வியாழன், 23 மே, 2013

தமிழகத்தில், முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி

தமிழகத்தில், முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் குணவதி, 23; திருநங்கை.
 இவர், கலெக்டர் வெங்கடாசலத்திடம், எம்.ஏ ., ஆங்கிலமும், கம்ப்யூட்டர் பயிற்சியும் படித்துள்ள தனக்கு, வேலை தர வேண்டும் என, மனு கொடுத்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி வழங்கும் படி, நலப்பணிகள் இணை இயக்குனருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, தேசிய ஊரக சுகாதார திட்டத்தில், குணவதிக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பிரிவில், பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் திருடப்படுவதை தடுப்பதும், வெளிநபர்கள் குழந்தைகள் வார்டுக்குள் வராமல் தடுப்பதும், இவரது பணியாகும். 

இவருக்கு, மாதம், 4,000 ரூபாய் சம்பளமாக வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குணவதி கூறுகையில், ""பஸ், ரயில், கடைகளில் பொதுமக்களிடம் காசு கேட்டு தொந்தரவு செய்யாமல், உழைத்து வாழ வேண்டும் என, உணர்ந்து, வேலை கேட்டேன். எனக்கு மனமுவந்து கலெக்டர் வேலை வழங்கியுள்ளார். 

வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தற்போது, எனக்கு வழங்கிய பணியை, செம்மையாக செய்வேன்,'' என்றார்.

மருத்துவ இணை இயக்குனர் சுப்ரமணி கூறுகையில், ""மாநிலத்தில், முதல் முறையாக திருநங்கைக்கு பணி வழங்கி உள்ளோம். இது, தற்காலிக பணியிடம் தான். விரைவில் சம்பளம் உயர்வதற்கும், பணியை நிரந்தரமாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன,'' என்றார்.