வியாழன், 19 மார்ச், 2015

உள் ஒதுக்கீடும், பார்ப்பனிய எதிர்ப்பும் - ஒரு பார்வை


உள் ஒதுக்கீடும், பார்ப்பனிய எதிர்ப்பும் -- https://thecivilrights.wordpress.com/ 


ஒன்றின் கீழ் ஒன்றாக அல்லது ஒன்றின் மேல் ஒன்றாகப் பல படி வரிசை சாதிய அடுக்குகளை கொண்ட இந்திய சமூக அமைப்பில், ஒரு குறிப்பிட்ட சாதி சில சாதிகளுக்குக் கீழான சாதியாக இருந்தாலும், வேறு சில சாதிகளுக்கு மேலான சாதியாகவும் இருக்கிறது. அதாவது, பல சாதிகள் கீழ் சாதிகள் என்று வரையறுத்து வைக்கப்பட்டிருந்தபோதும், அவற்றிற்கு கீழாகப் பல சாதிகள் வைக்கப்பட்டிருப்பதால் அச்சாதிகள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்திய சமூகத்தில் சாதிய அமைப்பு இன்னமும் நீடித்திருப்பதற்கும் கட்டிக் காக்கப்படுவதற்குமான காரணங்களில் இது முக்கியமானதாகும். ஆனால், இங்கே ஒவ்வொரு சாதியும் தனது நிலை குறித்துப் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் பொழுது, தற்போது தலித்துகள் என்றழைத்துக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட பட்டியலின சாதிகளிலேயும் கூட அருந்ததியர்கள் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய சாதிகள் மட்டும் அத்தகைய வாய்ப்பு இல்லாத அடிமட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

மொத்த சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதிகள் (ஒட்டு மொத்த பட்டியலின சாதிகள்) எப்படி மிகக் கீழான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ, அதேபோல அவர்களிலும் மிக மிகக் கொடூரமான அவலங்களையும் அடக்குஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்பவர்களாக அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதிகள் உள்ளன. சமூகப் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்பட்ட இடஒதுக்கீடு ஏற்பாடு கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் அமலில் இருந்தும், அது உண்மையான சமூக நீதியை வழங்கவில்லை என்பதற்கு உயிருள்ள வரலாற்றுச் சாட்சியமாக விளங்குபவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

கல்வி மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு முன்னுரிமை வழங்கி தக்க வாய்ப்பளிப்பதற்கானதே இடஒதுக்கீடு என்பது “”சமூகநீதி”க்காரர்களின் நியாயவாதம், கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களை விட, அந்த வகைகளில் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயினும் பொருளாதார ரீதியில் மிகமிகப் பின்தங்கியவர்களுக்கும் தக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முற்பட்ட சாதியினர் முன்வைக்கும் எதிர்வாதம். ஆனால், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மட்டுமல்ல, வேறு எந்த ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் மிகமிக அடிமட்டத்தில் வாழ்பவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கின்படி அல்லாமல், ஒடுக்கப்பட்ட சாதிகள் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகளின் அளவுகளின் அடிப்படையில் சமூகநீதி வழங்கப்படுமேயானால், இந்த அருந்ததிய மக்களுக்கும் புதிரை வண்ணார்களுக்கும்தான் முதன்மை முன்னுரிமை அடிப்படையில் மிகக் கூடுதலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு வகுக்கப்பட்டிருக்கும் முறையோ, இம்மக்களை முற்றாகப் புறக்கணித்ததோடு, இம்மக்களின் முதுகிலேறி இச்சாதிகளுக்கு மேலுள்ள சாதிகள் இடஒதுக்கீட்டின் பலன்களை அறுவடை செய்து கொள்ளும் வகையிலேயே வகுக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது, தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டால், அருந்ததியர் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய 15 அடிமட்டச் சாதிகளை உள்ளடக்கி மொத்தம் 76 சாதிகளை பட்டியல் சாதிகள் என்று ஒரே வகையாகப் பிரித்து, இந்த அனைத்து சாதிகளுக்குமாகச் சேர்த்து 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 76 சாதிகளும் தாழ்த்தப்பட்ட தலித் சாதிகள் என்று அறியப்பட்டாலும், இச்சாதிகள் எல்லாம் ஒரே அளவிலான சாதிய சமூகக் கொடுமைகளை அனுபவிப்பவைகள் கிடையாது. கல்வி மற்றும் சமூக ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ஒரே அளவில் தன்மையில் பின்தள்ளப்பட்டவர்கள் கிடையாது. 76 பட்டியல் சாதிகளிலேயே தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் போன்ற சாதிகளில் கணிசமானவர்கள் நடுத்தர மற்றும் குத்தகை விவசாய குடும்பத்தினர். ஆனால், அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் போன்ற அடிமட்ட சாதிகளில் இத்தகைய பொருளாதார நிலையில் அதுவும் விதிவிலக்காகவே ஒரு சிலர் உள்ளனர் எனலாம்.

கிட்டத்தட்ட ஒரு நூறாண்டு காலமாக இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டதன் பலனாக தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதி திராவிட சாதிகளைச் சேர்ந்தவர்களில் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும் பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்பேராசிரியர்களாகவும், உயர்நீதி மன்ற நீதிப திகளாகவும், அமைச்சர்களாகவும் ஆகியிருக்கின்றனர். ஆனால், அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்தவர்களில் பட்டதாரி படிப்பை எட்டியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்குக் காரணம், இவர்கள் மக்கள் தொகையில் மிகமிகக் குறைந்தவர்கள் என்பதில்லை. மாறாக, அடுக்குமுறை சாதிய அமைப்பில் மிகவும் அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்ட இவர்கள் கல்வி, சமூக, பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டு, மிக மிகப் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சமூகத்தின் ஆதிக்க சாதியினருக்கு அடிமைத் தொழில் செய்பவர்களாக இருத்தி வைக்கப்பட்டவர்கள்தாம் பள்ளர், பறையர் மற்றும் அருந்ததிய சாதியினர் என்பதால், பட்டியல் அட்டவணை சாதிகள் என்று இவை வரையறுக்கப்பட்டன. இந்த தாழ்த்தப்பட்ட தலித்துக்களுக்கு அந்த அத்தனை அடிமை வேலைகளையும் செய்வதே புதிரை வண்ணார்களின் வேலை. பிற தாழ்த்தப்பட்ட தலித் சாதியினருக்கு அழுக்குத் துணி துவைத்துக் கொடுப்பது முதல் சவரம் செய்வது, அவர்களின் பிணத்தைக் குளிப்பாட்டுவது வரை அடிமைச் சேவகம் செய்வது புதிரை வண்ணார்களின் சமூகக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. “”பள்ளப்பய”, “”பறப்பய”, “”சக்கிலியப்பய” எனச் சாதிப் பெயர்களால் பிற தலித்துக்கள் தாழ்த்தப்படுவது போல “”புதிரப் பய” என்று இவர்களாலேயே இழிவாக அழைக்கப்படுபவர்கள் புதிரை வண்ணார்கள்.

இவர்களுக்கு அடுத்த மேல் மட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் அருந்ததிய மக்களின் நிலையோ ஒப்பீடு ரீதியில்தான் மேலானது; ஆனால் சாதிய அடுக்குகளில் மிக மிகக் கீழானதுதான்.

“”ஒரு மனிதன் தன் வயிற்றை சுத்தப்படுத்த மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்ப வேண்டிய கொடுமை இந்த ஜனநாயக நாட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது” என்று துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள் மாநாட்டில் அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.ஜக்கையன் குறிப்பிட்டார். அது உண்மையில் மனசாட்சியுடைய ஒவ்வொரு மனினின் நெஞ்சை அறுக்கும் செய்தியாக உள்ளது. மனித மலத்தைக் கையால் அள்ளி, தலையால் சுமந்து, மலக்குழிக்குள் மூழ்கி உடைப்பு எடுக்கும் துப்புரவுத் தொழிலில் நாடு முழுவதும் பெரும்பான்மையின அருந்ததிய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

1993ஆம் ஆண்டு “”கையால் மலம் அள்ளும் முறை மற்றும் உலர் கழிப்பறை கட்ட தடைச்சட்டம்” மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன்படி வீடுகளிலோ, வேறு நிறுவனங்களிலோ எடுப்புக் கழிப்பறை வைத்திருப்பதும் கையால் மலம் அள்ளுவதும் குற்றமாகிறது. மீறினால் 2000 ரூபாய் அபராதமும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று அச்சட்டம் கூறுகிறது. நாடு முழுவதும் 92 இலட்சம் உலர் கழிப்பறைகளும் 6.76 இலட்சம் பேர் கையால் மலம் அள்ளுவதாகவும் மத்திய அரசே 2005ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது. உண்மையில் 13 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள கையால் மலம் அள்ளும் வேலை செய்து வருவதாக சுகாதாரப் பணியாளர் விடுதலை இயக்கம் கூறுகி றது. ஆனாலும், இன்று வரை ஒரு தனிநபர் கூட இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

மனித மலம் அள்ளுவது மட்டுமே அருந்ததியரின் தாழ்ந்த நிலையைக் குறிக்கவில்லை. தூய்மையற்றவை, தீட்டுக்குறியவை என்று சமூகத்தால் கருதப்பட்ட பிற வேலைகளையும் அருந்ததியர்கள் தாம் செய்ய வேண்டும். ஊருக்கு வெளியே, தனிச் சேரிகளில் பிற தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள் என்றால், அதற்கும் வெளியே மேலும் ஒதுக்குப்புறமாக தனிச்சேரிகளில் வாழும்படி அருந்ததியர் உட்பட சில சாதியினர் தள்ளப்பட்டனர். பிற தாழ்த்தப்பட்ட தலித்து சாதிகள் கூட இவர்களை கொள்வினை கொடுப்பினை மண உறவுக ளுக்குத் தகுதியற்றவர்கள் என்று தள்ளி வைத்தõர்கள். செத்த மாடுகள்எருமைகளைப் புதைப்பது, தோல் வேலைகளைச் செய்வது போன்ற தூய்மையற்றவை என்று கருதப்பட்ட வேலைகள் இவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் பெரும்பான்மையான அருந்ததிய மக்கள் துப்புரவுப் பணியாளர்களாகவும் கிராமப்புறங்களில் பண்ணை அடிமைகளாகவும், கூலித் தொழிலாளிகளாகவும், எஞ்சியவர்கள் செருப்புத் தைக்கும் தொழிலாளிகளாகவும் வாழ்கின்றனர்.

அருந்ததிய மக்களில் தெலுங்கு பேசும் ஒரு பிரிவினர் நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் குடியேறியவர்கள். கன்னடம் பேசும் மற்றொரு பிரிவினர் திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் இங்கு குடியேறியவர்கள்; தெலுங்கு பேசும் மற்றும் ஒரு பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரில் குடியேறி துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆதி ஆந்திரர்கள். இவர்கள் அனைவரும் மாதாரி அல்லது சக்கிலியர் என்று இழிவாக அழைக்கப்படுபவர்கள்.

செருப்புத் தைப்பது, செத்த எருமை மாட்டு மாமிசங்களை உண்பது, மலம் அள்ளுவது போன்ற துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவது, ஆதிக்க சாதிகளின் பிணங்களுக்குப் போடும் துணிமணிகள், பாத்திரங்களை எடுத்துப் பயன்படுத்துவது, ஆதிக்க சாதிகளின் பண்டிகைகள் மற்றும் மணவிழா விருந்துகளில் எஞ்சிய உணவை வாங்கி உண்பது போன்ற ஏழ்மை நிலைமையிலேயே இன்னும் பல அருந்ததியக் குடும்பங்கள் உள்ளன.

இவ்வளவு கீழ்நிலையில் உள்ள அருந்ததிய மக்களுக்கு சமூக நீதி வழங்குவதாகக் கூறப்படும் இடஒதுக்கீடு ஏற்பாடு, கடந்த ஒரு நூறாண்டில் எந்த அளவு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்? “”தமிழ்நாட்டில் நத்தம் தாலுகாவைச் சேர்ந்தவர் குப்புசாமி என்ற அருந்ததியர் (சக்கிலியர்) சமூகத்தைச் சேர்ந்தவர். 1989இல் பி.ஏ. படித்து, 1994இல் பி.எட். படித்து, 1998இல் எம்.ஏ. படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் 13 ஆண்டுகளாக வேலை கிடைக்கவில்லை. எம்.ஏ., பி.எட். படித்த குப்புசாமி செருப்பு தைத்துப் பிழைப்பு நடத்துகிறார். ஆக, அருந்ததியர் மக்களில் ஒரு சிலர் மிகச் சிரமப்பட்டு, போராடி கல்வி கற்றால் கூட இடஒதுக்கீட்டின்படி இன்றைய சூழலில் வேலை வாய்ப்பு கிடைப்பது கடினம் எனத் தெரிகிறது.” (பி.சம்பத் எழுதிய “”நாங்கள் வருகிறோம்… அருந்ததியர் வாழ்வும் விடுதலையும்”, பக்: 1718)

அருந்ததிய மக்களுக்கு இடஒதுக்கீடு ஏற்பாடு வழங்கியுள்ள சமூக நீதி இதுதான்! கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டு, மிகமிக மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள அருந்ததிய சாதிகளைச் சேர்ந்தவர்களில் குப்புசாமி அளவு கல்வியில் உயர்நிலைக்கு வருவது விதிவிலக்காகவே நிகழ்கிறது. இந்த நிலைக்கு வந்த பிறகும் கூட தற்போதுள்ள இடஒதுக்கீடு ஏற்பாடு அம்மக்களுக்கு சமூக நீதி வழங்காது என்பதுதான் விதியாக உள்ளது.

இது எப்படி நடந்தது? இதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டிலுள்ள அருந்ததியர், புதிரை வண்ணார் ஆகிய 15 அடி மட்ட சாதிகளையும் உள்ளடக்கிய மொத்தம் 76 பட்டியல் சாதிகளுக்கு 18 சதவிகித அளவுக்கு இவ்வளவு காலமும் இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்திலேயே ஏழை மற்றும் நடுத்தர, குத்தகை விவசாயிகளாகவும் கல்வி கற்று இராணுவம், போலீசு மற்றும் பிற அரசு ஊழியர்களாகவும், தேயிலைகாபி தோட்டத் தொழிலாளர்களாகவும், சற்று முன்னேறிய, நிரந்தர ஊதியம் பெற்ற வர்க்கத்தினராக கணிசமான பேர்களைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் போன்ற சாதிகளும் இந்த 76 பட்டியல் சாதிகளில் அடங்குகின்றன. இப்படிப்பட்ட ஒப்பீட்டு ரீதியில் முன்னேறிய சில சாதிகள்தாம் பட்டியல் அட்டவணை சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை அடைந்து வந்தன. இந்த 76 பட்டியல் சாதிகள் என்றும் வகைப்படுத்தலுக்குள் அடங்கிய அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் ஆகிய 15 அடிமட்ட சாதிகளுக்கு அந்த 18 சதவிகித இடஒதுக்கீட்டின் பலன்கள் போய் சேரவே இல்லை.

தமிழகத்திலுள்ள பிற்பட்ட சாதிகளுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு எந்த அளவு அச்சாதிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது என்பதைக் கண்டறிய 1970களில் சட்டநாதன் கமிசன் என்ற குழு அமைக்கப்பட்டது. அதன் ஆய்வுப்படி, பிற்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீடு ஏற்பாட்டின் 49 சதவிகித பலன்களை 13 சாதிகள் மட்டுமே அடைந்துள்ளன என்று கண்டறியப்பட்டது. இதனால் பிற்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் பலன்கள் சென்றடையாமல் போன சாதிகளை மிகவும் பிற்பட்ட சாதிகள் என்று தனியாக வகைப்படுத்தப்பட்டு, 1980களின் ஆரம்பத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சட்டநாதன் கமிசனைப் போன்று ஒரு குழு அமைக்கப்பட்டு, பட்டியல் சாதிகளுக்கான 18 சதவிகித இடஒதுக்கீட்டின் பலன்கள் எந்தெந்த சாதிகளுக்கு எந்தெந்த அளவு போய்ச் சேர்ந்தன, எந்தெந்த சாதிகள் அதிகபட்ச ஆதாயங்களை அடைந்தன, எந்தெந்த சாதிகள் மிகமிகக் குறைந்த ஆதாயங்கூட அடையாமல் இன்னமும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியலில் மிகமிகப் பின்தங்கிப் போயுள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டிருந்தால், அருந்ததியர் நந்தம் குப்புசாமியின் நிலை போன்ற அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியிருக்கும்.

ஆனால், இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, அருந்ததிய சாதிகளைச் சேர்ந்தவர்களில் சிலர் பல்வேறு அமைப்புகளில் அணிதிரண்டு, பட்டியல் சாதிகளுக்கான இடஒதுக்கீட்டில் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் தங்கள் சாதிக்கு உள்ஒதுக்கீடு கோரி பல்வேறு வகையில் மன்றாடி வருகின்றனர்.

17 ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகள் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தியபோது, அதை இடது தீவிரவாதம் என்று கண்டித்த போலி மார்க்சிஸ்டுக் கட்சியினர்; வர்க்கப் போராட்டங்கள் நடத்தினாலே போதும் சாதிகள் ஒழிந்து விடும் என்று பார்ப்பனிய மார்க்சியம் பேசிவந்த அக்கட்சியினர் இப்போது தாழ்த்தப்பட்ட மக்களின், ஓட்டுகளைப் பொறுக்கவே இடஒதுக்கீடு ஆதரவு, ஆலய நுழைவு, இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீடு ஆதரவு முதலிய இயக்கங்களை எடுக்கின்றனர். தி.மு.க தலைமையிலான ஆளும் கூட்டணியில் இக்கட்சி பங்கேற்பதால் ஆட்சியாளர்களிடம் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி அருந்ததிய மக்களுக்குச் சில சலுகைகளைப் பெற்றுத் தர முயலுகின்றது.

முன்பு தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு, இப்போது அன்புமணியை தனது கட்சி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் மருத்துவர் ராமதாசு கூட, அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார். இன்னும் தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு வங்கியையும், ஆதிதிராவிடர் ஓட்டு வங்கியையும் நம்பி அரசியல் கட்சி நடத்தும் தலித் தலைவர்களின் கட்சிகளைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன.

பட்டியல் சாதிகளிலேயே அடிமட்டத்தில் உள்ள சாதிகளையும் ஒப்பீட்டு ரீதியில் முன்னேறிய சாதிகளையும் தனித்தனியே வகைப்படுத்தி, உள் ஒதுக்கீடு கோரி அடிமட்ட சாதிகள் இயக்கங்கள் நடத்துவதும், இந்த அடிமட்ட சாதிகளின் ஓட்டுச் சீட்டுகளைப் பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பெரும்பாலும் ஆதரிப்பதும், குறிப்பாக ஆளுங்கட்சியே அக்கோரிக்கையை ஏற்று உள்ஒதுக்கீட்டுக்கான அரசாணை பிறப்பிப்பதும், பட்டியல் சாதிகளிலேயே முன்னேறிய சாதிகள் தலித் பசையடுக்கினர் அல்லது தலித் கிரீமிலேயர் பகுதியினர் இந்த உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், கிட்டத்தட்ட ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் காட்சியின் மறு அரங்கேற்றமாகத்தான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

ஆந்திராவில், பட்டியல் சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை மிகப் பெரும்பாலும் மாலா சாதியினரே அனுபவித்து வருகிறார்கள், தங்களுக்குரிய பங்கு கிடைக்காமல் தாங்கள் மிகமிகப் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், பட்டியல் சாதிகளை நான்காக வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் மாதிகா சாதியினர் பல ஆண்டுகளாகப் போராடினர். மாலா சாதித் தலைவர்கள் தவிர அனைத்துப் பிரிவினரும் மாதிகா சாதியினரின் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்பு ஆட்சியிலிருந்த சந்திரபாபு நாயுடு மாதிகாக்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்தார். ஆனால் அது செல்லாதென மாலா சாதித் தலைவர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு போட்டு தடுத்து விட்டார்கள். ஆந்திராவின் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆந்திரா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட, மாதிகா போன்ற அடிமட்ட பட்டியல் சாதிகளுக்கான உள்ஒதுக்கீடு இன்னமும் கிடைக்கவில்லை.

ஆந்திராவில் மாதிகாக்கள் சமூக நீதிக்கான இயக்கம் பற்றி எழுதிய உஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையா, “”பார்ப்பனியம் தலித் இயக்கத்தைத் தோற்றுவித்தது. அதைப்போலவே ஒன்று அல்லது இரண்டு அட்டவணை (பட்டியல்) சாதிகளின் தனியாதிக்கத்தை நம்பும் தலித் பார்ப்பனியம் ஆந்திராவில் (மாதிக்காக்களின்) தண்டோரா இயக்கத்தைத் தோற்றுவித்தது” என்று குறிப்பிடுகிறார்.
அதேபோலத்தான் தமிழகத்திலும் தங்களுக்கு உள்ஒதுக்கீடு கோரும் அருந்ததியர் இயக்கங்கள், “”தலித்தியம்”, “”தலித் விடுதலை” என்ற புரட்சி வசனம் பேசும் தலித் பார்ப்பனியத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக மனித உரிமைக் கழகத்தின் அரங்க. குணசேகரன் மற்றும் சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் முன்னணியாளர்கள் அருந்ததிய சாதிகள் போன்ற அடிமட்ட அட்டவணைச் சாதிகளுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றனர். ஆனால், ஜெயலலிதாவின் பாதந்தாங்கியான குடியரசுக் கட்சியின் “”தலைவர்” செ.கு. தமிழரசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் உள்ஒதுக்கீட்டை அப்பட்டமாகவும் கடுமையாகவும் எதிர்க்கின்றனர். முன்பு அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீட்டை ஒப்புக்கு ஆதரித்த திருமாவளவன், இப்போது பூசி மெழுகி மறைமுகமாக எதிர்க்கிறார். “”தலித்பிராமண” கூட்டுக்காக பாடுபடும் எம்.எல்.ஏ. ரவிக்குமாரை சித்தாந்த குருவாகக் கொண்டுள்ள திருமாவளவன், உள்ஒதுக்கீடு விவகாரத்தைப் பின்தள்ளும் வகையில் பொதுவில் அட்டவணை சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை அமலாக்குவதில் உள்ள குறைபாடுகள், பற்றாக்குறை பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவது, சாதிவாரி கணக்கெடுப்பு, வெள்ளை அறிக்கை போன்ற கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இதே கோரிக்கைகளை முன்தள்ளியும், உள்ஒதுக்கீட்டு தலித்துகளைப் பிளவுபடுத்திவிடும், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் எதிர்க்கும் தமிழரசன், கிருஷ்ணசாமி போன்றவர்களை எந்த வகையிலும் விமர்சிக்காமல் நழுவிக் கொள்கிறார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்வதை பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால் இந்த நாட்டின் சமூக விடுதலைப் புரட்சிக்கு தலித்துகள் தாம் தலைமை தாங்குவர் என்று கூறிக் கொள்ளும் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடத் தலித் தலைவர்களுக்கு அருந்ததிய சாதிகளுக்கான உள்ஒதுக்கீட்டை சகித்துக் கொள்ளும் பண்பு கூட இல்லை என்பது வேதனைக்குரியது. அட்டவணை சாதிகளிலேயே அந்தந்தப் பிரிவினரின் ஓட்டு வங்கியை உருவாக்கித் தக்கவைத்துக் கொண்டுள்ள இந்த “”தலித் தலைவர்கள்” கரடிச் சித்தூர் போன்ற இடங்களில் அருந்ததிய மக்களுக்கு எதிராக மேல்மட்ட அட்டவணை சாதியினர் தாக்குதல் தொடுத்தபோது கூட, தத்தம் சாதிகளின் ஆதிக்கத்தையே ஆதரித்தனர். களத்திலேயே இதுதான் அவர்களின் நிலை என்கிறபோது, அட்டவணை சாதிகளிலேயே ஒரு பசையடுக்கு கிரீமிலேயர் பகுதியினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தலித் பார்ப்பனர்கள்; உள்ஒதுக்கீடு விவகாரத்தில் வேறு மாதிரி இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

பொதுவாக இடஒதுக்கீடு ஏற்பாட்டை எதிர்க்காத அதேசமயம், அதன் மீது சில கேள்விகளையும் விமர்சனங்களையும் நாம் எழுப்பியிருந்தோம். நமது நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே தற்போதைய போக்குகள் அமைந்துள்ளன. நாட்டின் பல ஆயிரம் சாதிகளைத் தற்போது பிற்படுத்தப்பட்டவை, தாழ்த்தப்பட்டவை மற்றும் பழங்குடியினத்தவை என்று மூன்று வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் இவ்வளவு என்று இடஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இடஒதுக்கீட்டின் பயன்கள் ஏற்றத்தாழ்வாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதால், ஒவ்வொரு வகையிலும் மேல்மட்டத்தில் ஒரு பசை அடுக்கு கிரீமிலேயர் பகுதியாக சில சாதிகளும், கீழ்மட்டத்தில் பின்தங்கிய பகுதியாக சில சாதிகளும் பிளவுபடும் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே போகிறது. இதனால்தான் ஆந்திராவைப் போல, தமிழ்நாட்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை, வடக்கிலும் மேற்கிலும் உள்ள குஜ்ஜார் பிரிவு மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி கோருவது போன்ற போராட்டங்கள் வெடிக்கின்றன. மேலும் தலித் பார்ப்பனியத்தைப் போலவே சூத்திரப் பார்ப்பனியமும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள விழைகின்றது.

பெரியாரும் அம்பேத்கரும் பார்ப்பன எதிர்ப்புப் புரட்சிப் போராளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், இந்திய சாதிய ஆதிக்கத்துக்கு சமூகநீதி சாதி சமத்துவத் தீர்வாக அவர்கள் முன்வைத்த இடஒதுக்கீடு ஏற்பாடு தலித் பார்ப்பனியம், சூத்திர பார்ப்பனியம் என்ற புதிய அவதாரங்களை உருவாக்கியிருக்கிறது.

 ===================================================================

தி.மு.க. ஆட்சியில்தான் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தி.மு.க தலைவர் கலைஞர் கூறினார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப் பதாவது:-
ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மற்றும் பொருளாதார நிலையில்  அடித் தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத் திற்கு சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி,  ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து  3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு  வழங்குவதற் கான முடிவு  27-11-2008 அன்று  திராவிட முன்னேற்றக் கழக  ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.   இதன் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டில்  தமிழ்நாடு  அருந்ததியர்கள் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில்  இடங்களை மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியி னருக்கான  இட ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல்)  சட்டம்  இயற்றப்பட்டு,  29-4-2009இல்  இது தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டு  வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தி.மு.கழக ஆட்சியில் இவ்வாறு உள் ஒதுக்கீடு  வழங்கப்பட்டதன் காரணமாக 2009-2010இல்  அருந்த திய சமுதாயத்தைச் சேர்ந்த  56 மாணவ மாணவியர் மருத்துவக் கல்லூரிகளிலும்,  1,165 மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரி களிலும்  சேர்ந்து,  மொத்தம்  1,221 பேர் பயன் பெற்றனர்.
2010-2011இல்  இந்த எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளில்  70  என்றும்,  பொறியியல் கல்லூரி களில்  1,813 என்றும்  மொத்தம்  1,883 என்றும்  மேலும் அதிகரித்தது.
2009-2010இல்  முதன் முதலாக  -  அருந்ததி யர்க்கு  மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப் பட்ட பின் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து  பயனடைந்த அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக;  பெண் சிங்கம் என்ற திரைப்படத் திற்கு நான் கதை வசனம் எழுதி, அதற்கு ஊதியமாகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயையும்,  மேலும் என் சொந்தப் பணத்திலிருந்து   11 லட்சத்து  5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம்  61 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கி,  இந்த 1,221 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி வளர்ச்சி நிதியாக 5-12-2009 அன்று வழங்கினேன்.
தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம்
வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்ட பொம்மனின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாய்த்துக் கொண்ட வரலாறு ஒரு புறம் என்றால்;  மற்றொருபுறம்;  வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே,  நெல்லைச் சீமையின் நெல்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன் வெள் ளையரை எதிர்த்துப் போரிட்டார்.   வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் பூலித்தேவனுக்கு முதன்மைப் படைத் தலைவராக இருந்தவர், அருந்ததிய சமு தாயத்தைச் சேர்ந்த ஒண்டி வீரன். கட்ட பொம்மனுக் கும், பூலித் தேவனுக்கும், சுந்தரலிங்கத்துக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பிய கழக அரசு, அருந்ததிய சமுதாயத்தினரான விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவைப் போற்றும் வகையில் தக்கதோர் நினைவுச் சின்னம் ஒன்றினை நெல்லைச் சீமையில் எழுப்பும் என்று கழக ஆட்சியிலேதான் நிதிநிலை அறிக்கையிலேயே 19-3-2010 அன்று அறிவிக்கப்பட்டது. அருந்ததியர்களுக்கு அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நிதிஉதவி வழங்குவதற் கென தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் 8.6.2007 அன்று தொடங்கப்பட்டு,  22 ஆயிரத்து 811 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப் பட்டு, அவர்களுள் 1,133 உறுப்பினர் குடும்பங் களுக்கு 17 இலட்சத்து   86 ஆயிரத்து 440 ரூபாய் நிதிஉதவி வழங்கப் பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலே தான். மேலும், மனிதக் கழிவை அகற்றித் தூய்மைப் படுத்தும் பணிகளில் முன்னர் ஈடுபட்டிருந் தோருக்கு மாற்றுத் தொழிலில் ஈடுபட உதவுவதற் காக  22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மறுவாழ்வுத் திட்டம் ஒன்றும் கழக அரசால் செயல்படுத்தப்பட்டது.  இப்பணியாளர்கள் கழிவுநீர்க் குழாய்களில் இறங்கிப் பணிபுரிவதைத் தவிர்க்க,  மாநகராட்சிகள் அனைத்திலும் அடைப்பு களை அகற்றும் இயந்திரங்கள் வாங்கத் திட்டமிடப் பட்டு;  சென்னை மாநகரைப் பொறுத்தவரை 3 கோடியே  97 லட்சம் ரூபாய்ச் செலவில், 47 தூர்வாரும் இயந்திரங்கள் கொள் முதல் செய்யப்பட்டு, தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன;    மற்ற    9 மாநகராட்சி களுக்கும் தேவையான அடைப்பு நீக்கும் இயந்திரங்கள்  கொள்முதல் செய்யப்பட்டன.   மாநகராட்சிகள் அனைத்திலும் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்பு களை நீக்குவதற்காக மனிதர்களை ஈடுபடுத்தும் அவலநிலையை  அகற்றி, இயந் திரங்கள் மூலம் தூய்மை செய்யும் பணி  தொடங்கப் பட்டது.   சென்னை சாந்தோம் கலைவிழா மன்றம் சார்பில் 2008ஆம் ஆண்டுக்கான `வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபொழுது நான் ஆற்றிய உரையில்,
தமிழ்நாட்டில் சிறுபான்மையோருக்கு, ஏழை, எளி யோருக்கு, பிச்சைக்காரர்களுக்கு, ஊன முற்றோர்க்கு எல்லோர்க்கும் ஒருவர் பாக்கி இல்லாமல் அரசின் சார்பிலே நன்மைகள் பலவற்றைச் செய்திருந்தா லும்கூட, ஒரு பகுதி விடப்பட்டுள்ளது.  ஒரு பகுதி கண்ணிருந்தும் குருடர்களாக - வாயிருந்தும் பேச முடியாதவர்களாக - வாழ  முடியாதவர்களாகவே, மதிக்கப் படாதவர்களாகவே ஒரு சமுதாயம் தமிழ்நாட்டிலே இருக்கிறது. இன்னமும் இருந்து வரு கின்றது.  அந்தச் சமுதாயத்தின் பெயர்தான் அருந்ததியர் சமுதாயம்.  அந்த அருந்ததியர் சமுதாயம் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டார்கள்.  அதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப் பட்டு, அக்குழு அரசுக்கு அறிக்கையைத் தந்தது. அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற எங்களுடைய அமைச்சரவைக் கூட்டத்திலே ஆலோசித்து விவாதித்து அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்கவிருக் கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், மலம் தூக்குகின்ற மனித வர்க்கம் அது;  தலையில் மலத்தைத் தூக்கிச் செல்லுகின்ற மனித வர்க்கம்; நாகரிக காலத்தில் மலத்தை அகற்ற - கழிவறைகளைச் சுத்தப்படுத்த - பல வழிமுறைகள் வந்திருந்தும்கூட இன்னமும் கிராமப் பகுதிகளில் அந்த மலத்தைத் தூக்குகின்ற மகா கொடிய நிலை இன்னும் மாறவில்லை.  மனிதனை மனிதனாக ஆக்க வேண்டும். மனித மலத்தை மனிதனே தூக்குவது நமக்கெல்லாம் பெருமையாகாது.  வெட்கக்கேடு.  நமக்கு அதைவிட அவமானம் வேறில்லை.
அவர்கள் அவமானச் சின்னங்கள் அல்ல.  அவர்களை அப்படி ஆக்கி வைத்து அரசு நடத்திக் கொண்டிருக்கிறோமே நாம்தான் அவமானச் சின்னங்கள் என்ற எண்ணத் தோடு, அந்த அவமானத்தைப் போக்க எடுத்திருக்கின்ற நடவடிக்கைதான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.  அரசுச் செயலாளர்கள் என்னிடம் பேசும்போது இப்போதே இதைச் செய்ய வேண்டுமா என்றார்கள்.  அப்போது நான் சொன்னேன். கீழான மக்கள் கேவலப்படுத்தப்படும் மக்கள், புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கின்ற மக்கள்,  மனிதனைப் பார்த்து மனிதனே மதிக்காத அளவிற்கு மட்ட ரகமாக ஆக்கப்பட்ட மக்கள் - அந்த மக்களை கைதூக்கி விடுவதுதான் இந்த கருணாநிதியின் வேலை - இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அந்தச் சாதனையிலே, சரித்திரத்திலே, இதுவரை யில் இடம் பெறாமல் இருப்பது இந்த அருந்ததியர் மக்களுக்கு நாம் அன்பு காட்டி அவர்களைக் கைதூக்கிவிடாமல் இருப்பதுதான் - நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது - கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய  - அச்சடிக்கப்பட வேண்டிய செய்தி அருந்த தியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம்பெற வேண்டும்  - என்று தெரிவித்தேன். இன்னும் கூற வேண்டுமேயானால், அருந்ததியர் இட ஒதுக் கீட்டுக்கான மசோதா பேரவையிலே நிறைவேற்றப்பட விருந்த நாளன்று இராமச்சந்திரா மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த நான் 26-2-2009 அன்று என் கைப்பட பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி னேன்.  அந்தக் கடிதத்தில், மாண்புமிகு  பேரவைத்  தலை வர்  அவர்களே, அவை  முன்னவர்  அருமைப் பேரா சிரியர் அவர்களே, சட்டப்பேரவை  அனைத்துக் கட்சி  அன்பு உடன்பிறப்புகளே,
இன்று  வந்து  உங்களைச்  சந்திப்பதாக  இருந்தும் கூட  டில்லி  மருத்துவரும்  சென்னை  மருத்துவ  நண்பர்கள்  குழுவும்  அளித்த அறிவுரை யாலும்  அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை.   மன்னிக்க வேண்டுகிறேன். நிமிர  முடியாமலும்,  திரும்ப  முடியாமலும்  நங்கூரம்  போட்டது போல  நரம் பிணைந்து  முதுகுத்  தண்டில்  வலி!  வலி!
ஒன்று  உடல்  வலி  -  பிறிதொன்று  நீங்கள்  வழங்கி யுள்ள  மன  வலி!   கருத்து  மாறுபாடுகளுக்கிடையிலே யும்  நீங்கள் காட்டும்  கனிவு -  அரசியல்  மாச்ச ரியங் களை  மீறி  நீங்கள்  காட்டும்  அன்பு  -  இன்று  நம்மை  மீண்டும் இணைக்கிறது  -  தமிழ்த் தாயின்  கரம் நம்மை ஒரு சேர  அணைக்கிறது.    அறிவியக்கம் - ஆன் மிகம்  -  நாத்திகம்  - ஆத்திகம்  -  இந்த  வேறுபாடுகள்  மாறு பாடுகள்  கடந்த  நன்றியுணர்வும் நன்மனித  நேயமும் வளர்த்திடுவோம். ஆரம்பகால  பொதுவுடைமை வாதி  என்ற  முறையிலும் அய்யா, அண்ணா, காமராஜர்,  அண் ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில்  ஒரு வன்  என்ற முறையிலும்  -  அடி மட்டத்துக் கெல்லாம்  அடி மட்டமாகக் கிடந்து அவதியுறும்  மனித  ஜீவன்கள் -  அருந்ததிய  மக்கள்,  புதிய  உலகம்  -  புரட்சியுகம் - காண்பதற்காக; இன்று  அவையில்  நான் முன் வைக்கும் சட்ட முன் வடிவை;  உங்கள்  ஆதரவு  வழங்கி; நிறைவேற்றித்  தர வேண்டுகிறேன்.
இங்ஙனம், உங்கள்அன்பு நதியில்  -  என்றும்  நனைந் திடவே  விரும்பி வாழும்;    உடன்பிறப்பு  -  உங்களில்  ஒருவன்,   அன்பு மறவாத (மு. கருணாநிதி) 26.2.2009 - என்று எழுதியிருந்தேன்.   அருந்ததியர் சமுதாயத் தின்பால் எனக்கு எந்த அளவிற்கு ஈடுபாடு உண்டு என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கூறவேண்டு மேயானால், என்னுடைய அணுக்கத் தொண்டராக -  என்னை அன்றாடம் பராமரிப்பதிலே தன்னை முழு அளவிலே ஈடுபடுத்திக் கொண்டவராகப் பணியாற்றும்  தம்பி நித்யாவே  அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஏன், கழகத்தின் மூன்று துணைப் பொதுச் செயலா ளர்களிலே ஒருவரே  அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்!
இவ்வாறு அவ்வறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார்.



Read more: http://viduthalai.in/component/content/article/57974.html#ixzz3Uorwfj8h

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக