வியாழன், 27 பிப்ரவரி, 2014

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி! - யோ .திருவள்ளுவர்

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!

புழுதியை கிழப்பியபடியே கழுத்தில் கட்டியிருந்த பெரிய வெண்கல மணியொலியெழுப்பியபடி இரண்டு வெள்ளை காளைகளும் வண்டியை இழுத்து செல்கிறது. முழுநீள வேட்டியும், தோழில் சுற்றப்பட்ட துண்டும், தலைப்பாகையும் அணிந்த உயரமான அழகிய வாலிபனின் கோபம் காளைகளை வேகப்படுத்துகிறது. பாய்ந்து ஓடும் காளையின் இழுப்பில் வண்டி சந்தையின் பாதையில் மீண்டும் மீண்டும் ஓடுகிறது. ஆண்டாண்டு காலமாக தனது சொந்தங்கள் நடமாட முடியாத சாலையில் வேங்கையாய் அலையும் இந்த இளைஞன் யார் தெரியுமா?   19ம் நூற்றாண்டில் புலையன் சாதியில் பிறந்ததால் இவனுக்கும், சகமனிதர்களுக்கும் தெருவில் நடக்கக்கூட உரிமை மறுக்கப்பட்டவன். அடிமையாக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த இவனோ மாட்டு வண்டியில், முழுவேட்டி கட்டி, தோழில் துண்டும் தலைப்பாகையுமாக வருவது கண்டு ஆதிக்கச்சாதி நாயர்கள் வெறிகொண்டனர். அவனுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து எந்த புலையனும் எதிர்த்து எழும்ப கூடாது என திட்டமிட்ட நாயர்கள் கும்பல் சேர்த்து அவனை வழிமறித்தார்கள். அவனோ சிலிர்த்தெழும் வேங்கையாக இடுப்பில் சொருகியிருந்த நீண்ட கத்தியை உருவினான். அவனை தொடுபவன் எவனையும் வெட்டுவதாக அடவு கட்டி நின்றான். கோபத்திலும் உறுதியாக அடவு கட்டி காலை பரவி கையை வீசி நின்ற அவனை கண்டதும் விலகியதுஆதிக்க வெறி கும்பல். எதிர்த்து நின்ற மாவீரன் அய்யன்காளி என்னும் மாபெரும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராளி. போராளிகளுக்கு உயிர் பயமில்லை என்பதற்கு சாட்சியாக நின்றவன். தன்னலமில்லாத விடுதலை வேட்கையென்னும் நெருப்பில் குளித்து எழும் இந்த நெருப்புப்பறவைகள் எழுந்தால் விடுதலை பிறக்கும். அய்யன்காளி என்ற மாபெரும் நெருப்புக்கனல் வளர்த்த விடுதலை நெருப்பில் புலையர்கள் எழுந்தனர். திருவிதாங்கூரில் பார்ப்பனீய அடிமைத்தனத்திலிருந்து தலித் மக்களை மீட்ட மாபெரும் மக்கள் தலைவன் அய்யன்காளி.28 ஆகஸ்டு 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பார்ப்பனீய வர்ணாஸ்ரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை மிருகத்திற்கு இணையாக ஏரில் பூட்டி வயலை உழுதனர். அடிமைகளாக இருந்த அவர்களது உழைப்பில் நாயர்களும், நம்பூதிரிகளும், மன்னனும் உண்டு கொழுத்து கிடந்தனர். இவை அனைத்தையும் உணர்ந்த அய்யன்காளி விளையாடிய பந்து நாயர் ஒருவனது வீட்டின் அருகே விழுந்தது. கோபம் கொண்ட நாயர் அய்யன்காளியை மிரட்டினான். பல நாட்கள் யோசித்து, தெளிவடைந்த மனதுடன் புறப்பட்ட அய்யன்காளி எது மறுக்கப்பட்டதோ அந்த உரிமையை பெற தடையை மீற எழுந்தார். அந்த எழுச்சி தான் தனியொருவனாக நடத்திய மாட்டுவண்டிப் போராட்டம். முதல் முறையாக அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை நிலைநாட்டினார். தொடர்ந்து அந்த சாலையில் மாட்டுவண்டியின் மணிசத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.அய்யன்காளி பெற்ற வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு பெற செய்தது மட்டுமல்லாமல் ஆதிக்கசாதியினரை ஆத்திரமடைய வைத்தது. அய்யன்காளி மாட்டுவண்டி ஓட்ட முடிந்தாலும், மற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தனது விடுதலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையே உண்மையான விடுதலையாக இருக்க முடியுமென்பதை அய்யன்காளி உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக புத்தன் சந்தைக்கு 'விடுதலை ஊர்வலம்' போனார். ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியார் தெருவை அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர். திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.சாலியார் வீதி கலகம் பற்றிய செய்திகள் மணக்காடு, கழக்கூட்டம், கன்னியாபுரம் போன்ற பகுதியில் தீயாக பரவ இளைஞர்கள் தெருக்களில் இறங்கி உரிமைகக்காக போராட துவங்கினர். ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் கலகத்தை அடக்க ஆதிக்க சக்திகள் எடுத்த முயற்சி பலனளிக்காமல் மேலும் கலவரத்தை பரவச்செய்தது. விவசாய வேலைகளை புறக்கணித்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடத் துவங்கினர். போராடிய மக்களை பயமுறுத்த ஆதிக்கசாதியினர் தாக்குதலை தொடுத்தனர். அதன் விளைவு போராட்டத்தை மீண்டும் வலுவடைய வைத்து ஆதிக்கச்சாதி பண்ணைகளை பதற வைத்தது. தாக்குதலிலிருந்து காப்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சிறு ஆயுதக்குழுக்களை உருவாக்கினர். விடுதலைக்கான பாதையும் விரிவடைந்தது...அய்யன்காளி போன்ற தலைவர்கள் உருவாக காரணமான சூழல் பற்றிய  பதிவுஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது புலம்புகிறது. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த பார்ப்பனீயத்தை எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே பார்ப்பனீயம் இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்.திருவிதாங்கூர் சங்ககாலத்தில் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த திராவிடர்களின் பூமியாக இருந்துள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் திருவிதாங்கூரில் துவங்கிய ஆரிய பண்பாட்டு படையெடுப்பு கி.பி 8ம் நூற்றாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது (தமிழக வரலாறும் பண்பாடும்: டாக்டர் A.சாமிநாதன்). இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பை உருவாக்க துவங்கியது. "சாதி அமைப்பில்லாத சமத்துவ சமுதாயத்தில் குடியேறிய ஆரியர்கள் சதுர்வர்ண அடிப்படையில் ஆரிய சித்தாந்த சாதி அமைப்பை உருவாகினர்" (மேற்கோள்: வரலாற்றாசிரியர் திரு. ஸ்ரீதரமேனன்). 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் பார்ப்பனீய கொடுங்கோன்மையின் உச்சநிலையில் இருந்தது. பார்ப்பனீயவாதிகளால் விதிக்கப்பட்ட இந்துமத விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமை தீயில் வேக வைத்தது.கன்னியாகுமரியில் அடக்குமுறையாளர்கள் பெரும்பாலும் நாயர் சாதியினர். திருவிதாங்கூர் அரசகுடும்பத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, போரில் அபரிதமாக செயலாற்றியதற்காக நாயர்களுக்கு பிள்ளை, பணிக்கர், நம்பியார், மேனன், கர்தா, கைமால்... என பட்டங்களை மன்னன் வழங்கியிருந்தான். இந்த பட்டங்களை நாயர் குடும்பங்கள் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பட்டங்கள் துணைசாதிகளாக அடையாளம் காணப்பட்டன. நம்பூதிரிகளின் நிழல் அதிகார மையங்களாக நாயர் குடும்பங்கள் விழங்கியது. திருவிதாங்கூரில் சாதி அடுக்கில் நம்பூதிரிகளுக்கு அடுத்த இடம் நாயர்களுக்கு இருந்தது. நம்பூதிரிகளின் ஆதரவு நாயர்களுக்கு தடையில்லாமல் கிடைக்க முக்கிய காரணம் அவர்களுக்கிடயிலான morganatic மணஉறவுகள். சிலநேரங்களில் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்களாக இருந்த நம்பூதிரிகளின் செல்வத்தை பெற இந்த மண உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாயர் பெண்ணின் வீட்டிற்கு நம்பூதிரி "வரலாம்"; அந்த வேளை அவளது கணவனை விட நம்பூதிரிக்கே முதலிடம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வகை உறவுகளினால் நம்பூதிரிகளின் நிழலில் நாயர்கள் பதவி, அதிகாரம், சொத்து, படைபலம் என அனைத்தையும் அனுபவித்தனர். மன்னனின் படைகளில் முக்கிய பதவிகளில் நாயர்கள் இடம்பெற்றனர். விளைநிலங்களான வயல், தென்னந்தோப்புகள் நாயர்களிடமிருந்தது. வழிபாட்டு முறைகளிலும் நாயர்கள் சூரியவணக்கம் முதல் பெரும்பாலும் நம்பூதிரிகளின் வழிபாட்டுமுறைகளை தழுவியே இருந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்' நிலையில் இருந்த இவர்களை அப்படி அழைத்த சொல் யாமான், ஏமான் என்று மருவி சொல் வழக்காக இருக்கிறது. அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு. அடக்குமுறையை அனுபவித்த வலியின் வெளிப்பாடு சூத்திரன் என நாயரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் சொல்ல வைத்தது. பண்ணையார்களாக இருந்த நம்பூதிரிகளும், நாயர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.கொல்லம் திவான் எழுதிய மடலில் திருவிதாங்கூரில் 1,64,864 பேர் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அடிமைகளாக இருந்த மக்கள் ஆங்கிலேய காலனியாத்திக்க பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் "பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாய கூலிகள், வேலையும் சமூக அடக்குமுறையும் சேர்ந்து எங்களை விவசாய கூலி அடிமையாக பண்ணையார்களிடம் வைத்திருக்கிறது. நாங்கள மன, வாழ்வு அடிப்படையில் சுதந்திர மனிதர்களாக பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க சாதியினர் அனுபவித்து வருகிற உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நில உரிமையாளர்களின் பிடியில் சிக்குண்டு மழையிலும், வெயிலிலும் மிருகமாக உழைத்து எஜமானர்கள் சொத்தை பெருக்க நாங்கள் அரை வயிற்றில், அழுக்கு சாக்கில் அவதிப்பட வைக்கப்பட்டுள்ளோம்" என எழுதினர். அடிமைகளை வாங்குவதும், விற்பதும் ஆதிக்கசாதி நில உடமையாளர்களுக்கு உரிமையாக இருந்தது. இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன. அடிமைகளை சக்கையாக பிளிந்து வேலை வாங்கிய பின்னர் வதைப்பதும், கொலைசெய்வதும், மீண்டும் விற்பது என கொடுங்கோன்மையின் உச்சகட்டம் நிலவியது. திருவிதாங்கூர் பார்ப்பனீய அரண்மனை, கோட்டைகளின் அழகிலும், கோயில்களின் சுவர்களிலும் இந்த அடிமைகளின் இரத்தமும் சதையும் கலந்த வரலாறு செல்வ செழிப்பாக கலந்திருக்கிறது.பார்ப்பனீயம் உச்சநிலையில் ஈடுபட்ட அரசுகளில் நம்பூதிரிகளும், நாயர்களும் இணைந்து ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மன்னராட்சி குறிப்பிடத்தக்கது. நம்பூதிரிகளும், நாயர்களும் சேர்ந்து கோவில்கள், வீதிகள் எங்கும் கட்டுப்பாடுகள் அமைத்து தங்களுக்கு சாதகமான அமைப்பை உருவாகி வைத்திருந்தனர். அதிகார மையங்களில் தங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஈழவ சாதியில் பிறந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி தூரம் விட்டும், நாயர்களிடமிருந்து 16 அடி தூரம் தள்ளியும் நடக்கவேண்டும் என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. கண்ணால் பார்த்தாலே தீட்டு என சில சாதிகளை ஒதுக்கி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் உடையணிய தடையும், அபராதமும் விதித்திருந்தனர். நாயர் வீடுகளின் அருகில் பிற சாதியினர் செல்லக்கூடாது. நாயர்கள் குளிக்கும் பொது இடங்களில் பிற சாதியினர் குளிக்கக்கூடாது. நாயர்கள் போல மேலாடை அணியக்கூடாது. கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோவிலில் நுழையக்கூடாது. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இப்படியான கொடுமைகள் தொடர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் பள்ளர், பறையர், சாணார், முக்குவர் சாதி மக்கள்.

இந்த கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் எழுந்து கலவரங்களாக வெடித்தது. அந்த போராட்டங்களில் மூழ்கி எழுந்த முத்தாக சமூகப்புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். திருவிதாங்கூரில் உருவான வீரம் செறிந்த மாமனிதர்களில் அய்யங்காளி, நாராயணகுரு, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) என பலர். அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்.

மன்னர் ஆட்சியில் நம்பூதிரிகளும், நாயர்களும்அனுபவித்து வந்த பதவி சுகங்கள், அதிகாரம் அனைத்தும் காலனியாதிக்கத்தில் இடம் மாற துவங்கியது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்கள் தங்களது உரிமையை அனுபவிக்க ஆரம்பித்தனர். மேலாதிக்கத்தின் பிடி மெல்ல நழுவ துவங்கியது. பார்ப்பனீய மதத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மதம் மாறினால் கிடைக்குமென நம்பி அதிக எண்ணிக்கையில் மக்கள் மதம் மாற துவங்கினர். வாழ்வுரிமையையும், கலாச்சாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க தெற்கு திருவாங்கூரில் சமூகநீதி போராட்டங்கள் மதத்தை மையமாக வைத்து உருவானது.

ஈழவ மக்களுக்கு கோவிலில் வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு என தள்ளி வைத்தனர் ஆதிக்க சாதியினர். வைணவ இந்துகோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக வைத்து வழிபாட்டு உரிமையை மறுத்ததை எதிர்த்தநாராயணகுரு ஈழவ மக்களுக்காக தனியாக கோயில்களை உருவாக்கினார். நம்பூதிரிகளும், நாயர்களும் அதை எதிர்த்தனர். எதிர்த்த நம்பூதிரி ஒருவனிடம் "இது நம்பூதிரி சிவனுக்கான கோயிலல்ல, இது ஈழவ சிவன் கோவில்" என்றாராம் நாராயணகுரு. எங்களை எங்கள் வழியில் வாழவிடு என்பதாக அமைந்த நாராயணகுருவின் பாதை அணுகுமுறை பார்ப்பனீயத்தை உலுக்கியது.

பார்ப்பனீய கொடுங்கோன்மையில் சாலையில் நடக்க கூட உரிமையில்லாதவர்களாக புலையர் சாதி மக்கள் நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தங்களது பொருளாதாரமும், வாழ்க்கையும் முன்னேறாமல் இருந்த புலையர் சாதி மக்கள் சாலைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது வசதிகளுக்காக இயக்கமாக போராட்ட துவங்கினர். 1893ல் புலையர் சாதியினர் வெங்கனூர் என்னும் இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினர். இந்த பள்ளிக்கூடம் ஆதிக்கசாதியினரால் தகர்க்கப்பட்டது. புலையர் சாதி மக்களிடமிருந்து பிறந்த ஒருவர் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆதிக்க சாதியினர் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வதை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார் அந்த மனிதர். மாட்டு வண்டியில் பொது சாலையில் சென்று போராட்டம் துவங்கினார். 1898ல் அவர் தலைமையில் பொது சாலையில் புலையர்கள் நுழையும் போராட்டத்தை நடத்தினார். புலையர் சாதி மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் மோதல்கள் வெடித்தன. கன்னியாகுமரி, நெய்யாற்றின்கரை, வைக்கம் முதலான இடங்களில் வெடித்த போராட்டங்களை அரசு அடக்கியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாபெரும் மனிதர் தான் அய்யன்காளி. அய்யன்காளி, வலிக்கர சோதி முதலிய தலைவர்களின் போராட்டங்களின் பலனாக புலையர் சாதி மக்களுக்கு கல்வி உரிமைக்கான சட்டத்தை 1914ல் திருவிதாங்கூர் அரசு உருவாக்கியது. இந்த சட்ட உரிமையை ஆதிக்க சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். புல்லத்து என்ற இடத்தில் புலையர் சாதி குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை நாயர்கள் தீவைத்து கொழுத்தினர். இந்த பிரச்சனையில் காலனியாதிக்க அரசு தலையிட்டது.

நாடு முழுவதும் கலனியாதிக்கத்தின் பிடி அழுத்தமாக இருந்த வேலையிலும் பார்ப்பனீய கொடுங்கோன்மை ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன. குறுநில மன்னர்கள் போல திருவிதாங்கூரின் பல பகுதிகளின் பல கிராமங்களை நம்பூதிரிகள், நாயர்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்த அதிகார மையங்களே இதற்கு அடிப்படை காரணம். இந்த அதிகார மையங்கள் மன்னனுடன் தொடர்பை வைத்திருந்தது. கோவிலை சுற்றி அமைந்த பல கிராமங்களை உள்ளடக்கி ஆளப்பட்ட இந்த பகுதிகள் சங்கேதம் என்று அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை கவனிக்க தனியாக படைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இவை அதிகார மையங்களாக விளங்கியது (தகவல்: கொச்சி இராச்சியம், K.P.மேனன், 1911)

நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியில் (இடுப்புக்கு மேலே) மார்பை மறைக்க இடுப்புக்கு மேல் துணி அணிய உரிமை மறுக்கப்பட்டது. மீறி ஜாக்கட் அணிந்த பெண்கள் கொடும் துயரத்துக்கு ஆளாயினர். நாடார் சாதி மக்களின் போராட்டங்களும், ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதித்தது. ஆனால் அவர்கள் மேல்சாதி பெண்களைப் போல நல்ல உடை அணியக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாயர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை நடைமுறைபடுத்த முடியவில்லை. 1859ல் தெற்கு திருவிதாங்கூரில் (குமரிமாவட்டம்) இரணியல், கோட்டார், திட்டுவிளை, தொடுவெட்டி மற்றும் பல ஊர்களில் நாடார் சாதி மக்களை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரித்தனர். அவர்களது ஜாக்கெட்களை நாயர்கள் கிழித்தெறிந்த கொடுமை தொடுவெட்டி (மார்தாண்டம்), அருமனை என கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.
1870ல் குமாரகோவில் திரு.வெள்ளையன் நாடார் தலைமையில் 12000 சாணார் சாதி மக்கள் கோவிலில் நுழைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலில் அனுமதிக்காது நாயர்கள் தாக்கியதில் 150 சாணார் சாதியினர் கொல்லப்பட்டனர். இதுபோல பார்ப்பனீய இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையவிடாத நிலை திருவிதாங்கூர் முழுவதும் இருந்தது.அய்யாவழி இப்படியான காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்துதாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் என அந்த மக்களின் உரிமைக்காக அய்யாவழி தனி மதமாக பிறந்தது. இல்லறமே உயர்ந்த அறமாக போதித்த அய்யா வைகுண்டர் இல்லறத்தையே கடைபிடித்தார். இயற்கையான வழியும், வாழ்வுமே அய்யாவழியின் அடிப்படை என்பதற்கு துறவறமின்மை, கண்ணாடியில் தன்னையே கண்டு வணங்குதல், சுயமரியாதைக்கு அடையாளமான தலைப்பாகை, ஒரே கிணற்றில் எல்லோரும் சமமாக தண்ணி அருந்துவது, சாதி பாகுபாடின்மை என பல அடையாளமாக உள்ளன (அய்யாவழி பற்றி முந்தைய பதிவுகள் இங்கே: அய்யாவழி மதத்தின் வரலாறு,பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!). ஒடுக்கப்பட்ட மக்களின் மாமனிதர்களில் அய்யாவும் ஒருவர்.பார்ப்பனீய கொடுங்கோன்மை திட்டங்களையும், கொள்கைகளையும் அறவே எதிர்த்து பல தளங்களில் போராடியவர்கள் தான் அய்யா, நாராயணகுரு, அய்யன்காளி போன்ற எண்ணற்ற மாவீரர்கள். இன்று அவர்களை பார்ப்பனீய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் சொந்தமாக்க முனைவது ஓநாய் அழுவதை தான் நினைவுபடுத்துகிறது. நம்பூதிரிகளும், நாயர்களும் நடத்திய கொடுங்கோன்மை கோரத்தாண்டவத்தை திருத்தி எழுத பார்ப்பனீயவாதிகள் முயல்கிறார்கள். இதன் பின்னணியில் சமகால சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் சங்பரிவாரங்களை 1970, 1980 களில் உருவாக்கி களம் அமைத்ததும், கலவரங்களை தூண்டியதும் நாயர்கள். தங்களது இழந்த அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் வழியாக கிடைக்குமா என அலையும் ஆதிக்கசாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறை பலிக்கடாவாக ஆக்கப்படுகிறது காலத்தின் சுழற்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை அழிப்பது, திருத்துவதன் வழி பார்ப்பனீயவாதிகள் தங்கள் தவறுகளை ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மிசனரிகள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளில் சங்கப்பரிவாரங்களின் ஊடுருவலும், ஆர்.எஸ்.எஸ் கிளைகளும் உருவாக்கப்படுகின்றன. மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் தனித்தன்மையை அதிக்கசக்தியினர் அழித்து, வரலாற்றை திரித்து குற்றப்பழியிலிருந்து தப்பிக்க பார்ப்பனீயம் துடிக்கிறது. 


_________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக