சனி, 17 நவம்பர், 2012

தர்மபுரி ஜாதிக்கொள்ளை குறித்த பல்வேறு குழுவின் உண்மை அறியும் அறிக்கை.



தர்மபுரி ஜாதிக்கொள்ளை குறித்த பல்வேறு குழுவின்  உண்மை அறியும் அறிக்கை. (நவம்பர் 7 - மாலை 4.30 மணி.)







பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்

வன்னி அரசு, வெள்ளி, 16 நவம்பர் 

நவம்பர் 7 - மாலை 4.30 மணி.
அந்த அண்ணா நகர் காலனிப் பகுதியில் காடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் அப்போதுதான் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு உணவுக்காகச் சிலர் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் வருகிற தீபாவளிக்கு என்ன செய்யலாம் என்று வீடுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அண்ணாநகர் நுழைவாயிலில் உள்ள ஜோசப் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. வீடு திடுமெனத் தீப்பிடித்து எரிகிறது. ஆடு, மாடுகள் சிதறி ஓடுகின்றன. பெண்டு பிள்ளைகளின் கதறல் அந்தப் பகுதியையே நிலைகுலைய வைக்கிறது. "ஒரு பய இருக்கக் கூடாது. ஓடுங்கடி..." என்கிற மிரட்டல் சத்தம் ஒவ்வொரு வீட்டையும் தாக்கும்போது ஓங்காரமாய் ஒலிக்கிறது.
thirumavalavan_dharmapuri_640
அந்தத் தெருவின் கடைசி வீடு நிறைமாத கர்ப்பிணியாகவுள்ள புவனாவின் வீடு. அப்பா திருப்பூரில் வேலைபார்த்து வருகிறார். அம்மாவோ பக்கத்தில் உள்ள கடலைக் காட்டில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். தாக்குதலிலிருந்து தப்பிக்க சோளக் கொல்லைக்குள் ஒளிந்து கொள்கிறார் புவனா. அவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், தவணை முறையில் வாங்கி வைத்திருந்த புதிய டிவிடி பிளேயர், டிவியை உடைத்துப் போட்டுவிட்டு பாத்திரங்களையும் சிதைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
புவனா 7 மணி வரை காட்டுக்குள் தனியாக நடந்தே போகிறார். அருகில் உள்ள கிராமத்தில் அடைக்கலம் கேட்கிறார். அவர்களோ, "அடைக்கலம் கொடுத்தா எங்களையும் அடிப்பாங்க... போ போ" என்று விரட்டுகின்றனர். வேறு வழியில்லாமல் அந்த நிறைமாத கர்ப்பிணி 10 கிலோ மீட்டர் தூரம் தனியாக நடந்தே சென்று பேருந்துகள் செல்லும் சாலையை அடைகிறார். போகிற வாகனங்களை வழிமறித்து 'லிப்ட்' கேட்டும்கூட அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை.
ஒரு வழியாக இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் அண்ணா நகர் சேரிக்குள் புவனா நுழையும்போது அப்பகுதியே ஒப்பாரியும் ஓலமுமாய் இருந்தது. 60 வீடுகளும் தாக்கப்பட்டிருந்தன. தாக்குதல் என்றால் சாதாரணத் தாக்குதல் இல்லை. பெட்ரோல் குண்டுகளால் சின்னாபின்னமாக்கியிருந்தனர். வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், அரசு கொடுத்த இலவச மிதிவண்டிகள், பீரோக்கள், கட்டில்கள் என்று வீடுகளிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டன. துணிமணிகள் எரிந்துகொண்டிருந்தன. மாற்றுத் துணியில்லை. அண்ணாநகர் பகுதி மட்டுமல்ல கொண்டம்பட்டி சேரியும் இப்படித்தான் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. கொண்டம்பட்டி பழைய காலனியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை.
வன்முறைக் கும்பலின் தாக்குதலில் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனிதான் மிகப் பெரிய தாக்குதலுக்குள்ளான பகுதி. இந்தக் காலனிக்குள் நுழையும்போதே எரிந்த வீடுகளின் சாம்பல் நெடிதான் வரவேற்றது. விவசாயிகளின் பழமைவாய்ந்த மாட்டு வண்டி ஒன்று தொழுவத்தோடு எரிக்கப்பட்டிருந்தது. இன்னமும் அந்த மாட்டு வண்டி நெருப்பில் தகித்துக் கொண்டுதான் இருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே இருந்த பட்டுப் புடவைகள், நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. சமையல் அறையிலிருந்த கேஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடுகின்றனர். மிக நிதானமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்தபின் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளைச் சேதப்படுத்திவிட்டு ஓடுகின்றனர். வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் எலும்புக் கூடுகளைப் போல நின்று கொண்டிருந்தன. வீடுகளின் கட்டிடங்கள் மேற்கூரை மட்டுமல்ல சுவர்கள்கூட தரைமட்டமாயிருந்தன. மாற்றுத் துணிக்குக்கூட வழியில்லாமல் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வெந்து தணிந்தது அந்தச் சேரி. வன்முறைக் கும்பல் மிகப் பொறுமையாக வந்த வேலையை முடித்துவிட்டுப் பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்தனர்.
இது ஏதோ ஈழத்தமிழர்கள் குடியிருக்கும் பகுதியில் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல் அல்ல. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களான பறையர்கள் மீது இன்னொரு தமிழர்களான வன்னியர்கள் நடத்திய தாக்குதல்தான்.
இத்தனை வன்முறை வெறியாட்டத்திற்கான காரணமாகச் சொல்லப்படுவது ஒரு காதல் திருமணத்தைத்தான்.
dharmapuri_naththam_village_370தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி. நல்ல விவசாய பூமிதான். சோளமும் கம்பும் பருத்தியும் விளைகிற பூமி. இந்த நத்தம் காலனியில் உள்ள பறையர்களுக்குச் சொந்தமாக விவசாய நிலம் இல்லையென்றாலும் திருப்பூர், பெங்களூர், கோவை பகுதிகளுக்குச் சென்று வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வன்னியர்களை நம்பி வாழ்வதில்லை. அதுமட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நத்தம் காலனியைச் சுற்றியுள்ள சேரிகளுக்கெல்லாம் நத்தம் காலனிதான் பாதுகாப்பு. அதற்குக் காரணம் நக்சலைட்டுகள். இங்குதான் அப்பு, பாலன் போன்ற நக்சலைட்டுகள் தங்கி பணிசெய்தனர். அரச பயங்கரவாதத்திற்கெதிராகப் புரட்சி செய்யக் கிளம்பியவர்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த நத்தம் காலனிதான். அதனால்தான் அப்பு, பாலன் ஆகியோருக்கு ஊரின் நுழைவாயிலில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழக உளவுத்துறையின் தீவிரக் கண்காணிப்புக்குள்ளான சேரி மட்டுமல்ல 'பொடா' கைதிகள் அதிகம் உள்ள சேரியும், அரசியல் வழக்குகள் அதிகம் உள்ள சேரியும் நத்தம் காலனிதான்.
அப்படிப்பட்ட காலனியைச் சார்ந்தவர் இளங்கோ. தருமபுரி அரசு மருத்துவமனையில் சமையல்காரராக வேலைபார்த்து வருகிறார். பாலாஜி, இளவசரன் என்கிற இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். பக்கத்து ஊரான செல்லன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தமது மகள் திவ்யா, மகன் மணிசேகரனுடன் வசித்து வந்தார்.
திவ்யா வெளியூரில் இளநிலை செவிலியர் பட்டப் படிப்பு படித்து வந்தார். இளவரசன் வெளியூரில் பிஎஸ்சி படித்து வந்தார். பேருந்துகளில் போகும்போதும் வரும்போதும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி, கடந்த அக்டோபர் 14 அன்று வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். மறுநாள் அக்டோபர் 15ஆம் தேதி சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்குமாரிடம் தஞ்சமடைந்து பாதுகாப்புக் கேட்கின்றனர்.
அது வரை பதுங்கியிருந்த சாதிவெறி அப்போதுதான் தலையைத் தூக்கியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் மதியழகன். அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். வெள்ளாய்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, ஆண்டியல்லி பஞ்சாயத்துத் தலைவர் சின்னச்சாமி, பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணசாமி மற்றும் பாமகவைச் சேர்ந்த பச்சையப்பன், மெடிக்கல் சிவா உள்ளிட்டோர் ஊர்க்கூட்டம் போடுகின்றனர். இக்கூட்டத்தில் புளியம்பட்டி, கோனயம்பட்டி, சவுலுப்பட்டி, செல்லங்கொட்டாய், வாணியம்படியான் கொட்டாய், புதூர், ரக்கிரியான் கொட்டாய், கதிர் நாயக்கன் நல்லி, குப்பூர், செங்கல்மேடு, சவுக்குத்தோப்பு, மத்தன் கொட்டாய், மூலக்காடு, கொல்லப்பட்டி, கொட்டாவூர், குட்டூர், கீழாண்டி அல்லி, மேலாண்டி அல்லி, வன்னியம்பட்டி, சீராம்பட்டி, லலிதாவூர், லாலாக்கொட்டாய், ஒட்டையான்கொட்டாய், காமராஜ் நகர், தாளிக்காரன் கொட்டாய், நாயக்கன்கொட்டாய், சவுலுக்கொட்டாய், வெள்ளாள்பட்டி உள்ளிட்ட 36 ஊர்களைச் சேர்ந்த வன்னியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சரவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இந்த ஒருங்கிணைப்பில் பின்னணியாகச் செயல்பட்டனர்.
ஊர்க்கூட்ட்டத்தின் முடிவில் தமது சாதிப் பெண்ணான திவ்யா வன்னியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போடுகின்றனர். இதனடிப்படையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நத்தம் காலனியைச் சார்ந்தவர்களை வரவழைத்து பஞ்சாயத்து நடத்துகின்றனர் வன்னியர்கள். பஞ்சாயத்தில், "வருகின்ற 7ஆம் தேதிக்குள் திவ்யாவை ஒப்படைக்காவிட்டால் பறப் பசங்க யாரும் உயிரோடவே இருக்க முடியாது" என்று பகிரங்கமாக மிரட்டப்படுகின்றனர்.
இந்நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜ் நவம்பர் 7ஆம் தேதி மாலை 3 மணியளவில் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, மாலை 4 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர் வன்னியர்கள். பா.ம.க. பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் இந்தச் சாலை மறியல் நடைபெறுகிறது. 4.30 மணிக்கெல்லாம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, கொண்டம்பட்டி பழைய காலனி ஆகிய பகுதிகளில் நுழைந்து தீக்கிரையாக்குகின்றனர்.
தருமபுரியிலிருந்து பிரதான சாலையான செங்கல்மேட்டிலிருந்த மரங்களை அறுத்துப் போடுகின்றனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வன்னிய சாதிவெறிக்கும்பல் அவசரமில்லாமல் பதற்றமில்லாமல் காவல்துறை வந்துவிடுவார்களோ என்ற பயமில்லாமல் பொறுமையாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை பல சேரிகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன, தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சங்கராபுரம், குண்டுபட்டி, மருக்காளம்பட்டி, கொடியன்குளம், மீனாட்சிபுரம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர்... இப்படிப்பட்ட சேரிகளை சாதிவெறியர்கள் தாக்கிவிட்டு, வீடுகளுக்குத் தீ வைத்துவிட்டு ஓடியுள்ளனர். ஆனால் நத்தம் காலனி தாக்குதல் என்பது தமிழகத்திலேயே இதுவரை நடந்திராத கொடூரமான தாக்குதலாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னிய சாதிவெறியர்கள் சேரிக்குள் நுழைகிறார்கள். இதில் பெண்கள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் வீட்டுக்குள் உள்ள பீரோக்களை உடைப்பது அதில் உள்ள பணம், நகைகள், பட்டுப்புடவைகளைக் கொள்ளையடிப்பது. அதற்குப் பிறகுதான் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வீட்டின் முற்றத்தில் உள்ள கார்கள், பைக்குகளைத் தீக்கிரையாக்கிவிட்டு விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், லேப்-டாப், டிவிடி பிளேயர் போன்றவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். ஒரு சில வீடுகளில் இவைகளை உடைத்தும் போட்டுள்ளனர். அதாவது தூக்கிச் செலல முடிந்தவற்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். முடியாதவற்றை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதன் உச்சகட்டமாக நத்தம் காலனிக்காரர்கள் வணங்கும் கொடகாரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஒவ்வொரு வீட்டைத் தாக்கும்போதும் "பறத் தேவடியா மகனுகளுக்கு வந்த வாழ்வப் பாருடா. வசதியப் பாருடா. இவனுங்களுக்கு இதெல்லாம் ஒரு கேடா..." என்று சொல்லிக்கொண்டே தாக்கியுள்ளளர்.
பறையர் வகுப்பைச் சேர்ந்த இளவரசன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா போன்ற காதல் திருமணங்கள் இப்பகுதியில் முதல் முறையன்று. அப்பகுதியில் இதுபோன்ற சாதி கடந்த காதல் திருமணங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னணி இந்தக் காதல் திருமணம் மட்டுமல்ல.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரச பயங்கரவாதத்திற்கெதிராக எழுந்த நக்சல்களின் பாதுகாப்பு அரண் நாயக்கன் கொட்டாய் காலனிதான். பறையர்கள் மட்டுமல்லாமல் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இக்கிராமத்திற்கு வந்து செல்வார்கள். இந்த நத்தம் காலனிக்காரர்களே பல திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளனர். அது மட்டுமல்ல சுற்றியுள்ள தலித்துகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எந்தப் பிரச்சனை என்றாலும் நத்தம் காலனி மக்கள்தான் களத்தில் நிற்பார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கான பாதுகாப்பு அரண் நத்தம் காலனிதான். ஆதிக்கச் சாதி வன்னியர்களைச் சார்ந்து வாழாமல் தனித்து சுயமாய் உழைத்து வாழ்ந்து வந்த நாயக்கன்கொட்டாய் பகுதி சேரி மக்கள் மீது வன்னியர்கள் மட்டுமல்ல, அப்பகுதி காவல்துறையும் வெறுப்புணர்வைக் கக்கியது. நாள் பார்த்தது. அந்த நாள்தான் நவம்பர் 7ஆம் நாள். நெடு நாட்கள் பசியை - வெறியை - உளவுத்துறையின் உதவியுடன் வன்னிய சாதி வெறியர்கள் தணித்துக் கொண்டனர்.
thirumavalavan_dharmapuri_641
உளவுத் துறைக்குத் தெரியாமல் ஒரு சேரி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட முடியாது. மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தைத் தடுத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளை உருவாக்க பெட்ரோல் வாங்கியுள்ளனர். 36 கிராமங்களில் உள்ள வன்னியர்களை ஊர் ஊராய் போய்த் திரட்டியுள்ளனர். நக்சல்கள் பயிற்சியில் ஈடுபட்ட நாயக்கன் கொட்டாய் உளவுத்துறையின் முழு கண்காணிப்புக்குள்ளான பகுதி என்பதால் உளவுத்துறை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உளவுத் துறையின் நோக்கம் மீண்டும் நக்சல்கள் இங்கு வந்து போவதைத் தடுப்பது. சாதிவெறியர்களின் நோக்கம் பொருளியல்ரீதியாக சேரி மக்கள் தலைநிமிர்ந்து நிற்பதைச் சிதைப்பது. ஒரே காதல் பிரச்சனையில் இரண்டு பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டனர் உளவுத்துறையினர். உயிர்ச் சேதமில்லாமல் கொள்ளையடித்து வீடுகளை சின்னாபின்னப்படுத்தியதன் மூலம் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின்னால் நகர்த்தியிருக்கிறது இத்தாக்குதல்.
ஒவ்வொரு வீட்டிலும் 5 பவுன், 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ரூ. 5000 முதல் 5 லட்சம் வரை திருடப்பட்டிருக்கின்றன. இதுவரை 120க்கும் மேற்பட்ட வன்னியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரிடமும் இன்னமும் நகைகளையோ பணத்தையோ கைப்பற்றியதாகத் தகவல் இல்லை.
தங்குவதற்கு வீடு இல்லை. மாற்றிக்கொள்ள உடையில்லை. வாசலில் அகதிகளைப்போல கண்ணீரும் கம்பலையுமாய் உடகார்ந்திருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்குப் பின்னால் பொருளாதாரரீதியாக எழுந்த இந்த தலைமுறை அடுத்த தலைமுறையில்தான் எழுந்து நிற்கும் என்கிற அளவில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் பெருவிழாவில் பேசிய காடுவெட்டி குரு, "கலப்புத் திருமணங்கள் செய்பவர்களை உயிரோடு விடக்கூடாது" என்று பகிரங்கமாகப் பேசியதை மருத்துவர் ராமதாஸ் அவர்களும் ரசித்தார்.
சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா? நடந்த சம்பவத்திற்கு பா.ம.க. பொறுப்பேற்று வெளிப்படையாக மன்னிப்புக் கேட்குமா?
பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்.
சேரி மக்களின் விடுதலைக்கு ஆயுதம்தாங்கிய புரட்சிதான் ஒரே வழி என்று முழக்கமிட்ட புரட்சிகரக் குழுக்களுக்குப் பதுங்குமிடமே சேரிகள்தான். இன்றைக்கு 'புரட்சி' செய்யப் புறப்பட்ட அந்த நக்சல்பாரிகள், அப்பாதையிலிருந்து விலகி தாங்கள் சார்ந்த சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்துகளுக்காக தனியே இயக்கங்களும் நடத்தி பிழைக்கப் போய்விட்டார்கள். பாவம் சேரிமக்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 'புரட்சிக்காரர்களோ' பாதுகாப்பாகவும் வசதியாகவும் சாதி அரசியலில் வலம் வருகின்றனர். அரச பயங்கரவாதத்தை ஒழிக்க வந்தவர்கள் சாதி பயங்கரவாதிகளாக இன்று மாறிப்போனார்கள்.
இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலாவும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்.
தமிழ்த்தேசியம் பேசுகின்ற எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் சேரி மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட மனமில்லை. வெளிப்படையாக வன்னியர்களைத் தூண்டிவிடும் காடுவெட்டி குருவையும், அந்த குருவைத் தூண்டிவிடும் ராமதாசையும் கண்டிக்க எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் துணிச்சல் இல்லை என்பதைத்தான் இந்தத் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.
புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும் பாமகவின் சாதிவெறியுமே நத்தம் காலனியைச் சிதைத்துள்ளது. 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 36க்கும் மேற்பட்ட ஊரார் சேர்ந்து நத்தம் காலனி மீது தாக்குதல் நடத்தி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொதிப்பும் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.
சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் - அன்று
வரலாறு மாறும்
அப்போது ,
ஒப்பாரியும் ஓலமும் சேரிக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது.
- வன்னி அரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

வன்னியர் சாதிவெறி சக்திகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்!

மக்கள் சனநாயக குடியரசு கட்சி செவ்வாய், 13 நவம்பர் 

தருமபுரி - நத்தம் தலித் கிராமம் ஆதிக்க சாதி வெறியர்களால் சூறையாடல்
தலித் மக்கள் சனநாயக முன்னணி
மக்கள் சனநாயக குடியரசுக் கட்சியின் கண்டனம்
நத்தம் தலித் மக்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட போராட்ட பாரம்பரியம் மிக்கவர்கள், மிக சிறிய கிராமமாக இருந்தபோதும், சுற்றிலும் வன்னியர் கிராமங்கள் இருந்த நிலையிலும், சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே சாதி இழி தொழிலை நிறுத்தியவர்கள். அதற்கு எதிரான சாதி வெறி சக்திகளின் தாக்குதல் முயற்சியை முறியடித்தவர்கள். பக்கத்து கிராமமான கோணயம்பட்டியை சேர்ந்த மணி என்பவன் தலித் மக்களை இழிவுபடுத்திய போது வன்னிய உழைக்கும் மக்களுடன் சேர்ந்து அவனுக்கு தக்க பதிலடி கொடுத்தவர்கள். நத்தம் கிராமத்திலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல்வேறு மக்கள் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர்கள். இப்போராட்டங்களை புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து நடத்தினார்கள்.
இத்தகைய செயல்பாடுகளில் அடங்கி கிடந்த சாதி வெறி சக்திகள் தற்போது தலைதூக்கி உள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் காடுவெட்டி குரு வன்னியர் பெண்ண வேற்று சாதிக்காரன் காதலித்து மணந்தால் அவனை வெட்டுங்கள் என்று வன்னியர்களிடம் - சாதி வெறியை தூண்டி பேசியதும், தற்போது பா.ம.க. தனது அரசியல் லாபத்திற்காக வன்னிய சாதி வெறியை தூண்டி வருவதும், நத்தம் தலித் கிராமத்தை தாக்குவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆதிக்க சாதிவெறி சக்திகள் திட்டம் தீட்டி வந்த நிலையில் இதை அறிந்திருந்தும் காவல்துறை வேடிக்கை பார்த்ததும் தான். தலித் மக்கள் மீதான இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உண்மை காரணமாகும்.
எங்கள் தலித் மக்கள் சனநாயக முன்னணி, மக்கள் சனநாயக குடியரசுக்கட்சி கீழ்வரும் கோரிக்கையை முன் வைக்கிறது.
· நத்தம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்திய அனைத்து சாதி வெறி சக்திகளையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!
· தலித் இளைஞனை மணந்த பெண்ணின் தந்தையை தற்கொலைக்கு தூண்டிய வன்னியர் சாதிவெறி சக்திகளையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்!
· இழப்பீடுகளுக்கு சாதிவெறி தாக்குதல் நடத்திய நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து வழங்க போராடுவோம்!
· சாதிவெறிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய பாரம்பரியம் மிக்க நாய்க்கன் கொட்டாய் சுற்றியுள்ள வன்னியர் உழைக்கும் மக்களே, சாதி வெறிக்கு பலியாகாமல் தலித் மக்களுடன் சேர்ந்து சாதி வெறியர்களை தனிமைப்படுத்தி முறியடிப்போம்!
· வீரமிக்க போராட்டம் பாரம்பரியம் மிக்க நத்தம் தலித் மக்களே! புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து ஆதிக்க சாதி வெறியர்களை தனிமைப்படுத்தி முறியடிப்போம்.
இவண்,
தலித் மக்கள் சனநாயக முன்னணி
மக்கள் சனநாயக குடியரசுக்கட்சி
தமிழ்நாடு  

தலைவர்
தோழர் துரைசிங்கவேல்
90034 90422

பொது செயலாளர்
தோழர். பழனி
9176264717

து. பொது செயலாளர்
தோழர். மா.செந்தில்
98420 66359



தர்மபுரி தலித் ஒடுக்குமுறை பற்றிய CPIML உண்மை அறியும் குழு அறிக்கை

பாலசுந்தரம் திங்கள், 12 நவம்பர் 2012 

தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கோட்டை அருகிலுள்ள நத்தம், அண்ணாநகர், கொண்டாம் பட்டி கிராமங்களின் தலித் மக்கள் மீது, சாதிவெறிக்கும்பல் 7-11-2012 அன்று நடத்திய படுமோசமான வன்முறைத் தாக்குதல் குறித்து 11-12-2012 அன்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச்செயலாளர் தலைமையில் ஆய்வுக்குழு தாக்குதலுக்கு ஆளான கிராமங்களுக்கு சென்று வந்தது. ஆய்வுக்குழுவில் கட்சியின் மாநிலக்கமிட்டி உறுப்பினரும் எஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவருமான அ.சந்திரமோகன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத்தலைவர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் வெங்கடாசலம், தருமபுரி மாவட்டச்செயலாளர் கோவிந்தராஜ், கட்சியின் சேலம் மாவட்ட கமிட்டி உறுப்பினர் வேல்முருகன், டாக்டர் அம்பேத்கர் பொறியாளர், பணியாளர் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளர் முருகன், போக்குவரத்துக்கழக சங்க தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் பி. பழனி, எஸ் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோரை விரிவாக சந்தித்தது.
ஆய்வுக்குழு கண்டறிந்த விவரங்களும் பரிந்துரைகளும்:
நவம்பர் 7ம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 வரை நாலரை மணி நேரத்துக்கு நூற்றுக்கணக்கான வன்முறைக் கும்பல் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களின் தலித் குடியிருப்புகளை தாக்கி தரைமட்டமாக்கியுள்ளனர். இம்மூன்று கிராமங்களிலும் 300க்கு மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமாக்கப்பட்டுள்ளன. மொத்த சேதத்தின் மதிப்பு 3.5 கோடி என்று குறைவாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. ஆனால் 25 கோடிக்கு மேலிருக்கும் என்பது தெரிய வருகிறது.
தாக்கப்பட்ட அனைத்து வீடுகளும் பெட்ரோல் குண்டுகள் வீசி சாம்பலாக்கப்பட்டுள்ளன. மூன்று குழுவாக பிரிந்து சென்று ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அனைத்து வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உடமைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. பீரோக்கள் உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நவீன வீட்டு உபயோக சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் பிள்ளைகளின் மிதிவண்டிகள் முழுவதுமாக நொறுக்கப்பட்டுள்ளன. பள்ளி சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் தீ வைத்து பொசுக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து சம்பாதித்த அனைத்து வாழ்வாதாரங்களும் வசதிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஜெயலலிதா ஆட்சியின்போது, திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளம் தாக்கப்பட்டது போல தலித்துகளின் பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்தும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. பாமக, திமுக, அதிமுக. தேமுக கட்சிகளின் முன்னாள், இந்நாள் ஊராட்சித்தலைவர்கள், தவறான வழியில் சொத்து சேர்த்தவர்கள், ரவுடித்தனம் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் அடாவடிப்பேர்வழிகள் தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியுள்ளனர்.
நடந்த தாக்குதல்கள் அரசாங்க இயந்திரத்தின் வருவாய்துறை, காவல் துறையின் ஆதரவு இல்லாமல் இந்த அளவு பெரிய, விரிவான, மோசமான தாக்குதல்கள் நடந்திருக்கமுடியாது. நான்கு மணி நேரத்துக்கு மேலாக தாக்குதல் நடைபெற்று முடிந்த பிறகே காவல்துறை வந்துள்ளது. தாக்குதல் நடக்கும் வரை காத்துக்கொண்டிருந்ததாகவே தெரிகிறது. வன்முறையாளர்கள் சாலைதடுப்பு ஏற்படுத்தியதால் தாக்குதல், தீவைப்புகளை தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் போலீஸ், தீயணைப்பு வண்டி வர முடியவில்லை என்ற காரணம் சொல்லப்படுகிறது. தாக்குதலை தடுத்து நிறுத்த நினைத்திருந்தால் மாற்றுவழிகளில் ஊருக்குள் வந்திருக்க முடியும். அதுபற்றி போலீஸ் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. நாற்பது நாட்களுக்கு மேலாக நடந்து வரும் திவ்யா-இளவரசன் காதல் திருமணப் பிரச்சனை டிஅய்ஜி, மாவட்ட கண்காணிப்பாளர் ஆகிய காவல் துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அனவருக்கும் தெரிந்திருக்கிறது. ஊர்மக்கள் தரப்பிலிருந்து காவல் துறைக்கு தாக்குதல் நடக்கலாம் என்பது பற்றி புகார் அனுப்பியிருக்கிறார்கள். இருந்தும் காவல் துறை செயல் படவில்லை. ஊரில் இளைஞர் யாரும் இல்லாத சமயத்தில் பெண்கள் வேலைக்கு சென்றுள்ள நிலையில் வெகு சிலர் மட்டுமே இருந்த நேரம் பார்த்து வன்முறையாளர்கள் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இக்கிராமங்களில் 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டிருக்கும் க்யூ பிரிவு உளவுப் போலீசார் அப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மாறாக ஊரின் நிலமை பற்றி இவர்களே சாதி வன்முறையாளர்களுக்கு தகவல் அளித்திருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுகிறது. இவைகள் அனைத்தும் வன்முறையாளர்களும் காவல்துறை-மாவட்டநிர்வாகத்தின் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது.
வன்னியர் சங்க, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் காடுவெட்டி குரு இந்த தாக்குதலுக்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள், குறிப்பாக எம்மிடம் பகிரங்கமாக புகார் தெரிவித்தனர். அவர்களது புகாரில் உண்மை இல்லாமலில்லை. வன்னியப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் தலித் இளைஞர்களை வெட்ட வேண்டும் என்று வன்னியர் விழாவில் பேசிய காடுவெட்டி குருவின் பேச்சு சாதிவெறி லும்பன்களை உசுப்பி விட்டுள்ளது. புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக 25 வன்னியர்-தலித் திருமணங்கள் நடைபெற்றதை மனதில் வைத்து கூட பேசியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இப்பகுதி தலித்-வன்னியர் மக்களிடையே நீண்டகால கடும் பகையோ, காழ்ப்புணர்வோ மோதல்களோ இல்லை. காடுவெட்டி குருவின் வெளிப்புற உசுப்பலும் காவல் துறைநிர்வாகத்தின் கூட்டுமே இந்த தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளது. காடுவெட்டிக் குருவின் மகாபலிபுரத்து பேச்சை பாமக நிறுவனர் ராமதாசோ, திமுக கட்சித் தலைவர் கருணாநிதியோ, சமூகநீதி பேசும் வேறெந்த கட்சிகளோ முதலமைச்சர் ஜெயலலிதாவோ கண்டிக்கவில்லை. இது போன்ற சூழ்நிலை காரணமாகவே முற்போக்கான கலாச்சார மாற்றங்களை விரும்பாத சாதிவெறி பிற்போக்கு வன்முறை கும்பல்கள் வெறியாட்டம் போடுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. தலித்-பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசிய பாமக ராமதாஸ், இக்கொடுமையான சம்பவம் பற்றி இதுவரை கண்டிக்காதது தாக்குதலுக்கு அவரது அரசியல் ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
முதலமைச்சர், இக் காட்டுமிராண்டி சம்பவத்தைக் வன்மையாக கண்டித்திருக்கவேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைக்கு பகிரங்கமாக உத்தரவிட்டிருக்க வேண்டும். வெறும் வருத்தம் தெரிவித்திருப்பது போதுமானதல்ல. தாக்குதல் நடந்து இத்தனை நாட்களான பின்னரும் அமைச்சர் கேபி முனுசாமி தாக்குதல் பற்றி கண்டிக்கவில்லை. பகுதிக்கு வந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் இல்லை. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து அமைச்சராகியுள்ள அமைச்சர், அரசாங்க நிவாரணம் ரூ50000அய் தர வந்தாரே தவிர அதிமுக சார்பாக சம்பவத்தையும் குற்றவாளிகளையும் கண்டிக்க முன்வரவில்லை. இவை அனைத்தும் முதலமைச்சருக்கோ தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அமைச்சர்களுக்கோ தலித்துகளின் பாதுகாப்பு, கவுரவத்தை விடவும் வன்னியர்களின் வாக்குகளே முக்கியமாக கருதுவதுபோல் தெரிகிறது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித் கட்சிகள் தவிர அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு தலித்துகளின் வாழ்வு, பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வரத் தயாராக இல்லை.
பரிந்துரைகள், கோரிக்கைகள்:
1. மாவட்ட நிர்வாகம், போலீஸ்துறை அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் பாத்திரம் சந்தேகத்துக்குரியவையாக இருப்பதாலும் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஊர் பஞ்சாயத்தின் நெருக்குதலால் தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா? நாகராஜனது பிணத்தை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இது போன்ற தாக்குதலை நடத்துவதற்காகவே திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்ட மரணமா என்ற சந்தேகங்களும் எழுகின்றன. எனவே இவை குறித்தும் தாக்குதலுக்கு பின்னுள்ள அரசியல் காரணங்களை பாரபட்சமின்றி விசாரித்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கடுமையாக தண்டிக்க ஏதுவாகவும் பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக்கொண்டு விசாரணைக்கமிஷன் அமைக்க தமிழக அரசு உத்திரவிட வேண்டும்.
2. வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு தாக்குதலின் பின்னணியில் இருப்பது மக்களின் ஏகோபித்த கருத்துக்களிலிருந்து தெரியவருவதால் காடுவெட்டிக்குருவை கைது செய்து விசாரிக்கவேண்டும்.
3. தாக்குதலில் தொடர்புடைய அனைவர் மீதும், தாக்குதலைத் தடுக்கத்தவறிய காவல் துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. காவல் துறை டிஅய்ஜி, மாவட்டகண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரை இந்த வன்கொடுமை சம்பவத்துக்கு பொறுப்பாக்கி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தங்கள் வாழ்வாதரத்தை முற்றிலுமாக இழந்த மூன்று கிராமங்களின் மக்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப அனைத்து மீட்பு நடவடிக்கைளையும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டும். வன்முறையிலீடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றையும் மீட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்திட வேண்டும்.
6. பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண நடவடிக்கைகள் மிக தாமதமாவே நடைபெறுகிறது. எனவே ஆதிதிராவிட நலத்துறை உயர் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட வேண்டும்.
7. கடந்த அய்ந்து நாட்களாக குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என அனைவரும் வெட்டவெளியில் படுத்துறங்கும் அபாய நிலமைக்கு உடனடித்தீர்வாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டித்தர வேண்டும். அனைவரது வீடுகளையும் வாழ்வதற்கு உகந்த வகையில் கட்டித்தர வேண்டும். குடும்ப அட்டை, படிப்பு ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், தேசிய ஊரக வேலை அட்டை உள்ளிட்ட மக்களின் அனைத்து குடியுரிமை ஆவணங்களையும் உடனடியாக புதிதாக வழங்க வேண்டும்.
8. இப்பகுதிகளில் உள்ள க்யூ பிரிவு உளவுப் போலீசாரை நிரந்தமாக வெளியேற்றவேண்டும்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: இந்த வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்தும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் நவம்பர் _ அன்று தருமபுரியிலும் மாநிலம் முழுவதும் உடனடியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட-லெனினிஸ்ட்), அகில இந்திய மாணவர்கழகம், அகில இந்தி முற்போக்கு பெண்கள் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

-
பாலசுந்தரம் (மாநிலச் செயலாளர் CPI ML) bala_cpiml@yahoo.com
தலித் மக்கள் மீதான சாதிவெறி தாக்குதலுக்கு எதிரான கூட்டமைப்பு வெள்ளி, 16 நவம்பர் 2012
Bottom of Form
அன்பார்ந்த தோழர்களே!
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகவே நடைபெற்று வரும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிய வெறியாட்டத்தின் பகுதியாக அண்மையில் நடைபெற்ற தருமபுரி மாவட்டம், நத்தம் தலித் கிராமம் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக தொடர் இயக்கத்தை தமிழக அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் முன் நிற்கும் அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய அவசியமுள்ளது. இதையொட்டி, பரந்த கூட்டமைப்பிற்காக தங்களின் அமைப்புகளின், கட்சிகளின் பிரதிநிதிகளை மற்றும் தன்னார்வலர்களை 18.11.2012 தேதியில் கூடி ஆலோசிக்க வரும்படி அழைக்கிறோம்.
தோழமையுடன்
தோழர் கோவை ஈஸ்வரன் -         04424329078
மக்கள் சனநாயக குடியரசு கட்சி-9176264717
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) - 9710777547
புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை-  9710015123
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் -  9751014559
தமிழக மக்கள் புரட்சிக் கழகம் - 9047521117
மக்கள் வாழ்வுரிமை போராட்ட இயக்கம் - 9003154649
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை  - 9952930165

தமிழகத்தில் அதிகரிக்கும் தலித் குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள்

ஆ.கதிர் ஞாயிறு, 11 நவம்பர் 2012
dalit_woman_480
தர்மபுரி மாவட்டம், வெள்ளாளபட்டி பஞ்சாயத்து, கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி. கடந்த 07.11.2012 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் 1000க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் கத்தி, உருட்டுக்கட்டை, பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்கிராமத்தில் மட்டும் சுமார் 30 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 120 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி, இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கடைகள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. இதே போன்று அண்ணாநகர், கொண்டபட்டி புதிய காலனி, செங்கல்மேடு மரவாடி ஆகிய கிராமங்களில் 30 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆரம்பநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.
dalit_colony_640
நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி பகுதியில் வசித்து வருபவர் திரு.இளங்கோ (48). தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசன் (23). இவரும் செல்லங்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திரு.நாகராஜ் என்கிற சாதி இந்துவின் மகள் திவ்யா (21) என்கிற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து 14.10.2012 அன்று பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். இத்திருமணத்திற்கு நாகராஜின் குடும்பத்தினரும் அப்பகுதி சாதி இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலித் இளைஞர் இளவரசனும் சாதி இந்து பெண் திவ்யாவும் காதலித்து வந்ததை அறிந்த நாகராஜின் குடும்பத்தினர் கடந்த ஜனவரி 2012 மாதத்தில் இளவரசனையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஆயினும் காதலர்கள் இருவரும் உறுதியாக இருந்து பல்வேறு எதிர்ப்புக்கு இடையே திருமணம் செய்திருக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்ட இளவரசனும் திவ்யாவும் தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு சேலம் டி.ஐ.ஜி. சஞ்சய் குமார், தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் திரு.அஸ்ரா கர்க் ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தனர். போலீசாரும் உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 04.11.2012 அன்று தர்மபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் திரு.மதியழகன் தலைமையில் வெள்ளாளபட்டி, நாயக்கன்கொட்டாய், புளியம்பட்டி, கொண்டபட்டி, சவுளுபட்டி, மந்தன்கொட்டாய், சீரம்பட்டி, எஸ்.கொட்டாய், கதிர்நாயக்கன் அள்ளி, பழையவூர், மிளகானூர், செல்லம்கொட்டாய் உள்ளிட்ட 12 கிராமங்களிலிருந்து வந்திருந்த சுமார் 1000 சாதி இந்துக்கள் நாயக்கன்கொட்டாய் பகுதியில் கூடியிருந்தனர். தலித் தரப்பிலிருந்து நத்தம் காலனி பகுதி சக்தி (35) த/பெ.சேட்டு தலைமையில் 25 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கிருந்த சாதி இந்துக்கள் தலித்துகளைப் பார்த்து, உங்கள் பையன் இளவரசன், எங்க பெண் திவ்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இது முறையானதல்ல. திருமணமானதை நாங்கள் மன்னித்துவிடுகிறோம். ஆனால் எங்கள் பெண்ணை கொண்டு வந்து எங்களிடம் வருகின்ற 07.11.2012 தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென்று கூறினார்கள். அதற்கு தலித் தரப்பினர் எங்கள் மக்களிடம் கலந்து பேசி எங்களது முடிவை சொல்லுகிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
dalith_colony_641
இந்நிலையில் 07.11.2012 அன்று மதியம் 2.00 மணியளவில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோயுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி சாதி இந்துக்கள் பா.ம.க. கட்சியைச் சேர்ந்த மதியழகன், வெள்ளாளபட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கும்பல் தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின்னர் இவ்வன்கொடுமைக் கும்பல் மாலை சுமார் 4.00 மணியளவில் பெட்ரோல் வெடி குண்டு, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்துள்ளனர். இதற்கு முன்னதாகவே அவ்வன்கொடுமைக் கும்பல் தலித்துகளை சாதி ரீதியாக இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து கூச்சலிட்டதால் அப்பகுதி தலித் மக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்து வெளியே சிதறி ஓடியிருக்கின்றனர்.
 அவ்வன்கொடுமைக் கும்பல் நாயக்கன்கொட்டாய்நத்தம் காலனி பகுதியில் தலித்துகளுக்கு சொந்தமான 30 வீடுகளை தீ வைத்து கொளுத்தி எரித்துள்ளனர். 150 வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். தொலைக்காட்சி பெட்டிகள், இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களும் அடித்து சூறையாடப்பட்டுள்ளன. பணமும் நகையும் களவாடப்பட்டுள்ளன. இவ்வன்முறை இரவு 8.30 மணி வரை நடந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொண்டபட்டி, அண்ணாநகர் புதுகாலனி ஆகிய தலித் குடியிருப்பு பகுதிக்குள்ளும் சாதி இந்து வன்கொடுமை கும்பல் உள்ளே புகுந்து சுமார் 30 வீடுகளை எரித்தும், நொறுக்கியும் சேதப்படுத்தியுள்ளனர்.
dalith_colony_642
இக்கொடூர வன்கொடுமைகளுக்கு எதிராக கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றஎண்.295/2012 (புகார்தாரர் திரு.செல்வராஜ் (42) த/பெ.பெரியசாமி) பிரிவுகள் 147, 148, 435, 536, 427, 307 இ.த.ச., வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(2)(3), 3(2)(4) மற்றும் 3(1) TN PPDL Act ஆகியவற்றின் கீழ் 500 நபர்கள் மீதும், குற்றஎண்.296/2012 (புகார்தாரர் திரு.சக்தி (36) த/பெ.சேட்டு) அடிப்படையில் 87 நபர்கள் மீதும், குற்றஎண்.297/2012 (புகார்தாரர் திரு.தங்கவேல் (40) த/பெ.குப்பன்) அடிப்படையில் 84 நபர்கள் மீதும், குற்றஎண்.298/2012 (புகார்தாரர் திரு.தர்பார் (55) த/பெ.மலையான்) அடிப்படையில் 21 நபர்கள் மற்றும் பலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட 90 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் சுமார் 3 கோடி இழப்பு அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தலித் மக்களுக்கான இழப்பின் விபரம் (இணைப்பு 3) சிலவற்றை இணைத்துள்ளோம்.
தமிழகத்தில் தலித்துகள் மீதும், அவர்களது குடியிருப்புகள் மீதும் நடத்தப்படுகிற தாக்குதல்கள் ஆண்டாண்டு காலமாகவே நடந்து வருகின்றன. தலித் குடியிருப்புகள் மீது தமிழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களின் சில பட்டியல்.
1) 31.08.1995 - தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் 600 போலீசாரால் மிகக் கொடூரமாக அடித்து சூறையாடப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தலித்துகள் மீது தாக்குதலும், காவல்நிலையத்தில் சித்திரவதையும் நடந்தது.
dalith_colony_643
2) 07.03.1996 - விருதுநகர், மங்களாபுரம் பகுதியில் 150 தலித் வீடுகள் கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளும் சூறையாடப்பட்டன.
3) 26.02.1998 - கொடைக்கானல், குண்டுபட்டியில் தலித் குடியிருப்பில் 130 போலீசார் உள்ளே புகுந்து குடியிருப்புகளை அடித்து நொறுக்கினர். 16 பெண்கள் உட்பட 25 தலித்துகள் கைது செய்து, கடுமையாக சித்திரவதை செய்தனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மண்ணெண்ணையை உணவுப் பொருட்கள் மீது கொட்டி எரித்தனர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
4) 01.12.1998 - பெரம்பலூர் மாவட்டம், ஓகலூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 80 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 20 தலித்துகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
5) 16.12.1998 - கடலூர், புளியூர் கிராமத்தில் 500 தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பலருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
6) 16.11.2001 - தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரத்தில் 167 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 26 இளம் பெண்கள் உட்பட 65 பெண்களும், 45 ஆண்களும் போலீசாரால் காவல்நிலையத்தில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 400 ஆடுகள் காணாமல் போயின. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
7) 17.05.2004 - கோயம்புத்தூர், காளப்பட்டியில் சாதி இந்துக்களால் 120 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்கு தீ வைப்பு, பொருட்கள் அடித்து சூறையாடப்படுதல், தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடைபெற்றது.
8) 16.05.2005 - மதுரை காடுபட்டி கிராமத்தில் சுமார் 100 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் தலித் குடியிருப்புகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. 40க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 80 தலித்துகளுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
dalith_colony_644
9) 17.10.2005 - மதுரை மேல உரப்பனூர் கிராமத்தில் 100 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் 40 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
10) 08.11.2007 - திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஆவரம்பட்டி கிராமத்தில் 80 பேர் கொண்ட சாதி இந்துக்களால் 24 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
11) 17.01.2008 - விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் சுமார் 100 பேர் கொண்ட சாதிஇந்து வன்கொடுமை கும்பல் 34 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
12) 18.02.2008 - கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சாணார்பட்டி கிராமத்தில் சுமார் 50 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் தலித் குடியிருப்பு மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 10 தலித் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 15க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு காயம். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
13) 06.03.2008 - விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தெற்கு ஆணைக்கூட்டம் கிராமத்தில் சாதி இந்து கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியது. 16 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தலித் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
14) 30.07.2008 - கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள இடையப்பட்டி கிராமத்தில் சாதிஇந்து வன்கொடுமை கும்பலால் 43 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
15) 29.01.2010 - சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் கிராமத்தில் 60 பேர் கொண்ட சாதி இந்து கும்பலால் 32 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
16) 29.06.2011 - திருச்சி அருகில் உள்ள துளையாநத்தம் கிராமத்தில் சுமார் 120 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் 42 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
dalith_colony_27817) 13.02.2011 - திண்டுக்கல் மாவட்டம், பரளிபுதூர் கிராமத்தில் சுமார் 120 பேர் கொண்ட சாதி இந்து கும்பலால் 70 தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
18) 27.03.2011 - விருதுநகர் மாவட்டம், திருச்சுழி கிராமத்தில் சாதி இந்து வன்கொடுமை கும்பலால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 34 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சிறிய அளவிலான வன்முறைகள், தலித் படுகொலைகள், தலித்துகள் மீதான கொடூர சித்திரவதைகள் போன்ற பல சம்பவங்கள் தலித்துகளுக்கு எதிராக நடந்திருந்தாலும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சில மட்டுமே பட்டியலாக வெளியிட்டுள்ளோம்.
தலித் குடியிருப்புகளை தீ வைத்துக் கொளுத்தினால் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(2)(3), 3(2)(4) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்தில் முழுமையான அளவில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியில் நடைபெற்ற வன்முறைக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அஸ்ராகர்க் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வன்கொடுமை குற்றவாளிகள் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது.
தீண்டாமையின் உச்சகட்டம் சாதியம். தங்களுடைய பெண் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை திருமணம் செய்து கொண்டால் தங்களுடைய சாதிப் பெருமை கெட்டுவிடும் என்கிற காரணத்தினால்தான் கௌரவக் கொலைகள் நடக்கின்றன (கௌரவக் கொலைகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது). கௌரவக் கொலைகளுக்கு ஆதரவாக தீண்டமை, சாதி பஞ்சாயத்து, சாதியை வளர்த்தெடுக்கும் கட்சிகள், சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிரான பிரச்சாரம் போன்ற பல நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிடுகின்றன.
தலித் ஒருவர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை மீறி கோவிலுக்குள் சென்றாலோ அல்லது சரிக்கு சமமாக தேனீர் கடையில் இரட்டை குவளை முறையை எதிர்ப்பு தெரிவித்து ஒரே குவளையில் தேனீர் குடித்தாலோ சாதி இந்துக்களின் கோபத்தின் அளவீடு குறிப்பிட்ட அளவிற்கு இருக்கின்றன. அதே நேரத்தில் சாதி இந்து பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த கோபம் எல்லையில்லாமல் பெரிதாக வெடித்துச் சிதறுகிறது. தலித் பெண்ணை சாதி இந்து ஆண்கள் திருமணம் செய்வதை சாதி வன்ம குழுக்கள் அனுமதிக்கின்றன. ஆனால் சாதி இந்துப் பெண்ணை தலித் ஆண்கள் திருமணம் செய்வதற்குத்தான் இக்குழுக்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஆகவே இந்த சாதிப் பெருமை என்பது கௌரவம் என்பது ஆணுக்கான கௌரவமாகவும், அந்த ஆணை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய சாதிக்கான கௌரவமாகவும், அந்த சாதியை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய மதத்திற்கான கௌரவமாக இருப்பது துரதிஷ்டமானது.
dalith_colony_645
கடந்த மே 2012 மாதத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழாவில் வன்னியர் சங்கத்தலைவர் திரு.காடுவெட்டி குரு அவர்கள், எங்க பொண்ணுங்களுக்கு கலப்பு திருமணம் செஞ்சு வைச்சா தொலைச்சுப்புடுவேன் என்று கூறியிருந்தார் (ஆதாரம்: 13.05.2012 ஜுனியர் விகடன்).
இதுபோன்ற சமூக நீதிக்கு எதிரான பேச்சுகள் கருத்துகள் சமத்துவத்தை அழிக்கக்கூடிய நடவடிக்கைகளாகும். இத்தகைய சக்திகள் மீது ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி பகுதியில் வன்கொடுமைநடந்திருக்காது. தலித்துகள் மீது நடத்தப்பட்டிருக்கிற இத்தகைய கொடிய அநீதி ஒருவேளை தடுக்கப்பட்டிருக்கலாம். சமீப காலமாக திரு.காடுவெட்டி குரு அவர்கள், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் எல்லாம் திட்டமிட்டு தங்கள் சமூகத்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி வருவதாக பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்தும், பேசியும் வந்திருக்கிறார். எந்த சமூகத்துப் பெண்களையும் இழிவுபடுத்துவது, பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போலீசாரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் வன்னியர் சமூகத்துப் பெண்கள். அந்த காயங்களின் வலிகள் வரலாற்றில் ஆழமாகப் பதிந்து போயுள்ளன. இதுபோன்ற கொடிய அநீதிகளுக்கு எதிராகத்தான் காடுவெட்டி குரு பேசவேண்டும். காடுவெட்டி குரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களால் பல அப்பாவி தலித் பெண்களும் பழங்குடியினப் பெண்களும் கடுமையான பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். எங்களது அமைப்பிடம் இதுபோன்று 48 வழக்குகள் உள்ளன. அவற்றின் பட்டியல் (இணைப்பு) சிலவற்றை இணைத்துள்ளோம். அதனால் அச்சமூகத்தினுடைய எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. இந்த பார்வையோடு தான் இப்பிரச்சனையை அணுக வேண்டும்.
திவ்யாவின் தந்தை திரு.நாகராஜ் இறந்து போனது வருத்தத்திற்குரியது. இதனால் அக்குடும்பத்தினர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பார்கள். அதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நாகராஜ் இறந்துபோனதற்கு தலித் மக்கள் எப்படி பொறுப்பாவார்கள்? காவல்நிலையத்தில் ஒரு இளைஞர்கள் கொல்லப்பட்டால் அதைக் கண்டித்து மக்கள் போராட்டம் செய்வார்கள் அல்லது சாதியப் படுகொலையால் இறந்துபோனால் அதைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் செய்வார்கள். ஆனால் நாகராஜின் தற்கொலையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியிருப்பது அந்த போராட்டம் தலித்துகளுக்கு எதிராக திசை மாறியிருப்பது எல்லாமே ஏற்புடையதல்ல.
dalith_colony_646
தலித் குடியிருப்புகளை எரிப்பது, நொறுக்குவது என்பது ஒருவிதமான அழித்தெழிக்கும் நடவடிக்கைகளாகும். இத்தகைய சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும். இதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நஷ்டஈடு மட்டும் கொடுக்காமல் அவர்களுக்கான மறுவாழ்வும் நிவாரணமும் கொடுக்கப்பட வேண்டும். சாதிய துவேசத்தால் வீடுகளை இழந்த பல தலித்துகளுக்கு இதுவரை போதுமான உரிய நிவாரணமும் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டதில்லை.
இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த தொகை வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் மாற்றம் செய்யப்படாத சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 23.12.2011 அன்று தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நிவாரணம் குறித்து பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குடியிருப்புகளை இழந்து தவிக்கக்கூடிய தலித்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000 வழங்க வேண்டுமென்றும், அவ்வீடுகள் முறையாக புனரமைக்கப்பட வேண்டும், இழந்துபோன பொருட்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சில பரிந்துரைகளை அரசிற்கு எமது குழு முன்வைக்க விரும்புகிறது.
பரிந்துரைகள்
  • தலித் குடியிருப்புகளை சேதப்படுத்துகிற குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதமும் விதித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதால் இவ்வழக்கினை உரிய முறையில் விசாரணை செய்ய வேண்டும். ஆகவே தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமிகு.அஸ்ராகர்க் அவர்கள் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக தொடர்ந்து பணியாற்ற மாநில காவல்துறை இயக்குனர் சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச நிவாரணத் தொகையை கடந்து ரூ.2 இலட்சம் நிவாரணம், நஷ்டஈடு, வீடுகளை புனரமைப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.
  • குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
  • குறைந்தபட்சம் 12 மாதத்திற்கு தற்காலிக நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் ரூ.5000 கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்.


தர்மபுரி ஜாதிக்கொள்ளை குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை.

தர்மபுரி கலவரம் : கொள்ளையுடன் நடந்த ஜாதிவெறி துவம்சம்.

[
தர்மபுரி ஜாதிக்கொள்ளை குறித்த உண்மை அறியும் குழுவின் (கம்பீரன், யாக்கன், யாழன் ஆதி, கு. உமாதேவி, ஸ்ரீதர் கண்ணன், நீரை.மகேந்திரன்) அறிக்கை.]


எப்படிங்கன்னா நாங்க ஒண்ணா படிப்போம்; எங்க பிரண்ட்ஸுங்க அம்மாங்கதான் அந்தச் சேரிக்காரனுங்க
வீட்டயெல்லாம் கொளுத்துங்கடான்னு கெட்ட கெட்ட வார
்த்தாயா திட்டினு வந்தாங்க;எங்கூட படிக்கிற பசங்க எல்லாம் வந்து எங்கவீட்ட கொளுத்துனாங்க, பேச்சுப்போட்டியில நான் வாங்குன ப்ரைஸ் சர்டிபிக்கேட் எல்லாம் எரிஞ்சி போச்சு அதோ அந்த கொல்லையில நின்னுட்டுதான் நாங்க எல்லாத்தையும் பாத்தோம் .இப்ப எப்படி போய் ஸ்கூல்ல ஒண்ணா படிப்போம்
-
விசாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,9ம் வகுப்பு மாணவி,
அண்ணாநகர், தர்மபுரி ஜாதிக் கொள்ளையில் பாதிக்கப்பட்டவர்

கடந்த நவம்பர் 7, 2012 அன்று தர்மபுரி மாவட்டம், தர்மபுரி ஊராட்சியைச் சேர்ந்த நத்தம் காலனி. கொண்டாம்பட்டி ,அண்ணாநகர், ஆகிய பகுதிகளில் ஜாதி வெறியுடன் தலித் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு அவற்றை சூரையாடி கொளுத்தி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஜாதிவெறி வன்னியர்களால் நடத்தப்பட்ட அட்டூழியம் ஈழத்தில் தமிழர்கள் மேல் சிங்களவர்களால் நடத்தப்பட்டதைவிட கொடுமையானது. 250க்கும் மேற்பட்ட வீடுகள் மீண்டும் வாழமுடியாத இடங்களாக மாறியுள்ளன.

இத்தகைய தாக்குதலை ஜாதிமோதல் என்றும் ஏதோ இரண்டு மூன்று குடிசைகள் கொளுத்தப்பட்டது என்றும் பொதுபுத்தி இதழ்கள் செய்தி வெளியிடுயிடுகின்றன. அவை முற்றிலும் தவறானவை. இது ஜாதிமோதல் அல்ல. இரண்டு ஜாதிகளும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தால் அது ஜாதிமோதல்.ஆனால் இது ஆதிக்க ஜாதியினரின் திட்டமிடப்பட்ட தாக்குதல். திருப்பி அடிக்க ஆட்கள் இல்லாத தலித் பகுதியில் கனத்த ஆயுதங்களுடனும் பெட்ரோல் பாம்களுடனும் புகுந்த 1000க்கும் மேற்பட்ட வன்னியர்கள் அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் துரத்தி அடித்து அவர்களின் வீட்டைக் கொள்ளையிட்டு கொளுத்தி அழித்த கொடூரச்செயல்திட்டம்.

தாக்குதலுக்கானக் காரணம்

இதற்குக் காரணத்தை ஒரு கலப்புத்திருமணத்தின்மீது போட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். திவ்யா என்னும் வன்னியர் சமூகப் பெண்ணும் இளவரசன் என்னும் தலித் இளைஞனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு நாற்பது நாட்கள் ஆகின்றன. அவர்களைப் பிரித்துவிட வேண்டும் என எத்தனிக்கிறது ஆதிக்க வன்னிய சமூகம். அதற்கு வன்னிய அமைப்புகளும் துணை போயிருக்கின்றன.

திருமணம் செய்துகொண்டவர்களைப் பிரித்துவிட கட்டளையிட்ட வன்னிய சாதியினர் அது நடக்காமல் போனதால் திவ்யாவின் அப்பா திரு.நாகராஜ் அவர்கள் கடந்த 7ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லி. வன்னியர்கள் இப்படி ஒரு தாக்குதலை அரங்கேற்றிவிட்டனர்.

திவ்யாவுக்கும் இளவரசனுக்கும் திருமணம் நடந்து 40 நாட்கள் ஆகிவிட்டன. திரு.நாகராஜ் அவர்கள் தலித் மக்களின் மீது அன்புகொண்டவர். எம்மகதான் தப்பு பண்ணிட்டா அவங்களபோய் எதுவும் பண்ணிடாதீங்கஎன்று சொல்லியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்ட அன்று தன் மகளை சமாதானப்படுத்தி அழைத்துவர அவருடைய மனைவி சென்றுவிட நாகராஜ் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவருடையப் பிணத்தை வைத்துக்கொண்டு சாலை மறியல் செய்யப்பட்டபோதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

தாக்குதல் நடந்த விதம்

இளவரசன் இருந்த நத்தம் காலனிதான் தாக்குதலுக்கு இலக்கான முதல் தலித் பகுதி. நத்தம் காலனி வழியாகத்தான் திவ்யாவின் வாழிடமான வன்னியர்கள் வாழும் செல்லங்கொட்டாயிலிருந்து வரவேண்டும். நாகராஜின் பிணத்தை வீட்டிலிருந்து அந்த வழியாகத்தான் கொண்டுவந்து தர்மபுரி திருப்பத்தூர் முக்கிய சாலையை மறித்து சாலை மறியல் நடைபெற்றிருக்கிறது. அப்படி வரும்போதே இளவரசனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்துக்கொளுத்தப்பட்டது. வீட்டிலிருக்கும் அனைத்துப் பொருட்களும் சூரையாடப்பட்டது. உணவுப் பொருட்கள் எடுத்து வெளியில் வீசப்பட்டிருக்கின்றன. துணிகள் எல்லாம் எடுத்துப் போடப்பட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் பிரச்சினைக்குரியவர்களின் வீடு கோபத்தில் வன்னியர்கள் இப்படி செய்கிறார்கள் என்று எண்ணி நத்தம் காலனியில் இருந்தவர்கள் தற்காப்பு முயற்சிகள் ஏதும் செய்துகொள்ளாமல் இருந்திருக்கின்றனர். இது நடக்கும்போது சுமார் 4.30 மணி.

பிணத்தை வைத்துக்கொண்டு 50 பேர்தான் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்குள் நத்தம் காலணி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய தலித் பகுதிகளுக்கு வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுக்கப்படுகிறது. தெற்கே எஸ்.கொட்டாவூரில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சாலையின் குறுக்கே தள்ளப்படுகிறது. இருபுறமும் எந்த வாகனுமும் வர முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் சுற்றுவட்டத்திலிருக்கும் வன்னியர்கள் பல ஊர்களிலிருந்து வந்து ஏற்கெனவே திரண்டு இருந்திருக்கின்றனர். சாலை மறியல் நடக்கும்போதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் பெட்ரோல் குண்டுகள்,சம்மட்டிகள், கடப்பாரைகள் தலித்துகள் வாழும்பகுதியான நத்தம் காலனியில் நுழைந்து வீடுகளைத் தாக்குகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 60க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் இருக்கும் கொல்லையில் நிலக்கடலைப் பறிப்பதற்காகச் சென்றிருக்கின்றனர்.

முதல் வீடு தாக்கப்படுகிறது. கட்டுக்கற்களைப் பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே செல்கிறார்கள். உள்ளிருக்கும் பீரோதான் அவர்களின் முதல் இலக்கு. அதை உடைத்துத் துணிகளை வெளியெ எடுத்து போடுகின்றனர். லாக்கரை உடைத்து உள்ளிருக்கும் நகைகளை எடுத்துக்கொள்கின்றனர். பணமிருப்பின் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். பத்திரங்கள், குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், கல்விச்சான்றிதழ்கள்,ரேஷன் கார்டுகள் என எல்லாவற்றையும் எடுத்து வெளியே இருக்கும் துணி அல்லது கட்டிலின்மேல் போட்டுவிட்டு கையில் வைத்திருக்கும், பெட்ரோல் நிறைந்த, நன்றாக அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் ஓட்டைப் போட்டு வெளியே இருக்கும் எல்லா துண்மணி மற்றும் ஆவணங்கள்மீது பெட்ரோலைப் பீச்சி அடித்து நனைத்துவிட்டு வெளியே வந்து பெட்ரோல் குண்டுகளைக் கொளுத்தி அந்த வீட்டினுள் வீச அனைத்தும் தீ பிடித்து எரிகின்றது பெட்ரோல் குண்டுகள் வெடித்து மேலும் தீ பரவ வீட்டினுள் இருக்கும் எல்லாமே தீக்கிரையாகிறது.

இந்த முறையைத் தான் அனைத்து வீடுகளுக்கும் ஜாதிவெறி வன்னியர்கள் நிகழ்த்தி இருக்கின்றனர்.

சேட்டு (60) அவர்கள் கூறும்போது இத்தகையத் தாக்குதல் இதுவரை நடந்ததில்லை. இதுதான் முதல் முறை. அவர்கள் அந்த வீட்டைக் கொளுத்தும்போது நான் இந்தவீட்டில் கட்டிலுக்கு அடியில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறைந்திருந்தேன். அந்த வீட்டுக்காரரான் ஜெயராமன் தீயை அணைக்க முற்பட்ட போது அவரையும் தாக்கிவிடுவார்களோ என பயந்து அவர் ஓடிவிட்டார். அடுத்து என்னுடைய வீட்டில் பக்கத்தை அறையை அடித்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நானும் தப்பித்து விட்டேன். அந்த ஜெயராமனின் பி.சி. ஜாதியைச் சேர்ந்த நண்பர்கள்தான் இதுதான் ஜெயராமன் வீடு கொளுத்துங்கஎன்று சொல்லி கொளுத்தினார்கள்.என்றார்.

அவருடைய மகன் காளியப்பன் பெங்களூரில் பழையபேப்பர்கள் விற்கும் கடை வைத்திருக்கிறார். அங்கு உழைத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் லாக்கரில் வைத்திருந்த 2 லட்சம் பணமும் 22 சவரன் நகையும் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இப்படி எல்லா வீடுகளும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. பொடா பழனிச்சாமி வீட்டில் புகுந்து அங்கேயும் கொள்ளையிட்டு அவருடைய வண்டியைக் கொளுத்திவிட்டு சென்றிருக்கின்றனர். 5 சவரன் நகை கொள்ளையிடப்பட்டிருக்கிறது. வீட்டில் என்னென்னப் பொருட்கள் இருந்ததோ அனைத்தும் எரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெரியவர் அம்மாசி(60) திருக்க அது தெரியாமல் அவர் படுத்திருந்த வீடு கொளுத்தப்பட்டு தீப்பிடித்து எரிய அவர் கத்த ஆரம்பித்திருக்கிறார். உடனே அவரை வெளியே எடுத்துப் போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

குழந்தைகள் வீடுகளிலிருந்து காடு கழனி வழியாக ஓடியிருக்கின்றனர். பக்கத்து ஊரான மாரவாடி மற்றும் மறைவிடங்களுக்குச் சென்றி விட்டிருக்கின்றனர். தீ எரிவதையும் வீடுகள் அடித்து நொறுக்குவதைப் பார்த்தும் குழந்தைகள் பயந்த மனநிலையிலேயே இருக்கின்றனர். அவர்களுடைய பாடபுத்தகங்கங்கள் எரிவதைப் பார்த்து அவர்கள் தேம்பி அழுது ஏங்கிப் போயிருக்கின்றனர்

பாட்டில்களில் செய்யப்பட்ட குண்டுகள் வெடித்துச்சிதறியிருக்கின்றன. வன்முறைக் கும்பலில் பெண்களும் வந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு குழந்தையை அடித்து விரட்டி இருக்கின்றனர். வன்னிய இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அந்தக் கும்பலில் வந்திருக்கின்றனர். தன் சக மாணவ மாணவிகளின் வீடுகளைக் கொளுத்தியிருக்கின்றனர்.

கொளுத்தப்பட்ட பிறகு கும்பல் அடுத்த இடத்திற்குச் செல்ல மறைந்திருந்த தலித் பெண்கள் அதை அணைக்க செல்ல திரும்பி வந்து அவர்களை விரட்டியிருக்கின்றனர். தண்ணீர் இருந்தால்தானே நீங்கள் அணைக்கிறீங்க என்று சொல்லி இருக்கின்ற தண்ணீர் டேங்குகளை எல்லாம் அவர்கள் உடைத்திருக்கிறார்கள்.

இப்படி நத்தம் காலனியில் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளையிட்டுவிட்டு கொளுத்திவிட்டு அவர்கள் பக்கத்திலிருக்கும் அண்ணா நகருக்குள் புகுந்து தலித் வீடுகளைக் கொளுத்தி அதே போல செய்திருக்கின்றனர், அங்கிருக்கும் ஜோசப் என்பவர் வீடுதான் முற்றும்முழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வீட்டிலிருந்த எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் கிடையாது. அவருடைய வீட்டின் இரும்புகேட்டை அவர்கள் அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று சாலையில் பேட்டிருக்கின்றனர். அதைத் தூக்க சுமார் 100 பேராவது வேண்டும். அவ்வளவு பெரிய கேட் அது.

அந்த ஊரை முடித்துக்கொண்டு கொண்டாம்பட்டிக்குச்சென்று இதே மாதிரியான கொள்ளையை முடித்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. துணிகள் இல்லை. பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு அரசாங்காத்தால் சரியாகக் கணக்கிடப்படவில்லை.அண்ணாநகர் ஜோசப் அவர்கள் வீட்டில் மட்டும் 60 சவரன் நகை கொள்ளை போயிருக்கிறது. லட்சக்கணக்கான பணம் இல்லாமல் போயிருக்கிறது.

எனவே ஒரு வீட்டுக்கு 5 சவரன் என சராசரியாக வைத்துக்கொண்டால் 260 வீடுகள் 1300 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் சொல்லலாம்.

கண்டறிந்தவைகள்

1.
கலப்புத்திருமணம் செய்துகொண்ட இளவரசன் திவ்யா ஆகியோருக்குத் திருமணம் நடந்து 40 நாட்களுக்குப் பிறகுதான் வன்னிய சமூகத்தை சேர்ந்த திவ்யாவின் தந்தை திரு நாகராஜ் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
2.
அதற்கு முன்பு வரை அவர் தன்னுடைய மகள் தவறு செய்துவிட்டாள் போனால் போகட்டும் என்றுதான் கூறியிருந்திருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவருக்கு இல்லை
3.
அன்று கூட தன் மகளை சமாதானம் செய்து அழைத்துவர அவருடைய அம்மா தான் அனுப்பப்பட்டிருக்கிறார். தந்தையான நாகராஜனை ஏன் அனுப்பவில்லை.
4.
போனால் போகட்டும் விடுங்கள் என்று சொன்ன நாகராஜனை வன்னியர்கள் இன்னைக்கு உன்னோட பொண்ணுக்கு நாளைக்கு எங்களுக்கும் இது நடக்கும் என்று சொல்லியிருக்கின்றனர்.
5.
தற்கொலை செய்துகொண்டிருப்பவர் தன் மகள் ஓடிப்போன அன்றே அந்த முடிவை எடுக்காதது ஏன்?
6.
மகளை சமாதானம் செய்ய தந்தையையும் அனுப்பாதது ஏன்
7.
ஒருவேளை இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு என்றே அவரை வன்னியர்கள் கொன்றிருக்கலாம் என்றே சந்தேகம் வலுக்கிறது.
8.
தூக்கு மாட்டிக்கொண்டவரை கீழிறக்கி சாலைக்கு உடலைக் கொண்டுவரும் அந்த நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் அந்த இடத்தில் கூடியிருக்கின்றனர். அவர்கள் அங்ஙனம் வந்ததெப்படி?
9.
வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுக்கப்படுகிறது. தெற்கே எஸ்.கொட்டாவூரில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சாலையின் குறுக்கே தள்ளப்படுகிறது. இருபுறமும் எந்த வாகனுமும் வர முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. மரம் அறுக்கும் எந்திரங்கள் குறிப்பிட்ட தூரங்களில் மறும் அறுப்பது சாலையை மறிப்பது என்பது உடனே நடந்ததா?
10.
மரம் வெட்டித் தள்ளப்பட்ட பகுதியில் அமைந்துள்ள 3 தலித்
குடியிருப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
11.
திருமணம் செய்துகொண்டவர்களின் பகுதி நத்தம் காலனி, ஆனால்
அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய இடங்களில் தாக்குதல்
நடத்தப்படக் காரணம் என்ன?
12.
தாக்குதல் நடத்தப்பட்ட எல்லா வீடுகளிலும் பெட்ரோல் குண்டுகள் மண்னென்ணை பயன்படுத்தப்பட்டிருக்கிறத. 250 வீடுகள். ஒரு வீட்டிற்கு ஒரு லிட்டர் என்று வைத்துக்கொண்டாலும் இவ்வளவு பெட்ரோல் மண்ணெண்ணெய் ஆகியவை நாகராஜன் தற்கொலைக்குப் பிறகு உடனடியாக எப்படி கிடைத்தன?
13.
இத்தனை பாட்டில்கள், தடிகள் கடப்பாரைகள் சம்மட்டிகள் எப்படி சேகரிக்கப்பட்டன.
14.
தாக்குதல் நடத்தப்பட்ட நான்கு மணி நேரம் வரை காவல்துறை தீயணைப்புத் துறை எதுவுமே வரவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் தலித் மக்கள் காவல் துறைக்கும் மற்றவர்களுக்கும் தகவல்களைச் சொல்லி இருக்கின்றனர்.
15.
வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களைத் தாண்டி இருபுறமும் காவல்துறையால் வரமுடியவில்லை என்பதினை ஏற்க முடியாது
16.
அப்படியே அவர்கள் வரவேண்டும் என்று நினைத்திருந்தால் தர்மபுரி புறவழிச்சாலை வழியாக அவர்கள் நத்தம் காலனிக்குள் வந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் ஏன் தாமதம் செய்தார்கள்
17.
இந்தத் தாக்குதலுக்கு இளவரசன் திவ்யா காதல் மட்டுந்தான் காரணமாக இருந்திருக்குமா? தங்களை விட பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்ட தலித்துகள் தங்களிடம் கூலி அடிமைகளாக இல்லாமல் இப்படிப் பொருளாதார விடுதலை அடைந்திருக்கின்றனர் என்ற உளவியல்தான்.
18.
தாக்குதல்களை தொடர்ந்து நாம் ஆய்வு செய்கிறபோது தாக்கப்பட்ட எல்லா வீடுகளும் ஒரேமாதிரியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா வீடுகளிலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு முக்கியமான விலைமதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டு அவர்களின் ஆவணங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.
19.
ஒன்பதாம் வகுப்பு மாணவி மற்றும் மாணவர்களின் கருத்துப்படி அவருடன் படிக்கின்ற மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு வந்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். எரித்திருக்கிறார்கள்
20.
தாக்க வந்தவர்கள் இது முப்பதாண்டு பகை இந்த தீபாவளி எங்கள் தலை தீபாவளி என்று கொக்கரித்திருக்கின்றனர்.
21.
தாக்குதல் நடத்தியவர்கள் பெரும்பாலும் தலித்துகளின் நண்பர்களாக இருந்த வன்னீயர்கள் தான்.

பரிந்துரைகள்

1.
இந்தத் தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் கடந்த ஏப்ரல் 1012 ல்
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் மருத்துவர் ராம்தாஸ் முன்னிலையில் காடுவெட்டி குரு பேசிய பேச்சு.நம் ஜாதி பெண்களை யாராவது காதல் திருமணம் செய்தல் அவர்களை வெட்டிவிட்டு வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியது. எனவே அவர்மீதும் அந்தநேரத்தில் மேடையில் இருந்த மருத்துவர் ராமதாஸ்மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
2.
கொங்குபகுதியில் இருக்கும் பெரும்பான்மையான ஆதிக்கசாதியான
கொங்கு வேளாள கவுண்டர்களும் இதே கருத்தை வலியுறுத்தி மாநாடுகள் நடத்துகின்றனர். பள்ளிகளிலும் இது பரப்புரை நடத்தப்படுகிறது. இது தடை செய்யப்பட வேண்டும். அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.
நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் தலித்
வீடுகளில் கொள்ளையிடப்பட்ட நகைகள், பணம், அழிக்கப்பட்ட சொத்துகள் ஆகியவற்றைத் திரும்பக் கொடுக்க வேண்டும்.
4.
அந்தப்பகுதியில் இருக்கும் குழந்தைகள் படிப்பதற்கான அனைத்து பாதுகாப்புகளையும் செலவினங்களையும் அரசே ஏற்க வேண்டும்.
5.
இழப்பீடு என்றில்லாமல் அங்கே இருக்கக் கூடிய தாக்குதலுக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்
6.
சாதியை முன் வைத்து நடந்த இத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டபூர்வமான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்
7.
பள்ளிகளில் ஜாதி ஒழிப்பிற்கானப் பரப்புதல்களைச் செய்ய வேண்டும்.
8.
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் போற்றுதலுக்குரியவர்களாக அரசு அறிவித்து அவர்களுக்கு சிறப்பு ஊக்கங்களைத் தர வேண்டும்
9.
எய்ட்ஸ்/குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களைப் போல தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், ஆதிக்க சாதிகள் வாழும் பகுதிகள் ஆகியவற்றில் ஜாதி ஒழிப்பிற்கானப் பிரச்சாரத்தை அரசே ஏற்க வேண்டும்.
10.
இத்தகைய தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் தலித் மக்கள் வாழ்வதற்குத் தேவையான உளவியல்பூர்வமான வழிகாட்டுதல்கல் சிறப்பு கடனுதவிகள் ஆகியவற்றைத் தந்து அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11.
தற்காலிக நிவாரணங்களை வழங்குவது மட்டுமே அரசின் கடமை என்ற நிலைமாறி நிரந்தரத் தீர்வுகளை நோக்கி அரசு முனைய வேண்டும்.
12.
அதற்கு தலித் மக்கள் அமைப்பாகத் திரளுதல் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கான உரிமைகள் ஆகியவற்றை அரசே ஏற்பாடு செய்ய வேண்டும்.

http://thiruttusavi.blogspot.in/2012/11/blog-post_15.html )


தர்மபுரி 2012:கீழவெண்மணியை விட மோசமான வன்செயல் - ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழில்: எஸ்.வி.ராஜதுரை


னது நண்பர் பேராசிரியர் சி.லட்சுமணன் இன்று (10.11.2012) தர்மபுரியிலிருந்து தொலைபேசியில் என்னை அழைத்து, தொண்டை அடைக்க, நா தழுதழுக்க நத்தம், அண்ணா நகர், கொண்டயம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இருந்த பயங்கரமான நிலைமையைக் கூறினார். அங்கு 2012 நவம்பர் 7 அன்று வன்னிய சாதிக்கும்பலால் ஏறத்தாழ 300 தலித்துகளின் வீடுகளில் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப் பட்டன.  அந்த வீடுகள்  தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்த வன்செயல் நடந்த இடத்திற்கு அப்போதுதான் சென்றடைந்த உண்மை அறியும் குழுவின் உறுப்பினராக இருந்தார் லட்சுமணன். இந்த வன்முறை நவம்பர் 8ஆம் தேதியன்று களப்பணியாளர் ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமும் அதன் பிறகு செய்தித்தாள்களில் வெளிவந்த அரைகுறைச் செய்திகள் மூலமும் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அந்த சம்பவத்தை நினைத்தால் இப்போதும் எனக்குக் குலை நடுக்கம் ஏற்படுகிறது.


 பறையர் வகுப்பைச் சேர்ந்த 23 வயது இளவரசனுக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த 20 வயது திவ்யாவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணம்தான் இந்த சாதி வன்முறைக்கான உடனடிக் காரணம். பெண்ணின் பெற்றோர்கள் இது தொடர்பாகக் காவல்துறையினரை அணுகியிருந்தனர். காவல் துறையினர் மேற்சொன்ன இருவரது தரப்பினரையும் அழைத்து, அந்தத் திருமணம் சட்டப்படி சரியானது என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். இதற்கிடையே மூன்று கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்கள் ஒரு வாரத்திற்கு முன் ஒரு கூட்டம் கூட்டி கட்டைப் பஞ்சாயத்து' நடத்தி, சம்பந்தப்பட்ட தலித் குடும்பம் அந்தப் பெண்ணை (திவ்யாவை) தங்களிடம் புதன்கிழமை அன்று (7-11.2012) திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று உத்திரவு போட்டனர். ஆனால் திவ்யா அந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து, வாழ்ந்தால் இளவரசனுடன்தான் வாழ்வேன் என்று தெளிவாகக் கூறிவிட்டார். இந்த விஷயங்கள அனைத்தையும் தெரிந்திருந்த தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிபாளர் அஸ்ரா கார்க், கட்டைப் பஞ்சாயத்தில் கலந்து கொண்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகக் கூறினார். நவம்பர் 7ஆம் தேதியன்று திவ்யாவின் தந்தை ஜி.நாகராஜன் (வயது 48), நத்தம் தலித் காலனியிலிருந்து சிறிது தொலைவிலேயே உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்திலுள்ள தனது வீட்டில் திடீரென்று இறந்துவிட்டார். பறையர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பையனைத் தனது மகள் திருமணம் செய்து கொண்டதை ஜீரணம் செய்து கொள்ள முடியாததாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக வன்னியர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு போலி முகாந்திரத்தை உருவாக்குவதற்காக வன்னியர்களே அவரைக் கொலை செய்திருக்கின்றனர் என்று தலித்துகள் கருதுகின்றனர்.  
பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் அவதாரமான வன்னியர் சங்கத்தின் தலைவராக உள்ள காடுவெட்டி குரு, கலப்புத் திருமணம் தடுக்கப்பட வேண்டும் என்று வன்னிய சாதிப் பொதுக்கூட்டமொன்றில் அண்மையில் விடுத்திருந்த அறிக்கை ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. இந்தப் பொதுக்கூட்டம், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் சரி தங்கள் வீட்டுப் பெண்கள் தலித் பையன்களைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்தே தீருவோம் என்று தமிழ்நாடு நெடுகிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் முடிவு எடுப்பதற்கான உள்உந்துதலாக அமைந்தது. கொங்கு வேளாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கலப்புத் திருமணம் செய்து கொள்வதை எதிர்ப்பதற்காகத் தங்கள் சாதியினரைச் சேர்ந்தவர்களின் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகப் பத்திரிகை விளம்பரங்களின் மூலம் அறிவித்து, கலப்புத் திருமணத்திற்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியது. இவை அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரியும். எனவே, மேற்சொன்ன மூன்று கிராமங்களில் நடந்த நிகழ்ச்சியை மிக அண்மைக்காலத்தில் நடந்த சாதியப் பலத்திரட்சி என்னும் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
ஏறத்தாழ அதே நேரத்தில் 1500க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலொன்று நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகியவற்றிலிருந்த தலித் குடியிருப்புகளைத் தாக்கியது. அசம்பாவிதம் நேரலாம் என்று எதிர்பார்த்த அரசு நிர்வாகம், காவல் துறையினரை அந்த கிராமங்களில் நிறுத்தியிருந்தது என்றாலும், தாக்குதலை நடத்தியவர்கள் அவர்களைவிடப் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர் என்று மிக எளிதாக நிர்வாகத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது. தாக்குதலை நடத்தியவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த ஏதேனும் முயற்சி செய்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும், தங்களது செயலின்மைக்கு அவர்கள் கூறும் இந்த வினோதமான தர்க்கம் கேள்விக்குட்படுத்தப் படவில்லை. இந்தத் தாக்குதலின் போது அவர்கள் காயமடைந்திருந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் செயல்படாமலிருந்ததற்கான சாத்தியப்பாடு இருந்திருக்கும். ஆனால் அவர்கள் மீது எந்தக் காயமும் படவில்லை. இப்படிப்பட்ட விளக்கத்தை முன்வைப்பதன் மூலம், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற இந்த நாட்டில் எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையில் காவல் துறையினர் இருக்க வேண்டும் என்று அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் போலும்.


தலித்துகள் கூறுவதுபோல, உண்மை என்னவென்றால், வன்முறைக் கும்பல் அவர்களது விலை உயர்ந்த பொருள்கள் கொள்ளையடிக்கவும் அவர்களது வீடுகளைக் கொளுத்தவும் செய்யும்போது வழக்கம் போலவே காவல்துறையினர் வாய் திறக்காமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான். அங்கு வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் மட்டுமே இருந்தனர். இளம் வயதினர் பெங்களூருவுக்கும் திருப்பூருக்கும் வேலைக்குச் சென்றிருந்தனர். தாக்குதல் நடக்கத் தொடங்கியதும் அந்த வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வயல்களுக்கும், காட்டுப்பகுதிகளுக்கும் அண்டைக் கிராமங்களுக்கும் தப்பி ஓடி விட்டனர்இந்தத் தாக்குதல் நடக்கும் என்பது காவல்துறைக்கு நன்கு தெரிந்திருந்தும்கூட, அது சரியாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. வன்முறையாளர்கள் பெரிய பெரிய மரங்களை வெட்டி நடுச்சாலைகளில் போட்டு, தீயணைப்புப்படையினர் அந்தக் கிராமங்களை உடனடியாகச் சென்றடையாதபடி தடுத்துவிட்டனர். ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த அழிவுவேலை இரவு 9.30 மணிக்கு மேல்தான் முடிவடைந்தது. அப்போது வீடுகள், உடைமைகள் எல்லாமே எரிந்து சாம்பலாகியிருந்தன. கூடுதலாக ஆயிரம் காவல்துறையினரை அந்தக் கிராமங்களுக்கு அனுப்பியும் தொன்னூறு பேருக்கு மேற்பட்டவர்களைக் கைது செய்தும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல் துறை கூறுகின்றது. மேலும் 210 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 300 பேர் மட்டுமே குற்றம் சாட்டப்படுமேயானால், தாக்குதல் நடந்த அன்று அங்கு இருந்த காவல்துறையினரின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் தாக்குதலை நடத்தியவர்கள் இருந்தார்கள் என்னும் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இழக்கப்பட்டுவிட்ட வீடுகள், உடைமைகள் ஆகியவற்றுக்கு இழப்பீடாக குடும்பமொன்றுக்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர், இந்த வன்முறைக்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கவைக்குதவாத அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


ஒரு காலத்தில் இடதுசாரி இயக்கம் மிக வலுவாக இருந்த குக்கிராமங்களில்தான் இந்த வன்முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபுரி மாவட்டம் ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் நக்சலைட் இயக்கத்துக்கான தலைமையகமாக இருந்தது. நக்சலைட் இயக்கம் சரிவில் உள்ளதால், சாதியம் தனது விகாரமான தலையை இந்த மாவட்டத்தில் உயர்த்தியுள்ளது. வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் பொருளாதாரரீதியாக பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. ஆனால், வன்னியர்களின் தலைவர் எஸ்.ராமதாஸின் அறிவார்ந்த அறிக்கைகள், நடவடிக்கைகள் ஆகியவை ஒருபுறமிருந்தாலும், நச்சுத்தன்மை வாய்ந்த சாதிய ஆணவத்தின் துணிவு காரணமாக பலமுறை மோதல்கள் நடந்துள்ளன. அவரும், வட தமிழகத்தைச் சேர்ந்த தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனும் விடுத்த அறிக்கைகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக, தென் தமிழகத்தை ஒப்பிடுகையில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமிடையே சிறிது நல்லிணக்கம் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வன்னியர்களிடையே இருந்து பழைமைவாத, அப்பட்டமான சாதியச் சக்திகள் எழுச்சி பெற்றுள்ளது, சாதிகளிடையே ஏற்படுத்தப்படும் இத்தகைய ஒட்டுவேலைகள் சாதிய உணர்வின் மறைவைக் குறிப்பதாகாது என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இது சாதிய உணர்வை தற்காலிகமாக அடக்கி வைத்திருப்பதே தவிர வேறல்ல. இந்த நஞ்சுக்கான சரியான மருந்து வர்க்கம்' என்னும் மாற்றுச் சொல்லாடலைக் கொண்டு சாதியை முற்றிலுமாக அழித்தொழிப்பதுதான். நல்லெண்ணம் படைத்த பலருக்கும்கூட இது கடினமான காரியமாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு வேறு எந்தத் தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.


சிபிஎம் கட்சியால் உருவாக்கப்பட்டுள்ளதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' நல்ல பணிகளைச் செய்து கொண்டு வருகிறது. வலுவான தலித் கட்சி கூட செய்யாத வகையில் , அந்த முன்னணி தர்மபுரிக்குச் சென்று மிக நியாயமான கோரிக்கைகளை எழுப்பியுள்ளது. உண்மையில், பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு மறுவாழ்வு வழங்குவதுதான் முதன்மையான பிரச்சனை. தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை வெட்கக்கேடான முறையில் வழங்கும் முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ள ஆளும் கட்சிகள், ‘பட்டியலின சாதிகள், பட்டியலினப் பழங்குடிகள் மீதான வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டத்தை' முகாந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டு, குடும்பத்துக்கு ரூ 50000 என்னும் அற்பத்தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளன. உண்மையில் இந்தச் சட்டத்தைக் காட்டிலும் அதன் மீறல்களே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த இழப்பீடும்கூட வன்கொடுமையை அனுபவித்தற்கான இழப்பீடேயன்றி, இழந்துபோன உடைமைகளுக்கான இழப்பீடு அல்ல. தலித்துகளைப் பாதுகாக்கத் தவறிய அரசு செய்ய வேண்டிய கடமை, அவர்கள் அனுபவித்த வேதனைக்கான இழப்பீட்டுடன் அவர்கள் இழந்துள்ள உடைமைகளுக்கான இழப்பீட்டை வழங்குவதாகும். எனவே, பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நல்ல வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும், தலித்துகள் ஒவ்வொரும் இழந்துள்ள உடைமைகள் முழுவதற்குமான இழப்பீடுகள் தரப்பட வேண்டும், அவர்களுக்குப் போதுமான போலிஸ் பாதுகாப்புத் தரப்பட வேண்டும், தீயில் எரிந்துபோன அவர்களது ( நிலப்பட்டா, கல்விச் சான்றிதழ் போன்ற) ஆவணங்கள் புதிதாக தயாரித்து வழங்கப்பட வேண்டும், தலித்துகளில் குழந்தைகளுக்கான கல்வி வசதி செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' முன்வைத்துள்ள கோரிக்கைகள் எல்லோராலும் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டியவையாகும். அந்த முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைப்பு என்பதால், அதனைச் சேர்ந்தவர்கள், தங்களது செயல்பாடுகளை மேலும் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, ஆக்கபூர்வமான சாதி-எதிர்ப்பு போராட்டங்களுடன் சேர்த்து, வர்க்க அடிப்படையில் மக்களை ஒன்றிணைப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தும் ஆர்வம் தோன்றாமல் இருக்க முடியவில்லை.




தர்மபுரி நிகழ்ச்சியில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும், நாற்பதாண்டுகளுக்கு முன் கீழ்வெண்மனியின் நடந்த நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. அங்கு இதேபோன்ற தலித் கிராமத்தை நிலப்பிரபுக்களின் குண்டர்கள் தீவைத்து எரித்து 44 தலித்துகளைக் கொன்றனர். அந்த 44 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளின் புதிய வகை என்று நான் கூறிவருவது இங்குதான் தொடங்கியது. அரைகுறையான நிலச்சீர்திருத்தம், பசுமைப்புரட்சி ஆகியவற்றுடன் நேருவிய சோசலிசம் எனக் கூறப்படும் ஆட்சி முறை பின்பற்றிவந்த முதலாளிய வளர்ச்சி உத்தியின் காரணமாக கிராமப்புறங்களின் மீது கவிழ்ந்த பொருளுற்பத்தி -வினியோக முறையைக் கொண்டுதான் இந்தப் புதிய வகை வன்கொடுமையைப் பகுத்தாய்வு செய்யவும், இதற்கான காரணியாக அந்தப் பொருளுற்பத்தி-வினியோக முறையைக் கொள்ளவும் முடியும். முந்தைய சூத்திர சாதிகளைச் (இன்றைய பிற்படுத்தப்பட்ட/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சேர்ந்த குடியானவர்களிடையே இருந்து பணக்கார விவசாயிகள் வர்க்கமொன்றை மேற்சொன்ன முதலாளிய வளர்ச்சி உத்தி உருவாக்கியது. இந்தப் பணக்கார விவசாயி வர்க்கம், மத்திய அரசாங்கத்திலுள்ள ஆளும் வர்க்கங்களின் முக்கியக் கூட்டாளியாகவும் அரசியல் அதிர்ச்சிகளிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும் சக்தியாகவும் அமைந்து, தலித்துகளை முற்றிலும் கூலி உழைப்பையே சார்ந்திருக்கின்ற, அதே வேளை முன்பிருந்த ஜஜ்மானி முறையால் உத்திரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகள் ஏதுமில்லாத பாட்டாளிவர்க்கமாக மாற்றியது. மேல்சாதி நிலப்பிரபுக்கள் மேலதிக பெரிய வாய்ப்பு வசதிகளைத் தேடி அண்டை நகர்ப்புறங்களுக்குக் குடியேறிச் சென்ற பிறகு, மேற்சொன்ன பணக்கார விவசாயி வர்க்கம் பார்ப்பனியத் தடியைக் கையில் எடுத்துக் கொண்டது. மிகத் துரிதமாகச் செல்வத்தையும் அதிகாரத்தையும் ஈட்டிய இந்த வர்க்கத்திடம் மரபான மேல்சாதிகளுக்கு இருந்த பண்பாட்டு நாசூக்குகள் இல்லை. ஆனால் அதனுடைய சாதிப் பிணைப்புகளின் காரணமாக எண்ணிக்கை பலம் இருந்தது. அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களான தலித்துகளுக்குமிடையே புதிய விவசாயப் பொருளாதாரம் ஏற்படுத்திய முரண்பாடுகள் பல சமயங்களில் சாதி அடையாளங்கள் மூலமாக வெளிப்பட்டு, விழாக்கோலம் பூணும் சாதி வன்கொடுமைகளாக விளைந்தன. கீழவெண்மணி இதன் தொடக்கம்; பின்னர் அதனைத் தொடர்ந்து அதே போன்ற வன்கொடுமைகள் நடக்கின்றன.


கீழவெண்மணி 44 ஏழை தலித்துகளைப் பலி கொண்டது. அப்போது, தலித்துகளுக்குத் தங்கள் உயிர்களைத் தவிர இழப்பதறகு ஏதும் இருக்கவில்லை. 2012இல், இரு தலைமுறைகளுக்குப் பிறகு, சமுதாயத்தின் நிலை அப்போது இருந்தது போன்றதாக இல்லை.1960களில் கிராமங்களில் ஒரு நிலப்பிரபுக்கோ, அவரது உற்றார் உறவினருக்கோ சொந்தமான, நன்கு கட்டப்பட்ட வீடுகள் ஒன்றிரண்டு இருந்திருக்கும். ஆனால் இன்றோ, அத்தகைய வீடுகள் கிராமங்களில் ஏராளமாக உள்ளன; அவற்றில் தலித்துகளுக்குச் சொந்தமான வீடுகளும்கூட இருக்கின்றன. ஆனால், இது அதிகரித்துவரும் சமத்துவத்தைக் குறிப்பன அல்ல; மாறாக, கல்வி பரவுதலின் காரணமாகவும், இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளதன் காரணமாகவும் தலித்துகளின் பண்பாட்டு வளர்ச்சி மட்டம் உயர்ந்துள்ளதையே குறிக்கிறது. தலித்துகளுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளி அதிகரித்திருக்கக்கூடும். ஆனால் இன்றைய தலித்துகள் தங்களது பெற்றோர்களைப் போலத் தங்களது அவலநிலையைப் பார்த்துக் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்களது வாழ்வையும் தங்களது குழந்தைகளின் வாழ்வையும் மேம்படுத்தக் கடுமையான முயற்சிகள் செய்துள்ளனர். தர்மபுரியைச் சேர்ந்த பெரும்பாலான தலித்துகள் பெங்களூரில் கட்டட வேலைகளிலும் திருப்பூரில் வியர்வைக் கூடங்களிலும் கடுமையாக உழைத்துத் தங்கள் சேமிப்புகளை, தங்கள் கிராமங்களில் விட்டு வந்துள்ள குடும்பங்களுக்கு நல்ல வீடுகள் கட்டித் தருவதில் முதலீடு செய்துள்ளனர். அவர்களது வீடுகளும் அதிலுள்ள உடைமைகளும் அவர்களது வாழ்வின் புற வெளிப்பாடுகளாக உள்ளன; அவை அவர்களுடைய வாழ்க்கையினது மட்டுமின்றி அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையினதும் புற வெளிப்பாடுகளாகவும் உள்ளன. எனவே அவர்களது வீடுகளை அழிப்பது, எரிந்துபோன அவர்களது வீடுகளுக்குள்ளேயே தலித்துகள் அனைவரையும் அழித்தொழிப்பதற்கு நிகரானது. எனவேதான் அடங்க மறுக்கும் தலித்துகளுக்குப் பாடம் புகட்ட' அவர்களது உயிர்களை விட அவர்களது உடைமைகள்தான் எளிதில் கைகொடுக்கின்றன. சாதி வன்கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படையான குறிக்கோள் இத்தகைய பாடம் புகட்டல்'தான்.




இந்த அர்தத்தில் பார்த்தால், தர்மபுரி நிகழ்ச்சி கீழவெண்மனி நிகழ்ச்சியைவிட மோசமானதாகும். 1960களில் தலித் இயக்கம் என்பது உருவாகிக் கொண்டிருந்த இயக்கம் என்று கூறலாம். இன்றோ அது தன்னை அழித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் என்னும் தர்க்கம், அதன் தொடக்கப் புள்ளிக்கே மீண்டும் வந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் கணிசமான தலித் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்; அரசாங்கக் கட்டமைப்பில் எல்லா மூலை முடுக்குகளுக்கும் சென்றுள்ள கணிசமான தலித் மத்தியதர வர்க்கதினர் இருக்கின்றனர். ஆனால், தலித் வெகுமக்களை விட்டுச் சென்றுள்ள இவர்களால் அந்த வெகுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் என்பதற்கு நவ தாராளவாதம் ஏற்கனவே இரங்கற்பா பாடிவிட்டது. மக்களின் முன் உண்மையை அச்சமின்றி எடுத்து வைக்க வேண்டிய அறிவாளிகள் யதார்த்த நிலையை மக்கள் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அவர்களைக் குழப்புவதற்காக கார்ட்டூன் சர்ச்சைகளி'ல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கும் இதுபோன்ற பிற கேள்விகளுக்கும் விடைகள் கேட்டு தர்மபுரி உரக்கக் கூவுகிறது
நன்றி:
தோழமையுடன் தந்துகியிலிருந்து 
http://aadhavanvisai.blogspot.in/
http://www.piraththiyaal.com/2012/11/2012.html ) 


அறிக்கை தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் – அ.மார்க்ஸ்

தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்
உண்மை அறியும் குழு அறிக்கை
தருமபுரி
நவம்பர், 15, 2012
சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய மூன்று தலித் கிராமங்கள், அருகாமைக் கிராமங்களிலுள்ள வன்னியர் சாதியினரால் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட செய்தி தீண்டாமை ஒழிப்பிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பலரையும் கலங்கடித்தது. சுமார் பத்தாண்டுகள் முன்புவரை “தமிழகத்தின் நக்சல்பாரி” என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பகுதி இன்று வரை நக்சல் எதிர்ப்புக் காவற்படைகளின் கடும் கண்காணிப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. நக்சல்பாரிகள் எனப் பொதுவாக அறியப்படும் பல்வேறு மார்க்சிய, லெனினிய, மாவோயிஸ்ட் கட்சிக் குழுக்களால் தீண்டாமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்ட பகுதியும்கூட இது. இத்தகைய ஒரு பகுதியில் இப்படி ஒரு வன்கொடுமை நிகழ்ந்தது வருத்தத்தையும் வியப்பையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்ட அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு குறித்து ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து, இவற்றின் உண்மைத் தன்மைகளை மதிப்பிடுவதும், இந்த வன்முறையின் பின்னணி, நிர்வாகத்தின் கவனக் குறைவுகள் மற்றும் அலட்சியங்கள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்டறிவதும்,, உடனடி நிவாரணங்கள், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைப் பரிந்துரைப்பதும் அவசியமாகிறது. இந்த அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.
தென்னிந்திய அளவில் மனித உரிமைக் களத்தில் பணிசெய்யும் முக்கிய அமைப்புகளில் நீண்ட காலமாகச் செயலாற்றும் அநுபவமிக்க மூத்த மனித உரிமைப் போராளிகள் பலரும் பங்குபெற்ற இக்குழுவை சென்னையில் செயல்படும் ‘சிவில் உரிமைக் கண்காணிப்புக் குழு’ (Civil Rights Monitoring Committee)  ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியது.
உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்
  1. 1. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People’s Union for Human Rights – PUHR), சென்னை,
  2. 2. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for People’s Rights – FPR), புதுச்சேரி,
  3. 3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, தலைவர், மனித உரிமைக் கழகம் (Human Rights Forum), ஆந்திர மாநிலம்,
  4. 4. பேரா. நகரி பாபையா, மக்கள் ஜனநாயகக் கழகம் (people’s Democratic Front), பெங்களூரு,
  5. 5. திரு. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
  6. 6. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People’s Union for Human Rights), மதுரை
  7. 7. திரு. ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயகக் கழகம் (People’s Democratic Front), பெங்களூரு,
  8. 8. பி.பரிமளா, சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,
  9. 9. திரு. ஜான்சன், சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,
10. கவின்மலர், பத்திரிக்கையாளர், சென்னை,
11. திரு. செந்தளிர். பத்திரிக்கையாளர், சென்னை
12. ரேவண்ணா, ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
13. திரு. கணேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People’s Union for Civil Rights). பெங்களூரு,
14. திரு. பி.ஷண்முகம், கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் (Karnataka Tamils Movement). பெங்களூரு,
15. அம்ரிதாபா பாசு, மாணவப் பத்திரிக்கையாளர் (Student Journalist), சென்னை,
16. ஷடாக்‌ஷி கவாடே, மாணவப் பத்திரிக்கையாளர் (Student Journalist), சென்னை,
17. விஷ்ணுபுரம் சரவணன், விடுதலைக் குயில்கள், கும்பகோணம்.
18. எஸ். நாசர், சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,
இக் குழுவினர் நேற்று (நவம்பர் 14) தருமபுரி மாவட்டத்தில் நாய்க்கன்கொட்டாய்க்கு அருகிலுள்ள, தாக்குதலால் பாதிக்கப்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பள்ளி கிராமங்களுக்குச் சென்று அழிவுகளைப் பார்வையிட்டனர். அங்குள்ள மக்களைச் சந்தித்து விரிவாகப் பேசினர். செல்லன்கொட்டாயிலுள்ள இறந்துபோன நாகராஜின் வீட்டிற்கும் சென்றனர். வெறிச்சோடிக் கிடந்த அந்தக் கிராமத்தில் யாருமில்லை. தாக்குதலுக்குக் காரணமாயிருந்த வன்னிய கிராமங்கள் பலவற்றிலும் இன்று யாரும் இல்லை. குறிப்பாக ஆண்கள் யாரும் இல்லை. காவல்துறை நடவடிக்கைகளுக்கு அஞ்சி அவர்கள் அருகிலுள்ள கிராமங்களில், உறவினர்கள் வீடுகளில் ஒளிந்துள்ளதாகத் தெரிகிறது. தருமபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினர்.
பின்னணி
தமிழகத்தின் வட மேற்கு எல்லையிலுள்ள தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய வரட்சி மாவட்டங்களில் ஒன்று. பெண் சிசுக் கொலை, தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றிற்கும் பெயர் பெற்ற மாவட்டம் இது. தருமபுரி மாவட்டத்தில், குறிப்பாக தற்போது தலித் மக்கள் மீதுத் தாக்குதல் நடைபெற்ற இப்பகுதியில் 1970களில்  நக்சல்பாரி இயக்கம் வளர்ந்தது. தீண்டாமை, கந்து வட்டிக் கொடுமை, கள்ளச் சாராய மாஃபியா முதலானவற்றை எதித்துப் போராடியது. கடும் அடக்குமுறையை ஏவி அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கியது. வால்டர் தேவாரத்தின் தலைமையில் தருமபுரி, திருப்பத்தூர், சேலம் பகுதிகளைச் சேர்ந்த 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
செப்டம்பர் 12, 1980 அன்று இப்பகுதியில் செயல்பட்டு வந்த பாலனைப் போலீஸ் பிடித்துச் சென்று அடித்துக் கொன்றது,
நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்து, தொடர்ந்து அங்குச் செயல்பட்டு வந்த குழுக்கள் பறை அடிப்பது, பிணந்தூக்குவது முதலான தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வந்தன. சாதி மறுப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தன. இன்னொரு பக்கம் காவல்துறைக் கண்காணிப்புகளும் அடக்குமுறைகளும் தொடர்ந்தன.
ஜனவரி 10, 2000 அன்று இப்பகுதியில் கட்சிப் பணி புரிந்த பொறியாளர் ரவீந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நவம்பர் 24, 2002 அன்று ரவீந்திரன் கொலையின் நேரடி சாட்சியாகவும் இப்பகுதியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தவருமான சிவா சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடனிருந்த 28 பேர் கைது செய்யப்பட்டு பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் இன்று எரிக்கப்பட்ட நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நக்சல்பாரி இயக்கம் கொடுமையாக ஒடுக்கப்பட்ட பின்பு இப்பகுதியில் வன்னியர்கள் மத்தியில் பா.ம.கவும், தலித்கள் மத்தியில் விடுதலைச் சிறுத்தைகளும் வளரத் தொடங்கின. பொடாவில் கைதாகியிருந்தவர்களில் ஒரு சிலரும் கூட விடுதலைச் சிறுத்தைகளில் இணைந்தனர். அதேபோல முன்னாள் நக்சல்பாரி இயக்க உறுப்பினர்களாகவும் அநுதாபிகளாகவும் இருந்த பலர் பா.ம.க வில் இணைந்தனர்.
நக்சல்பாரி அமைப்பின் முயற்சியில் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து ஒரளவு விடுபட்ட மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அருகிலுள்ள தொழில் நகரங்களுக்குச் சென்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர். அதன்மூலம் ஓரளவு அவர்களின் வீடுகளில் மிகவும் அடிப்படையான வசதிகள் உருவாயின. தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின், டிஷ் ஆன்டெனா, கான்க்ரீட் வீடுகள் சகிதம் தலித் பகுதிகள் மாற்றம் பெற்றன. பிள்ளைகள் கல்லூரி மற்றும் தொழிற் படிப்புகளில் பயிலும் நிலையும் உருவானது. எனவே அவர்கள் யாரும் தீண்டாமைக்குட்பட்ட சாதிக் கடமைகள் எதையும் செய்வதில்லை.
மங்கியிருந்த சாதீய உணர்வுகள் மீண்டும் தலை எடுக்கத் தொடங்கின. பறை அடிப்பது, பிணந்தூக்குவது முதலிய பணிகளை வெளியூர்களிலிருந்த தலித்களைக் கொண்டு ஆதிக்க சாதியினர் நிறைவேற்றிக் கொண்டனர். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான முணுமுணுப்புகள், கண்டனங்கள், ஊர்க்கூட்டங்கள் முதலியனவும் நடை பெறலாயின. இப்பகுதியைச் சேர்ந்ததில்லை ஆயினும் சற்றுத் தொலைவிலுள்ள மருக்கலம்பட்டி கோழிமக்கனூர் என்னுமிடத்தில் முனுசாமி மனைவி கம்சலா என்கிற தலித் பெண்மணி பாதைத் தகராறு ஒன்றில் சாதி இந்து ஒருவரால் இரண்டாண்டுகளுக்கு முன் குத்திக் கொல்லப்பட்டார்.
தற்போதைய வன்முறை
நாய்க்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவனின் மகன் இளவரசன் (23) என்கிற தலித் இளைஞனும், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் மகள் திவ்யா (21) என்கிற வன்னியர் சாதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் சுமார் இரண்டாண்டுகள் காதலித்து, சென்ற அக்டோபர் 14, 2012 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்திற்குப் பெண் வீட்டாரிடமிருந்து கடும் எதிர்ப்பும் மிரட்டலும் இருந்துள்ளது. இதை ஒட்டி மணமக்கள் டி.ஐ.ஜி சஞ்சய் குமார் மற்றும் எஸ்.பி அஸ்ரா கார்கிடம் புகார் செய்தனர். அவர்களும் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
எனினும் வன்னிய சாதியில் முக்கியமானவர்களும், உள்ளூர் பா.ம.க தலைவர்களும் திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அழைத்து வருமாறு திவ்யாவின் தந்தை நாகராஜை வற்புறுத்தியுள்ளனர்.  தந்தையின் வேண்டுகோளை திவ்யா ஏற்கவில்லை. இந்நிலையில் சென்ற நவம்பர் 4 அன்று பா.ம.கவின் தருமபுரி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மதியழகன் உள்ளிட்ட பலர் தம் சாதியினரைப் பெருந்திரளாகத் திரட்டி நாய்க்கன்கொட்டாயில் சாதிப் பஞ்சாயத்து ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் இந்தக் காதல் திருமணம் குறித்துக் கடுமையாகப் பலரும் பேசியுள்ளனர். இறுதியில் அவர்கள் திரண்டு சென்று, இளவரசனின் ஊரான நத்தம் காலனி ஊர்த்தலைவர் சக்தி என்பவரைச் சந்தித்து திவ்யாவைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் எனவும் மிரட்டியுள்ளனர்.
சுற்றத்தாரின் வற்புறுத்தல் மற்றும் இதனால் ஏற்பட்ட அவமானம் ஆகியவற்றால் சென்ற நவம்பர் 7 மதியம் 2 மணி அளவில் வித்யாவின் தந்தை நாகராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்லபடுகிறது. அன்று மாலை 4 மணி அளவில் பா.ம.க தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, கொட்டாவூர் எஸ்.மாது ஆகியோர் தலைமையில் பெருந்திரளாகத் திரண்ட வன்னியர்கள் நாகராஜின் பிணத்தைத் தூக்கி வந்து, நத்தம் காலனியில் இருந்த இளவரசனின் வீட்டின் முன் வைத்து, ஆத்திரத்துடன் சாதி சொல்லி இழிவாகப் பேசிக் கொண்டே, கடப்பாரை, உருட்டுக் கட்டைகள், இரும்புத் தடிகள் முதலான கொடும் ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதலைத் தொடங்கினர். பெரிய அளவில் வீடுகளை எரித்து வன்முறைகளை மேற்கொண்டபின் பிணத்தை எடுத்துச் சென்று நெடுஞ்சாலையில் கிடத்தினர். தொடர்ந்து கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தலித் குடியிருப்புகளும் தாக்கிச் சூறையாடப்பட்டுப் பின் எரியூட்டப்பட்டன. தாக்குதலினூடே சாலை மறியல், மரங்களை வெட்டிச் சாலைகளில் போட்டு தீயணைப்பு வண்டிகள் உட்பட எதுவும் வர இயலாமல் தடுத்தனர். ஆயுதங்களுடன் கூடிய பெருந்திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் வீடுகளிலிருந்த தலித் மக்கள் வெளியே ஓடி உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டனர். அப்படியும் கையில் அகப்பட்டவர்களை அடித்துள்ளனர்.  வன்முறையில் சில பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இத் தாக்குதலின் விளைவான பாதிப்புகள் குறித்து அரசு மற்றும் ஊடகங்களின் மதிப்பீடு: 268 வீடுகளும் நத்தம் காலனி 144; கொண்டம்பட்டி 90; அண்ணா நகர் 34), 50 இரு சக்கர வாகனங்களும், நான்கு வேன்களும் எரிக்கப்பட்டன எனவும், இதனாலும் இதை ஒட்டி நடந்த சூறையாடல்களினாலும் ஏற்பட்ட இழப்பீட்டின் மதிப்பு சுமார் 3.5 கோடி முதல் 4 கோடி வரை இருக்கலாம் எனவும் காவல்துறையும் வருவாய்த்துறையும் மதிப்பிட்டுள்ளன.
ஆனால் அரசின் இந்த இழப்பீடு குறித்த மதிப்பீடு தவறென தேசியப் பட்டியல் சாதியினருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. சென்ற நவம்பர் 12 அன்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ஆணையம் மொத்த இழப்பு சுமார் 6.95 கோடிகள் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. 40 வீடுகள் முழுமையாக எரிந்து அழிந்துள்ளன எனவும், 175 வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்டுள்ளன எனவும் ஆணையத் தலைவர் ஆர்.எல்.புனியா தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இப்போது எரிக்கப்பட்ட 268 வீட்டு உரிமையாளர்களுக்கும் தலா 50,000 ரூபாய்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சில பாத்திரங்கள், வேட்டி, புடவை, இன்று வரை மூன்று வேளை உணவு ஆகியன வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக எரிக்கப்பட்டுள்ள 40 வீடுகளையும் தலா 1.5 லட்ச ரூபாயில் புதிதாகக் கட்டித் தருவது எனவும், பிற எரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வீடுகள் அனைத்தையும் மொத்தம் 40.9 இலட்ச ரூபாயில் சீரமைத்துத் தருவது எனவும் அரசு அறிவித்துள்ளது.

காவல்துறை நடவடிக்கை: தருமபுரியில் தலித்துகள் தாக்கப்பட்டது குறித்து கிருஷ்ணபுரம் காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்கு விவரங்கள்:
நத்தம் காலனி: Cr. No. 296/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 300 பேர் மீது வழக்கு.  இதில் 87 பேர் அடையாளம் தெரிந்தவர்கள். 20பேர்கைது.
அண்ணா நகர்: Cr. No. 295/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act.  500 பேர் மீது வழக்கு. இதில் 17 பேர் அடையாளம் தெரிந்தவர்கள். 7 பேர் கைது.

கொட்டாம்பட்டி: Cr. No. 297/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 80 பேர் மீது வழக்கு. 26 பேர் கைது.
செங்கல்மேடு: Cr. No. 298/12 u/s 147, 148, 435, 436, 427, 307, 395 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 44 பேர் மீது வழக்கு. 39 பேர் கைது.

இது தவிர சாலை மறியல் செய்ததற்காகவும், மரங்களை வெட்டிச் சாலையில் போட்டு போக்குவரத்தைத் தடை செய்ததற்காகவும் மேலும் இரு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இதுவரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127. 
எமது பார்வைகள்
1. கலவரம் தொடங்கியபின் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோதும் காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இன்றைய நிலையைத் தடுத்திருக்கலாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, சாதிக் கலவரங்களுக்கு வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து விழிப்புணர்வுக் குழுக்கள் முதலியவற்றை அமைத்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும். அப்பகுதியில் துப்பாக்கி லைசன்ஸ் முதலியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அரசு கடைபிடிப்பதே இல்லை. இது சரியாகக் கடைபிடிக்கப்பட்டால் இது போன்ற கலவரங்களை முன்கூட்டியே தடுக்கலாம்.
2. இக்காதல் திருமணம் நடைபெற்று சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் இவ்வன்முறை நடைபெற்றுள்ளது. இடைப்பட்ட காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து என இக்காதல் தம்பதியர் டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி அளவில் புகார் அளித்துள்ளனர். இப்பகுதியில் சாதி உணர்வுகள் தலை எடுத்து வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தியிருந்தால் இன்றைய நிகழ்வுகளைத் தடுத்திருக்கலாம். சென்ற செப்டம்பர் 17 அன்று வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து தருமபுரியில் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டத்தில், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மிகவும் சாதி வெறியுடனும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், காதல் திருமணங்களைக் கண்டித்தும் பேசியுள்ளார். பின்னர் அக்டோபர் 4ல் நடைபெற்ற சாதிப் பஞ்சாயத்திலும் இந்தக் காதல் திருமணம் குறித்துக் கடும் நடவடிக்கைகள் பற்றி சாதி வெறியுடன் பேசப்பட்டுள்ளது. இதை உளவுத்துறையினர் குறிப்பெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு நடந்தும் இப்படியான ஒரு வன்முறைத் தாக்குதலை காவல்துறை ஊகிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது. சாதி வெறி ஒரு பக்கம் என்றால், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை இவ் வன்முறையின் காரணமாக அமைந்துள்ளது,
3. கலவரத்தன்று ஒரு வேனில் போலீஸ்காரர்கள் இருந்தும் கலவரத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக கிருஷ்ணபுரம் காவல் நிலைய டி.எஸ்.பி ஒரு வன்னியர் எனத் தெரிகிறது. இன்று அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகள் இருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கூட இந்தக் காரணத்திற்காகப் பணி நீக்கம் செய்யப்படவில்லை. தவிரவும் இன்னமும் அந்த டி.எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய பகுதிகளில் ஆதிக்கம் செய்யும் அதே சாதியினரை காவல் மற்றும் ரெவின்யூ பதவிகளில் அமர்த்துவது பொதுவாக இது போன்ற வன்முறைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதற்கும் தடையாக அமைந்து விடுகிறது.
4. இவ்வன்முறை மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. உரிய ஆயுதங்களுடன் சென்று தொலைக்காட்சிப் பெட்டிகள். மின் விசிறிகள், வாகனங்கள், பீரோக்கள் முதலியன உடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.. முழு அழிவுகளும் மேற்கொள்ளப்படும் வரை காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் உள்ளே நுழைவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்துள்ளன. உடைத்து எரியூட்டப்பட்டது தவிர பொருட்கள், நகைகள், சேமிப்புகள் முதலியன கொள்ளை அடிக்கப்பட்டும் உள்ளன. ஆக இது மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு வன்முறை (organized violence).
6. தலித் மக்கள் இதுபோல ஆதிக்க சாதியினரைச் சார்ந்திராமலும், ஓரளவு ஆதிக்கச் சாதியினருக்குச் சமமான அளவில் அடிப்படை நவீன வசதிகளுடனும் வாழ்கிற சூழலில் நடைபெறும் சாதி வன்முறைகள், அவர்களின் இத்தகைய வசதிகளையும் பொருட்களையும், சம அந்தஸ்தில் கட்டப்பட்ட வீடுகளையும் அழிப்பதாக உள்ளது கவனிக்கத்தக்கது. கொடியங்குளம் மற்றும் தென்மாவட்டக் கலவரங்களிலும் இத்தன்மையைக் காண முடியும். ஆண்களைக் கொலை செய்வது, பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது, நவீன வாழ்வு தலித்களுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகளை அழிப்பது என்பன தலித் மக்களின் மீதான வன்கொடுமை வடிவங்களாக உள்ளன.
7. தமிழகம் முழுமையும் சாதி மதங்களைத் தாண்டிய காதல் திருமணங்கள் கவுரவக் கொலைகளால் எதிர் கொள்ளப்படுதல், அல்லது அத்தம்பதியர் தற்கொலைக்குத் தூண்டப்படுதல் என்கிற நிலை அதிகமாகியுள்ளது. சாதி அமைப்புகள், சாதி அரசியல், சாதிக் கட்சிகளின் பெருக்கம் என்பன இதன் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாச் சாதி அமைப்புகளுமே, குறிப்பாக கொங்கு வேளாளர் அமைப்பு, வன்னியர் சங்கம் முதலியன காதல் திருமணங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றன. சென்ற சித்திரை முழு நிலவுத் திருநாளில் மகாபலிபுரத்தில் கூட்டப்பட்ட வன்னியர் சங்க விழாவில், அச்சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இவ்வாறு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களும் இதைக் கண்டிக்கவில்லை.
ஒருபக்கம் இன்றைய வாழ்க்கை முறையில் திருமண வயது தள்ளிப் போகிறது இருபாலரும் இணந்து கல்வி பயில்வதும் வேலை பார்ப்பதும் அதிகமாகி வருகிறது, செல்போன் மூலம் எந்நேரமும், பெரியவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இவை காதலித்துத் திருமணங்கள் செய்யும் நிலையை அதிகரித்துள்ளன. இந்தக் காதல் திருமணங்கள் பலவும் சாதிகளைத் தாண்டியதாகத்தான் அமைகின்றன.
ஆனால் அதே நேரத்தில் சாதி மத இறுக்கங்கள் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகின்றன. சாதிக் கட்சிகளும் சாதி அமைப்புகளும் அதிகமாகியுள்ளன. சாதி அல்லது மதம் போன்ற ஒரு குறிப்பான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும்போது அவர்களின் அதிகபட்ச ஆதரவிற்கு ஒரு எல்லை, limit ஏற்பட்டுவிடுகிறது. எனவே தமது குறிப்பிட்ட ஆதரவுச் சாதியை அதிகபட்சமாகத் திரட்டி consolidate பண்ணுவது என்பதே இக்கட்சிகளின் ஒரே வேலையாகி விடுகிறது. எனவே மற்றவர்களின் மீது வெறுப்பை விதைப்பதற்கு இவை தயங்குவதில்லை.
தன் சாதி ஆதிக்கத்தை விரிவுப்படுத்துவது, தன் சாதிக்காரரை முதலமைச்சர் ஆக்குவது, தன் சாதிப் பெண்களை வேறு யாரும் குறிப்பாகக் குறைந்த சாதியினர் திருமணம் செய்வதைத் தடுப்பது என்பதெல்லாம் இன்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. எல்லாச் சாதி அமைப்புகளும், மதவாத அமைப்புகளும் காதல் திருமணங்களுக்கு எதிராக இருப்பதையும் காணலாம். காதலர் தினக் கொண்டாட்டங்கள் மீது வன்முறை மேற்கொள்வது, காதலர்களை அடித்துப் பிரிப்பது என்பதெல்லாம் அதிகமாகியுள்ளன. இந்த வன்முறையைப் பொருத்தமட்டில் பா.ம.கவின் சாதி அரசியல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுவரை பா.ம.க தரப்பில் மட்டுமே இந்த வன்முறை கண்டிக்ககப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
7. இழப்பீடு குறித்த அரசின் மதிப்பீடும், தற்போது கொடுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையும் மிகக் குறைவு. பொருளிழப்பு குறித்த தேசிய பட்டியல் சாதி ஆணையத்தின் மதிப்பீடாகிய 7 கோடி ரூபாய் என்பதே சரியாக இருக்கும்.  ஆனால் கொடுக்கப்பட்டுள்ள உதவித் தொகையின் மதிப்பு சுமர் 1.75 கோடி ரூபாய்கள் மட்டுமே. எரிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கும் (தலா 1.75 இலட்சம்), சீர்திருத்துவதற்கும் (எஞ்சிய 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மொத்தம் ரூ 40.9 இலட்சம்) அரசு செலவழிக்கத் திட்டமிட்டுள்ள தொகை மிக மிகக் குறைவு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி பட்டியல் சாதியினரது வீடுகள் இவ்வாறு அழிக்கப்படும்போது இது தொடர்பான நிதியிலிருந்து அவ்வீடுகள் திருப்பிக் கட்டித் தரப்பட வேண்டும்.  திருத்தப்பட்ட விதிகளின்படி இது போன்ற இழப்புகளின்போது கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையின் குறைந்தபட்ச மதிப்பு 1,20,000 ரூபாய்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது பரிந்துரைகள்
  1. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி தமிழகம் முழுவதும் சாதிக் கலவரம் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து உரிய கண்காணிப்புக் குழுக்கள் முதலியவற்றை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். சட்டத்திலும் விதிகளிலும் கண்டுள்ள இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். உடனடி நடவடிக்கையாக அரசு இதை மேற்கொள்ள வேண்டும். காதல் திருமணத் தம்பதியர் புகார் கொடுத்திருந்தும் கலவரச் சூழலை ஊகித்து உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். வெறுமனே வேறு காரணங்களைச் சொல்லி தற்காலிகப் பணி நீக்கம் செய்து, பிறகு சில மாதங்களுக்குப் பின் அவர்களது பணி நீக்கத்தை ரத்து செய்வது என்பதாக அல்லாமல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு அதிகாரிகள் பொறுப்பைத் தட்டிக் கழைத்தல் என்கிற பிரிவின் கீழ் குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகராஜின் தற்கொலையேகூட சாதிக் கலவரத்தைத் தூண்டுவதற்காகச் செய்யப்பட்ட கொலையோ என்கிற சந்தேகம் சிலர் மத்தியில் இருப்பதால், நாகராஜின் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக வெளியிட்டு, அந்த அடிப்படையில் தேவையாயின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைக் கடைபிடிக்காத காவல் மற்றும் ரெவின்யூ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இச்சட்டம் திருத்தப்பட வேண்டும். சாதி மீறிய திருமணத்திற்கு எதிராகப் பேசுவதையும் இச்சட்டத்தின் கீழ் சாதி கூறி இழிவு செய்வது, வன்முறையைத் தூண்டுவது என்கிற அளவில் குற்றமாக்க வேண்டும்.
  3. வன்முறையில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை சுமார் 800 பேர்கள். போடப்பட்டுள்ள வழக்குகளிலும் வன்முறை மேற்கொண்டவர்களாக அதிகம் பேர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தும் இதுவரை 127 பேர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், விரைந்து பிறரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணைக்கென சிறப்பு நீதிமன்றம் அமைத்து, ஆந்திர மாநிலம் குண்டூர் போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டதுபோல பாதிக்கப்படட கிராமங்களிலேயே இந்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்.
  4. 4. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கண்டுள்ளபடி எரிக்கப்பட்ட வீடுகளை இதற்குரிய நிதியிலிருந்து அரசே கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் இதற்கென குறைந்தபட்சம் ஐந்து இலட்ச ரூபாய்கள் ஒதுக்க வேண்டும். பகுதியாக இழப்புகள் ஏற்பட்டுள்ள வீடுகளுக்குப் பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல இழப்பீடு வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை மூன்று இலட்சத்திற்குக் குறையக் கூடாது.  பொருள் இழப்புகள் தொடர்பாக ஒவ்வொரு வீட்டிலும் இழப்பீட்டை மதிப்பிட சுதந்திரமான நடுநிலையாளர் குழு ஒன்றை அரசு நியமித்து அதனடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும். திருட்டுக் குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டுப் பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.
  5. இதுபோன்ற கும்பல் வன்முறைகளில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி ஒடுமொத்த வன்முறையாளர்களின் மீதும் collective fine போடுவதற்கு வழி உண்டு. அது இங்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சொத்திழப்புகளை மதிப்பிட்டு இவ்வாறு வசூலிக்கப்படும் கூட்டு அபராதத் தொகையிலிருந்து அது ஈடு செய்யப்பட வேண்டும்.
  6. 6. எரியூட்டப்பட்ட வீடுகளில் அழிந்துபோன குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முதலான அடிப்படை ஆவணங்களை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும், இதற்கென மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் வழங்க வேண்டும்.
  7. காதல் மற்றும் காதல் திருமணங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வு ஊட்டும் அதே நேரத்தில், காதல் திருமணங்கள் சமூகத்தில் அதிகமாகக் கூடிய நிலை தவிர்க்க இயலாது என்பதை ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் இது குறித்துப் பதற்றமடையத் தேவையில்லை என்கிற உணர்வு பரவலாக்கப்படுதல் அவசியம். சாதி அடிப்படையில்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இதில் முன்கை எடுக்கவேண்டும். தீண்டாமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தில் பெருக்குவதில் இவர்கள் முன்நிற்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் செயற்கரிய செய்வோருக்கு வீரப் பரிசுகள் வழங்குவதைப்போல தீண்டாமைக்கு எதிராகச் செயல்படுவோருக்கும் ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
  8. தலித் மக்கள் ஓரளவு நடுத்தர வர்க்க வசதியுடன் வாழத்தொடங்கினாலும் கிராம அளவில் அவர்கள் வலுவற்று இருப்பதையே இவ்வன்முறை காட்டுகிறது, கிராமங்களில் நிலமே அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பதால் இப்பகுதியில் உள்ள தலித் மக்களுக்கு அரசு நிலம் வழங்க ஆவன செய்ய வேண்டும். தவிரவும் தலித் கிராமங்களில் உரிய அடிப்படை வசதிகள், ரேஷன் கடைகள் முதலியன அமையாததும் இம்மக்கள் ஆதிக்க சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. தலித் குடியிருப்புகளில் இத்தகைய அடிப்படை வசதிகள், குறிப்பாகக் கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
  9. 9. பள்ளி மாணவர்கள் பலரையும் வெண்டுமென்றே வழக்கில் தொடர்புப்படுத்திக் கைது செய்துள்ளதாக வன்னியர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இளைஞர்கள் வன்முறையில் கலந்து கொண்டதைப் பலரும் உறுதிப்படுத்தினர். இளைஞர்கள் மத்தியில் இவ்வாறு சாதி உணர்வு உருவாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. எவ்வாறாயினும் வன்முறை நடவடிக்கைகளில் தொடர்பில்லாத மாணவர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
தொடர்புக்கு: அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு,சாஸ்திரி நகர்,   சென்னை- 600020, செல்: 94441 20582
http://vallinam.com.my/navin/?p=1182 )


“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் அப்பட்டமான சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சு இப்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. வன்னிய சாதிவெறியின் கோரத் தாண்டவத்துக்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.
நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். நாய்க்கன் கொட்டாய் பகுதியே வன்னிய சாதியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்பதாலும் அதிலும் சமீப ஆண்டுகளாய் இவர்களிடையே சாதிவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும் தாங்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடியாது என்று திவ்யாவும் இளவரசனும் அஞ்சினார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இவர்கள்வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் நடந்த உடனேயே வன்னியர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்களைச் சந்திக்கத் துவங்கிய புதுமணத் தம்பதிகள், தங்கள் பாதுகாப்புக்கு காவல் துறையை நாடினார்கள்.
தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரையும் தர்மபுரி எஸ்.பி அஸ்ரா கர்க்கையும் சந்தித்து முறையிடுகிறார்கள்.
இதற்கிடையே திவ்யாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி வன்னியர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக நத்தம் காலனி மக்களுக்கும் இளவரசனின் உறவினர்களுக்கும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நவம்பர் 5ம் தேதி திவ்யாவின் பெற்றோர் தங்கள் சாதியைச் சேர்ந்த சுமார் 500 பேர்களுடன் நத்தம் காலனிக்கு வெளியே திரண்டு பஞ்சாயத்து பேச வருமாறு இளங்கோவின் உறவினர்களை அழைத்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு நத்தம் காலனியில் இருந்து சுமார் பத்து பேர் சென்றுள்ளனர்.
வன்னியர்கள் தரப்பிலிருந்து வந்திருந்த 500 பேர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் மதியழகன் தலைமை தாங்கி வந்துள்ளார். நத்தம் காலனியில் இருந்து வந்தவர்களை நேரடியாக மிரட்டும் மதியழகன், “நாம பார்த்து வைப்பது தான் சட்டம். மரியாதையாக பெண்ணை ஒப்படைத்து விடுங்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணை ஒப்படைப்பதற்கு நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதிக்கிறார். உரிய கெடுவுக்குள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
சாதிவெறி தலைக்கேறிய நிலையில் மிக அதிகளவில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அஞ்சிய நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள், அந்த நேரத்தில் உடனடியாக தப்பிக்க எண்ணி அதற்கு ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான கட்டைப் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலும் நடந்துள்ளது. அங்கே தொடர்ந்து சென்று வந்த திவ்யாவின் தந்தை நாகராஜனை அங்கேயிருந்த வன்னிய சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், “பெண்ணை கீழ்சாதிக்காரனோடு அனுப்பி வைத்த பொட்டைப் பயல்” என்பது போல கேலி பேசி வெறியேற்றியிருக்கிறார்.
நவம்பர் 5ம் தேதி பா.ம.க மதியழகன் முன்னிலையில் நடந்த கட்டைப்பஞ்சாயத்தில் பெண்ணை ஒப்புவிப்பதாக நத்தம் காலனியைச் சேர்ந்த ஒருசாரார் ஏற்றுக் கொண்டு வந்திருந்தாலும், ஊருக்குத் திரும்பியதும் மற்றவர்கள் வேறு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக திவ்யா இளவரசனுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக பெண்ணைத் திருப்பி அனுப்பினால், அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அஞ்சிய இளவரசனின் உறவினர்கள், நவம்பர் 7ம் தேதியன்று அவரை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.
பெண் திரும்பி வராத நிலையில் நாகராஜனின் உறவினர்களும் அவரைக் கேலி பேசி வெறுப்பேற்றிய நிலையில்  அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதிலும் அவர் விஷம் அருந்தினார் என்றும் அவரது நெருங்கிய உறவினர்களே அவருக்கு விஷத்தைப் புகட்டினர் என்றும் இருவேறு விதமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.
நாகராஜன் இறந்து போன நிலையில், அக்கம் பக்கம் ஊர்களைச் சேர்ந்த வன்னிய சாதியினர் சுமார் 2000 பேர் திரட்டப்படுகிறார்கள். நாகராஜனின் சடலைத்தை எடுத்துக் கொண்டு செல்லங்கொட்டாயிலிருந்து நத்தம் காலனி வழியே தருமபுரி – திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு ஊர்வலமாய்க் கிளம்புகிறார்கள். வரும் வழியிலேயே மூன்று குழுக்களாய் பிரிந்து கொள்ளும் இந்த கும்பல், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். இம்மூன்று பகுதிகளும் ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதிகள்.
கையில் கிடைத்த கடப்பாரை, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் கிளம்பிய இந்த கும்பல், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிறது. அந்த சமயத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த ஆண்கள் கூலி வேலைகளுக்காக வெளியூர் சென்றிருந்தனர். சுமார் 40 பெண்களும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுமே காலனியில் இருந்துள்ளனர்.
கொலைவெறியில் உள்ளே நுழையும் கும்பலைக் கண்டதும் சிதறி ஓடும் பெண்கள் ஊருக்கு வெளியேயும் வயல்களுக்குள்ளும் புகுந்து மறைந்து கொள்கிறார்கள். பெயின்ட் அடிக்கப் பயன்படும் கருவியில் (Painting Gun) பெட்ரோலை  நிரப்பி எடுத்து வந்த கும்பல் அதை குடிசைகளின் மேலும் வீடுகளின் மேலும் பீய்ச்சி அடித்தும் பெட்ரோல் குண்டுகளை எரிந்தும் வீடுகளைக் கொளுத்தியிருக்கிறார்கள்.
நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.
வன்னிய சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். தாக்குதல் நடத்திய கும்பலை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மதியழகன், சிவா, பச்சியப்பன், மகாலிங்கம், லலிதா மாது, ராஜேந்திரன் மற்றும் P.K சின்னச்சாமி ஆகியோர் திட்டமிட்டு வழிநடத்தியிருக்கிறார்கள். ஒரு படையெடுப்பைப் போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பங்கேற்ற வன்முறைக் கும்பலில் பெரும்பாலும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.
நத்தம் காலனியிலும் கொட்டாம் பட்டியிலும் மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது மணி வரை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். அண்ணா நகரில் இரவு 11 மணி வரை தொடர்ந்து வீடுகளை எரிப்பதும், பொருட்களைக் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடந்துள்ளது.
ஒரு பக்கம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு குழு ரம்பத்தால் மரங்களை அறுத்து தருமபுரி திருப்பத்தூர் சாலையில் தடுப்பரண்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் தீயணைப்புத் துறையும் நெருங்க விடாமல் செய்ததுடன் உள்ளே நுழைய முயன்ற காவல்துறை வாகனங்களை கற்களை எறிந்து தாக்கியிருக்கிறார்கள்.
சென்றாண்டு பரமக்குடியில் தலித்துகளிடம் துப்பாக்கியால் பேசி வீரம் காட்டிய போலீசு,  இங்கு வன்னிய ஆதிக்க சாதியினரின் முன் பணிந்து போயிருக்கிறார்கள். இத்தனைக்கும் சம்பவம் நடக்கும் பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது.
தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கும் செல்லங்கொட்டாய் நத்தம் காலனி பகுதியில் சாதி ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது நடந்துள்ளதைப் போன்ற வெறித்தனமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை. தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாங்கள் அங்கே சென்றிருந்த போது நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, “ நக்சலைட்டு கட்சி வலுவிழந்து போனது தான் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது” என்று கண்ணீரோடு தெரிவிக்கிறார்.
எண்பதுகளில் வன்னிய சாதி அடையாளத்தோடு துவங்கப்பட்ட ராமதாஸின் பா.ம.க, தொண்ணூறுகளிலிருந்தே ‘பாட்டாளி’ முகமூடியோடு  பச்சோந்தித்தனமாக பல்வேறு தேர்தல் கூட்டணிகளின் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்கிறது. ராமதாஸின் பிழைப்ப்புவாதமும் சந்தர்பவாதமும் சாதாரண மக்களின் முன் போதிய அளவுக்கு அம்பலமான நிலையில் இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து அரசியல் அரங்கில் தனிமைப்படுகிறார்.
வேல் முருகன் போன்ற அவரது முன்னாள் கூட்டாளிகளே தனி கடை போட்டு பிழைப்புக்குப் போட்டியாக உருவெடுக்கிறார்கள். கரைந்து கொண்டிருக்கும் தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுப்பதற்காக தற்போது மீண்டும் வன்னிய சாதிவெறியை  கையிலெடுத்திருக்கும் ராமதாஸ், தற்போது வன்னியர்களிடையே சாதிவெறியைத் தூண்டி விட்டு மக்களிடையே பிளவுண்டாக்கி ரத்தம் குடிக்கும் வெறியோடு வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சாதிப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி வந்திருந்த ராமதாஸ், இந்த வகையில் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி அமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் குருவின் சாதிவெறிப் பேச்சு மகாபலிபுரத்தில் அரங்கேறுகிறது. சாதிக்காக என்ன செய்தாலும் தங்களைக் காப்பாற்ற ஒரு அமைப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை சாதிவெறியேறிய லும்பன் கூட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தான் இந்தக் கலவரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
தருமபுரிக் கலவரத்தைத் தொடர்ந்து 96 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்டு செய்யக் கூடாது என்பதற்காக எஸ்.பி அஸ்ரா கர்க் மற்றும் தலைமை மேஜிஸ்டிரேட் வரை சென்று வாதாடியுள்ளனர்.
அரசியல் அரங்கில் சாதிவெறி மீண்டும் அரங்கேறி உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு துடிக்கிறது. நவீன தொழில் நுட்ப புரட்சியின் காலம் என போற்றப்படும் இந்நிகழ்காலத்தில்தான் சாதிவெறியும் முடிந்த மட்டும் ஒருங்கிணைத்துக் கொண்டு வன்முறையில் குதிக்கிறது. இதை இணையம் தொட்டு நாய்க்கன் கொட்டாய் வரை காணலாம். இதனால் தலித் மக்களின் வாழ்வுரிமை பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறது. பல வருடங்கள் உழைத்து சேர்த்த வீடும், பொருட்களும் நாயக்கன்கொட்டாய் மற்றும் ஏனைய பகுதிகளில் சூறையாடப்பட்டன. இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் வளர்வதும் வன்னிய சாதிவெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்த ஆபத்திலிருந்து தலித் மக்களைக் காப்பாற்றுவதாய் கூறிக் கொள்ளும் தலித் கட்சிகளும் இப்போது ஆகச் சீரழிவான நிலைக்கு இறங்கி சென்ற பின், அந்த மக்கள் இன்று பாதுகாப்பற்று தனித்து விடப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதிவெறி என்பது அந்த சாதியில் இருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கே  எதிரானது என்பதை அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்வதோடு தம்மைப் போன்றே இழப்பதற்கு ஏதுமற்ற உழைக்கும் மக்களான தலித்துகளோடு கரம் கோர்ப்பதன் மூலம் தான் ராமதாஸ் தலைமைதாங்கும் வன்னிய சாதிவெறியை அகற்ற முடியும். இவ்வாறு வர்க்கமாக அணிதிரள்வதன் மூலம் தான் பொருளாதார விடுதலையை மட்டுமல்ல, சாதி ஒழிப்பையும் சாத்தியமாக்க முடியும்.

 http://www.vinavu.com/2012/11/10/dharmapuri-vanniyar-pmk-atrocity/)


தர்மபுரி: வீடு எரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வெட்ட வெளியில்...

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 நவம்பர், 2012 
சம்பவம் நடந்த இடம்
வீடுகளோடு சில வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழகத்தின் தர்மபுரியில் உயர்சாதியினரால் வீடுகள் சூரையாடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வெட்ட வெளியில் தங்கியுள்ளனர்.
தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வன்னியர் இனப் பெண்ணை திருமணம் செய்ததை அடுத்து பிரச்சினை ஏற்பட்டது.
மணமகன் வசிக்கும் நத்தம் காலனிப் பகுதியில் இருந்த சுமார் 300 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் உடமைகளும் சூரையாடப்பட்டன.
சம்பவம் நேற்று முன் தினம் நடந்தும் இன்னமு சுமூக நிலை திரும்பவில்லை என்று அங்கிருப்போர் கூறுகின்றனர்.

ஒலி வடிவில்...

ஒரு மைதானத்தில் சுமார் 1500 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் உணவு உதவிகளை வழங்கியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் அளித்த உணவு மற்றும் மாற்றுத் துணி போன்ற உதவிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தலித் பெண்மணி செல்வி தமிழோசையிடம் தெரிவித்தார்.
பனை இலையில் வைத்துதான் உணவு சாப்பிடுவதாகவும், சாலையோரத்தில் உறங்குவதாகவும் அவர் கூறினார்.
புதன்கிழமை மாலை வன்னியர்கள் ஒரு பெருங் கூட்டமாக வந்து வீடு வீடாகச் சென்று பொருள்களை சூறையாடி விட்டு அதன் பிறகு வீடுகளை தீயிட்டுக் கொளுத்திவிட்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழும் காலனியில் அதிக அளவிலான ஆண்கள் இருக்கவில்லை என்றும் அங்கு இருந்த அனைவரும் தப்பி ஒடிவந்ததாகவும் அவர் கூறினார்.
நத்தம் கிராமத் தலைவரான சக்தி, 4 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதலை தடுக்குமாறு காவல்துறைக்கும், தீ அணைப்புத் துறைக்கும் பல முறை அறிவிப்பு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் உதவவில்லை என்றும் தமிழோசையிடம் புகார் தெரிவித்தார்.
அங்குள்ள தலித் மக்கள் அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்துக்கு சென்று கூலி வேலை பார்த்து பொருளாதார ரீதியில் வன்னியர்களை விட சற்றே முன்னேறிய நிலையில் இருப்பது ஜாதி உணர்வுகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் தாக்குதல் காரணமாக சுமார் 300 வீடுகள் முற்றாக தேசமடைந்து விட்டன. இதில் ஒரு சில வீடுகள் மட்டுமே ஒலை வீடுகள் என்று கூறப்படுகிறது.
வீடுகளுக்கு தீ வைத்தவர்கள், வீட்டில் இருந்து பணம், நகை போன்ற பொருட்களை சூறையாடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பண உதவி அளிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் பிபிசியிடம் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக 92 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மணமகன் வசிக்கும் நத்தம் காலனிப் பகுதியில் இருந்த சுமார் 300 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் உடமைகளும் சூரையாடப்பட்டன.
சம்பவம் நேற்று முன் தினம் நடந்தும் இன்னமு சுமூக நிலை திரும்பவில்லை என்று அங்கிருப்போர் கூறுகின்றனர்.

ஒலி வடிவில்...

ஒரு மைதானத்தில் சுமார் 1500 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் உணவு உதவிகளை வழங்கியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் அளித்த உணவு மற்றும் மாற்றுத் துணி போன்ற உதவிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தலித் பெண்மணி செல்வி தமிழோசையிடம் தெரிவித்தார்.
பனை இலையில் வைத்துதான் உணவு சாப்பிடுவதாகவும், சாலையோரத்தில் உறங்குவதாகவும் அவர் கூறினார்.
புதன்கிழமை மாலை வன்னியர்கள் ஒரு பெருங் கூட்டமாக வந்து வீடு வீடாகச் சென்று பொருள்களை சூறையாடி விட்டு அதன் பிறகு வீடுகளை தீயிட்டுக் கொளுத்திவிட்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழும் காலனியில் அதிக அளவிலான ஆண்கள் இருக்கவில்லை என்றும் அங்கு இருந்த அனைவரும் தப்பி ஒடிவந்ததாகவும் அவர் கூறினார்.
நத்தம் கிராமத் தலைவரான சக்தி, 4 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதலை தடுக்குமாறு காவல்துறைக்கும், தீ அணைப்புத் துறைக்கும் பல முறை அறிவிப்பு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் உதவவில்லை என்றும் தமிழோசையிடம் புகார் தெரிவித்தார்.
அங்குள்ள தலித் மக்கள் அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்துக்கு சென்று கூலி வேலை பார்த்து பொருளாதார ரீதியில் வன்னியர்களை விட சற்றே முன்னேறிய நிலையில் இருப்பது ஜாதி உணர்வுகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் தாக்குதல் காரணமாக சுமார் 300 வீடுகள் முற்றாக தேசமடைந்து விட்டன. இதில் ஒரு சில வீடுகள் மட்டுமே ஒலை வீடுகள் என்று கூறப்படுகிறது.
வீடுகளுக்கு தீ வைத்தவர்கள், வீட்டில் இருந்து பணம், நகை போன்ற பொருட்களை சூறையாடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பண உதவி அளிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் பிபிசியிடம் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக 92 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121109_dharmapuri.shtml)


தர்மபுரி: குடிபோதையில் ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
  மாவட்டத்தில் உள்ள கம்பு நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  ஒருவர்,ரோந்து பணியின்போது குடிபோதையில் இருந்தது நிரூபணம் ஆனதையடுத்து  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

தர்மபுரி அருகே நத்தம் காலனி, கொண்டம்பட்டி மற்றும் அண்ணாநகர் ஆகிய  கிராமங்களில் காதல் ஜோடி கலப்பு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக,பெண்ணின்  சமூகத்தை சேர்ந்தவர்கள்,மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளை   தீவைத்து கொளுத்தினர்.

இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக தர்மபுரி போலீஸ் எஸ்.பி. அஸ்ராகர்க்  மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பு நல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும்  போலீசார் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்ட் அஸ்ராகர்க் மைக்கில்,இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை  தொடர்பு கொண்டார்.ஆனால் அவர் மைக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அஸ்ராகர்க் அங்கு விரைந்து வந்தார்.அப்போது எதிரே கம்பு நல்லூர்  இன்ஸ்பெக்டர் ஜீப் வந்தது.உடனே எஸ்.பி. கீழே இறங்கி அதை நிறுத்தினார்.  அப்போது டிரைவர் இல்லாமல் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனே தனியாக ஜீப்பு ஓட்டி வந்தது  தெரியவந்தது.

மேலும் அவரிடம் ஏன் மைக் எடுக்கவில்லை என்று எஸ்.பி. கேட்டார்.அதற்கு அவர்  பதில் சொல்லவில்லை.மேலும் அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்.பி. அஸ்ராகர்க் மைக்கில் அனைத்து போலீசாரிடமும் பேசினார்.  அப்போது,"தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.  இந்த நிலையில் பாதுகாப்புக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் குடிபோதையில்  இருக்கிறார்.எனவே அவரை உடனடியாக சஸ்பெண்t செய்ய பரிந்துரை செய்கிறேன்.  அனைவருக்கும் இதே நிலைதான்” என்று எச்சரித்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு அரசு மருத்துவமனையில் குடி போதையில்  இருந்ததற்கான சான்றிதழ் பெறப்பட்டது.இதையடுத்து டி.ஐ.ஜி. சஞ்சய்குமார் கம்பு  நல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தர்மபுரி மாவட்ட போலீசார் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
http://news.vikatan.com/?nid=11194#cmt241 )

தர்மபுரி சாதிக் கலவரம்.. தலித் மக்களின் அச்சத்தைப் போக்குமா அரசு? – கருணாநிதி கேள்வி

Sunday, November 11, 2012 at 10:38 am | 320 views
Click Here
தர்மபுரி சாதிக் கலவரம்.. தலித் மக்களின் அச்சத்தைப் போக்குமா அரசு? – கருணாநிதி கேள்வி

சென்னை: தர்மபுரி சாதிப் பிரச்சினை காரணமாக தலித் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மெத்தனப் போக்கைக் கைவிட்டு, அந்த மக்கள் தைரியமாக வாழ அரசு வழி செய்ய வேண்டும், என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை:
கேள்வி: தர்மபுரியில் தலித் வீடுகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறதே?
பதில்: தர்மபுரி மாவட்டத்தில் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும், நத்தம் தலித் குடியிருப்பைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களைப் பாதுகாத்திட வேண்டுமென்றும், சேலம் சரகக் காவல் துறை மற்றும் காவல் துறைத் துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) ஆகியோரிடம் நேரில் சென்று இருவரும் முறையிட்டிருக்கிறார்கள்.
அதற்குப் பிறகும் பாதுகாப்பு தரப்படாததால், இருவரும் ஊருக்குள் வர முடியாமல் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில், இளவரசன், திவ்யா ஆகிய இரண்டு பேரின் பெற்றோரையும் ஊர்ப் பஞ்சாயத்தில் அழைத்து, இருவரையும் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் வாழ விடமாட்டோம் என்றும் ஒரு பிரிவினர் மிரட்டியிருக்கிறார்கள்.
இதனால் வேறு வழியின்றி, திவ்யாவின் தந்தை நாகராஜ் என்பவர், 7-11-2012 அன்று மாலை தற்கொலை செய்து கொண்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு மேற்படி பிரிவினர் நாகராஜனின் உடலை தருமபுரி திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் வைத்து, போக்குவரத்தைத் தடுத்து, சாலையோரங்களில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தும், தீ மூட்டி எரித்தும் மறியல் செய்திருக்கிறார்கள்.
இதற்கடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆதிக்கச் சக்தியினர் நத்தம் தலித் காலனிக்குள் நுழைந்து தலித் வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார்கள்.
தலித் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறியதைப் பயன்படுத்தி அண்ணா நகர் தலித் காலனி மற்றும் கொண்டலம்பட்டி தலித் காலனிக்குள்ளும் நுழைந்து அனைத்து வீடுகளையும் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்துள்ளார்கள்.
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி
இவ்வளவு சம்பவங்கள் நடைபெறும் வரை, அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் அங்கே அரசு நிர்வாகமோ, காவல் துறையோ தலையிடவில்லை என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய நிகழ்ச்சியாகும்.
போலீசார் ஏன் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.ஐ.யான ஆல்வின், சாதிக் கலவரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடம் பயத்தை உருவாக்கிவிட்டது என்றும், அதனால் கலவரம் நடந்தபோது தங்கள் உயிருக்குப் பயந்த போலீசார் ஒதுங்கிக் கொண்டனர் என்றும், மேலும், தர்மபுரி எஸ்.பி.யான ஆஸ்ரா கார்க், பரமக்குடி, மதுரை என கடந்த ஒரு வாரமாக டெபுடேஷன் பணியில் இருந்தார் என்றும், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் போலீசாரும் திட்டமிட்டுச் செயல்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சாதிக் கலவரம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலுக்கு ஆளான தலித் மக்களை அரூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினர் பி. டில்லிபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். 250 வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள், வண்டிகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் இருந்த பீரோக்களை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு அதன் பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.
3 நாட்களாக அமைதி காத்த அரசு
மூன்று நாட்களாக அங்கே அமைதி ஏற்படவில்லை. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் தருமபுரி வன்முறையில் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப் போவதாக முதவ்வர் அறிவித்திருக்கிறார்.
இதற்குக் காரணமானவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தலித் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களுக்கு மீண்டும் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று  கூறியுள்ளார் கருணாநிதி.

http://www.envazhi.com/karunanidhi-condemns-govt-for-not-serious-on-darmapuri-dalit-issue/ )


தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசு பொறுப்பு!
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் ஒரு வேண்டுகோள்! திருமாவளவன் பேட்டி!


கடந்த 07.11.2012 அன்று கலப்பு திருமணம் காரணமாக, தர்ம
புரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த கலவரத்தில் 268 வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் இன்று (16.11.2012) செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், "தர்மபுரி அருகே தலித் மக்களின் குடிசைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளது. இதில் பாமக முன்னிலை வகித்துள்ளது. தமிழக அரசு கண்துடைப்பிற்காக சிலரை கைது செய்துள்ளது. ,இந்த சம்பவத்தை தடுக்க காவல்துறையோ, வருவாய் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது வியப்பாக இருக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். தமிழக காவல்துறையோ, சிபிசிஐடியோ இந்த வழக்கை நடத்தினால் எந்த ஒரு நியாயமும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே, இந்த தர்மபுரி கலவர வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
தர்மபுரி அருகே தலித்துக்களுக்கு எதிரே நடந்த வன்முறைகளுக்கு பாமகவும், அதன் துணை அமைப்பான வன்னியர் சங்கமும் முதன்மையான காரணங்களாக செயல்பட்டுள்ளன. அனைத்து கட்சி சாதியவாதிகளையும் இவர்கள் ஒருங்கிணைத்து இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள். 6 மணி நேரம் நடந்த இந்த வன்முறை சம்பவத்தை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. ஆகவே இதற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

பாமகவுக்கு ஒரு வேண்டுகோள். பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து இலங்கை தமிழர் பிரச்சனைகளிலும், இங்கே உள்ள தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கும் எவ்வளவோ போராட்டம் நடத்திருக்கிறோம். சமூக வேறுபாடின்றி ஒன்றாக செயல்பட்டிருக்கிறோம். இப்போது தர்மபுரி அருகே நடந்துள்ள சம்பவம் இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்கள் சாதி ஆதிக்கவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழக மக்களுக்காக விடுதலை சிறுத்தைகள் பாமகவுடன் இணைந்து போராட தயாராக உள்ளது" என்றார். http://vck.in/vck/?p=2390 )

(திருமாவளனின் இந்த பேட்டி மிகவும் கண்டனத்துக்கு உரியது, பா ம க - காடு வெடி குருவின் பேசியது தெரியாது போல..!வாழ்க உங்க பாசம்- MVI )



[X]
தர்மபுரி கலவரத்துக்கு காதல் திருமணம் காரணம் அல்ல: திருமாவளவன் புகாருக்கு டாக்டர் ராமதாஸ் பதில்
(http://www.maalaimalar.com/2012/11/17134156/Dharmapuri-violence-is-not-a-l.html )
தர்மபுரி கலவரத்துக்கு காதல் திருமணம் காரணம் அல்ல: திருமாவளவன் புகாருக்கு டாக்டர் ராமதாஸ் பதில்
சென்னை, நவ. 17-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் நடந்த நிகழ்வுகள் வருந்ததக்கது. இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று தான் 32 ஆண்டாக போராடி வருகிறேன். இந்த சூழ் நிலையில் இச்சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த சம்பவத்துக்கு பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் தான் காரணம் என்று திருமாவளவன் கூறியிருப்பது அபத்தமானது. இது போன்ற பொய் பிரசாரத்தை பலர் செய்து வருகிறார்கள்.

தர்மபுரியில் நடந்தது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலோ, இரு கட்சிகளுக்கு இடையேயான மோதலோ அல்ல. அந்த பகுதியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களிடையே முன் விரோதம் இருந்து வருகிறது. அண்மையில் நடந்த காதல் திருமணத்தில் அந்த பெண்ணின் தந்தை நாகராஜ் பல்வேறு தரப்பினரால் திட்டமிட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளார்.

தலித் சமுதாய சப்-இன்ஸ்பெக்டர் திட்டமிட்டு அவரை தற்கொலை செய்யும் அளவுக்கு அவமானப்படுத்தியிருக்கிறார். இதன் விளைவாகவே நாகராஜ் தற்கொலை செய்துள்ளார். ஏற்கனவே அந்த பகுதியில் முன் பகையும் இருந்ததால் நாகராஜ் இறந்ததும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். இதை வன்னியர், தலித் மோதல் என்று சித்திரிப்பது தவறானது.

இந்த மோதலில் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர்களில் நாயுடுகள், செட்டியார்கள், இசை வேளாளர்கள், வன்னியர்கள், குரும்பர்கள் என்று எல்லா சமூகத்தினரும் இருக்கிறார்கள். மேலும், இது திருமாவளவன் கூறுவது போல் பா.ம.க. தலித் இடையேயான மோதலும் அல்ல. ஏனென்றால் இறந்து போன நாகராஜ் தே.மு.தி.க.வை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டிருப்பவர்களும் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் தான். காதல் திருமணம் வேண்டாம் என நான் சொல்வதில்லை. ஆனால், காதல் திருமணம் என்ற பெயரில் பின் தங்கிய, மிகவும் பின் தங்கிய, முன்னேறிய வகுப்புகளை சேர்ந்த பெண்களை பாதிப்புக் குள்ளாக்கி வருகிறார்கள்.

காதல் நாடகம் நடத்தி கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2000 பெண்களை பாதிப்புக் குள்காக்கி இருக்கிறார்கள். காதல் நாடகம் நடத்தி பணம் பறிக்கிறார்கள். இது தான் மோதலுக்கு காரணம். இது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

சிறு, சிறு பிரச்சினைகளுக்கும், மற்ற சாதியினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதுவும் மோதலுக்கு காரணம். தலித் மக்கள் வாழும் பகுதி வழியாக செல்லும் பிற சமுதாய பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் பல மாணவிகளின் படிப்பு பாதியிலேயே தடைப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு முக்கிய காரணம் தலித்துகளுக்கும், இதர சமூகத்தினருக்கும் இடையே இருந்து வரும் முன்பகை தான். இதை அகற்ற சமூக அமைப்புகளும், அரசும் முன்வர வேண்டும்.

தர்மபுரி சம்பவத்தை காரணமாக வைத்து வன்னியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்ட திட்ட அதிகாரியும், வருவாய் அதிகாரியும், தூண்டி விடுகிறார்கள். உடனடியாக அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அரசும், அரசியல் கட்சிகளும் நடுநிலையுடன் செயல் பட வேண்டும். தலித் வீடுகள் தாக்கப்பட்டது வருந்ததக்கது தான்.

அதே நேரத்தில் நாகராஜ் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்ததும் மிகப் பெரிய இழப்பு. அந்த குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்கவில்லை. ஆறுதலும் சொல்லவில்லை. ஒரு தரப்பினருக்கும் மட்டும் ஆட்சியாளர்கள் சாதகமாக இருப்பது ஏன்ப இந்த கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தினாலும், சி.பி.ஐ. விசாரணை நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, குரு எம்.எல்.ஏ., ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. துணை தலைவர்கள் கே.என். சேகர், டாக்டர் செந்தில், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், வி.ஜே. பாண்டியன், கன்னியப்பன், வெங்கடேசன், ஜமுனா கேசவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
http://www.maalaimalar.com/2012/11/17134156/Dharmapuri-violence-is-not-a-l.html )



தர்மபுரி: தர்மபுரி அருகே நடந்த கலவரம், திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல், என, மார்க்சிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கூறினார்.

தர்மபுரி கலவர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Syndicate
Share/Save
-A +A

சென்னை, -
தர்மபுரி கலவரத்தில் வீடு, உடமைகளை இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மிகுந்த வருத்தம்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கலப்புத் திருமணம் தொடர்பாக, 7–ந் தேதி (நேற்று) இரு வேறு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில், தர்மபுரி வட்டம், கோணங்கிநாய்கனஅள்ளி கிராமத்திற்கு உட்பட்ட நத்தம் காலனி குக்கிராமத்திலும், மற்றும் வெள்ளாளப்பட்டி கிராமத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி மற்றும் அண்ணாநகர் குக்கிராமங்களிலும் பல குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு, உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமுற்றேன்.

தலா ரூ.50 ஆயிரம்

இந்த வன்முறை சம்பவத்தினையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.இந்த வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சம்பவத்தில் வீடு மற்றும் உடைமைகளை இழந்த குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி கலவரம் விவகாரத்தில் அரசு 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. (http://htastrogy.dinakaran.com/News_Detail.asp?Nid=30660 )


சென்னை: தர்மபுரி கலவரம் விவகாரத்தில் அரசு 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் செங்கொடி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் வழக் கில் கூறியிருப்பதாவது:ஆதிதிராவிட வாலிபரை தனது மகள் காதலித்து திருமணம் செய்ததால் பெண்ணின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெண்ணின் சாதியை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்து ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்கும் அண்ணாநகர் காலனி, கொண்டாம்பட்டி புதிய மற்றும் பழைய காலனி ஆகிய பகுதிக்குள் கடந்த 7ம் தேதி புகுந்து அங்கு வசிக்கும் மக்களை தாக்கினர். சுமார் 268 வீடுகளை அடித்து உடைத்துள்ளனர். இதனால் ஆதிதிராவிட மக்கள் உயிருக்கு பயந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் தப்பி ஓடியுள்ளனர். எனவே இதில் ஆதிதிராவிட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். உரிய நஷ்டஈடு தர வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜென ரல் நவனீதகிருஷ்ணன், அரசு வக்கீல்கள் வெங்கடேஷ், இன்பதுரை ஆகியோர் ஆஜராகி, இந்த கலவரம் சம்பவம் பற்றி கேள்வி பட்டதும் முதல்வர் உடனே நடவடிக்கை எடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஸீ 50 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்க இடம், உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போலீ சார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றனர்.இதை கேட்ட நீதிபதிகள், 3 வாரத்தில் அரசு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனறு உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வக்கீல் ரத்தினம் ஆஜரானார்.
http://htastrogy.dinakaran.com/News_Detail.asp?Nid=30660 )



 . நமது விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக நான் (சிரீதர்) மற்றும் சென்னை நண்பர்  லக்ஷ்மனும்  மும்பையில் இருந்து(12/11/2012) திங்கள் இரவு  அன்று புறப்பட்டு  பெங்களூர் (நந்தக்குமார், மூர்த்தி (கர்நாடக  தலித் அமைப்பு-DSS ),பார்த்திப்பன் மற்றும்  ஜூனியர் விகடன் பத்திரிக்கை நண்பர் ர.வினோத் உடன் வந்தனர்)வழியாக தர்மபுரி - நாதம் புதன் கிழமை (14/11/2012) காலை  சென்று அடைந்தோம் . நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி பகுதி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட   கொள்ளை ஜாதி வெறி  கோர சம்பவத்தை வேறு மன உண்மை அறியும் கோரிக்கை மற்றும் பரிந்துரை என  வைப்பது விட ..சற்று அதிக கவனத்துடன் தொடர்ந்து நத்தம் பகுதி  தோழர்கள் மற்றும் தலித் தோழர்களுடன் சேர்ந்து   செயல்பட இருக்கிறோம் ..
அதன்  முதல் கட்டமாக  மனித உரிமை அமைப்பிடம்  வழுக்கு தொடங்க உள்ளோம் , பாதிக்க ப்பட்ட மக்களுக்கு  கிடைக்க வேண்டிய  நீதி மற்றும் உதவிகளை பெற்ற தர தொடர்ந்து செயல்படுவோம் , மறுப்படியும்  ஒருமாதம் பின்  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருக்கிறோம் ./  MVI
Top of Form
Top of Form
Bottom of Form
Bottom of Form

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக