆசியச் சமூகங்களிலும் இடம்பெற்று விட்டது.
‘இந்தியாவில் தொன்றுதொட்டு நிலவிய நால் வருணப் பாகுபாடே சாதிகள் தோற்றம் கொள்ளக் காரணமாயின என்ற கருத்து தவறானது. வேத காலத்துக்குப் பின்னர் தோன்றிய வணிகக் குழு, தொழில் குழு (கில்ட்) ஆகியவற்றின் விளைவே சாதியின் தோற்றத்துக்குக் காரணம். (The Oxford Reference Dictionary, பக்கம் 137).
சாதிகளின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. இந்தியச் சமுகம் பற்றி ஆராயும் மேலைநாட்டு ‘இந்தியவியல்’ அறிஞர்கள் (இன்டாலஜிஸ்ட்) சாதிகளின் தோற்றத்துக்கு ஆரியர்களோ அவர்களின் வேதங்களோ காரணமாக அமையவில்லை என்றும் ஆரியர் இந்தியாவுக்கு வந்து, சிந்துச் சமவெளியிலிருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவிய பின்னரே இந்தியாவில் சாதிகள் அரும்பத் தொடங்கின என்றும் கருதுகின்றனர்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதுதான் மேலே கண்ட சாதிகள் பற்றிய ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் விளக்கம். இத்தகைய கருத்தை உருவாக்கிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் Dr. Muir, அமெரிக்க அறிஞரான Henrich Zimmer ஆகியோர்.
சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களின் நான்கு வேதங்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட உபநிடதங்களும் தரும சாத்திரங்களுமே அடிப்படை என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றொரு பிரிவினர். இவர்கள் பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேத வேள்விப் பண்பாடுகளையும் எதிர்த்தனர். சாதியின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்னும் கருத்தின் அடிப்படையில் அவர்களைக் கண்டித்தும் மறுத்தும் வந்துள்ளனர்.
இந்தியாவில் தோன்றிய அனைத்து மனித நலச் சிந்தனையாளர்களும் அதாவது வள்ளுவர், கபிலர் (சாங்கியக் கோட்பாட்டை நிறுவியவர்) புத்தர் முதல் தந்தை பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபூலே முதலான அனைவரும் இப்பிரிவைச் சார்ந்தோர் எனலாம். இந்தியாவில் நடந்த சாதி ஒழிப்புக்கான போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களாகவே அமைந்துள்ள வரலாற்று உண்மையும் சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதை உறுதி செய்கிறது.
அம்பேத்கர் சாதிகளை ஆய்வு செய்து, ‘அகமணமே (endogamy) சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்று விளக்குகிறார். மேலும் :
  1. இந்திய மக்கள் ஒரு கலவையான உருவாக்கமாக இருந்தபோதிலும்கூட அவர்களிடைய ஓர் ஆழ்ந்த பண்பாட்டு ஒத்திசைவு உள்ளது.
  2. மிகப்பெரிய பண்பாட்டு அலகைத் தனித்தனிச் சிப்பங்களாக ஆக்குவதே சாதி.
  3. ஒரு சாதியிலிருந்து மற்றெல்லா சாதிகளும் உதயமாயின.
  4. பார்த்தொழுகுதல் (imitation) விலக்கி வைக்கப்படுவதாலும் வர்க்கங்கள் சாதிகளாயின.
என்றும் அம்பேத்கர் வகைப்படுத்துகிறார்.
‘தமிழ்நாட்டில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் கே.ஆர்.அனுமந்தன் பின்வரும் காரணங்களே சாதிகளின் தோற்றத்துக்கு அடிப்படை என்கிறார்.
  1. அகமணம் – தன் சொந்த சாதிக்குள்ளேயே மணம் செய்தல். அதன் வாயிலாகப் பிறசாதியுடன் மண உறவைத் தடுத்தல்.
  2. பிற சாதியினருடன் கலந்துண்ணத் தடை.
  3. பரம்பரைத் தொழில் (கற்பனை அல்லது உண்மை)
  4. தன் பரம்பரையின் தொடக்கம் குறித்த கோட்பாடு (தெய்வீகத்தன்மை அல்லது மனித மூலம்).
  5. புரோகித அமைப்பில் பார்ப்பனர்க்கு உயர்வும் சூத்திரர்க்கு தாழ்வும் கற்பித்த சமூக அமைப்பு.
  6. சாதி நீக்கம் (Ex-communication).
  7. சமயச் சடங்கின் புனிதம் கற்பித்தல். அத்துடன் தூய்மை அற்றவர் எனச் சிலரைச் சமய சடங்குகளிலிருந்து விலக்கி வைத்தல்.
தமிழ்ச் சமுதாயத்தில் ஐந்திணைகளிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக்குழுவினராகவே இருந்திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக்குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. அக்காலத்தில் சாதியோ, வர்ணாசிரமமோ இருந்திருக்காது.
நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.
ஆரியர்களின் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ம் நூற்றாண்டை ஒட்டியே மெதுவாகத் தொடங்கியிருக்கும். சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத்தாக்கம் இருந்திருக்கும். பிராமணர் தமது வருணாசிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன், திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்ய சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர். தமிழகத்தில் இவ்வகையில் ஆரியத்தாக்கம் ஏற்பட்ட காலம் கி.பி. 600க்கும் பின்னர்தான் இருக்க வேண்டும் என்கிறார் பி.டி.சீனிவாச ஐயங்கார்.
0
புத்தர் வாழ்ந்த காலத்தில் சாதி – வருண அடிப்படையிலான சமூக உறவுகள் முழுமையடையாத நிலையில் உற்பத்தி உறவுகள்தான் சமூகத் தகுதியை தீர்மானித்தன. நிலத்தின்மீது ஆளுகை செலுத்தியவர்கள் ‘கஹபதி’கள் என்று அறியப்பட்டனர். அவர்களுக்கென சாதி அடையாளமோ வருண அடையாளமோ இருந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் நிலமற்ற உழைப்பாளிகளும், ஏவல் தொழில் புரிந்தவர்களும் குறிப்பிட்ட வருண, சாதி அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் ‘தாசர்கள்’ என்றும், ‘கம்ம (கரும)க்காரர்கள்’ என்றுமே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. உணவையும் ஊதியத்தையும் எதிர்பார்த்தே இவர்கள் உழைத்ததாகத் தெரிகிறது. இக்காலகட்டத்தில் செல்வர் – வரியவர் என்ற அடிப்படையில் சமுதாய உறவுகள் முரண்பட்டிருந்தனவே ஒழிய மேல் – கீழ் வரிசையில் நிறுத்தப்பட்ட சாதி நிலைகளின் அடிப்படையில் அல்ல.
கி.பி. 500-1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் விவசாய விரிவாக்கம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. மேலும், ஏற்றத்தாழ்வுகள் சாதியப் பாகுபாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டது. காவேரி ஆற்றுப் பகுதியில்தான் சாதிப் படிநிலை அமைப்பு முதன் முதலில் உருத்திரட்டு பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சியில்தான் முழுமையாக ஏர்கொண்டு உழுதல் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பமும், குலக்குழுவும் நிலத்தில் பாடுபட்ட நிலைமை மாறி அடிமைகளையும், கூலிகளையும் கொண்டு விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. முடி மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு மானியங்களாக வழங்கிய நிலங்களில்தான் இந்த அடிமை முறை முதலில் கையாளப்பட்டது.
பார்ப்பனர்களே ஆண்டைகளாக விளங்கியதுடன், நாட்டில் அவர்கள் மேலாண்மையும் செலுத்தி வந்தனர். சமுதாயத்தில் நெறி வகுப்பவர்களாக நிதி, நியாயம் முதலியவற்றை வரையறுத்துத் தீர்மானிப்பவராக தம்மை நிலை நாட்டிக் கொண்டு விவசாயக் கூலிகளையும், ஏனைய தொழில் பிரிவினரையும் சாதிகளாக அடையாளப்படுத்தி அச்சாதிகளை மேல் – கீழ் வரிசையில் நிறுத்தி இன்றுள்ள சாதிப்படிநிலை அமைப்புக்கான வித்துகளை அன்றே அமைத்தனர். தீண்டாமை அன்றே அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டாய உழைப்பாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அடிமைகளாக, கூலிகளாக, சேவைப் பணியாளர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனி வாழ்விடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் அசுத்தமானவர்கள் – கீழானவர்கள் என்று கருதப்பட்டனர். இவர்களது உழைப்பைத் தொடர்ந்து சுரண்டுவதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட தீண்டாமையானது தூய்மையுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அவ்வாறே நீடிப்பதற்கான வலுவான நியாயங்களை தீண்டாமை தொடர்பான கருத்தாடல்கள் வழங்கின.
சாதி அமைப்பானது, குறிப்பிட்ட தொழில் புரிவோரைக் குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தி அத்தொழிலை அந்தச் சாதியும், அதனை ஒத்த சாதிகளும் மட்டுமே புரிய வேண்டும் என்று சட்டம் வகுத்து, அச்சாதியில் பொருளாதார, சமுதாய அந்தஸ்தையும் நிர்ணயம் செய்தது.
குறிப்பிட்ட வருணத்தின் அல்லது சாதியின் தனித்தன்மையையும் அடையாளத்தையும், நிலைநிறுத்த சில சட்டங்களும் கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டன. இன்ன சாதியார் இன்ன தொழிலைத்தான் செய்யலாம்; இன்ன சாதியார் மட்டுமே நிலவுடையாளராக இருக்க முடியும்; இன்னார்தான் அரசாள முடியும், ஆன்மிக அறிவாளிகளாக இருக்க முடியும்; சில சாதிகள் தூய்மையானவை, வேறு சில தீட்டுப்பட்டவை என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகளும், சட்டங்களும் அமைந்தன.
தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிணர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரத்வர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.
இனம், நிலம் ஆகிய வேறுபாடுகளால் இடர்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின் படியே வாழ்ந்து வந்த மக்கள் அந்த வாழ்க்கை முறைலிருந்து நழுவினர்.

source : www. tamilpaper.net