வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சாதி தான் சமுகம் என்றால் விசும் காற்றில் விஷம் விசுட்டும்

"சாதி தான் சமுகம் என்றால்
விசும் காற்றில் விஷம் விசுட்டும் "




ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர்களாலும் புறக்கணிக்கப்படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே.

தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை உடைப்பு போன்ற நடவடிக்கைகளால், நேரடியாக உணர முடிகிறது. ஆனால், இந்த முற்போக்காளர்களின், இலக்கியவாதிகளின் அம்பேத்கர் புறக்கணிப்புதான் மிக நுட்பமானதாக, அவர்களைவிட ஆபத்தானதாக இருக்கிறது.

‘அம்பேத்கரின் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடில்லை’ என்று அம்பேத்கரை விட தங்களை மிக முற்போக்கானவர்களாக சொல்கிறவர்கள், இன்னொருபுறம் கை தேர்ந்த சந்தர்ப்பவாதிகளையும், பிற்போக்காளர்களையும், ஜாதி வெறியர்களையும் ஆதரித்து தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்.

‘தலித் அல்லாதவர்களிடமும் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும்’ என்று ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு இருக்கும்போதே, இன்னொரு புறம் அம்பேத்கரை தலித் மக்களிடம் இருந்தே அப்புறபடுத்துகிற வேலையும் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை போலவே, அவரின் கிறிஸ்ததுவ புறக்கணிப்பும் மிக முக்கியமானது. இந்தியாவில் கிறிஸ்த்துவ மதமாற்றத்தில் தலித் மக்களின் பங்களிப்பு மிக அதிகமானது. தலித் மக்களிடம் அம்பேத்கரின் எழுச்சி உருவாக்கி இருக்கிற அலை, அம் மக்களை இந்து மத எதிர்ப்புற்கும், கிறிஸ்த்துவ புறக்கணிப்புக்கும் தான் கொண்டு செல்லும்.

இந்து மத எதிர்ப்பை ஆதரிக்கிற அல்லது ஒத்துக் கொள்கிற கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் அவைகளிடம் பணம் வாங்கி சேவை செய்கிற என்.ஜி.ஓ அமைப்புகள் ஒரு போதும் தலித் மக்களின் கிறிஸ்த்துவ புறக்கணிப்பை ஒத்துக் கொள்ளாது. பல தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள்கூட அம்பேத்கரின் கிறிஸ்த்துவ புறக்கணிப்பை பற்றியும் அவரின் பவுத்தம் குறித்தும் மவுனம்தான் காக்கிறார்கள். அவர்களின் அந்த ‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே.

தமிழர்களுக்கு எதிராக ராஜாபக்சே தலைமையில் சிங்கள இனவாதம் கொலைவெறியில் செயல்பட்டபோது, அதோடு பவுத்தத்தை முடிச்சு போட்டு ‘பவுத்த மதவெறி’ என்று சபித்த, தலித் அல்லாத கிறிஸ்த்துவ முற்போக்காளர்கள்;

ஈராக் மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்திய புஷ், ‘இது இஸ்லாமுக்கும் கிறிஸ்த்துவத்திற்குமான போர்’ என்று பகிரங்கமாக அறிவித்து தனது ஏகாதிபத்திய வெறிக்கு கிறிஸ்த்துவர்களிடம் ஆதரவு திரட்ட முயற்சித்து, ஈராக் மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை செய்தான்.

ராஜபக்சேவோடு இணைத்து பவுத்தத்தை சபித்த, தலித் அல்லாத கிறிஸ்த்துவ அறிவாளிகள், கிறிஸ்த்துவத்துடன் முடிச்சு போட்டு, இது கிறிஸ்ததுவ மதவெறி என்று கொந்தளிக்கவில்லை. அதை மட்டும் தெளிவாக, சரியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறையாக உணர்ந்துதான் அதை கண்டித்தார்கள்.

இந்த நடவடிக்கைகளில் அம்பலமானது தலித் அல்லாத கிறிஸ்த்துவர்களின் மதவெறி மட்டுமல்ல; பவுத்த வெறுப்பின் வழியாக அம்பேத்கரின் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஏற்பட்ட எழுச்சி, பல இந்து ஜாதி வெறியர்களை அச்சம் கொள்ள செய்தது போலவே, கிறிஸ்த்துவ நிறுவனங்களிடமும் பதட்டத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக டாக்டர் அம்பேத்கரால் சொல்லப்பட்ட தத்துவங்களுக்கு மாற்றாக அல்லது அம்பேத்கரியத்திற்கு எதிராக ‘தலித்தியம்’ என்று ஒன்று நிறுவப்பட்டது.

அதன் செயல்பாடுகளில் ஒன்றாக இந்தியா முழுக்க டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக, தலித் உட்ஜாதிகளுக்குள் இருக்கிற தலைவர்களை குறிப்பாக தன் ஜாதியை மட்டும் முன்னிலைப் படுத்திய, மற்ற தலித் சமூகங்களை புறக்கணித்து ‘அவர்களை விட எங்கள் ஜாதிதான் உயர்வானது’ என்று சுயஜாதி உணர்வை ஊட்டிய தலைவர்களை அடையாளப்படுத்தி அம்பேத்கர் இடத்தில் நிறுவும் வேலைகளும் தீவிரமாக நடந்தது. நடந்து வருகிறது.

இதன் வளர்ச்சியாக இப்போது; ஜாதி இந்துக்கள், ஜாதி கிறிஸ்த்துவர்கள், தலித் விரோதிகள்; தலித் உட்ஜாதி தலைவர்களை, அம்பேத்கருக்கு எதிராக, மாற்றாக தலித் மக்களிடமே பரிந்துரைக்கிறார்கள். காரணம், இவர்களுக்கு அந்த உட்ஜாதி தலித் தலைவர்கள் மீது கொண்ட அன்பல்ல, டாக்டர் அம்பேத்கர் மீது கொண்ட வெறுப்புணர்ச்சியே.

இதுபோல் டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக, தன் கையைக் கொண்டே தன் கண்ணை குத்தவைக்கிற முயற்சி இந்தியா முழுக்க தாழ்த்தப்படட மக்களிடம் தீவிரமாக நடந்து வருகிறது. இவர்களின் நோக்கம், வெளித்தோற்றத்தில் நிரம்ப முற்போக்கான வடிவம் கொண்டாலும், உள்ளே அழுகி நாறுவது ஜாதிவெறியும் தலித் விரோதமும்தான்.

இன்று இந்தியா முழுக்க இனவாதம் பேசுகிறவர்களின் ஒப்பற்ற முன் மாதிரி, ‘மராட்டிய மண் மராட்டியர்களுக்கே’ என்று முழுங்குகிற பால்தாக்ரே என்கிற பயங்கரவாதிதான்.

இன்றைய இனவாத தத்துவத்தின் வாழும் தெய்வம், கிழட்டு நரி பால்தாக்ரே, தமிழர்களுக்கு எதிராக, இந்திக்காரர்களுக்கு எதிராக பல வன்முறைகளை நடத்தியிருக்கிறார். ஆனால், மாராட்டிய மாநிலத்தையே பற்ற வைத்து, ஸ்தம்பிக்க வைத்த வன்முறையை பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். அது போன்ற வன்முறையை அதற்கு முன்னும் பின்னும் இப்போதும் நடத்தியது இல்லை.

அது, ‘மராட்டிய மண் மராட்டியர்களுக்கே’ என்பதற்கான போராட்டம் அல்ல; மராட்டியத்தில் உள்ள மரத்வாடா பல்கலைகழகத்திற்கு, மராட்டிய மண்ணின் மைந்தன் உலகம் வியக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறை.

நெருக்கிப் பிடித்தால் ‘மண்ணின் மைந்தர்கள்’ ஜாதியின் மைந்தர்களாக, தலித் விரோதிகளாகத்தான் பிதுங்குகிறார்கள்.

அப்பட்டமான ஜாதி வெறியர்களை மட்டுமல்ல, நுட்பமான ஜாதி உணர்வாளர்களையும் அம்பலப்படுத்துவதற்கு அண்ணல் அம்பேத்கரைவிட கூரிய அறிவாயுதம் வேறு எது?

நன்றி

வே. மதிமாறன்

டாக்டர் அம்பேத்கரின பிறந்த நாளான இன்று அவரின் சிந்தனை வழிகளில் ஜாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை தொடர்ந்து செய்வோம்.

மிக குறிப்பாக தலித், தலித் அல்லாத முற்போக்காளர்கள், ஜாதி வெறியர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல, சவாலனதும்கூட.

அந்த சவாலை தொடர்ந்து செய்வோம்............













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக