வியாழன், 15 ஜனவரி, 2009

விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சமத்துவ பொங்கல் திருவிழா மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.

மும்பை தாராவி குறுக்கு சாலைப் பகுதியில் புதிதாக இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள விழித்தெழு இளைஞர் இயக்கம் தம் இனவுணர்வினை வெளிப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் நிகழ்வை தமிழ் புத்தாண்டு முதல் நாளன்று சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.



இதன் விபரம் மேலும் வருமாறு,
தமிழர்களின் ஒற்றுமையாக இருக்கும் ஒற்றுமையின்மையை களையும் நோக்கோடும், பொங்கல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உரியது என்பதை நிறுவும் பொருட்டும் இவ்வியக்க இளைஞர்களால் சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 5:30 மணியளவிலேயே மக்கள் திரளாக கூடிவிட்டனர். ஆதி திராவிட மகாசன் சங்க தலைவர் திரு. அசோக்குமார் அவர்களும், திரு. சாகுல் அமீது அவர்களும் தொடங்கி வைக்க நிகழ்வு 6 மணிக்கு தொடங்கியது.

நிகழ்வின் சிறப்பாக தமிழர்களின் ஒற்றுமையை கண்கூடாக பார்க்க முடிந்தது. சாதி, மத வேறுபாடின்றி மக்கள் மகிழ்ச்சியோடு பொங்கல் சமைக்க தொடங்கினர். இனவுணர்வாளர்களும், கதிர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும், திராவிடர் கழக தோழர்களும் தன்னார்வத்தோடு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற சேர்ந்து பணியாற்றினர். ஜேபிஆர் ஸ்போர்ட்ஸ் க்ளப், சன் இளைஞர் அணி, மனித உரிமைக் கழகம், கருஞ்சிறுத்தைகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், தமிழ் லெமூரியா திங்களிதழ், திமுக ஆகியோர் இயக்கத்தை பாராட்டி விளம்பர பதாகைகள் வைத்திருந்தினர். குறுக்குசாலை மெய்யாகவே சமஎண்ணம் கொண்ட குட்டித்தமிழ்நாடு போல் காட்சியளித்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் தோழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் இயக்கத்தோழர்களின் இனவுணர்வை வெகுவாக பாராட்டினார், மேலும் இப்படிப்பட்ட தோழர்களை ஊக்குவிப்பது தம் கடமையென்றும், அதை தன் உயிருள்ளுவரை செய்யப் போவதாகவும் கூறினார்.

தாராவியில் வெகுவாக அறியப்பட்ட சமூகத்தொண்டர் சந்திரசேகர் அவர்களும் தோழர்களை வியந்து பாராட்டினார். திராவிடர் கழகத்தலைவர் தோழர் கணேசன் அவர்கள் கொள்கை நழுவாது, பகுத்தறிவோடு, தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பிக்கையோடு கூறினார்.

திராவிடர் கழகத்தோழர்கள், பகுசன் சமாஜ் கட்சி தோழர் இராமகிருஷ்ணன், திருவள்ளுவர் நற்பணி இயக்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், தேசியவாத காங்கிரஸ் தோழர் முருகேஸ், தமிழ் ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் தம்பிராஜ், மும்பை தேமுதிக செயலாளர் கதிர், வழக்கறிஞர் முருகசீலன், மற்றும் சித்தார்த் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி தோழர்கள், கதிர் வகுப்பு மாணவர்கள் என பல்வேறு அமைப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வு முடிந்த பின், பலர் வெகுவாக பாராட்டினாலும், பாராட்டுதலின் மைய்யப்புள்ளி தமிழர்கள் சாதி, வேற்றுமையை கடக்க ஆவலோடு இருக்கிறார்கள், ஆனால், சமூக அமைப்புதான் கட்டுக்குள் சிறை வைத்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக