சனி, 28 ஜனவரி, 2017

'புத்தரும்அவர்தம்மமும்' தமிழ்ஆக்கம்-சில தகவல்கள்!

'புத்தரும்அவர்தம்மமும்' தமிழ்ஆக்கம்-சில தகவல்கள்!

 
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ‘The Buddha and his Dhamma’ என்ற ஆங்கில நூலைத் தமிழுக்கு மொழிபெயர்த்த பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், அந்நூலின் முன்னுரையில், மொழி ஆக்கம் குறித்துத் தெரிவித்து உள்ள கருத்துகள்:
1985 டிசம்பரில் ஏதோ ஒரு நாள். மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் முடிந்து நான் சென்னை திரும்பி கொஞ்ச நாட்களே ஆகி இருந்தன. அன்று விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் மிச்சம் இருந்தது.
கடுங்குளிரில், தேநீர்க் கடை வாயிலில், நானும், எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.
வழக்கம்போல், பாபா சாகேப் அம்பேத்கர் பற்றிய எங்கள் பேச்சு ஒரு கட்டத்தில் அவருடைய தி புத்தா அன்ட் ஹிஸ் தம்மா (The Buddha and his Dhamma) பற்றிய செய்திக்குத் திரும்பியது. பாபா சாகேப் அம்பேத்கரின் இறுதி நூலான
அந்நூல் பற்றிய தனிச் சிறப்புகளை, அவர் அடுக்கிக் கொண்டே போனார்.
பேராசிரியரான நான் மாணவன் ஆனேன். எக்ஸ்ரே மாணிக்கம் ஆசிரியர் ஆனார். இருவரும் தேநீர் அருந்தவும் மறந்து போனோம். இமைக்கவும் மறந்தவனாய், இரு காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, அவர் சொன்னவைகளை, மனதில் பதித்துக்
கொண்டே இருந்தேன்.
அந்தக் குளிர்கால அதிகாலையில், என் நெஞ்சில் வைத்த ஆர்வத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அடுத்த நாள் சென்னை வ.உ.சி. நகர் தோழர் செல்வராஜைத் தேடிச்சென்று, அவரிடம் இருந்த அந்த நூலை, இரவல் பெற்று வந்தேன். மிகுந்த
ஆர்வத்தோடும், அளவிலா ஈடுபாட்டோடும், அதீதமான இரசனையோடும், அந்த அற்புத நூலைப் பயின்றேன். மகிழ்ந்தேன்.
சில நாட்களுக்குப் பின் என்னைச் சந்திக்க வந்த எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரிடமும், அந்த நூலின் சில பகுதிகளின் சிறப்பை, இரசனையோடு விவரித்தேன்.
அந்த அற்புத நூலின் அழகிய வசனங்களில் சிலவற்றை மேற்கோள்களாகத் தமிழில் நான் விவரித்தபோது, வியந்து பாராட்டிய அவ்விருவரும், ‘பேராசிரியர் இந்த நூலை, முழுமையாகத் தமிழாக்க முயற்சி செய்யுங்களேன்’ என்றார்கள்.
இந்தத் தமிழ் ஆக்கத்திற்கான விதைத் தெளிப்பு இப்படித்தான் நடந்தது; இவர்களால்தான் நடந்தது.
என் பல வேலைகளுக்கு இடையில், அவ்வப்போது ஓய்வும்-உணர்வும் ஒத்துப் போகும்போதெல்லாம் இந்நூலின் பகுதிகளைத் தமிழ் ஆக்கம் செய்து தொகுத்து வந்தேன்.
அதில் ஓரிரு அத்தியாயங்களை, அரக்கோணம் தோழர் பெருமாள் உதவியுடன் சிறு வெளியீடாகவும் கொண்டு வந்தேன். பாபா சாகேப் அம்பேத்கரின் இறுதி நூலான இதன் தமிழாக்கம் பற்றிய செய்தி எனது கட்டுரை வடிவில், சாவி வார இதழில் (19.9.90)
வெளியானது.
இதைப் படித்த அறிவு வழி இணை ஆசிரியர் தோழர் மு.பா. எழிலரசு, இவ்வரிய நூலின் தமிழ் ஆக்கத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும் எனவும், என்னைப் பார்க்கும்போதெல்லாம்
வற்புறுத்தி வந்தார். அவருடைய பெருமுயற்சியால், புத்தரும் அவர் தம்மமும் தமிழ் ஆக்க நூல் வெளியீட்டுக்குழு அமைக்கப்பட்டது.
என் தமிழ் ஆக்கம் அச்சாவதற்கு முன்பு, எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவராலும் முழுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். இக்கருத்தை, வெளியீட்டுக்கு குழு மகிழ்ச்சியுடன் ஆமோதித்தது. இந்தச் சுமை
மிகுந்த வேலையை, அவர்கள் இருவரும் மனமுவந்து ஏற்றார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம், நாங்கள் மூவரும் தமிழ் ஆக்கப் பரிசீலனைக்காகப் பல மணி நேரங்கள் செலவழித்தோம்.
பரிசீலனை தொடங்கிய சில நாட்களிலேயே, என் தமிழ் ஆக்கத்தில் நான் செய்ய வேண்டிய அடிப்படை மாற்றங்கள் ஏராளம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அதுவரை, உலக சமயத் தத்துவம் பற்றிய என் ஆய்வு அறிவு, அதில் பவுத்தம் பற்றிய என் பொது அறிவு, ஆங்கில அறிவு, தமிழ் இலக்கிய அறிவு ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இப்பெருநூலைத் தமிழ் ஆக்கம் செய்து இருந்த நான்,
இந்நூலின் தமிழ் ஆக்கத்திற்கு இவை மட்டும் போதாது என்று புரிந்து கொண்டேன்.
பவுத்தத்தை பாபா சாகேப் அம்பேத்கரின் பார்வையில் நான் புரிந்து கொள்ள, எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரும் பெரிதும் உதவினர்.
ஒவ்வொரு பரிசீலனையின் போதும், இந்தப் புதிய நோக்கில், புதிய தமிழ் ஆக்கம் செய்து இருந்த நான், இந்நூலின் தமிழ் ஆக்கத்திற்கு இவை மட்டும் போதாது என்று புரிந்து கொண்டேன். புதுப்புது வார்த்தைகளைப் பிரசவித்தேன்.
பல்வேறு பணிகளுக்கு இடையில், இப்பணியைச் செய்ய நேரிட்டதால், தமிழ் ஆக்கமும், பரிசீலனையும் மிகமிகத் தாமதமாயிற்று.
வெளியீட்டுக் குழு அமைக்கப்பட்டபோது, ‘இதோ தமிழாக்கம் தயார்’ என்று நான் செய்த அறிவிப்பின்படி நடந்து கொள்ளாமல் போய்விட்டது.
இத் தமிழ் ஆக்கத்திற்காக, பாபா சாகேப் அவர்களின் மூல நூலைப் பயிலப்பயில, நான் பவுத்தத்தில் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தேன்.
இதற்கு இடையில், எக்ஸ்ரே-எரிமலை இருவரின் அழைப்பின் பேரில், 1991 இல் நாக்பூர் தீக்ஷா பூமிக்குச் சென்று வந்தேன். பாபா சாகேப்போடு பவுத்தம் ஏற்ற பெரியவர் எம்.டி. பஞ்ச்பாய் போன்றோரைச் சந்தித்து பவுத்த விளக்கம் பெற்றேன்.
அந்த உந்துதலின் அடிப்படையில், 1991 ஜூலையில், முறைப்படி தீக்ஷா பெற்று பவுத்தனாகி, என் இயற்பெயரை, ‘வீ. சித்தார்த்தன்’ என மாற்றிக் கொண்டேன். தமிழ் நாடு அரசு இதழிலும் (கெசட்) இச்செய்தி பதிவு ஆகி வெளியானது.
மீண்டும் 1992 இல் நாக்பூர் சென்று, இந்தோரா பவுத்த விஹார் தலைமைப் பிக்கு சஹாய் அவர்களைச் சந்தித்து, இந்நூல் குறித்துச் சில விளக்கங்களைப் பெற்று வந்தேன்.
இவ்விதமான மொழி ஆக்கத் தாமதத்திற்கு முதற்காரணமும், முழுக்காரணமும் நானே; என் ஓய்வு இன்மையே. என் தமிழ் ஆக்கத்தைச் செழுமைப்படுத்த எனக்குத் தேவைப்பட்ட கால அவகாசமே!
1991 அக்டோபர் தொடங்கி, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிய பின், 1993 மே முதல் நாள்தான், முழுத் தமிழ் ஆக்கத்தையும் என்னால் வெளியீட்டுக் குழுவிடம் ஒப்படைக்க முடிந்தது.
இந்தியர் அனைவரையும் சமத்துவ நெறியாளராய், சமதர்மச் சிந்தனையாளராய் ஆக்கக்கூடிய இவ்வரிய பெரிய ஆங்கில நூலை, தமிழ் ஆக்கம் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும்பேறு.
இவ்வரிய நூலின் தமிழ் ஆக்கம் என்னால் செய்யப்பட்டு, எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவராலும், இரவு பகலாய்ப் பரிசீலிக்கப்பட்டது.
எங்கள் பரிசீலனை முறை இதுதான்...
ஆங்கில மூலத்தை ஒவ்வொரு வசனமாய் எரிமலை இரத்தினம் படிப்பார். உடனே, அதற்கு உரிய என் தமிழ் ஆக்கத்தை நான் படிப்பேன். இரண்டையும் கூர்ந்து கவனிப்பார் எக்ஸ்ரே மாணிக்கம்.
பின்னர், கருத்து மயக்கமோ, மொழி ஆக்கத் தடுமாற்றமோ இல்லாமல், தமிழ் ஆக்கம் சிறப்பாக உள்ளதா என அவர்கள் இருவரும் மிகக் கூர்மையாகக் கவனிப்பார்கள். செழுமைப்படுத்தப்பட வேண்டியது இருப்பின், சுட்டிக் காட்டுவார்கள். விவாதம்
மேற்கொள்ளப்பட்டு, தேவை இருப்பின் திருத்தம் செய்வோம்.
சில நேரங்களில் ஒரு வசனத்தைச் சரி பார்க்க ஒரு ஒரு மணி நேரம் கூட ஆகும்.
இந்தப் பரிசீலனையில், நாங்கள் எதிர்கொண்ட பல சிக்கல்களையும், ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளையும் இங்கே நினைவு கூர்கிறேன்.
கடவுள் இருப்பு, தேவர்கள் இருப்பு, ஆன்மா இருப்பு, சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை, ஒட்டுமொத்தமாய் நிராகரித்தவர் புத்தர். அதே கருத்து உடையவர் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.
இதை நன்கு உணர்ந்த நாங்கள், மூல நூலில் பக்கம் 4 இல், 4-2 ஆம் வசனத்தில், ....the gods over the space of the sky என வரும் இடத்தைத் தமிழ் ஆக்கம் செய்வதில் பெரும் விவாதத்தை மேற்கொள்ள நேர்ந்தது.
நேரடியாக இதன் தமிழ் ஆக்கம் இதுதான்: ‘வான் மேல் வாழும் கடவுளர்.’
ஆனால், கடவுள் மறுப்பாளரான புத்தரின் தம்ம விளக்க நூலில் இது எப்படி வரும்?
இங்கே கடவுள் என்பது, உயர்நிலை அடைந்தோரை உணர்த்துவது.
பெரும் விவாதத்திற்குப்பின், இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்த்தேன்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வான்புகழ் எய்தியவர்கள்.’
புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சியைக் கூறும் இப்பகுதியை, பவுத்தத் தத்துவத்தையோ, பாபா சாகேப்பின் கருத்தையோ காயப்படுத்தாமல், திருக்குறள் உதவியோடு, தமிழ் ஆக்கிவிட்ட, திருப்தியில் தொடர்ந்தோம். செலவு ஒரு மணி நேரம்; வரவு கடல்
அளவு மகிழ்ச்சி.
மூல நூலில் வேறு மதங்களைக் குறிக்கவும் Religion என்ற சொல் வரும். பவுத்தத்தைக் குறிக்கும் சில இடங்களிலும் Religion என்ற சொல் வரும். Religion வேறு, Dhamma வேறு என்று விளக்க ஒரு தனி அதிகாரமே இந்நூலில்
எழுதி உள்ள பாபா சாகேப்பின் கருத்துக்கு மாறாகி விடாமல், இச்சொல்லைத் தமிழ் ஆக்கம் செய்ய விவாதித்தோம்.
எனவே, வேறு மதங்களைக் குறிக்கும் இடத்தில் Religion என்பதை மதம் என்றும், பவுத்தத்தைத் குறிக்கும் இடத்தில் Religion என்பதை, சமயம் என்றும் மொழிபெயர்த்தேன். எக்ஸ்ரே-எரிமலை இருவரும் மகிழ்ச்சியுற்றார்கள்.
Rely - சார்ந்திரு என்னும் சொல்லைப் பகுதியாய்க் கொண்ட Religion மதம் என்பது, பவுத்தத்திற்குப் பொருந்தாது. அமைத்தல், உருவாக்கல், சமைத்தல் என்பதைப் பகுதியாகக் கொண்ட, ‘சமயம்’ என்பதே பவுத்தத்திற்குப் பொருந்தும் என
முடிவு எடுத்தோம்.
Nibbana என்பதை, நிர்வாணம் எனத் தமிழில் ஆக்கி இருந்தேன். ‘நிர்வாணம்’ வேறு, ‘நிப்பானம்’ வேறு என விளக்கினார் எக்ஸ்ரே மாணிக்கம். நூல் முழுதும் ‘நிப்பானம்’ என மாற்றினோம்.
Low and Lowly என்பதன் நேரடித் தமிழ் ஆக்கம், ‘தாழ்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்’ என வரும். இதைக் காரணத்தோடு மாற்றச் சொன்னார் எரிமலை இரத்தினம். எனவே, ‘உரிமை மறுக்கப்பட்டவர்களும்,
உதாசீனப்படுத்தப்பட்டவர்களும்’ எனத் தமிழ் ஆக்கம் செய்தோம்.
இந்து மத உயிர்ப்பலிச் சடங்கும், ஆங்கிலத்தில் Sacrifice என்றே குறிக்கப்படுகிறது. தன்னலம் அற்ற, தன்னை அர்ப்பணித்தல் என்னும் பவுத்த நெறியும், ஆங்கிலத்தில் Sacrifice என்றே குறிக்கப்படுகிறது. முன்னதை ‘யாகம்’ என்றும்,
பின்னதைத் ‘தியாகம்’ என்றும் தமிழில் ஆக்கி இருந்தேன். பரிசீலனைக் குழுவின் பாராட்டுக் கிடைத்தது.
மூல நூலின் 190 ஆம் பக்கத்தில், புத்தரின் கூற்றாக, ஒரு அருமையான ஆங்கிலக் கவிதையை அமைத்து உள்ளார் அறிஞரில் பேரறிஞர், இலக்கியச் செம்மல் பாபா சாகேப் அம்பேத்கர்.
புத்தரின் தத்துவப் பிழிவாய், பாபா சாகேப் அம்பேத்கரால் அளிக்கப்பட்டு உள்ள இவ்வாங்கிலக் கவிதையை, கவிதையாகவே தமிழ் ஆக்கம் செய்தேன்.
பரிசீலனையில் தோழர் எரிமலை இரத்தினம், ‘கண்கொத்திப் பாம்பு’ என்பார்களே, அப்படி ஆகி விட்டார். ஆங்கிலத்தில் வந்து உள்ள எல்லாச் சொற்களும் கருத்துகளும் தமிழில் வந்து உள்ளதா? அதில் வராத சொல்லோ, கருத்தோ வந்து
விடவில்லையே என, வரிவரியாய்- ஏன் வார்த்தை வார்த்தையாய் கவனித்துக் கொண்டு இருந்தார்.
இறுகிய அவர் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். அரை மணி நேரம் கழித்து மெல்லத் தலை அசைத்தார். மிக மெல்லப் புன்னகைத்தார். அவர் உடன்பாட்டின் அடையாளங்கள் இவை.
படுகூர்மையாய்க் கவனித்துக் கொண்டு இருந்த எக்ஸ்ரே மாணிக்கம், பாய்ந்து வந்து கை கொடுத்துப் பாராட்டினார்.
அக்கவிதை, இந்நூலில் பதிவு ஆகி உள்ளது.
இவ்வரிய நூலின் தமிழ் ஆக்கத்தைச் செம்மைப்படுத்துவதில் பரிசீலனைக் குழுவினர் காட்டிய அக்கறை, செலவழித்த நேரம், கொண்டு இருந்த கவனம் ஆகியவற்றை, ஒரு சிறிதேனும் எடுத்துக்காட்டவே இவ்வளவும் எழுதினேன்.
இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி, சமத்துவ சமதர்ம ஆட்சி முறை அமைய, பகுத்தறிவு மலர, உண்மை மதச் சார்பு இன்மை ஓங்க, பவுத்தம் பரவ வேண்டும். அதற்கு, பாபா சாகேப் அம்பேத்கரின் The Buddha and His Dhamma
பயிலப்பட வேண்டும்.
இந்த வாய்ப்பு, தமிழர்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்பதற்கான என் எளிய முயற்சியே இத்தமிழ் ஆக்கம்.
இவ்விதமாக, என் மொழி ஆக்கப் பணி முற்றிலுமாய் முடிவுற்ற பின்னர், இத்தமிழ் ஆக்கம் பாபா சாகேப் எழுதியது எழுதியவாறே, உள்ளது உள்ளபடியே, பதவுரை, பொழிப்புரை, கருத்துரை அனைத்தும் கொண்டதாய், நடை இனிமையும், மூல நூலோடு
நல்லிணக்கமும் கொண்டதாய் உள்ளது என இந்நூலைப் பரிசீலித்த எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரும் ஒப்புக் கொண்ட பின்தான், இந்நூல் அச்சுக்கு அளிக்கப்பட்டது. இந்நூலுக்கு விதை தெளித்த அவர்கள் இருவரும்தான், நான் கனி
பறிக்கவும் காரணம் ஆனார்கள். அவர்கள் இருவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
இதன் மூல நூலில் பாகம், பகுதி, பிரிவு, அத்தியாயம் என்ற வகையில் பகுப்புகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கான வசன எண்கள், ஒவ்வொரு அத்தியாயத்தோடும் முடிவுறும். அதனால் ஒரு வசனத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்வது மிகச் சிரமம். ஆனால்,
இத்தமிழ் ஆக்கத்தைப் பயில்கையில், எந்த ஒரு வசனத்தையும் உடனே இனங்கண்டு எடுத்தாள உதவியாக ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நூல் தொடக்கம் முதல் முடிவு வரை, அனைத்து வசனங்களுக்கும் தொடர் வரிசை எண் வழங்கப்பட்டு
உள்ளது.
சுருக்கமாகச் சொன்னால்....
பவுத்தத்தில் சாமி இல்லை; சடங்கு இல்லை; சாதி இல்லை; மாயம் இல்லை; மந்திரம் இல்லை; பூஜை இல்லை; பிரார்த்தனை இல்லை; எல்லாவற்றுக்கும் மேலாய் தனி உடைமைச் சுரண்டல் இல்லை; இவைகளில் எதுவொன்று இருப்பதும் பவுத்தம்
இல்லை.
பவுத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு, சமதர்மம் உண்டு, ஒழுக்கம் உண்டு, இரக்கம் உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, இவைகளில் எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை.
பவுத்தத்தில் உள்ளது இவைகளே; இல்லாதது இவைகளே என்று ஆதாரபூவர்மாய் உலகுக்கு விளக்க, உலகப் பேரறிஞர் டாக்டர் அம்பேத்கர் படைத்து அளித்த மாபெரும் நூலே, புத்தரும் அவர் தம்மமும்.
அறிவுபூர்வச் சிந்தனைக்கு முழுப்பெயர் பவுத்தம்
நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப் பெயர் பவுத்தம்
சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப் பெயர் பவுத்தம்
பரவுக பவுத்த நெறி
ஓங்குக பாபா சாகேப் புகழ்
தோழமையுடன்,
வீ. சித்தார்த்தா
(பெரியார் தாசன்)
======================================================================

சுதந்திரத்தின் வழி பெளத்தம்

 
சுதந்திரத்தின் வழி பெளத்தம் 
(அம்பேத்கர் பெளத்தம் தழுவிய 50வது ஆண்டை நினைவு கூறல்)
- ஸ்டாலின் ராசாங்கம்

இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்வது நமது நோக்கம் அல்ல. அது நமது செயற்பாட்டிற்கான களமும் அல்ல. நம் நோக்கமெல்லாம் சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமே. -அம்பேத்கர்

அம்பேத்கர் பௌத்தத்தை நோக்கி ஏன் சென்றார் என்னும் கேள்வியைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “இந்தியாவில் தீண்டத்தகாதார் என அறியப்படும் சமூகத்தில் பிறந்த காரணத்தினால் தான்” என்று. மதம் என்னும் வழமையான அர்த்தத்தில் அவர் மதம் ஒன்றை சிபாரிசு செய்யவில்லை. மதம் குறித்த வரையறையை விட மதத்தினால் ஆளப்படும் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். சமுதாய அமைப்பைக் கட்டிக் காக்கும் இந்த நடத்தை முறைகளை வைத்தே அவர் இந்து மதத்தை நிராகரித்ததும் பௌத்தத்தை மறுஉயிர்ப்பு செய்ததும் நடந்தது. மதம் தொடர்பான எல்லாவித அறிதல்களுடன் விவாதங்களைத் தம் எழுத்துக்களில், பேச்சுக்களில் அவர் மேற்கொள்கிறார்.

சமூகக் குழுவினர் மதமாயிருக்கும் போதுதான் மற்ற சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை உண்டாக்கவும், பலத்தினைப் பெறவும் முடியும் என்று கருதிய அம்பேத்கர் இந்து மதத்தின் அடிப்படையும், நடத்தை விதிமுறைகளும் அதற்கு எதிராய் இருப்பதோடு பாகுபாட்டையே அதுதன் உயிராகக் கொண்டிருப்பதையும் தேர்ந்த படிப்பறிவின் துணைகொண்டு கண்டு கொண்டார். அம்பேத்கரின் மதமாற்றம் பற்றி பேசும் பலரும் பூனா ஒப்பந்தம், 1927 சௌதார் குளம் விவகாரம், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் தந்து மதமாற்றம் என்பதற்கு ‘விரக்தி’என்பதான தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். நேரடியாக எதிர்கொண்ட அரசியல் பிரச்சினையெனும் அளவில் அவைகளுக்கான முக்கியத்துவத்தை மறுக்க முடியாது, என்றாலும் “தீண்டாமை என்பது ஏதோ குறுகிய கால சுருக்கமான ஒன்று அன்று. அது நிலையானது. இன்னும் சுருக்கமாக தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இந்துக்களுக்கும் தீண்டப் படாதோருக்கும் இடையே நடைபெறும் நிலையான போராட்டம் இது” என்று கூறுவதன் மூலம் சாதியமைப்பின் மரபுரீதியான தாக்கத்தினை எதிர் கொள்ளவே நீண்டகால அனுபவத்தின் அடிப்படையிலே மதமாற்றத்தினை அவர் சிபாரிசு செய்தார்.

சாதி ஒழிப்பு, மதமாற்றம், சனநாயகம் ஆகியவை குறித்து அவர் கொண்டிருந்த கருத்துக்கள் முற்றிலும் புதியவை. மதமாற்றம் பற்றிய அவரது அணுகுமுறையை அவருக்கான பல்வேறுபட்ட அறிவுத்துறை புலமையிலிருந்து விளங்கிக் கொள்வது இங்கு குறைவே, மதம் மாறப் போவதான அறிவிப்பை வெளியிட்ட 1936ம் ஆண்டுக்கு முன்பிருந்தே மதம் தொடர்பான படிப்புகளில் ஆர்வங் கொண்டிருந்த அவர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தபின் 1940களின் தொடக்கத்திலேயே மதங்கள் குறித்த ஒப்பியல் ஆய்வினை செய்து முடித்திருந்தார். இதற்கிடையே பல்வேறு மதத் தலைவர்களும் அவரைச் சந்தித்தனர்.

அம்பேத்கர் “அறிவியலை நன்கறிந்த நவீன மனிதரொருவர் மதம் ஒன்றை ஏற்க விரும்பினால் அவருக்கேற்ற மதம் புத்தரின் மதம் மட்டுந்தான்” என்றார். இறுதியாக 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் நாக்பூரில் ஏராளமான மக்களோடு பௌத்தம் தழுவினார் பௌத்தத்தை அறிவியல் ரீதியாக விளக்கியதாலேயே மகாபோதி சொசைட்டி கூட கடுமையாக விமர்சித்ததோடு பௌத்தம் தழுவியவர்களை நியோ - புத்தீஸ்டு என்றும் சொன்னது. (இதனை முன்னுணர்ந்த அயோத்திதாசர் கோட்பாட்டு ரீதியாகவே பூர்வ பௌத்தர் என்று அழைத்தார்) இந்திய தொல்குடி மக்களின் வழிபாடு, கிறித்துவ - இசுலாமிய மதங்களுக்கு மாறுவதாய் கிட்டும் சமத்துவம் பற்றயெல்லாம் அம்பேத்கர் அறிந்திருக்கிறார்.

இங்கு அம்பேத்கருக்கு பௌத்தம் மீதான ஆர்வம் ஈடுபாடு எங்கிருந்து உருவானது என்று ஆராய வேண்டிய அவசியமும் எழுகிறது. அவர் சிறுவனாக இருந்த காலத்திலேயே தமிழகத்தில் தீண்டப்படாதாரிடையே பௌத்த மறுமலர்ச்சி உருவாகியிருந்தது. இப்பௌத்த முன்னெடுப்புகள் அவருள் தாக்கம் ஏற்படுத்தின என்பதற்கு வெளிப்படையான ஆதாரங்கள் ஏதுமில்லை. என்றாலும் அயோத்திதாசரின் பௌத்த மையமாக விளங்கிய கோலார் தங்கவயலோடு அவர் அதிகமும் தொடர்பு கொண்டிருந்தார். வட ஆற்காட்டு மாவட்ட தலித்துகளே தங்கவயலில் சாக்கைய பௌத்த சங்கங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே அம்பேத்கரின் அரசியலை அவர்கள் ஏற்றிருந்தனர். அம்பேத்கர் உருவாக்கிய சுதந்திரா தொழிலாளர் கட்சி, அகில இந்திய ஷெட்யுல்டு பெடரேஷன் (SCF) இயக்கமும் செல்வாக்கோடு திகழ்ந்த பகுதியாகும். இங்கு 2 முறை வருகை தந்த அம்பேத்கர் தலித்துகளின் கடந்த கால செயற்பாடுகளை அறியாதிருக்க முடியாது. இங்கு அப்பாதுரையார் போன்றோரை யெல்லாம் சந்தித்து திரும்பிய அம்பேத்கரின் நூலகத்தில் இருந்த ஒரே நூலாக அயோத்திதாசரின் பௌத்த மார்க்க வினா-விடை நூல் இருந்தது என்று சொல்லப்படுகிறது. இவையெல்லாம் மறைமுகமான ஆதாரங்கள் மட்டுமே.

அம்பேத்கர், அயோத்திதாசரின் சமகாலத்தில் செயற்பட்ட பேராசிரியர் லட்சுமி நரசுவின் Essence of Buddhism நூலை 1948ல் பதிப்பிக்கிறார். லட்சுமி நரசுவின் Religion of the modern Buddihist நூலும் கையெழுத்துப் பிரதியாகவே அம்பேத்கரிடம் இருந்தது. Essence of Buddhism நூலின் பதிப்புரையில் லட்சுமிநரசுவை சிறப்பாக பேசியிருப்பினும் அவர் தன்னுள் செலுத்திய பாதிப்பு குறித்து அவர் வெளிப்படையாக ஏதும் பேசவில்லை. எனினும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தாக்கம் அவரிடமிருந்தது என்று துணிந்து கூறலாம்.

உண்மையில் மிகச்சிறிய வயதிலேயே புத்தரால் அவர் கவரப்பட்டிருந்தார். அம்பேத்கர் நான்காம் வகுப்பில் தேர்வு பெற்றதற்காக மகர் சமூக மக்கள் அம்பேத்கருக்கு பாராட்டு கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் அவர் தந்தையின் நெருங்கிய நண்பர் தாதா கெலூஸ்கர் என்பவர் “பரோடா சாயாஜிராவ் கீழைத்தேய நூல் வரிசை”க்காக தானெழுதிய புத்தரின் வாழ்க்கைக் குறித்த நூலை அம்பேத்கருக்கு பரிசாக வழங்கினார். தன்னை அந்நூல் தன்னை அதிகம் பாதித்ததாகவும் அது போன்ற நூல்களை அறிமுகப்படுத்தாமல் ராமாயணம் போன்ற நூல்களையே அறிமுகப்படுத்திய தன் தந்தையின் மீதான விமர்சனத்தையும் அவர் எழுதிச் செல்லுகிறார். அதே போல பௌத்தமே தான் மாறவிருக்கும் மதம் என்று அறிவிக்காத முன்பே அவருடைய நூல் நிலையத்தில் புத்தமதத்திற்கு முதன்மை அளித்திருந்தார் என்று டி.சி.அஹிர் என்பவர் கூறுகிறார். அதோடு அம்பேத்கர் கற்றிருந்த மானுட சமூகவியல் போன்ற துறைகளும் மதம் பற்றிய அவரது கருத்தை உருவாக்கியிருந்தன. மீராநந்தா போன்ற ஆய்வாளர்கள் ஜான்டூயி போன்ற மேலைநாட்டு மனிதாய சிந்தனையாளர்களின் தாக்கத்தினையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதோடு சுதந்திரமான சமூக அமைப்பு என்பதற்கேற்பவே தன்னுடைய தேசியம், சனநாயகம், மதச்சார்பின்மை என்பவைகளையும் மறுவரையறை செய்திருந்தார். பிறர் கூறும் சனநாயகம் எது? எவை? என்பதிலிருந்து அடிப்படையிலேயே அம்பேத்கர் மாறுபட்டிருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் சனநாயக அம்சங்களை ஐரோப்பிய மரபிலிருந்து மட்டுமல்ல தொன்மையான பௌத்த கருத்து களிலிருந்தும் அவர் முன்னெடுக்கிறார். மதமொன்றின் கோட்பாடு அடிப்படை பற்றி பேசும்போது “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கை சனநாயகத்துக்கு இணக்கமான தாயிருக்க வேண்டும்” என்று கூறுவதின் மூலம் சனநாகய அம்சத்தையும் மத அடிப்படையையும் அவர் இணைக்கும் புள்ளியை நாம் புரிந்து கொள்ளலாம்.

இறுதியாக பௌத்தத்தை அவர் மார்க்சியத்தோடு ஒப்பிட்டு விவாதித்திருப்பது சுவைமிகுந்த பகுதியாகும். அதோடு மார்க்சியர்களின் மீது கொண்டிருந்த நெருக்கத்தையும் அது காட்டுகிறது. “.. இவர்கள் இருவரையும் கற்று இவ்விருவருடைய கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளவன்” என்ற முறையில் இரண்டு தத்துவங்களின் குறிக்கோள்களும் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் மார்க்சியத்தின் வழிமுறை களை விமர்சிக்கிறார். “குறிக்கோளை அறிந்து கொள்வதை விட அதன் வழிமுறைகளை அறிந்து கொள்வது அதிக முக்கியம்” என்னும் கருத்தையும் அவர் மார்க்சியத்தின் புறவயமான மாற்றம் என்பதை மறுக்கிறார். சாதி ஒழிப்பு என்பது புற அளவில் நடைபெறக் கூடிய ஒன்று மட்டுமல்ல. சாதி ஒழிப்பு மனமாற்றம் சார்ந்ததாக இருக்கும் என்பது அவர் கணிப்பு. மன அமைப்பை வழி நடத்தக் கூடிய பண்பாட்டு நடத்தை மாற்றத்துக்கு முன்னுரிமை தருகிறார். பௌத்தம் மனம் மற்றும் உடல் என்பதின் வழியாக சமூக மனிதனை அணுகுகிறது.

இந்நிலையில் மனித வாழ்வை எந்திரத் தனமாக மார்க்சியம் கருதுவதாக பேசும் அம்பேத்கர் அதன் வழிமுறைகளை விமர்சிக்கிறார். கம்யூனிச நாடுகளின் சிதைவுக்கு காரணமாக அதன் வழிமுறைகளையே காரணமாக இன்னும் பேசுகிறோம். அம்பேத்கரின் விமர்சனமும் அதைப் பற்றியதுதான். இந்த இடத்தில் அவரின் முடிவு சரியா? தவறா? என்று விவாதிப்பது நோக்கமல்ல மாறாக அவர் இதனை எவ்வாறு புரிந்து கொண்டார் என்பதே இங்கு முக்கியம். குறிப்பாக அவர் எட்டும் முடிவுகளின் அடிப்படையாக சாதி ஒழிப்பு என்பதும் சமூகத்தின் கூட்டு நினைவை உருவாக்குவது என்பதும் அமைந்து நிற்கிறது. 
---
புதிய காற்று
ஆகஸ்ட் 2006
===================================================================

 
பௌத்தமும் தமிழும்
உள்ளுறை
அதிகாரம்
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
தொடர்புரை
1.
2.
3.
4.
5.
6.
7.

பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப்

பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப்

 
 
பவுத்தத்தை மிகத் தெளிவாகச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும்தான்.
மார்க்ஸ் முல்லர், பி.எச்.ஹட்சன், வில்லியம் கெய்கி, செர்பட்ஸ்கி, நியூமன், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, அரிபிரசாத், சரத் சந்திரதாஸ், இராகுல சாங்கிருத்தியாயன், மயிலை சீனிவாசன், நா.வானமாமலை, ப.ராமசாமி போன்ற அறிஞர் பெருமக்கள் பவுத்தத்தை நன்கு ஆய்வு செய்திருக்கிறார்கள். அம்பேத்கரும் ஆய்வு செய்தார். ஆயினும் பாபாசாகேப் அம்பேத்கர் மட்டுமே ஆய்வுடன் நிற்காமல், அதைத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
 
பவுத்தம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கிறது. புத்தரால் சொல்லப்பட்ட பவுத்தம், அது தேரவாதம். புத்தர் பெயரால் திரித்துச் சொல்லப்பட்ட பவுத்தம், மகாயானம்.
 
தேரவாதம் ஆரியத்திற்கு எதிரான ஒரு சமூக எழுச்சி இயக்கம். மகாயானம் - ஆரியவாதம், சூனியவாதத்தை உள்ளடக்கிய ஒரு மதம். தேரவாதம் திராவிடர்களுக்கான இயக்கம் - மதம் அன்று. மாகாயானம் ஆரியர்களால் வடிவமைக்கப்பட்டது, மதம் ஆனது.
 
இவை இரண்டும் புத்தரின் மரணத்திற்குப் பின்னர், ஒன்றோடு ஒன்று குழம்பியது. பவுத்தத்திற்குள் நுழைந்திருந்த பார்ப்பனத் துறவிகள் புத்தரின் நேரடிக் கருத்துகளைச் சிதைத்தார்கள், கொள்கைகளை மாற்றினார்கள், புதிய கற்பிதங்களைச் சேர்த்தார்கள், புத்தரும் அவரின் கோட்டபாடுகளும் மருவின. இப்பொழுது எது நேரிய பவுத்தம் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
 
அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர், “புத்தரின் வாழ்க்கையும், அவரின் கொள்கையும் தெளிவானவை. அதைச் சொல்வதில் முற்றிலும் குழப்பம் நிறைந்துள்ளது” என்கிறார். இக்குழப்பம் தீர பவுத்தத்தை மறுகட்டமைப்பு (புனர்நிர்மாணம்) செய்ய வேண்டியதன் அவசியத்தை அம்பேத்கரின் எழுத்துகள் வலியுறுத்துகின்றன.
 
பவுத்தத்தின் அடிப்படையே நான்கு செய்திகளில் அமைகிறது. உலகியலில் 1. துன்பம் இருக்கிறது. 2. துன்பத்திற்கான தோற்றுவாய் இருக்கிறது. 3.துன்பத்தை நீக்க வழி இருக்கிறது. 4. அத்துன்பத்தை நீக்கியே ஆகவேண்டும். இவைதான் பவுத்தத்தின் அடிப்படை.
 
ஆரியவாத மகாயானம் இதை எப்படிப் பார்க்கிறது?
  1. மனிதனுக்கு அவன் இறக்கும் வரை துன்பம் இருந்து கொண்டே இருக்கும். 2. அத்துன்பத்திற்குக் காரணம் அவன் மனிதனாகப் பிறப்பு எடுத்தது. 3. இத்துன்பம் நீங்க வழி அவன் மீண்டும் மறுபிறப்பு எடுக்கக் கூடாது. 4. மறுபிறப்பு இனி எடுக்காமல், ஆரிய வழியில் வாழ வேண்டும், அதுவே துன்பம் நீங்க வழி. இதைத்தான் இன்றைய பவுத்தர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்தக் கருத்தை முற்றிலும் நிராகரித்த பாபாசாகேப் அம்பேத்கர், “இந்த நான்கு அடிப்படைச் செய்திகள் மனிதனின் நம்பிக்கையைத் தகர்ப்பனவாக உள்ளன. இந்த நான்கும் புத்தரின் போதனைகளைத் தகர்ப்பனவாக இருக்கின்றன. இவை புத்தரால் போதிக்கப்பட்ட உண்மையான போதனைகளின் பகுதிகளா? அல்லது பிற்காலத்தில், துறவிகளால் உண்டாக்கிச் சேர்க்கப்பட்டவைகளா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்.
 
துன்பம் பற்றிய நான்கு கோட்பாடுகளைப் புத்தர் சொன்னார் என்பது உண்மையாக இருந்தாலும், மேலே சொன்ன மதம் சார்ந்த, மகாயான ஆரிய பவுத்த மதம் சார்ந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. அம்பேத்கர் சொல்கிறார் :
 
“மதம் வாழ்க்கையின் உண்மைகளோடு தொடர்பு கொண்டதாக இல்லை. கடவுள், ஆன்மா, சொர்க்கம், பூவுலகம் ஆகியவை பற்றிய கோட்பாடுகளையும், யூக அனுமானங்களையும் கொண்டு இருக்கக் கூடாது. கடவுளையும், ஆன்மாவையும் மதம் மையப்படுத்துகிறது. அது தவறு”.
 
பாபாசாகேப் அம்பேத்கரின் இந்த விளக்கம், புத்தரின் கொள்கையை, மதம் சார்ந்ததாக மாற்றம் செய்யப்பட்டதற்கு ஓர் எடுத்துக் காட்டாய்க் கொள்ளலாம். இப்படி புத்தர் திரிக்கப்பட்டுச் சொல்லப்படுவதைத் தான் குழப்பம் என்றார் அமபேத்கர். அப்படியானால் இதற்கான, சரியான விளக்கம் என்ன?
 
அதையும் பாபாசாகேப் அம்பேத்கரே சொல்கிறார். ‘துன்பம்’ என்ற சொல்லை ‘வர்க்கம்’ என்று போட்டுப் பார்க்கவேண்டும் என்று. உலக அளவில் இருக்கும் வர்க்கம், இந்தியாவில் ‘சாதி’யாக இருக்கிறது என்பதை இங்கே கவனத்தில் இருத்திப் பார்க்க வேண்டும். வர்க்கம், சாதி இரண்டிலும் சமமற்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. எனவே வர்க்கம், சாதி போன்ற சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வுகளே உலகியல் துன்பம், அதற்கான சாரம் என்பதை அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.
 
வர்க்கமும் சாதியும் தனியுடைமையாகும் போது, உலகியல் சமூகத் துன்பம் உருவாகிறது. அதாவது முதலாளிய வர்க்கம், ஆதிக்க சாதி என இதைக் கொள்ளவேண்டும்.
 
“தனி மனிதனின் தனியுடைமை என்பது, ஒரு வர்க்கத்திற்கு அதிகாரத்தையும், மற்றொரு வர்க்கத்திற்கு துன்பத்தையும் கொடுக்கிறது” எனகிறார் அம்பேத்கர்.
 
இதையே இன்னொரு வழியில், கடவுள், பூசை, பிரார்த்தனை இவைகளில் புரோகிதர், பூசாரி, குருமார்கள் ஆகிய தீயபுத்திசாலிகள் மூடநம்பிக்கைகளை உருவாக்கி, சமத்துவமற்ற சமூகநிலையை உண்டுபண்ணி அதிகார வர்க்க பீடமாக மதம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் அம்பேத்கர். வர்க்கமும் சாதியும் வேறுவேறு அல்ல என்பது அவரின் மையப்புள்ளி. அதுமட்டுமல்ல, இந்த ஆதிக்க பீடத்திற்கு எதிராக “பதித்” எனும் ஒடுக்கப்பட்டவர்கள் எழுச்சியுடன் போராட வேண்டும் என்றும் அம்பேத்கர் அழைக்கிறார். இது சாத்தியமா?
 
கொல்லாமையை வலியுறுத்துகிறார், போரை மறுத்து வெறுத்து ஒதுக்குகிறார், அகிம்சையை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புத்தர் சொல்கிறாரே, அதைத் தானே பாபாசாகேப் அம்பேத்கரும் வழிமொழிவார் என்று பிறர் சொல்லலாம்!
 
பாபாசாகேப் அம்பேத்கர் சொல்கிறார், “புத்தர் வன்முறையை எதிர்த்தார். ஆனால், நீதியை ஆதரித்தார். நீதிக்கு அவசியமானால் வன்முறையைப் பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார்” என்று சொல்லும் அவர் தொடர்ந்து, வைசாலியின் படைத்தலைவன் சிம்ம சேனாதிபதியிடம், “அமைதியைப் பாதுகாப்பதற்கான எல்லாவழிகளும் தோல்வியடைந்தால், போர் தொடங்குகிறவன் மீதுதான் இம்சையின் பொறுப்பு சாரும். தீய சக்திகளுக்கு ஒருபோதும் பணியக் கூடாது. போர் இருக்கலாம்; ஆனால், அது சுய நல நோக்கத்திற்காக இருக்கக் கூடாது” என்று புத்தர் சொல்வதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
 
இராஜகிருகத்தில் இருந்து நாளந்தா போகும் வழியில் அம்பலத்திக என்ற சோலையில் துறவி சுப்பியர், துறவி பிரம்மத்தரோ இருவருக்குமான தம்மம் பற்றிய சர்ச்சையில் புத்தர் சொல்கிறார், “நாம் போராளிகள். எங்கெல்லாம் தம்மம் அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள் - வாயடைத்து நிற்காதீர்கள்” என்று. இதையும் பதிவு செய்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். இங்கே தம்மம் என்பது ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ நிலைக்கான மனித உறவு என்பதையும் கவனிக்க வேண்டும்.
 
இப்பொழுது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்!
புத்தரைப் பற்றியும் அவரது பவுத்தத்தைப் பற்றியும் சொல்வது முற்றிலும் குழப்பமாக இருக்கிறது என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னதைத் தொடக்கத்தில் குறிப்பிட்டு இருந்தோம். அதை அவர் இப்படி விளக்குகிறார்.
“பொதுவாக புத்தர் அகிம்சைத் தத்துவத்தோடு இணைக்கப்படுகிறார். அவருடைய போதனைகள் அனைத்தும் இதுவே என்று கொள்ளப்படுகிறது. உண்மையில் புததரின் போதனைகள் அகிம்சைக்கு அப்பால் பரந்துபட்டு இருக்கிறது என்பதை எவரும் சரிவர உணரவில்லை”.
 
இங்கே அகிம்சைக்கும் அப்பால் பரந்து பட்டிருப்பவை என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொல்வது, வேதம், ஸ்மிருதி, பிறப்பின் படிநிலை, சதுர்வர்ணம், மதம், சாதி இவை போன்ற மூடக்கருத்துகளால், ஆதிக்கத்தால் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட சமத்துவமற்ற சமூகத்திற்கு எதிராக, சமத்துவத்தை ஏற்படுத்த புத்தர் சொன்ன புரட்சிகர சிந்தனைகள், அதற்காக அவர் உருவாக்கிய சமூக எழுச்சிப் பவுத்த சங்கம், அவரது போராட்டக் குணம், இவை எல்லாம் அகிம்சைக்குள் அடங்காதவை. இந்தப் போராட்டம் ஆரியத்திற்கு எதிரான சமூகப் போராட்டம்.
 
இப்போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஆரியம்,ஆரியப் பார்ப்பனர்களால், பவுத்தம் உடைக்கப்பட்டது. புத்தரின் சமூகப் புரட்சிகர சிந்தனைகள் மறைக்கப்பட்டன. அவைகளுக்குப் பதிலாக, அகிம்சை, சீலங்கள் என்ற ஒழுக்கம் பற்றிய கோட்பாடுகள், புத்தரின் அவதாரங்கள், தனிமனிதத் துன்பம் பற்றிய கருத்துகள் முன்னிறுத்தப்பட்டன. இவைகளை முன்நிறுத்தியது ஆரிய சூன்யவாத மகாயானம்.
 
எனவே புத்தரின் சமூகம் பற்றிய சிந்தனைகள், சந்நியாசியின் சிந்தனைகளாக மாற்றம் பெற்றுவிட்டன. கடவுளை மறுத்த புத்தர் கடவுள் ஆக்கப்பட்டார். பூசை புனஸ்காரங்களை மறுத்த புத்தருக்கே பூசை செய்யத் தொடங்கிவிட்டனர். இவையும் பவுத்தத்தைக் காண்பதில் குழப்பம் விளைவித்தன. இக்குழப்பங்களைக் களைய அம்பேத்கரின் உழைப்பும் முயற்சியும் அளப்பரியன.
 
இறுதியாக அவர் சொல்கிறார், “பவுத்தத்தின் எதிர்காலம் அதன் முரண் அற்ற தன்மையைப் பொறுத்தே அமையும்... இப்பிரச்சினைகளுக்குத் தோழர்கள், விழிப்புறத் தம் பங்களிப்பைச் செய்ய வேண்டும், நம்புகிறேன்”
 
இதன் மையப்பொருள்,
பவுத்தம் மறுகட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்; அல்லது, புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பதே! இது ஒன்றே பவுத்தத்தின் குழப்பம் தீர ஒரே வழி என்பதுதான் புரடசியாளர் டாக்டர் அம்பேத்கரின் தெளிவான சிந்தனை!
 
- எழில் இளங்கோவன்

வன்கொடுமை பதிவுகள்

நிர்பயா, சுவாதி போன்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்படும் போது அதை தனக்கு நடந்த கொடூரத்தைப் போல கொந்தளிப்பவர்கள் சுரேகா-பிரியங்கா, ஜிஷா, கலைச்செல்வி போன்ற தலித் பெண்களுக்கு அது நடக்கும் போது தனக்கு சம்பந்தமில்லாதது போல அமைதி காக்கின்றனர். கயர்லாஞ்சியில் கொல்லப்பட்ட சுரேகா – பிரியங்கா இருவரும் ஆதிக்க சாதி பெண்கள் வேடிக்கை பார்க்க ஆதிக்க சாதி ஆண்களால் பிறப்புறுப்பில் கழியடித்துக் கொல்லப்பட்டனர். கேரளாவை சேர்ந்த ஜிஷா கொடூரமான பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின்னர் நடந்த தாக்குதலில் குடல் சரிந்து மரித்தார். கலைச்செல்வி கடுமையான சித்ரவதை மற்றும் தாக்குதலுக்குப் பின்னர் வன்புணர்ச்சி செய்யப்பட்டார்.
 
நிர்பயா சுவாதி போன்ற ஆதிக்க சாதி பெண்களின் கொலைகள் சமூக இயங்கியலுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதே வேளையில் கலைச்செல்வி போன்ற தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள் சமூக இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதுவொரு விவாதப் பொருளாக ஆவதே இல்லை. ஊடகங்களும் அறிவுச் சமூகமும் அரசு நிர்வாகமும் மூச்சடைத்து செத்துவிடுகின்றன.
 
இந்தியாவில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் சாதியே அதற்கான நீதியை தீர்மானிக்கிறது. குற்றவாளி ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்து பாதிக்கப்படைகிறவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தால் அது ஊடகங்களில் ஓர் ஓரமாக செய்தியாகும் தகுதி கூட இல்லாதவை ஆகின்றன. ஆனால் குற்றவாளி யாராக இருந்தாலும் குறிப்பாக ஒடுக்கப்பட்டவராக இருந்து பாதிப்படைகிறவர் ஆதிக்க சாதியினராக இருந்தால் அவ்வளவுதான் அதுவொரு தேசிய பிரச்னை. நாடாளுமன்றத்தில் (ஆதிக்க சாதி) பெண்கள் பாதுகாப்பு சட்டமியற்றும் வரை ஊடகங்கள் அதை விவாதித்துக் கொண்டே இருக்கும்.
 
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் கலைச்செல்வியைப் போல கொடூரமான முறையில் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். யார் அது குறித்து கவலைப்படுவது, பேசுவது, விவாதிப்பது, தடுப்பது? சுரேகாவும் பிரியங்காவும் இருவரும் சுய மரியாதையோடு வாழ முற்பட்டதற்காகவே மகனோடும் சகோதரனோடும் உறவுகொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். அதை மறுத்ததற்காகவே ஊரில் உள்ள பல ஆண்களால் வல்லுறவு செய்யப்பட்டு, பின்னர் உச்சகட்டமாக பிறப்புறுப்பில் மரக்கழிகளை அடித்து கொல்லப்பட்டனர். ஆனால் இந்த கொடூரத்தை ஊடகங்களும் அரசும் மூடி மறைத்தனவே தவிர அதை அம்பலப்படுத்தவில்லை. ஆனால் நிர்பயா விஷயத்தில் என்ன நடந்ததென நமக்குத் தெரியும்.
 
படித்த, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த, வசதி படைத்த, வெள்ளை நிற பெண்களுக்கு கொடுமைகள் நேர்ந்தால் பலருக்கும் ரத்தம் கொதிக்கிறது. அதுவே கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, வசதியற்ற, கறுப்பு நிற பெண்களுக்கு ரத்தம் குளிர்ந்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டோர், வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் கூட பாகுபாட்டை சுமக்கின்றனர், கொலையிலும் அநீதி அவர்களை சூழ்ந்து நிற்கிறது.
 
தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது பெண் என்ற காரணத்திற்காக அல்ல… தலித் என்பதற்காக. சாதிதான் அவர்களை வன்புணர்ச்சிக்கு இரையாக்குகிறது. ஆனால் தலித் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கான எதிர்வினை பெண் என்ற அடிப்படையில் கூட நிகழ்வதில்லை என்பதுதான் வேதனை. இச்சமூகத்தின் கருணையை, அன்பை, கவனத்தை, ஆதரவைப் பெறத் தகுதியற்றவர்களாக அவர்கள் நாள்தோறும் மடிகின்றனர்.
 
தலித் பெண்கள் சாதியால் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு எதிர்வினையாற்றாமல் பெண்ணுரிமை இங்கே எப்படி சாத்தியப்படும்? பாலின சமத்துவத்தை வேண்டுவோர் முதலில் ஆதிக்கமாகவும் அடிமையாகவும் பெண்களை பிரித்து வைத்திருக்கும் சாதியை வேரறுக்க வேலை செய்ய வேண்டும். அதுவரை சாதியத்தை எதிர்க்காத பெண்ணியம் இங்கே தோல்வி கருத்தியலாகவே நிலைத்திருக்கப் போகிறது.
 
– ஜெயராணி
==================================================================
 

குருஞ்சாகுளம்

 
குருதி குடிக்கும் குருஞ்சாகுளம்

தலித் மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் கொடுமைகள்


இந்திய மக்கள் தொகையில் 20% தலித் மக்கள்ன் கிராமங்களில் சேரி அல்லது காலனி என்று கூறப்பட்டு ஒதுக்கப்படும் பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் நிலமற்ற விவசாயக் கூலிகள். இவர்களது வாழ்வு உயர்சாதியினர் வீடுகளில் வாழும் மிருகங்களை விடக் கேவலமாக இருக்கிறது. நிலமுள்ள உயர்சாதி மக்களால் மிகவும் மூர்க்கத்தனமாக இந்த தலித் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில் இருந்ததைவிட இவர்கள் நிலமை இன்னும் மோசமாகிக்கொண்டே செல்கிறது.


இந்த தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள நாட்டில் அதிகரித்த்துக்கொண்டே இருக்கின்றன. 1980-ல் இருந்து 1990 வரை ஆண்டுக்கு சராசரியாக 17,000 குற்றங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன. 1971-ல் இருந்து 1980 வரை உள்ள கணக்குப்படி இது 50% அதிகம்.

சமீபத்தில் தலித்துக்களைக் கொல்லுவது அதிகரித்துள்ளது. எப்ரல் 1990லிருந்து மார்ச் 1991 -க்கு இடைப்பட்ட காலத்தில் 650 தலித் மக்கள் நாட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அதிகரித்துவரும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல. தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இங்கும் நடந்துகொண்டே இருக்கின்றன.

* 1957-ல் முதுகுளத்தூரில் கலவரம்
* 1968-ல் கீழ்வெண்மணியில் 42 தலித்துக்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
* 1978-ல் விழுப்புரத்தில் 12 தலித்துக்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர்.
* 1979ல் உஞ்சனையில் 5 தலித்துக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
* 1981-ல் புளியங்குடியில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
* 1989-ல் போடிப் பகுதியில் கலவரம் நடைபெற்று தலித் மக்களின் உயிரும், கற்பும், உடமைகளும் சூரையாடப்பட்டது நாமறிந்த ஒன்றே.
* 1991-ல் பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 3 தலித்துக்கள் கொல்லப்பட்டனர்.

பரமக்குடியில் சிந்திய தலித்துக்களின் இரத்தம் காயுமுன் இப்பொழுது மற்றொரு சம்ப்பவம் நடைபெற்றிருக்கிறது.

குருஞ்சாகுளம் என்ற ஊரில் நான்கு தலித் இளைஞர்கள் 14.03.1992 அன்று மிகக் கோரமாக கொலைசெய்யப்பட்டிருக்கிறனர்.நினைத்தாலே நம் இதயங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன.

குருஞ்சாகுளத்தில் நடந்த்தது என்ன என்பது பற்றி அறிய நேரில் சென்றோம். அம்மக்களுடன் தங்கி அவர்கள் தந்த தகவல்களை தொகுத்து இக்கட்டுரையில் வழங்குகிறோம்.


குருஞ்சாகுளம்:

நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்தில் சங்கரன்கோயில், கோவில்பட்டி ஆகிய இரண்டு முக்கியமான ஊர்கள் உள்ளன. சங்கரன் கோயிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் சங்கரன்கோவிலில் இருந்து சுமார் 32கீ.மி தூரத்திலும், கோவில்பட்டியிலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்திலும் குருஞ்சாகுளம் என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமம் சங்கரன்கோயில் தாலுக்காவைச் சேர்ந்தது. சுமார் 3 கி,மீ தொலைவில் திருவேங்கடம் என்ற ஊரில் காவல் நிலையம் உள்ளது. குருஞ்சாகுளம் ஒரு தனிப் பஞ்சாயத்தாகும்.


சமூகம் :

வழக்கமாக ஊருக்கு வெளியே காலனி அல்லது சேரி என்று அழைக்கப்படும் பகுதியில் தான் தலித் மக்கள் வாழ்கிறார்கள். குருஞ்சாகுளம் இதற்கு விதி விலக்கு. மேல் சாதியினரையும், தலித் மக்களையும் பிரிப்பது ஊரில் உள்ள மெயின் ரோடு தான்.

ரோட்டிற்கு மேற்கே உயர்சாதியினர் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 350 வீடுகளில் நாயுடுகளும், மற்றும் சுமார் 10 வீடுகளில் தேவர், செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்களும் வாழ்கிறார்கள்.

ரோட்டிற்கு கிழக்கே தலித் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 150 வீடுகளில் பறையர்களும், 25 வீடுகளில் சக்கிலியர்களும் வாழ்கிறார்கள்.

நாயிடு சமூகத்தைச் சார்ந்தவர்கள் தலித் மக்களை இன்னும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகின்றனர். தீண்டாமை மிகப்பெரிய சமூகக்கொடுமை என்று அரசு கூறி அதை ஒழிக்க மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினாலும் அச்சட்டங்கள் குருஞ்சாகுளம் நாயிடுகளைச் சிறிதும் பாதிக்கவில்லை. தீண்டாமையை மிகத் தீவிரமாக இவ்வூர் நாயுடுகள் கடைபிடிக்கிறார்கள். ஒரு சில உதாரணங்களை கூறலாம்.

இவ்வூரில் உள்ள டீக்கடைகளில் இன்னும் தலித் மக்களுக்கு துண்டு கிளாசிலேயே டீ வழங்கப்படுகிறது.
ஊரில் ரோட்டிற்கு கிழக்கே தலித் மக்கள் வாழும் பகுதியில் நீராவி என்ற ஊரணி இருக்கிறது. இதில் நாயிடு மக்கள் மட்டுமே கால் கழுவலாம். தலித் மக்கள் உபயோகப்படுத்தவே கூடாது.

பத்து வயது நாயுடு பையன் கூட 60 வயதுடைய தலித் பெரியவரை ‘டேய் இங்கே வாடா’ என்று தான் கூப்பிடுகிறான்.

நீர்த்தேக்க தொட்டிக்கு நாயுடு தெருவிலிருக்கும் கிணற்றில் இருந்துதான் தண்ணீர் ஏற்றப்படுகிறது. தலித் மக்கள் தெருவிலிருக்கும் கிணற்றை இதற்கு பயன்படுத்தவில்லை. காரணம் தலித் மக்கள் தெருவிலிருக்கும் தண்ணீர் தீட்டுப்பட்டதென்று கருதப்படுகிறது.

படித்த தலித் மாணவர்கள் நல்ல சட்டை, பேண்ட்ஸ் போட்டு தெரிவில் நடக்க முடியாது.

தலித் மக்கள் யாரும் நாயிடுகள் தெருவில் சைக்கிளில் ஏறிச்செல்லக்கூடாது.


பொருளாதாரம்:

நாயிடுகள் தான் இவ்வூரில் நிலங்களை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான தலித் மக்கள் நிலமற்ற விவசாயக் கூலிகள். தலித் மக்களின் வாழ்வு நாயிடுகளைச் சார்ந்தே இருக்கிறது. எனவே பொருளாதாரத்தை வைத்து தலித் மக்களை நாயிடுகள் அடிமைப்படுத்துகின்றனர். மிகக் குறைந்த கூலியே கொடுக்கின்றனர். நாயிடுகளின் கொடுமைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டை கூறலாம். ஒரு தலித் இளைஞர் ஊரிலிருந்து தலித் மக்களை வெளியூருக்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். அவ்வாறு அழைத்துச் சென்றதற்குக் காரணம் வெளியூரில் கூலி அதிகம் கொடுக்கிறார்கள் என்பதே. உள்ளூரில் வேலை இருக்கும் பொழுது எப்படி வெளியூருக்கு வேலைக்குச் செல்லலாம் என்று கூறி வேலைக்கு அழைத்துச் சென்ற தலித் இளைஞனை நாயுடுகள் அடித்திருக்கிறார்கள். அதோடு அவருக்கு அதிகமாக அபராதமும் போட, அவர் நாயுடுகளின் காலில் விழுந்து அவ்வளவு அபராதம் கட்ட முடியாது என்று கூற, கடைசியில் அபராதத்தொகையை ரூ.50ஆக குறைத்திருக்கிறார்கள். கடைசியில் அபராதத் தொகையை அந்த தலித் இளைஞர் நாயிடுகளுக்கு செலுத்தியிருக்கிறார்.

1980-; நாராயிணசாமி நாயிடு தலைமையில் விவசாயப் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் குருஞ்சாகுளத்து நாயுடுகளும் சேர்ந்து கொண்டனர். 31.12.1980ல் குருஞ்சாகுளத்தில் நடந்த போராட்டத்தின் போது நாயிடுகள் மந்திரப்பிள்ளை என்ற போலிஸ்காரரைக் கொன்று விட்டனர். அதனால் போலிசார் துப்பாக்கிச் சூசு நடத்த ஆறு நாயிடுகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நினைவுத் தூணும் இங்கு எழுப்பப்பட்டுள்ளது. போலிசைக் கொலை செய்தது சம்பந்தமாக வழக்குத் தொடரப்பட்டது. பத்து ஆண்டுகளாகியும் இது சம்பந்தமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. நாயுடுகள் தங்கள் பண பலத்தால் அதைச் சாதித்துள்ளனர் என பேசப்படுகிறது.

ஊர் புறம்போக்கு நிலத்தை அபகரிப்பதில் நாயிடுகள் வல்லவர்கள். தங்கள் சாதிக்கு பணம் சேர்ப்பதிலும் வில்லர்கள். (அப்படி பணம் சேர்த்ததால் தானே அடாவடித் தனம் பண்ண முடியும்) எடுத்துக்காட்டாகச் சில நிகழ்ச்சிகளைக் கூறலாம்.

ஊரைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தை நாயிடுகளே அனுபவிக்கின்றனர். ரோட்டிற்கு கிழக்கே தலித் மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை தங்கள் வசப்படுத்தி அதில் பல கட்டிடங்கள் கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளனர். அந்தப் பணத்தைத் தங்கள் சாதிக்கென்று வைத்துக்கொள்கின்றனர்.

புறம்போக்கு நிலத்தில் உள்ள முட்செடிகளை விறகிற்காக தலித் மக்கள் வெட்டக்கூடாது. அதை நாயிடுகள் ஏலத்திற்கு விட்டு, தங்கள் பணத்தைத் தங்கள் சாதி அமைப்பிற்கு வைத்துக்கொள்கின்றனர்.

ஊரில் உள்ள பொது ஊரணியில் தண்ணீர் வற்றியவுடன் அதில் உள்ள கரம்பை மண்ணை ஏலத்திற்கு விடுகின்றனர். அந்தப்பணத்தையும் நாயிடுகளே வைத்துக் கொள்கின்றனர்.

தலித் மக்கள் வைத்திருக்கும் ஆடுகளில் ஒன்று நாயிடுகளின் வயலில் உள்ள பயிரை சிறிது கடித்துவிட்டால், தலித் மக்களில் ஆடுகள் வைத்திருக்கும் அனைவரையும் கூட்டி அபராதம் விதிக்கிறார்கள். ‘என் ஆடு மேயவில்லை’ என்று யாராவது கூறினால் மேய்ந்த ஆட்டிற்கும் தெண்டம், மேயாத ஆட்டிற்கும் தெண்டம்! என்று கூறுகிறார்கள். இத்தகைய அநீதிகளால் தலித் மக்களை இம்சிக்கின்றனர்.

அரசியல்:

இப்பகுதியில் அரசியல் அதிகாரம் முழுவதையும் நாயுடுகளே வைத்திருக்கின்றனர்.

இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் பெயர் திருமதி.சியாமளா. இவர்கள் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்.

இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் திரு.கனக கோவிந்தராஜிலு. இவரும் நாயிடு இனத்தைச் சார்ந்தவர்.

சிறந்த பார்லிமெண்டேரியன் என்று அழைக்கப்படும் திரு.வைகோபால்சாமி (வைகோ)யும் நாயுடு இனத்தைச் சார்ந்தவரே. இவரின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி. இவ்வூர் குருஞ்சாகுளம் அருகில் இருக்கிறது. இங்குள்ள நாயுடுகளுக்கு நெருங்கிய உறவினர் இவர்.

குருஞ்சாகுளத்து பஞ்சாயத்து தலைவராக இதுவரை நாயுடு இனத்தவர்களே இருந்திருக்கின்றனர். இதுவரை தலித் மக்கள் பஞ்சாயத்து பதவிக்காக போட்டியிட்டதுக்கூட கிடையாது. கடந்த பஞ்சாயத்து தேர்தலில் திரு.வெங்கடசுப்பு நாயிடு என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் கூட தலித் மக்களுக்கு ஏற்படவில்லை.

நாயிடுகள் பல கட்சிகளில் இருக்கின்றார்கள். அதேபோல் தலித் மக்களும் பல கட்சியில் இருக்கிறார்கள். தலித் இயக்கங்களைச் சார்ந்து இவர்கள் இருப்பது போலத் தோன்றவில்லை.

கல்வி :

ஊரில் இரண்டு பள்ளிகள் இருகின்றன. உயர்சாதியினர் எட்டாவது வரை ஊள்ள பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளி ரோட்டிற்கு கிழக்கே தான் உள்ளது. தலித் மக்களுக்கென்று தனிப்பள்ளி ஒன்று உண்டு. இலுப்பூரணியைச் சாந்த மாசிலாமணி என்பவர் நிர்வாகியாக இருந்து இதை நடத்துகிறார். ஒன்று முதல் ஐந்துவரை இருக்கும் இப்பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கைச் சிறிது அதிகமாகவே உள்ளது. தலித் மக்களில் சுமார் பத்துபேர் பட்டதாரிகளாக இருக்கின்றனர். பலர் மேநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்திருகின்றனர்.

படித்த தலித் இளைஞர்களிடம் விழிப்புணர்வு அதிகம். சாதிக்கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

சில தலித் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காக நகரங்களில் இருக்கிறார்கள்.

அதேபோல் நாயிடுகளில் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் தலித் மக்கள் படித்து முன்னேறுவதை நாயுடுகள் விரும்புவது இல்லை.

மதம்

நாயிடுகள் தங்களுக்கென்று நான்கு கோயில்களை வைத்துள்ளனர்.

1.பிள்ளையார் கோயில்
2.காளியம்மன் கோயில்
3.முத்தாலம்மன் கோயில்
4.அய்யனார் கோயில்

சிறுவீட்டம்மன் என்ற தெய்வத்தின் திருநாளையும் நாயுடுகள் கொண்டாடுகின்றனர். இந்த தெய்வத்திற்கு கோயில் கிடையாது. திருவிழா சமயத்தில் மட்டும் தெய்வ வழிபாடு உண்டு.

தலித் மக்களில் சக்கிலியர்களுக்கு கருப்பசாமி கோயில் உண்டு.

மற்ற பிரிவினர்களிடையே பறையர்களில் சுமார் 35 வீட்டினர் கத்தோலிக்க கிருஸ்துவர்கள். இவர்களுக்கென்று ஒரு கோயில் உள்ளது. கழுகுமலை பங்கைச் சார்ந்தது இவ்வூர். கழுகுமலை பங்குக்குழு இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றுவார்.

பறையர்களில் மேலும் 30 வீட்டினர் தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்தவர்கள். இவர்கள் பள்ளியையே ஆலயமாகவும் வைத்திருக்கின்றனர். வாரம் ஒருமுறை பாஸ்டர் வந்து திருப்பலி நிறைவேற்றுவார்.

பறையர்களில் மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள். தலித் மக்கள் வாழும் இடத்திற்கும் ரோட்டிற்கும் இடையில் சிறிது புறம்போக்கு நிலம் உள்ளது. இது எட்டு செண்ட் பரப்பளவு உடையது. அதில் ஒரு செண்டிற்கும் குறைவான இடத்தில் ஸ்ரீகாந்தாரியம்மனின் முகம் தெரியாத சாமியை வைத்து இந்து பறையர்கள் வழிபடுகின்றனர். திருவிழாச் சமயத்தில் மண்ணால் ஸ்ரீகாந்தாரியம்மன் சிலை செய்து வழிபடுவர். சிலசமயம் எட்டு நாட்கள் வரை இத்திருவிழா நடைபெறும். வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கரைந்துவிடும் அந்த மண் சிலை.

பறையர்கள் இவ்வாறு மத்ததால் வேறுபட்டிருந்தாலும் மிக மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு மதத்தினர் திருவிழாக் கொண்டாடினால் மற்ற மத்தினரும் வரி கொடுக்கின்றார்கள். மற்ற மதத்தினர் திருவிழாக்களில் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக குருஞ்சாகுளத்துப் பறையர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


பிரச்சினை தோன்றிய வரலாறு

தலித் மக்கள் (இனிமேல் தலித் மக்கள் என்று இங்கே குறிப்பிடும் பொழுது அது பறையர்களை மட்டுமே குறிக்கும். ஏனெனில் சக்கிலியர்கள் பிரச்சினையில் சம்மந்தப்படவில்லை. சம்மந்தப்பட்டவும் மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நாயுடுகளுக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். நாயிடுகளில் யாராவது இறந்துவிட்டால் இவர்கள் தான் மேளம் அடிப்பது, பிணம் எரிப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றனர். அதேபோல நாயுடுகளின் மாடோ, எருமையோ செத்துவிட்டால் அதை இவர்கள் தான் தூக்கி வருகின்றார்கள். இதைப் போன்ற அடிமைத்தனத்தில் இருப்பதாலும், மேலும் மொழியால் இணைந்திருப்பதாலும் - நாயுடுகளும் சக்கிலியர்களும் தெலுங்கு பேசுபவர்கள் - நாயுடுகளுக்குத்தான் விசுவாசமாக இருக்கிறார்களே தவிர, தங்களைப் போல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டு அதை எதிர்த்துப் போராடும் பறையர்களோடு தாங்கள் சேர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் ஏற்படவில்லை. எனவே பிரச்சினையில் சக்கிலியர்கள் சம்மந்தப்படாததால் அவர்களை விட்டுவிடுவோம்) வாழும் இடத்திற்கும் ரோட்டிற்கும் இடையில் எட்டு செண்ட் புறம்போக்கு நிலம் இருப்பதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அந்த புறம்போக்கு நிலத்தில் தான் தலித் மக்கள் வழிபடும் ஸ்ரீகாந்தாரியம்மன் கோயில் இருக்கிறது. அங்குதான் விழாக் கொண்ட்டாடுகிறார்கள். அங்கு தான் பள்ளியில் படிக்கும் தலித் மாணவ, மாணவியர்கள் விளையாடுகிறார்கள்